சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் காதல் திருமணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் காதல் திருமணம்

சென்னை,அக்.29- சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமனநல காப்பகத்தில் (மருத்துவமனை) சிகிச்சை பெற்று குணமடைந்த 42 வயதான மகேந்திரனும் 36 வயதான தீபாவும், காப்பகம் 

வாயிலில் உள்ள கோயிலில் நேற்று  (28.10.2022) திருமணம் செய்து கொண்டனர்.காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகா தலைமையில்   சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்   திருமணத்தை நடத்தி வைத்தார். மருத்துவர்கள்,செவிலியர்கள், ஊழியர்கள், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர், காப்பக வளாகத்தில் நடந்த திருமண வரவேற்பு விழா வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அமைச்சர் மா.சுப்பிர மணியன், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒப்பந்த அடிப் படையில் இருவரும் தலா ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் மனநல காப்பகத்தில் வார்டு மேலாளராக பணிபுரிவதற்கான பணிநியமன ஆணையை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று மண மக்களை வாழ்த்தினர்.

சென்னையை சேர்ந்த மகேந் திரன் எம்.பில். படித்துள்ளார். நல்லவசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். வேலூர் மாவட் டத்தைச் சேர்ந்த தீபா எம்.ஏ., பிஎட். படித்துள்ளார். இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப் பிரச்சினை உள்ளிட்ட காரணங் களால் மனதளவில் பாதிக்கப் பட்ட இருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

காப்பகத்தில் பணி... 

மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் குணமடைந்த மகேந்திரன் காப்பகத்தில் பராமரிப்பாளராகவும், தீபா அதே காப்பகத்தில் நடத்தப்படும் பேக்கரி ஒன்றிலும் பணியாற்றி வருகின்றனர். தந்தையை இழந்த இருவரும், குணமடைந்த பின்னர் ஒருவரையொருவர் சந்திக்கத் தொடங்கினர். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறி யுள்ளது. தங்களுடைய காதலை சக ஊழியர்களிடமும், காப்ப கத்தின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடமும் தெரிவித்துள்ளார்.

 இதையடுத்து, பூர்ண சந்திரிகா 2 குடும்பத்தினரி டமும் பேசி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

வேலைக்குச் செல்வதற்கு வசதியாக காப்பகத்தின் அருகி லேயே இவ்விணையர் வாட கைக்கு வீடு எடுத்துள்ளனர். 200 ஆண்டுகள் பழைமையான கீழ்ப் பாக்கம் மனநல காப்பகத்தில் நடந்த இந்த திருமணம் அனை வரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. 

இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் இயக்குநர் மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடம் கேட்ட போது, “இந்த திருமணம் எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. காப்பக வரலாற்றில் இந்த திருமணம் இடம்பெறும். மகேந்திரன் - தீபா இணையர் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமணத்துக்கு மகேந்திரன் தரப்பிலிருந்து அவ ரது மாமாவந்திருந்தார். வசதி யான குடும்பமாக இருந்தாலும், வீட்டுக்குச் செல்ல மகேந்திரனுக்கு விருப்பம் இல்லை. அமைச்சர் இருவருக்கும் வேலை வழங்கியிருக்கிறார்'' என்றார்.


No comments:

Post a Comment