மருத்துவக் கல்வி யாருக்கு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 21, 2022

மருத்துவக் கல்வி யாருக்கு?

2022ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய அரசு மருத்துவக் கல்லூரிகள்  312. அதில் உள்ள 48,012 இடங்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டும் நிரப்பப்படுவார்கள்.

மீதமுள்ள 9,45,057 பேரில், யாரிடம் பணம் அதிகமாக இருக்கிறதோ அவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கொடுக்கப்படும்.

நீட் தேர்வு தேர்ச்சியில் முன்னணி மாநிலங்கள்;

உத்தரப்பிரதேசத்தில் 1,17,316 பேர் (கல்வி அறிவில் பின்தங்கிய மாநிலம்).

மகாராட்டிராவில் 1,13,812 பேர்.(கல்வி அறிவில் பின்தங்கிய மாநிலம்).

ராஜஸ்தானில் 82,548 பேர் (கல்வி அறிவில் பின்தங்கிய மாநிலம்).

தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் (கல்வி அறிவில் முன்னேறிய மாநிலம்).

இந்தியாவிலேயே தமிழ்நாட்டு கல்லூரிகளில் உள்ள இடங்கள் வடமாநிலத்தவர் கைகளில் செல்ல இருக்கிறது.

சமூக அடிப்படையில் தேர்ச்சி; தாழ்த்தப்பட்டோர் - 26,087 பேர்.

பழங்குடியினர் - 10,565 பேர்.இதர பிற்படுத்தப் பட்டோர் 74,747 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில்.

முன்னேறிய ஜாதியினர் மற்றும் முன்னேறிய ஜாதியில் உள்ள ஏழைகள் [10% இட ஒதுக்கீடு] 8,81,402 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

 268 பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவழியினரின் பிள்ளைகள்.  

இந்த முன்னேறிய ஜாதியினர் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நுழையப் போகின் றனர்.

இந்தப் புள்ளி விவரங்கள் காட்டும் உண்மை என்ன? சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்பதன் நோக்கத்தைச் சிதற அடித்து விடுகிறது. 

'நீட்' என்பது தகுதி - திறமைக்கான அளவுகோல் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொள்வது உண்மையா? தனியார்க் கல்லூரிகளில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்கள், பணவசதி உள்ளவர்கள் என்றால் சேர்ந்து கொள்ளலாம் என்றால், அங்கே தகுதி - திறமை எங்கே போயிற்றாம்?

இதில் வேடிக்கை என்னவென்றால் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியுள்ள உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் 'நீட்' தேர்ச்சி அதிக எண்ணிக்கையில் இருப்பதும், கல்வியில் வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பின் தங்கி இருப்பதும் எதைக் காட்டுகிறது?

ஒரே மாதிரியான கேள்வித்தாள்கள் கிடையாது. வித்தியாசமான கேள்வித்தாள்கள் - மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடாக இருப்பது முக்கிய காரணமா? உ.பி. மாநில கேள்வித்தாள் எளிமையாகவும், தமிழ்நாடு போன்ற மாநிலக் கேள்விகள் கடுமையானதாக இருக்கக் கூடும் என்று அய்யப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இவ்வளவுக்கும் மருத்துவக் கட்டமைப்பு வசதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கக் கூடிய ஒன்றாகும். அப்படி இருப்பதற்காகத்தான் 'நீட்' என்னும் தண்டனையா?

ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சி என்று ஒழிகிறதோ, அன்றே தான் நாட்டுக்கு நல்வாழ்வு என்பது மட்டும் திண்ணமாகும்.

No comments:

Post a Comment