தமிழர் தலைவர் அவர்களே, நூறு ஆண்டுகளுக்கு மேலும் வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்டுங்கள் - வழி நடத்துங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 7, 2022

தமிழர் தலைவர் அவர்களே, நூறு ஆண்டுகளுக்கு மேலும் வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்டுங்கள் - வழி நடத்துங்கள்!

 அனைத்துக் கட்சித் தலைவர்களும் போர் முழக்கம்

விடுதலை ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்து 2ஆவது தவணையாக விடுதலை சந்தா தொகையினை வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழர் தலைவருக்கு புத்தகத்தை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
 மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா,  மதிமுக துணைச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

முத்தமிழறிஞர் கலைஞரின் ஒளிப்படக் கலைஞர் முரசொலி சிங்காரம் தமிழர் தலைவருக்கு ஆள் உயர ரோஜா மாலையை மகிழ்ச்சியோடு  அணிவித்தார் விடுதலை சந்தா தொகை ரூ.10,000 வழங்கி மகிழ்ந்தார். 
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா, எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோருக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்தார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லா ஆகியோருக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மதிமுக துணைச் செயலாளர் மல்லை சத்யா  ஆகியோருக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்தார்.

திருப்பத்தூர் கே.சி.எழிலரசன், அகிலா ஆகியோரின் மகள் மருத்துவர் மங்கையர்க்கரசி - அமுதன்சவுரிராஜன் (அடையாறு மாணவர் நகலகம்) ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.1,00,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

 புதுக்கோட்டை மாவட்ட விசிக தோழர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் மூலமாக சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ரூ.20,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: சரவணன். சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் விடுதலை சந்தா தொகை 2ஆவது தவணையாக ரூ.50,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்.

விழுப்புரம் மாவட்டம், ஆரியூர் கிராம மக்கள் மிகுந்த உணர்ச்சி பெருக்குடன், பகுத்தறிவுச் சுடர் ஏந்தி, பறை இசை முழங்க நேற்று மூன்றாம் தவணையாக 
269 சந்தாக்கள்   திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  வழங்கினர். முதல் தவணையாக 113 சந்தாக்கள், இரண்டாம் தவணையாக 134 சந்தாக்கள் இதுவரை 516 விடுதலை சந்தாக்கள். குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, செப்.7 ‘விடுதலை’ ஆசிரியர் தமிழர் தலைவர் நூறு ஆண்டுகளுக்கு மேலும் வாழ்ந்து எங்களுக்கு வழிகாட்டுங்கள் வழி நடத்துங்கள்  - ‘விடுதலை’யின் வீரிய பணி தொடரட்டும் என்றனர் தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும்.

88 ஆண்டுகால 'விடுதலை' ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு தலைவர்கள் பங்கேற்கும் பாராட்டு விழா - விடுதலை சந்தா வழங்கும் விழா 06.09.2022 அன்று மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில் மிகுந்த மகிழ்வோடும் உணர்ச்சி பெருக்குடனும் நடைபெற்றது.

பகுத்தறிவுச் சுடரும் ! பறை இசை முழக்கமும்!

நிகழ்வின் தொடக்கமாக விழுப்புரம் மாவட்டம், ஆரியூர் கிராம மக்கள் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன், பகுத்தறிவுச் சுடர் ஏந்தி, பறை இசை முழங்க மூன்றாம் தவணையாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தாக்களை வழங்கினர். நரிக்குறவர்கள், சுய உதவிக் குழு பெண்கள், இருளர்கள், புதிர வண்ணார்கள், கிராம பூசாரிகள், அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தோழர்கள், துப்புரவு பணியாளர்கள், தேநீர் கடை வைத்திருப்பவர்கள், அறிஞர் அண்ணா சுமைத் தூக்கும் தொழிலாளர்கள், திருநங்கைகள், உழைக்கும் மக்கள், விளிம்பு நிலை மக்கள் என்று அனைவரிடமும் பெறப்பட்ட சந்தாக்களை மேடையில் அவர்கள் வழங்கிய போதும், அவர்கள் தந்த பகுத்தறிவுச் சுடரை ஆசிரியர் ஏந்தி நின்ற போதும் உணர்ச்சிப் பெருக்கில் அனைவரின் கண்களிலும் ஒரு சொட்டு கண்ணீரோடு,  இத்தமிழ் சமூகம் ஆசிரியரின் உழைப்புக்கு எவ்வளவு கடமைப்பட்டுள்ளோம் என்ற நன்றி உணர்வுடன் அரங்கமே எழுந்து நின்று, அரங்கம் அதிர கரஒலியுடன் நன்றியை செலுத்தியது. முதல் தவணையாக 113 சந்தாக்கள், இரண்டாம் தவணையாக 134 சந்தாக்கள் நேற்று மூன்றாம் தவணையாக 269 சந்தாக்கள். இதுவரை 516 விடுதலை சந்தாக்கள். குக்கிராமத்தைச் சேர்ந்தவர்களின் இந்த நன்றி உணர்ச்சி அலை நாடெங்கும் பரவினால் எல்லோருக்கும் விடுதலையே!

விடுதலை தேனீக்கள்!

கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் தங்களின் விடுதலை சேகரிப்புப் பணியில் நடந்த சம்பவங்கள், ஆசிரியருக்கு நாம் காட்டும் நன்றி ஆகியவற்றை பதிவு செய்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் வரவேற்புரை வழங்கினார்.

கழகப்பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திர சேகரன், வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, அமைப்புச் செயலாளர்கள் ஊமை.ஜெயராமன், ஈரோடு த.சண்முகம், மதுரை வே.செல்வம், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், எழுத்தாளர் மஞ்சை வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 முதல் நிகழ்வாக மாநில கிராமப்புற பிரச்சார செயலாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் எழுதி, கலை மாமணி திருத்தணி. பன்னீர்செல்வம் பாடிய "மனித இன விடு தலைக்கே" என்ற உணர்ச்சிமிகு  பாடல் வெளியிடப்பட்டது.  விடுதலை சந்தா சேகரிப்பில், விடுதலை தேனீக்களாக, தமிழ்நாடு முழுவதும் 72 நாள்கள் தொடர் பயணம் செய்து, முதல் தவணையாக சந்தாக்களை பெற்ற கழகத் தோழர் களின் சார்பில், அதன் அடையாளமாக, கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேக ரன், மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் ஆகி யோர் ஆசிரியரின் 60 ஆண்டுகால விடுதலை பணி, விடுதலை யால் தமிழினம் பெற்ற ஏற்றம், ஆசிரியரின் வாழ்நாள் நீட்டிப்புக்கு தேவை இன்னும் பல ஆயிரம் சந்தாக்கள், டிசம்பர் 2 மொத்த சந்தாக்களையும் சேகரித்து வழங்குவோம் என்று  பல கருத்துக்களை முன்வைத்து முன்னிலை உரை நிகழ்த்தினர்.

கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் விழாவுக்கு வருகைபுரிந்த தலைவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்.சிறப்பு விருந்தினர்களுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். விழுப்புண்களை ஏற்ற விடுதலை வீர வரலாறு புத்தகத்தை சிறப்பு விருந்தினர்களுக்கு கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வழங்கினார்.

88 ஆண்டு கால ‘விடுதலை’ ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு முரசொலி ஏட்டின் கலைஞரின் புகைப்படக் கலைஞர் ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

சிறப்பு விருந்தினர்களாக விழாவில் பங்கேற்று சிறப் பித்த தலைவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டு கால ஆசிரியர் பணியைப் பாராட்டி பயனாடை அணிவித்து, புத்தகங்கள் வழங்கி சிறப்பு செய்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா, நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், மனித நேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

88 ஆண்டு கால விடுதலை ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியர் பணி சிறப்பு குறித்து பெரியார் ஊடகத்துறை சார்பில் காணொலி திரையிடப்பட்டது.

88 ஆண்டு கால விடுதலையின் 60 ஆண்டு கால ஆசிரியருக்கு பாராட்டு விழாவில் வெளியிடப்பட்ட விடுதலை சிறப்பிதழில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதிய கவிதை ஒலி ஒளி வடிவத்துடன் அரங்கமே உணர்ச்சிப் பெருக்கால் கர ஒலியினை எழுப்பிட திரையிடப்பட்டது.

மோகனா அம்மையாருக்கு நன்றி தெரிவிப்பு

60 ஆண்டு கால ஆசிரியர் பணி தொடர ஆசிரியர் அவர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வரும் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா அம் மையாருக்கு விழாவில் அனைவர் சார்பிலும் நன்றி தெரி விக்கப்பட்டு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.இராசா, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் இணைந்து ஆசிரியர், மோகனா அம்மையார் இருவரையும் இணைத்து பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர். பார்வையா ளர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

கழகத்துணைத் தலைவர் தலைமையுரை

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், உலகில் எந்த தலைவருக்கும் கிடைக்காத வாய்ப்பினைப் பெற்ற 88 ஆண்டுகால "விடுதலை" ஏட்டின் 60 ஆண்டுகால ஆசிரி யர் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்   தலைமை உரை ஆற்றினார். அவரது தலைமை உரையில்: 

விடுதலையால் பயன் அடையாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இது ஓர் உணர்ச்சிகரமான நிகழ்ச்சி. தலைவருக்கு எடைக்கு எடை வெள்ளி வழங்கி இருக்கிறோம், எடைக்கு எடை தங்கம் கொடுத்திருக்கிறோம். ஆனால், அவை அனைத்தையும்விட அவருக்கு மகிழ்ச்சியை தருவது விடுதலை சந்தாக்கள் தான். பிறந்தநாள் கொண்டாட விருப்பமில்லாத தலைவர். அவருக்கு பிறந்தநாள் கொண்டாட முயற்சி எடுத்த போது, அவர் ஏற்றுக்கொள்ள வில்லை. அய்ம்பதாயிரம் சந்தா கொடுக்கிறோம் என்று சொன்னோம், பங்கேற்றார். அவருக்கு பவள விழா கொண்டாட முயற்சி செய்தோம். ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முத்தமிழறிஞர் கலைஞரிடம் தான் எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டு பற்றியும்,அதன் விளைவாக ஆருயிர் இளவல் வீரமணிக்கு என்னுடைய தலைமையில் பவள விழா நடக்கும் என்று கலைஞர் அறிவித்ததையும் நினைவு கூர்ந்து, ஆசிரியர் நமக்கு கிடைத்ததற்கும், அவரது பணிக் கும் சிலருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் என்றும், அந்த நன்றிக்குரியவர்கள் பட்டியலை தெரிவித்தார். ஆசிரியரின் மூத்த அண்ணன் கி.கோவிந்தராஜன், அவரது ஆசிரியர் திராவிட மணி,  ஆசிரியரை பெரியாரிடம் அறிமுகம் செய்த டார்பிட்டோ ஏ. ஜனார்த்தன்,  நமக்கு ஆசிரியரை அடையாளப்படுத்திய தலைவர் பெரியார், தனது மகன் போல் ஆசிரியரை நினைத்த அன்னை மணி யம்மையார் நாட்டுக்கு வலிமையாக அறிமுகப்படுத்திய தந்தை பெரியார். இத்தனை ஆண்டு காலம் எத்தனை அறுவை சிகிச்சைக்கு பிறகும் இந்தத் தொடர் பணிக்கு ஆசிரியர் வருவதற்கு முக்கிய காரணமாக விளங்கும் ஆசிரியரின் வாழ்விணையர் மோகனா ஆகிய அனை வருக்கும் நன்றியைக் கூறினார். தொடர்ந்து நெருக்கடி காலத்திலும், வருமான வரி சோதனையின் போதும் விடு தலை சந்தித்த நெருக்கடிகளை வரலாற்று குறிப்புகளோடு பதிவு செய்தார். விழுப்புரம் மாவட்டம், ஆரியூர் கிராம மக்கள் வழங்கிய சந்தாக்களையும், அதை யார் யார் வழங் கினார்கள் என்பதையும் பட்டியலிட்டார். விடுதலையால் பயன் அடையாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதன் பெட்டி செய்திகூட எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது என்பதையும், இன்று வரை விடுதலை செய்தியின் தாக்கம் உயர் நீதிமன்றம் வரை எப்படி பிரதி பலிக்கிறது என்பதை எல்லாம் விளக்கி விடுதலையின் அவசியத்தையும் அதற்கு ஆசிரியர் ஆற்றிய பணியினையும் மிக உருக்கமாக பதிவு செய்தார். ஆசிரியருடன் 48 ஆண்டு காலத்திற்கு மேல், உடனிருந்து, அவருடன் அனைத்து இயக்க செயல்பாடுகளிலும் பயணித்து, விடுதலை 88 ஆண்டு சாதனைக்கு பக்கபலமாக இருக்கும் ஒருவர் இவற்றையெல்லாம் விளக்க கேட்பது பெரும் வாய்ப்பன்றோ!

விடுதலை சந்தா சேர்க்கும் பணியில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்!

இந்தத் தொடர் பணியினை, நிறைப்பணியாக ஆற்றிடும் ஆசிரியரை பாராட்டி , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைவர்வைகோ அவர்களின் சார்பி லும் வாழ்த்துகளையும் தெரிவித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தனது பாராட்டுரையைத் தொடங்கினார். திராவிடர் இயக்க வரலாற்றில் இருந்த 300க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் குறித்தும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர், திராவிடர் இயக்க போர்வாள் வைகோ, இன்றைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிய பத்திரிகைகள் குறித்தும், இன்று வெளிவரும் திராவிட பத்திரிகைகள் பற்றியும் விளக்கி, ஒரு பத்திரிக்கை நாள்தோறும் வெளி வருவது என்பது, பிரசவ வேதனை; அந்த வேதனையோடு தான், ஆசிரியர் விடுதலையை நாள்தோறும் பிரசவிக்கிறார் என்று உருக்கமாக பதிவு செய்தார். துப்பாக்கியில் தோட் டாக்களை பாதுகாக்கும் இடம் மேகஸின். தோட்டாக்களை விட வீரியமாக செயல்படுவதால் பத்திரிக்கைகளுக்கு மேக ஸின் என்று பெயர் வந்திருக்குமோ என்று நினைக்கிறேன் என்று தொடர்ந்த அவர், விடுதலை சந்தாவினை தன்னிடம் பெற திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அழைத்தபோது, தான் வெளியில் இருந்த சூழலையும், தற்போது சந்தா சேகரிக்கும் பணியில் என்னையும் இணைத்துக் கொள் கிறேன் என்று ஆசிரியர் முன்னிலையில் சூளுரைத்தார். இந்தப் பணிக்கு துணை நிற்போம்; தோள் கொடுப்போம். ஆசிரியர் அவர்கள் விரல் ரேகையால் எழுதிக் கொண்டி ருக்கிறார். அவர் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ, இயற்கை துணை புரியட்டும் என்று உளமார வாழ்த்தி அமர்ந்தார்.

ஆசிரியரின் எழுத்துகளுக்கு மரணமும் இல்லை; தோல்வியும் இல்லை!

88 ஆண்டுகால விடுதலை ஓர் ஏட்டுக்கு 60 ஆண்டு கால ஆசிரியராக இருப்பது சாதாரண பணி அல்ல என்றும், அவர் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன் அவரது உரையைத் தொடங்கினார்.

அக்டோபர் புரட்சி அடைந்தபோது லெனின் இஸ்காரா என்ற தீப்பொறி பத்திரிக்கையை தொடங்கி, இது எழுச்சி யூட்டும் என்றார். அன்று அவர் சொன்ன எழுச்சியினை தந்தை பெரியாரும், அதனை தொடர்ந்து இன்று வரை தமிழ் சமூகத்தில் அதை  நிறைவேற்றும் ஏடாக விடுதலையும், அதன் ஆசிரியரும் இருப்பதையும் ஒப்பிட்டுப் பேசினார். 35 வருடம் தான் விடுதலையை தொடர்ந்து வாசிக்கிறேன் என்பதையும் பதிவு செய்தார். பல நேரங்களில் முரண் இருந்திருக்கிறது. தீக்கதிர்க்கு பதில், ஜனசக்திக்கு பதில் என்று விடுதலையில் வந்திருக்கிறது. ஆனால், அது எதுவும் பகை முரண் அல்ல, வளர் முரண் என்றும், ஆனால், தந்தை பெரியார் சுதேசமித்ரனுக்கு பதில் சொல்லி இருப்பார், நமது ஆசிரியர் இந்துவுக்கு பதில் சொல்லி இருப்பார் அவை பகை முரண். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை விவரித்தார். சமூக அமைப்பை மாற்ற எழுதுவது என்பது சாதாரணமல்ல. சுயமரியாதை இயக்கம் என்பது உலகத்தில் தமிழ் சமூகத்தைத் தவிர வேறு எங்கும் தோன்றவில்லை, அது இந்த மண்ணில் செய்த காரியங்களை விளக்கியும், இன்று இருக்கும் ஜனநாயக விரோத போக்கையும், தொடரும் நெருக்கடியான சூழலையும், எல்லா நிலையிலும் எப்படி நெருக்கடி சூழ்ந்து இருக்கிறது என்பதை எல்லாம் பட்டியலிட்டு, இந்த நிலையில் ஆசிரியரின் எழுத்துகள் கூடுதலாக தேவைப்படுகிறது, பெரியாரின் சிந்தனைகள் கூடுதலாக தேவைப்படுகிறது என்று அழுத்தமாக பேசினார். பெரியார் நமது வழித்துணை என்றும், அம்பேத் கர், மார்க்ஸ் நமக்கு தேவை   இதை ஆசிரியர் உணர்ந்து எழுதுகிறார். அவரின் எழுத்துக்களுக்கு மரணமும் இல்லை தோல்வியும் இல்லை என்றும், அவரின் சார் பாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் சார்பாகவும் பாராட்டுகளை தெரிவித்து அமர்ந்தார்.

நம்முடைய பத்திரிக்கை விடுதலை!

88 ஆண்டு காலம் ஓர் ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியராக தமிழர் தலைவர் மட்டும்தான் இருந்திருக்கிறார் என்று அனைவரும் சொன்னார்கள். தமிழர் என்ற முறையில், தமிழர் தான் இந்த சாதனையை புரிந்து இருக்கிறார் என்பது நமக்கு பெரும் மகிழ்ச்சி என்று, தனது பாராட்டைத் தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தனது உரையை தொடங்கினார். இளம் வயதிலேயே ஆசிரியரின் சாதனைகளை வயது வாரியாக பட்டியலிட்டு, 13 வயதில் ஆசிரியர் பேசிய  உரையைப் பார்த்து, எழுத்தாளர் ஜெயகாந்தன் வியந்து எழுதியதையும், நூறு ஆண்டுகள் கடந்தும் விடுதலை ஆசிரியராக, ஆசிரியர் இருக்க வேண்டிய தேவையையும், அவசியத்தையும் உணர்த்திப் பேசினார். திருப்பூர் மாநாட்டிற்கு சென்றபோது, ஆசிரியர் தங்கி இருந்த இடத்தில் இவரும் தங்கி இருந்ததை நினைவுக் கூர்ந்து, அப்போது ஆசிரியரின் கை நிறைய ஆங்கில பத்திரிகைகள் இருந்ததையும், அது அனைத்தையும் வாசித்து, உள்வாங்கி நம் மக்களுக்காக விடுதலையில் பிழிந்து தருகிறார் என்றார். ஒன்றிய ஆட்சி தங்கள் கொள்கைகளை ஊடகங் களில் திணித்து வரும் சூழலில், சில ஊடகங்கள் மட்டும் தான் உண்மையை பேசுகின்றன. ஆனால், பல ஊடகங்கள் ஒன்றிய அரசுக்கும் அவர்களுக்கு விலை போய்விட்டன. தமிழில் நமக்கு ஒன்றிய ஆட்சியின் அவலத்தை தெரியப்படுத்துவது விடுதலை தான். விடுதலை என்பது திராவிடர் கழக நாளேடு என்ற எண்ணம் தவறு. நம்முடைய பத்திரிக்கை விடுதலை, ஒவ்வொருவரும் சந்தா செலுத்த வேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்குடன் பதிவு செய்தார். ஜனநாயகம், சமூகநீதி, மதச்சார்பின்மையை காக்க படைக் கர்த்தராக இன்னும் பல ஆண்டுகள் தமிழர் தலைவர் வாழ வேண்டும் என்று வாழ்த்தி அமர்ந்தார்.

“விடுதலை என்றால் ஆசிரியர்; ஆசிரியர் என்றால் விடுதலை!”

இறுதி மூச்சு வரை ஆசிரியர் பணியாற்ற இருக்கும் ‘விடுதலை' ஆசிரியருக்கு பாராட்டுகள் என்று தனது வாழ்த்துக்களை பதிவு செய்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தனது உரையை தொடங்கினார். தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலும், பள்ளி பருவத்திலும் அங்கே நடைபெற்ற கூட்டங்களை கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டதையும், தந்தை பெரியார், ஆசிரியர் பேசியதை கேட்ட நினைவுகளையும் நினைவுக் கூர்ந்து, மிகக் கடினமான செய்தியையும், மிக எளிமையாக மக்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்து சொல்லும் வலிமையை, தனித்திறமையை ஆசிரியர் பெற்றிருக்கிறார். ஆசிரியரைப் பார்த்துதான் இதை நாங்களும் கற்றுக் கொண்டோம் என்றார். பொதுக்கூட்டம், அரங்கக்கூட்டம், தலைவர்கள் கூட்டம் என்று எதுவாக இருப்பினும், உரிய ஆதாரம் இன்றி பேசும் பண்பு ஆசிரியரிடம் இல்லை. எல்லா தரவுகளோடும் தான் கூட்டமேடைக்கு வருவார். இந்த பண்புகளை ஆசிரியரிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்கிறோம் என்றார். எது இந்த பணியை அவரை தொடர வைக்கிறது என்றால், அவரின் சிறந்த பண்புகள் தான். 88 ஆண்டுகள் ஒரு பத்திரிக்கையை நடத்துவதே பெரிய சிரமம். விடுதலை ஏற்றுக் கொண்டுள்ள சமூக நீதி தத்துவம் தான், அது இயங்க காரணம் என்பதை பதிவு செய்தார். அறுபது ஆண்டு காலமாக தொடர்ந்து நீடித்த முதல் மனிதர், முதல் ஆசிரியர் இவர்தான். 

