ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: வருணாசிரமத்தில் ஜாதியின் பெயரால் சூத்திர, பஞ்சம ஜாதி இழிவு குறித்து பேசிய ஆ.இராசாமீது 1,590 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்றால், அவர்கள் மனுதர்ம நூலுக்கு எதிராகப் புகார் கொடுப்பார்களா? ஜாதியமுறையை வலியுறுத்தும் பகவத் கீதை, மனுதர்மத்தை தீயிட்டுக் கொளுத்து வார்களா?

- ப.அசுரன், விருத்தாசலம்

பதில் :     இந்தக் கேள்வியை சமூக வலைத்தளங்களி லும், சுவரெழுத்துகளாகவும், மற்ற பிரச்சார உத்தி களாலும் பரப்புங்கள் - பயன்கிட்டும்.

- - - - -

கேள்வி: பன்மைத்தன்மை மிகுந்த இந்திய துணைக் கண்டத்தில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒற்றைக்கலாச்சாரம் என்பதைத் திணிக்கும் ஒன்றிய அரசு ஒரே ஜாதி என்று அறிவிக்க தயாரா? என்னும் தங்களின் கேள்வி பிரதமர் மோடியை சென்ற டைந் ததா? பலன் கிட்டுமா?

- க.ஆற்றலரசி, அயப்பாக்கம்

பதில்: சென்றடையாமலா இருக்கும்; பதில் கிடைப் பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. அவரது ’மனதின் குரலில்’ இது கிட்டவில்லை போலும்!

- - - - -

கேள்வி: இந்து மதம், வருணாசிரமதர்மம், மனுநீதி எல்லாவற்றுக்கும் அடிப்படையே ஜாதிய அடுக்கு முறைதானே? தீண்டாமை ஒழிப்புகுறித்து பேசுவோர் ஜாதி ஒழிப்புக் குறித்து பேசுவதில்லையே?

-ச.அருள், பெண்ணாடம்

பதில்:  அவைதான் ஆர்.எஸ்.எஸ். தத்துவங்கள் - வியூகங்கள்! ஜாதியைப் பாதுகாத்து தீண்டாமைக்கு எதிரான கண்டனக் குரல் - விஷக்கிருமிகளைக் காப்பாற்றி, கடும் நோய் தடுப்போம் என்ற போலிச் சிகிச்சை முறை போன்றது.

- - - - -

கேள்வி: சீன அதிபர்குறித்து பல்வேறு கருத்துகள் பரப்பப்படுகிறதே, அதற்கு என்ன காரணம்?

-சி.அன்பு, துறையூர்

பதில்: ஊடகங்களே காரணம். அதிகாரபூர்வ செய்தி கள் உடனுக்குடன் வராத நிலையும் மற்றொரு காரணம்.

- - - - -

கேள்வி: கனடாவில் நடைபெற்ற உலக மனிதநேயர் மாநாடு மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன?

- பா.கிருஷ்ணா, சென்னை-14

பதில்: பெரியார் உலகமயமாகிறார்; உலகம் பெரியார் மயமாகிறது - வேகமாக விவேகமாக என்பதே அச் செய்தி!

- - - - -

கேள்வி:  காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்குப் போட்டியால் கட்சி பிளவுபடுமா?

- பா.முகிலன், சென்னை-14

பதில் :  “மூக்கு உள்ள வரை சளி இருக்கும்’’ என்பது கிராமியப் பழமொழி. காங்கிரசும், கோஷ்டிச் சண்டை யும் இணை பிரியாதவையாகும்! என்ன செய்வது?

- - - - -

கேள்வி : திருமணம் ஆகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்து இருக்கிறதே?

- சு.அன்புச்செல்வன், சிவகங்கை

பதில்: புரட்சிகரமான தீர்ப்பு - பெண்களுக்கு மட்டுமே கற்பு நிலை பேசுவோர்க்கு இது சரியான சூட்டுக்கோல்! வரவேற்கவேண்டியதே. அதற்காக வாழ்க்கையை ஏன் இழக்க வேண்டும்?

- - - - -

கேள்வி: சென்னை நகரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவ தற்குக் காரணம் ஆட்சியாளர்களா? ஒப்பந்தக்காரர் களா? 

- கே.இராஜேந்திரன், தூத்துக்குடி

பதில்: ஒப்பந்தக்காரர்கள்தான் காரணம். ஆட்சி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. முந்தைய ஆட்சியின் குளறுபடிகளும் விரைந்து செயல்பட வேகத்தடையாக உள்ளதை நீங்கள் மறந்துவிடலாமா?

- - - - -

கேள்வி : தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அவர்களைக் குறி வைக்கும் மதவாத சக்திகளின் நோக்கம் என்ன?

- ந.செந்தூர்பாண்டி, தஞ்சை

பதில்: அவரை அப்புறப்படுத்த வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் பா.ஜ.க. ‘பாச்சா’ அவரிடம் பலிக்க வில்லை என்பதால்தான்!

- - - - -

கேள்வி : காந்தியாரும் - பெரியாரும் எதிர் எதிர் துருவங்களா?

- பே.வெற்றி, கீழ்வேளூர்

பதில் : ஒன்றை ஒன்று விரும்பி, இறுதியில் பெரியார் முடிவுக்கே வந்த காந்தியார், ஒரு நிலைப்பாட்டிற்கு வந்தார். எனவேதான் மதவெறி அவரை வாழவிட வில்லை!


No comments:

Post a Comment