வில்லியம்ஜோன்ஸ் விதைத்த நஞ்சு - மனுநீதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

வில்லியம்ஜோன்ஸ் விதைத்த நஞ்சு - மனுநீதி

முனைவர் பேராசிரியர் 

ந.க. மங்களமுருகேசன்

இந்தோ - அய்ரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது சமஸ்கிருதம் என ஏற்று அதனை உலகம் அறியச் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தியவர் வில்லியம் ஜோன்ஸ். இவர் 1746 முதல் 1794 வரை வாழ்ந்தார்.

சமஸ்கிருதத்தை உலகறியச்செய்ய வங் காளத்தின் ஆசிய நிறுவனம் (Asiatic Society of Bengal) எனும் அமைப்பை 25.9.1783இல் நிறுவினார். இந்திய வரலாற்றில் இந்த அமைப்பு மிகப் பெரும் செல்வாக்குப் பெற்றது. ‘ஆசிய ஆய்வுகள்’ எனும் ஆய்விதழையும் இந்த அமைப்பு வெளியிட்டது.

இந்த அமைப்பின் வலிமைக்குப் பின்னணி யாகச் செயல்பட்டவர், வங்காள ஆளுநரா யிருந்து, இந்தியாவின் முதல் தலைமை ஆளு நரான (Governor General) வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு ஆவார். இவர்கள் இருவருடைய அன்றைய நாள் அறியாமை, இவர்களைச் சுற்றிப் பார்ப்பன அலுவலர்களே இருந்தமையால், இந்தியாவைக் கட்டி ஆள சமஸ்கிருதமே தேவை என்றனர். இந்தியாவை ஆட்சி செய்வதற்கான தகுதி சமஸ்கிருதத்திற்கே உள்ளது என்றனர்.

வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு கல்கத்தா வந்தார். வந்த அவரைத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். இந்தியப் பண்பாடே  சமஸ்கிருதம் தான் என்று மோடி அரசு நம்புவது போல் இந்தியப் பண்பாடு என்பது சமஸ்கிருதப் பண்பாடே என்றும், இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தவையே என அவரை நம்ப வைத்தனர்.

இந்தியா வரும் முன்பே பன்மொழிப் புலமை பெற்றவர் அவர். வில்லியம் ஜோன்ஸ் 13 அய் ரோப்பிய மொழிகளிலும் பெர்சிய மொழியிலும் புலமை பெற்றவர். கல்கத்தா வந்தவர் சமஸ் கிருதத்திலும் புலமை பெற்றார்.

வில்லியம் ஜோன்சின் அறியாமை - அவரைச் சூழ்ந்திருந்த பார்ப்பனக் கூட்டத்தின் பொய்கள் இந்துக்களின் சட்ட நூல் ‘மனுநீதி’ எனும் மனித குலத்துக்கு அநீதியான நூலை ஏற்கச் செய்தது? அதன் விளைவுதான் அவர் பயிரிட்ட நச்சுப்பயிர். அதனை அடிப்படையாகக் கொண்டு இந்துச் சட்டம் (Hindu Law) என்பதை உருவாக்கினார்.

வில்லியம் ஜோன்சு படைத்த மனுநீதி அடிப்படையிலான  ‘இந்துச் சட்டம்’ என்பதுதான் இன்றுவரை இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் நீதிமன்றத் தீர்ப்புகளிலும் சமூக வரைமுறைகளிலும் நிலைத்து நிற்பதாலே இன்றும் சில நீதிபதிகள் பட்டைபட்டையாகத் திருநீறு அணிந்து - பொட்டு வைத்து நடுநிலை யோடு, மனித சமூக அநீதிகளை உணராமல் வகுப்புரிமை போன்றவற்றிற்கு எதிராகத் தீர்ப்பு வழங்க அடிப்படை. அதன் அடிப்படையை அறிவோடு உணர்ந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால், மனுநீதியை ஆங்கிலத்தில் ஆங்கிலேயரே  மொழிபெயர்த்தனர். சிறப்புக் கருதி, ஜெர்மனி, அய்ரோப்பிய மொழிகளில் அது மொழி பெயர்ப்புப் பெற்றது. இதனைப் படித்ததால் ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் ஆரியர் அந்நியர் அல்லர், இந்த மண்ணுக்கு உரியவர் என்று கருத்துக் கூறினார்.

அவர் மட்டுமா? ஜெர்மன் நாட்டு மெய்ப் பொருளார் பிரீட்ரிச் நீட்சே (FRIEDRICH NIET ZECHE, C1844 1890) மனு நூலைத் தமுவி ‘சூப்பர்மேன்’ (Superman) எனும் அழிவுச் சிந்தனையை உருவாக்கிவிட்டார் அது என்ன அழிவுக்கோட்பாடு, கெட்ட கோட்பாடு, தீய கோட்பாடு,

மூளை வலுவினாலும், பிறப்பின் சிறப்பாலும் உயர்ந்த இனம் ஜெர்மானிய இனம்

இத்தகைய  வகுப்பு வாதத்தைப் பேசியதுதான் நீட்சே கோட்பாடு.

எங்கோ இது இங்கு ஒலிக்கிறதா? ஆம்! இந்த மண்ணில் பார்ப்பனர்களும் இதைத்தான் இன்று வரை தாங்கள் மேல் வருணம், உயர் ஜாதி, ஆரியர்கள்; மற்றவர்கள் இழிந்தவர்கள் என்று சொல்லி வருகிறார்கள்.

ஜெர்மானியின் வல்லாட்சியாளர், இன்றைய பிஜேபி ஆட்சி போல் மனுநூல் தழுவிய நீட்சேவைக் குருவாக ஏற்றுக்கொண்டு ஆரிய மேலாதிக்கத்தையும், யூதர் ஒழிப்புத் திட்டத்தையும் நாஜிக் கட்சியின் கொள்கையாகக் கொண்டு _பாவம் யூதராகப் பிறந்துவிட்டதால் _பல்லாயிரக் கணக்கில் யூதர் படுகொலைத் திட்டத்தையும் நாஜிக் கட்சியின் கொள்கையாக நடைமுறைப்படுத்தினார். இதைப்போலவே பிறப்பின் அடிப்படையில் மானிடர்க்குள்ளே வேற்றுமை பாராட்டும் மற்றோர் அய்ரோப்பிய பாசிச இயக்கம்_ நாசிசம் போன்ற இயக்கம் இத்தாலிய இயக்கமாகும்.

நாசிசம் என்பதில் சனாதனத்தையும் பாசிசம் என்பதில் இந்துத்துவா என்பதை,யும் அல்லது நாசிசம் என்பதில் இந்துத்துவாவையும், அவர்கள் யூதர்களைப்போல் வேரறுக்க எண்ணுவது இசுலாமிய_ இந்த மண்ணின் மைந்தர்களை என்பதையும் பொருத்திப் பாருங்கள். நாம் சொல்வதில் உள்ள உண்மை விளங்கும்.

எனவேதான், ‘மனுநூல்’ (பூணூல்களின் உபவேதம்) உயர்ந்த நூல் எனப் பார்ப்பனத் திருக்கூட்டம் நம்ப வைத்ததன் விளைவினால் உலக வரைபடமே மாறியது. மிகப்பெரும் இன அழிவு ஏற்பட்டது.

நீட்சேவும், இட்லரும் மனு நூலுக்கு இரையாகிப் பலியானவர்கள். மனித குலம் இதனால் பேரழிவுக்கு இலக்கானது. ஆர்.எஸ்.எஸ். எனும் இந்து வெறி அமைப்பு மாளிகையைக் கட்டி எழுப்பிய, அடித்தளமில்லா அரங்கை நிர்மாணித்த, இந்து இந்தியா எனும் கேவலமான இந்தியாவை உருவாக்கும் திட்டத்துடன் உருவாக்கிய கோல்வால்க்கர், எட்கேவர், மூஞ்சே முதலியோரும் மனுவழியே நடப்பதை இந்து மானிடர் கடன் என வலியுறுத்தியவர்கள்.

இவர்கள் வழி நடப்பவர்கள்தாம் அத்வானி, மோடி, அமித்ஷா. இவர்களின் அடிமைகள் தான் தமிழிசை, முருகன், அண்ணாமலை ஆகிய சூத்திரப்பட்டம் சுமக்கும் அறிவிலிகள்.

ஜாதிப் பாகுபாட்டை வலியுறுத்தும் சட்டப் பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தில் இன்றுவரை தொடர்வதற்குக் காரணம் வில்லியம் ஜோன்ஸ்தான். நச்சுப்பயிரை விதைத்து வளரச் செய்தவர் வில்லியம் ஜோன்ஸ் - இவ்வாறு சொல்வது சரியா? என்றால் சரிதான். சர் வில்லியம் ஜோன்ஸ் வருகைக்கு முன் சமஸ்கிருதம் முதன்மைப்படுத்தப் பெறவில்லை. பெர்சிய மொழியைத் தான் ஆங்கிலேயர் முதன்மைப் படுத்தினர். காரணம் ஆங்கிலேயர் வசமாக இந்தியா மாறியபோது பெரும்பான்மையான நிலப்பகுதி மொகலாயப் பேரரசுக்குள் அடங்கியிருந்ததே.

எனவேதான், ஆங்கிலேயர் தொடக்கத்தில் அரசு மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் பெர்சிய (பாரசீக) மொழியையே தொடருமாறு செய்தனர் ஆங்கிலேயருக்கு இந்தியா புரிந்தது பாரசீக மொழி வழியேதான்.

கல்கத்தா வந்தார் கனவான் வில்லியம் ஜோன்ஸ். பார்ப்பனர் வசமானார். பாரசீக மொழியிலிருந்து விடுவித்தனர். பாரசீகக் கண்ணாடி பழுதாகி சமஸ்கிருதக் கண்ணாடி போட்டுக் கொண்டார், வில்லியம் ஜோன்ஸ் என்று சமஸ்கிருதக் கண்ணாடி போட்டாரோ அது முதல் ஆரிய ஆதிக்கப் பார்வைக்கு ஆட்பட்டார் - அழிவு தொடங்கியது. வில்லியம் ஜோன்ஸ்தான் பார்ப்பன வலையில் சிக்கிய முதல் சுறா மீன்.

No comments:

Post a Comment