விடுதலை என்றால் ஆசிரியர், ஆசிரியர் என்றால் விடுதலை என்ற அர்ப்பணிப்பும், பெரியாரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இன்றும் நீடிக்கிறார் ஆசிரியர் என்றார். அரசியல் கட்சி நடத்துவது வேறு, சமூக இயக்கம் நடத்துவது வேறு. அந்த இயக்கத்தில் இந்த பத்திரிகை நடத்துவது என்பது பெரும் பணி என்பதை விளக்கினார். இன்று பிஜேபி, ஆர்எஸ்எஸ் அரங்கேற்றும் கொடுமைக ளையும், தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அதற்கு சவால் விடும் இடமாக மாறி இருக்கிறது என்றால் அந்த அணி உருவாகி, ஒற்றுமையாக செயல்பட பிஜேபியை தோற்கடிக்காமல் ஓய மாட்டோம் என்ற நிலைக்கு 89 வயதிலும் 16 வயது இளைஞர்களைப் போல துடிப்போடு பயணிக்கும் ஆசிரியர் தான் முக்கிய காரணம் என்பதை பதிவு செய்தார். கடவுள் நம்பிக்கை இருப்ப வர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் என்று அனைவரும் பாராட்டக்கூடிய மய்யமாக ஆசிரியர் இன்றைக்கு திகழ் கிறார் என்றும், சமூகம் மிகப்பெரிய சவாலை சந்தித்துக் கொண்டுள்ளது, பெரியார், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இன்று நம்மிடம் இல்லை, இவர்கள் இல்லாத நிலையில், தமிழர் தலைவரின் தலைமையில் அணி திரண்டுள்ளோம் என்பது தான் நமக்கு மகிழ்ச்சி. ஜாதி ஒழிக்கப்பட வேண்டும், மனுநீதி ஒழிக்கப்பட வேண்டும், அந்த பொறுப்பு நமக்கு உண்டு. அதே நேரத்தில் வர்க்கப் பிரிவினைக்கு காரணமும் வர்ணாசிரம தர்மம் தான். இவற்றை ஒழிக்க, ஆசிரியர் தொடர்ந்து எழுத வேண்டும் என்றார். தத்துவப்  போராட்டத்தை நடத்தும் விடுதலையின் ஆசிரியர், இறுதி மூச்சு வரை ஆசிரியராக நீடிக்க சிபிஎம் சார்பிலும், தனது சார்பிலும் வாழ்த்துக்களை பதிவு செய்து அமர்ந்தார்.

“சனாதன சக்திகளை எதிர்க்கும் துணிச்சல் ஆசிரியரைப் பார்த்து கற்றுக் கொண்டது!”

ஆசிரியரின், ஆசிரியர் பொறுப்பின் வயதும், என் வய தும் ஒன்று.  29 வயதில் ஆசிரியராக இவர் பொறுப்பேற்றதில் வியப்பேதும் இல்லை. காரணம், 10 வயதிலேயே மேடை யில் பேசி, பிரச்சாரம் செய்தவர். பெரியாரிடமே சான்றிதழ் பெற்றவரை, நாம் வாழ்த்துவதற்கு இனி ஒன்றும் இல்லை என்று உணர்வுப் பெருக்குடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி., தனது உரையை தொடங்கினார். பெரியாருக்கே  விடுதலையை நிறுத்தி விடலாம் என்ற எண்ணம் தோன்றி, இவரிடம் ஒப்படைக்கலாம் என்ற எண்ணம் வந்தது மிகச்சரியான தேர்வு, சரியான முடிவு தான் என்பது இங்கு பாராட்டுக்குரியது என்றார். கருத்தியல் போருக்கான, கள போருக்கான தனது வாரிசினை 1962லேயே பெரியார் தேர்வு செய்து விட்டார். அவரிடம் விடுதலையை ஒப்படைத்து விட்டார் என்பது இங்கே நினைவு கூரப்பட வேண்டியது என்றார்.  30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் இதே  அரங்கில் அவர் பேசியதும், அப்போது இருந்த அரங்கின் நிலையையும், தற்போது நிலையையும், அதற்குக் காரணம் ஆசிரியர் என்பதையும் விவரித்தார். 40 வருடத்திற்கு முன் இருதய அறுவை சிகிச்சை செய்தவர் ஆசிரியர். அறுவை சிகிச்சைக்கு பிறகு, உளவியல் ரீதியாக எப்படிப்பட்ட பாதிப்புகள் வரும் என்பதையும், அதை யெல்லாம் தாண்டி இவர் இப்படி இயங்குவதும், அவரது துடிப்பும் பிரமிக்க வைக்கிறது என்றார். பல மணி நேரம் மேடையில் அமர்ந்திருக்கிறார். அனைவரும் பேசி முடித்த பிறகு ஒரு மணி நேரம் பேசுகிறார் என்பதும், எதிரிகளை நடுங்க வைக்கும் அளவிற்கு ஆதாரத்துடன் செய்திகளைத் தருகிறார் என்பதும் அவரின் பிறவி பண்பாகவே நான் பார்க்கிறேன் என்றார். துணைத் தலைவர் கவிஞர் அவரின் கவிதையில் ஆசிரியர் பொறுப்பில் இன்னும் நூறு ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று அவரின் ஆசையை தெரிவித்தார். தமிழ் மக்கள், உழைக்கும் மக்கள், விளிம்பு நிலை மக்கள் அவர்களின் நன்மைக்கு ஆசிரியர் இன்னும் பல ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று தனது விருப்பத்தினைப் பதிவு செய்தார். 

