ஹிந்தித் திணிப்பு - நுழைவுத் தேர்வு எதிர்ப்பு - அக்.15ஆம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

ஹிந்தித் திணிப்பு - நுழைவுத் தேர்வு எதிர்ப்பு - அக்.15ஆம் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சென்னை, அக்13 ஹிந்தித் திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட் டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் வரும் 15-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார். 

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., மாண வர் அணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஹிந்தித் திணிப்பு இந்திய துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முற்படு கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளு மன்ற குழு அளித்துள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு நடத்தும் அய்.அய்.டி., அய்.அய்.எம்., எய்ம்ஸ் மற்றும் ஒன்றிய அரசின்கீழ் வரும் பல்கலைக் கழகங்களான உயர்கல்வி நிறுவனங் களில் கட்டாயமாக ஹிந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டு மென்று கட்டாயப்படுத்துவது ஹிந்தி பேசாத மாநிலங்களின் உணர்வு களுக்கு எதிரானது. மேலும், ஒன்றிய  அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, ஹிந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது. இது ஹிந்தியைப் படித்தால் மட்டுமே வேலை என்கிற நிலையை உருவாக்கி, ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மறைமுக சதித் திட்டமாக காட்சி அளிக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் 8-ஆவது அட்டவணை யில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமை கொண்ட மொழிகளாகும் என்ற நிலையை திடீரென்று மாற்றி, ஹிந்தியைப் பொது மொழியாக திணிப்பது எதேச்சதிகார மானது.

ஒரே நுழைவுத் தேர்வு

 2 நாட்களுக்கு முன்பாக ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், செய்தியாளர் சந்திப்பின் போது, அனைத்து பாடத் துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு இந்திய அளவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அத்தனை மாநிலங்களில் உள்ள கல்லூரிகளின், அனைத்து பாடத்துறைகளுக்கும், தேசிய தேர்வு முகமை மூலமாக ஒரே பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்ற திட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டத் திற்கு முரணானதும், மாநில உரிமைகளை அடியோடு பறிக்கக் கூடியதாகவும், சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானதாகவும் உள்ளது. இந்த நுழைவுத்தேர்வு முறை என்பது, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப் பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இது அனைவருக்குமான சமஉரிமை - சமவாய்ப்பு ஆகிய கோட் பாடுகளை அழிக்கக்கூடியது என்பதால் தி.மு.க. இந்த ஹிந்தி திணிப்பைக் கடுமையாக எதிர்க்கிறது. 

இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து விட்டு, ஹிந்தி என்ற ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டுவருகின்ற செயலின் மற்றொரு வடிவமாக ஏற்கனவே புதிய தேசிய கல்வி கொள்கை அமைந்துள்ளது. 

ஆகவே ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தி திணிப்பை தி.மு.க. இளைஞர் அணியும் - மாணவர் அணியும் கடுமை யாக எதிர்க்கிறது.

15-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் 

அலுவல் மொழிச் சட்டத்தின் வாயிலாகவும், இந்திய அளவில் அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தின் மூலமாக வும் ஹிந்தி மொழியை திணிக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையும் தெரிவித்துள்ளதை உணர்ந்து உடனடியாக அதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு இத் திட்டத்தை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி - தலைவரின் ஆணையேற்று, தி.மு.க. இளைஞர் அணியும் - மாணவர் அணியும் இணைந்து, வரும் 15-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி யளவில், தமிழ் நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங் களிலும் "மாபெ ரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடை பெறும் என அறிவிக்கிறது. இதில் தி.மு.க. இளைஞர் அணி - மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி தோழர்களும் - மாணவர் அணி தோழர்களும் பெருந் திரளாக கலந்து கொள்வதோடு, தெற்கில் ஒலிக்கும் நமது கண்டன குரல் செங்கோட் டையில் எதிரொலிக்கும் விதமாக அமைந்திட அணிதிரண்டு வாரீர் என்று கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment