தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அக்.11 சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தில் பங்கேற்பீர்! - ஆதரிப்பீர் ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அக்.11 சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தில் பங்கேற்பீர்! - ஆதரிப்பீர் !

சென்னை, அக். 10 மதவெறிப் பரப்புரை செய்து சமூக அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையை எதிர்த்து மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும் அமைதியை நிலைநாட்டவும் நாளை (11.10.2022) சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி இயக்கத்தில் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும் என்று 9 கட்சிகள் வேண்டு கோள் விடுத்துள்ளன. 

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் மதவெறி பரப்புரை செய்து , சமூக அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளன.  மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை பலவீனப்படுத்த, மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மதச்சார்பற்ற. ஜனநா யக கட்சிகள், அமைப்புகள் சார்பில் 11.10.2022 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச்  சங்கிலி இயக்கம் நடைபெறுகிறது. வளர்ச்சி மற்றும் அமைதியை பாதுகாக்கவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் நடைபெறும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர், இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள் என  அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்க வேண்டு மென கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையில் 11.10.2022  அன்று மாலை 4 மணிக்கு அண்ணா சாலை பெரியார் சிலையிலிருந்து துவங்கி அண்ணா சிலை, எல்.அய்.சி. வழியாக அண்ணா சாலையில் மனிதச்சங்கிலி நடை பெற உள்ளது. இந்த மனிதச் சங்கிலியில் மதச்சார்பற்ற கட்சிகளின் மாநிலத்தலைவர்கள், இதர ஜனநாயக அமைப்புகளின் மாநிலத் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இதே போல், மாநிலம் முழுவதும் மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. இந்த மனிதச்சங்கிலியில் பெருந்திரளாக பங்கேற்க அனைத்துப்பகுதி மக்களையும் அன்புடன் அழைக்கிறோம் என்று அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த அறிக்கையில்  ஆசிரியர் கி. வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), கே.எஸ். அழகிரி (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி), வைகோ  (பொதுச் செயலாளர்,  மதிமுக), கே. பாலகிருஷ் ணன் (மாநில செயலாளர், சிபிஎம்), இரா. முத்தரசன்  (மாநில செயலாளர், சிபிஅய்), தொல். திருமாவளவன், எம்.பி., (தலைவர்,   விசிக), கே.எம்.காதர்மொய்தீன் (தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), எம்.எச். ஜவாஹிருல்லா (தலைவர்,மனிதநேய மக்கள் கட்சி), தி. வேல்முருகன் தலைவர்,  (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.


No comments:

Post a Comment