திராவிடர் இயக்கத்தின் கடைசி பெரும் தலைவராக இன்று நம்மோடு ஆசிரியர் இருக்கிறார். அன்று ஒரு வேலை ஏடு நிறுத்தப்பட்டிருந்தால், இன்று சமூகத்தின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார். நூலகத்திற்கு சென்றால் விடுதலையைத் தேடிப் படிக்கும் பழக்கம் திருமாவுக்கும் உண்டு என்று உணர்ச்சியுடன் பதிவு செய்தார்.  மாணவர் பருவத்தில், இந்தித் திணிப்புக்கு எதிராக இதே அரங்கில் அவர் பேசியதையும், அவரின் பேச்சே தலைப்பாக விடுதலையில் வந்ததையும், அதைப் பார்த்து அவர்கள் அடைந்த மகிழ்வையும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். சனாதன சக்திகளை எதிர்க்கும் துணிச்சலை உங்களிடம், உங்களை பார்த்து தான் கற்றுக் கொண்டோம் என்றார். 

திராவிடர் கழகத்தின் தளபதிகளுக்கு சட்டமன்ற ஆசை இல்லை, அவர்களின் ஒரே ஆசை பெரியாரியலைப் பரப்ப வேண்டும் தமிழர் தலைவர் தலைமையிலே என்ற அளவிற்கும், கேட்கும்போதெல்லாம் அள்ளிக் கொடுக்கும் மிகச் சிறந்த தளபதிகளை ஆசிரியர் உருவாக்கி வைத் துள்ளார் என்று பெருமையுடன் பதிவு செய்தார். 90 வயதி லும் பிரமாண்டமான செயல் திட்டத்தை முன்னெடுத் துள்ளார். எப்படி இதை சாதிக்கப் போகிறார், 

இந்த பெரியார் உலகத்தை சாதிக்க போகிறார் என்று மலைப்பாக இருக்கிறது. அவர் சுற்றி சுழன்று பணி செய்து, பெரியாரியத்தை இன்றும் உயிர்ப்போடு வைத்திருக்கிறார் என்றார். திமுகவை இன்றைக்கு சனாதன சக்திகள் எதிர்க்கிறது என்றால் அது அரசியல் கட்சி என்பதால் மட்டும் அல்ல. பெரியார் என்ற தொட்டிலில், நாற்றங்காலில் வளர்ந்த இயக்கம் என்பதால். பெரியாரின் பிள்ளை கலைஞர் என்பதால் தான் அவர் மிகப்பெரிய துணிச்சலை பெற்றார். பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என்பது பெரியாரின் சிந்தனையில் வளர்ந்த திட்டம் என்று விளக் கினார். பெரியாரியம் தான் தமிழக அரசியலை வழிநடத்து கிறது;அச்சாக மய்யமாக இருக்கிறது. இன்றைய நிலையில் அதிகமான வீரியத்தோடு, மிக அதிகமான வீரியத்தோடு தமிழர் தலைவரின் பங்கு தேவைப்படுகிறது. வரலாற்றுத் தேவையாக இன்னும் பல பத்து ஆண்டுகள் ஆசிரியர் வாழ வேண்டும் என்றார். உடனுக்குடன் செய்திகளை வாசிப்பது, உடனுக்குடன் அதை வெளிப்படுத்துவது, அதற்கு எதிர்வினை ஆற்றுவது என்ற போர் குணத்திற்கு அவருக்கு நிகர் அவர்தான் என்பதை பதிவு செய்து, தருமபுரியில் நடந்த ஜாதி வெறியாட்டத்தையும், அதற்கு எதிராக தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டையும், அதே இடத்தில் திருமாவளவன் பேசுவார் என்று ஆசிரியர் பிரகடனப்படுத்தியதையும், ஜாதி வெறியாட்டம்  தாண்டவம் ஆடிய அதே இடத்தில், அதே திருமா வந்து பேசுவார் என்ற துணிச்சல், பெரியாரிடம் ஆசிரியர் பெற்ற துணிச்சல் என்று அழுத்தமாக பதிவு செய்தார். கடந்த வாரம் திருவாரூரில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனிகளை விட 10 மடங்கு அதிகமாக கூட்டத்தை திரட்டி, சனாதனிகள் வாலாட்டும் அதே இடத்தில், அங்கேயே சென்று, அந்த வாலினை ஒட்ட நறுக்குவது ஆசிரியரின் ஆற்றல் என்றார். விடுதலைக்கும், ஆசிரியருக்கும் திடலுக்கும், திருமாவுக்குமான உறவு நீண்ட நெடிய உறவு. அந்த உறவின் மூலம் கிடைத்ததே இந்த துணிச்சல். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். பணியாற்ற வேண்டும். உங்கள் பிள்ளைகளாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இருக்கிறோம். மூன்றாம் குழல் துப்பாக்கியாக  உங்களோடு என்றும் துணை நிற்போம் என்று தனது வாழ்த்தை பதிவு செய்து அமர்ந்தார்.

