ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் - சில முக்கிய தகவல்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் - சில முக்கிய தகவல்கள்!

சென்னை,அக்.20- மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த ஜெய லலிதாவுக்கு கட்டுப்பாடு இன்றி உணவுகள் வழங்கப்பட்டதால் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது என்று ஆறுமுக சாமி விசாரணை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர் பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, சட்டப் பேரவையில்   18.10.2022 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு முறை குறித்து குறிப்பிட்டி ருப்பதாவது: தீபாவளி அன்று ஒருமுறையும், தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்ற பிறகு ஒரு முறையும் ஜெயலலிதாவுக்கு இனிப் புகள் வழங்கப்பட்டன. அதுமட்டு மின்றி, அவர் விருப்பத்துக்கேற்ப மலை வாழைப்பழம், விதையில்லா திராட்சை, மாம்பழம் ஆகியவற்றை எடுத்துக் கொள்வார் என்று உண வியல் நிபுணர், தனது சாட்சியத்தில் ஒப்புக்கொண்டார்.

ஜெயலலிதாவின் குடும்ப மருத் துவர் சிவக்குமார் அளித்த சாட்சி யத்தில், "கேக் அல்லது இனிப்புகள் சாப்பிடுவதை ஜெயலலிதா தவிர்க்க வில்லை. மருத்துவமனையில் கூட அவ்வப்போது அவற்றை எடுத்துக் கொண்டார். மருத்துவமனை கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும் பழங்கள் மற்றும் இனிப்புகளை அவர் உட்கொண்டார். உயர்தர சாக்லெட் நிற அய்ஸ்கிரீம்களை எடுத்துக்கொண்டார். சில நேரங் களில் பரிந்துரைக்கப்பட்ட உணவு கட்டுப்பாடுகளை தளர்த்தி, நிறைய கேக் மற்றும் இனிப்புகளை எடுத்துக் கொண்டார். தான் விரும்பிய உணவை உட்கொள்வது மட்டுமே, தனக்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஒன்று என்று ஜெயலலிதா கூறியிருந்தார்’ என தெரிவித்தார்.

கட்டுப்பாடு இன்றி உணவு

ஜெயலலிதாவின் உடல் நிலையை கருத்தில்கொண்டு பொட்டாசியம், சர்க்கரை உண வுகள் உட்கொள்வதை கட்டுப் படுத்த வேண்டி இருந்தாலும், அவ ருக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி மேற்கூறிய உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டன. பல ஆதாரங்களை கவனமாக ஆய்வு செய்ததில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்காமல் இருந்ததால் அவருடைய உடல் நிலை வேகமாக மோசமடைந்தது.

ஜெயலலிதா மரணம் தொடர் பான விசாரணையில் சசிகலாவிடம் எழுத்துப்பூர்வமாக 55 பக்கங்கள் கொண்ட சாட்சியம் பெறப்பட்டுள் ளது. அதில், கடந்த 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை ஜெயலலி தாவுக்கு சிகிச்சை அளித்த 20 மருத்துவர்களின் பட்டியலை குறிப் பிட்டுள்ளார். மேலும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு 21.9.2016 அன்று காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தலைமைச் செயலர் ராமமோகன ராவ் உள் ளிட்ட அய்ஏஎஸ் அதி காரிகளுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அறையிலேயே ஜெய லலிதா ஆலோசனை நடத்தினார். இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு ஆகியோர் ஆலோசனையின் பேரிலேயே ஜெய லலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது.

முக்கிய பங்காற்றினார்

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு நான் பொதுச்செயலாளராக வேண் டும் என்று கட்சியில் தீர்மானம் நிறைவேற்றி ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் கொடுத்தார். இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அவர்தான் முக்கிய பங்காற்றினார். அவர், திமுகவுடன் கைகோத்து பல மறைமுக துரோகங்களை செய் துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தை களங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடும், எனது நற் பெயருக்கு ஊறுவிளைவிக்கும் நோக்கத்தோடும் சிலர் நேரடி யாகவும், பலர் பிறரின் தூண்டுதலின் பேரிலும் பொய்யான புகார்களை எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி அளித்துள்ளனர் என சசி கலாவின் சாட்சியத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

பரிசோதிக்க அனுமதிக்கப்படவில்லை

ஜெயலலிதாவுக்கு இதயக் கோளாறு மற்றும் நுரையீரல் பிரச்சினை தொடர்பாக அப் போலோ மருத்துவமனையால் வழங்கப்பட்ட சிகிச்சை பற்றி தொடக்கத்தில் இருந்தே ஆணை யத்துக்கு மிகுந்த சந்தேகம் உள்ளது. ஒரு நோயாளிக்கு 10 மி.மீ-க்கு மேல் வெஜிடேசன் இருப்பது கண்டறி யப்பட்டால், அது குறிப்பிட்ட காலத்துக்குள் மருந்து மூலம் கரைக்கப்படாவிட்டால் அதற்கு அறுவை சிகிச்சையே மாற்று தீர்வாகும். அத்தகைய நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் அறுவை சிகிச்சை நிபுணரே குழுவின் தலைவராக இருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே எந்த நுரையீரல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரும் அவரை பரி சோதிக்க அனுமதிக்கப்படவில்லை. பரிசோதித்திருந்தால் நிச்சயமாக ஆஞ்சியோகிராம்  செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டு செய்யப்பட் டிருக்கும் என்று ஆணையம் அழுத்தமாக பதிவு செய்கிறது. இந்த நடைமுறையை அப்போலோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரணையின் போது ஏற்றுக்கொண்டுள்ளனர்.

"ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் சென்றால், அது இந்திய மருத்துவர்களை அவ மதிக்கும் செயல். சுகாதாரத்துறை செயலாளராக தன்னால் அதை அனுமதிக்க முடியாது என்று ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாக அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், அப்போலோ மருத்துவமனையிலேயே சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதால் ஜெய லலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவ சியம் ஏற்படவில்லை என்றும் விசா ரணையில் அவர் தெரிவித்துள்ளார்.

எதிராக இருந்தனர்

அப்போலோ மருத்துவமனை மருத்துவர் பாபு ஆபிரகாம், ஒய்.வி.சி.ரெட்டி, சி.விஜயபாஸ்கர், ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் ஜெய லலிதாவை வெளிநாட்டு சிகிச் சைக்கு அழைத்துச் செல்வதற்கு எதிராக இருந்தனர். அனைவரும் அப்போலோ மருத்துவமனை சரியான திசையில் செல்கிறது என்று ஒரே பதிலை கூறினர். விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துகொண்டு, ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல் வதற்கு தேவையான நடவடிக் கைகளை எடுக்காதது வியக்கத் தக்கது. 

சிகிச்சை தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தகவல் கிடைக்கப் பெறவில்லை அல்லது நினைவில் இல்லை என்று கூறிய போதிலும், அப்போலோ மருத்து வர்கள் சிறந்த சிகிச்சை வழங்கினர் என்று ஆணித்தரமாகக் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட இடத்தில் பலத்த பாதுகாப்பு இருந்ததுடன், அங்கு நுழையும் நபர்கள் கண் காணிக் கப்பட்டனர் என்றும், சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது, பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ் வித பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் இந்த ஆணையம் முடிவு செய்கிறது. இவ்வாறு ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment