இரட்டை நாக்குப் பேர் வழிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 17, 2022

இரட்டை நாக்குப் பேர் வழிகள்!

 மிசோரம் மாநில பிஜேபி அலுவலகத்தில் இயேசு கிறிஸ்து படங்கள் உள்ளன. பைபிள் வாசகங்கள் படிக்கப்பட்டு கிறிஸ்துவ பிரார்த்தனையுடன் கூட்டம் துவங்கியதாக, பிஜேபியின் தேசிய மகளிரணி தலைவர் நேரில் பார்த்து மகிழ்ந்துள்ளார். ('துக்ளக்' 9.10.2022 பக்கம் 25, 26).

மிகவும் மகிழ்ச்சி. சென்னை கமலாலயத்தில் அதே போல பிற மதப் படங்களை வைப்பார்களா? பிற மத பிரார்த்தனை களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருந்த கே.எஸ். சுதர்சன் கூறினாரே ('தினமணி' - 16.10.2000) நினைவிருக்கிறதா?

"பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தை முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்" என்று ஆர்.எஸ்.எஸ்.  தலைவர் கே.எஸ். சுதர்சன் வலியுறுத் தினார்.

ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த முகாமில் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, உ.பி. முதல்வர் ராம்பிரகாஷ் குப்தா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். 

நிறைவு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குப்பன்ன ஹள்ளி சுதர்சன் ஆற்றிய உரை விவரம்.

பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும், பிற மதங்களின் கருத்தையும், பிற மதங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர் களும் ஏற்று தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.

ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆகியோருடைய ரத்தம் தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அன்னிய நாட்டிலிருந்து நமது நாட்டின்மீது படையெடுத்த பாபரை எதற்காக முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாட வேண்டும். பாபருடைய கல்லறைக் கருத்துகளை முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானமே புறக்கணித்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் முன்னோர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்ல. எனவே முஸ்லிம்களின் முன்னோர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்தான்.

ஈரானிலுள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென 'சுபியிசத்தை' வகுத்துக் கொண்டனர். எனவே இஸ்லாமிய புதிய அமைப்பை ஏற்படுத்துவது பற்றி இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டும்

இந்தியாவைத் துண்டாடியது மனித வரலாற்றின் மிகப் பெரிய தவறு என்று பாகிஸ்தானைச் சேர்ந்த முத்தா ஹிதா குவாமி இயக்கத்தின் தலைவர் அல்தாப் ஹாசன் தெரிவித்துள்ள கருத்தை முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அனைத்து மதங்களும் சமமானதல்ல என்று வாடிகனிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையிடம் வெளியிட்டுள்ள அறிக்கை கண்டனத்துக்குரியது. இதுபோன்ற கருத்துகளில் நம்பிக்கை கொண்டுள்ள (கத்தோலிக்க மிஷினரிகளை) கிறிஸ்தவ அமைப்புகளை இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

மதமாற்றம் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்து.

வாடிகனிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை யிடத்தின் கருத்துக்கு பெரும்பாலான இந்திய கிறிஸ்தவர்கள் கட்டுப்பட்டுள்ளனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவை தங்களுக்கென சுதேசி சர்ச் கருத்துக்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

எனவே இந்தியக் கிறிஸ்தவர்களும் கத்தோலிக்க தலைமையிடத்தின் ஏற்க முடியாத கருத்தை உதறித் தள்ளிவிட்டு, அதனுடன் உள்ள உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ரட்சிப்புக்கு இதர பல வழிகள் உள்ளன."

('தினமணி 16.10.2000)

மிசோரம் காட்சியும் - ஆர்.எஸ்.எஸின் மாஜித் தலைவர் கே.எஸ். சுதர்சனின் வரைபடமும் எப்படி 'ஒத்துப் போகின்றன' - பார்த்தீர்களா?

சந்தர்ப்பவாதம் பேசுவதில் சங்பரிவார்களை அடித்துக் கொள்ள புதிதாக அவர்கள் நம்பும் மகாவிஷ்ணு புது அவதாரம்தான் எடுக்க வேண்டும் போலும்! இரட்டை நாக்கில் பேசுவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே!

என்னதான் வேடம் போட்டாலும் சிறுபான்மை மக்கள் இவர்கள் விரிக்கும் வலையில் விழ மாட்டார்கள்.

சிறுபான்மை மக்களும், பட்டியலின மக்களும் பாடம் கற்பிக்கத் தயாராகத் தான் இருக்கிறார்கள்.

 

No comments:

Post a Comment