வெற்றி பெற வேண்டும் நீங்கள் - பெரியாரையும், கலைஞரையும் - வயதில்!

ஆசிரியரின், ஆசிரியர் பொறுப்பு வயதும், தனது வயதும் ஒன்று என்று திருமாவளவன் பதிவு செய்தார். ஆனால், ஆசிரியராக அவர் பொறுப்பேற்ற போது நான் பிறக்கவே இல்லை. நீங்கள் விடுதலை ஆசிரியர் என்பதால் அனைவரும் உங்களை ஆசிரியர் என்று அழைக்கிறார்கள். ஆனால், உள்ளபடியே நான் உங்கள் மாணவன் அதனால் நீங்கள் எனது ஆசிரியர் என்று உள்ளத்தில் எழுந்த உணர்வுப் பெருக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி., அவர்கள் தனது உரையை தொடங்கினார். பிஜேபியுடன் திமுக கூட்டணி வைத்த போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டக்கூடாது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்ற தங்களது மூன்று முக்கிய கொள்கைகளை சொல்லி தான் தாங்கள் கூட்டணி வைத்ததை நினைவு கூர்ந்து, அந்த நேரத்தில் விடுதலையில் தங்களை மிகக் கடுமையாக எழுதுவார்கள் என்பதை எல்லாம் விளக் கினார். சில நேரம் கலைஞரிடம் அப்படி விடுதலையில் வரும் செய்திகளை மறைக்கப் பார்ப்போம். ஆனால், விடுதலை எங்கே என்று கலைஞர் கேட்டுப் படிப்பார் என்றார். 

விடுதலை வந்த அறிக்கைகளுக்கும் தலையங்கத்திற்கும் பதில் எழுதுவோமா என்று முரசொலியில் கேட்ட போதும், இந்த கூட்டணியை விமர்சித்து வந்தால் தான் அது விடுதலை; கூட்டணியில் இருக்கும் என்னை விமர்சித்து எழுதினால் தான் அவர் வீரமணி. இல்லையென்றால் ஈரமணி ஆகிவிடுவார் என்று கலைஞர் சொன்னதையும் எடுத்துரைத்தார். பேரறிஞர் அண்ணா திக - திமுக இரண்டையும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார். கலைஞர் ஒரு படி மேலே சென்று இரண்டும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றார். அண்ணா  சொன்னதாக கேட்டிருக்கிறேன். கலைஞர் சொன்ன நாணயத்தின் இரண்டு பக்கங்களை பார்த்திருக்கிறேன். இன்று முதல மைச்சராக இருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற திராவிட மாடலின் அடையாளம் அருமை முதலமைச்சருக்கும் ஆசிரியருக்கும் இருக்கும் உறவை நேரடியாக பார்க்கிறேன். இன்று இந்த உறவை கலில் ஜிப்ரான் சொன்ன வரிகளோடு ஒப்பிட்டு பார்த்து,  "வீணையின் நரம்புகள் போல் வெவ்வேறானவர்களாக இருங்கள் தவறில்லை; ஆனால், விரல் மீட்டுகிற போது, காலம் மீட்டுகிற போது, நீங்கள் எழுப்புகின்ற இசை ஒன்றாக இருக்கட்டும்" என்ற வரிகள் போல் இரு வெவ் வேறு இயக்கங்கள், இரு தலைவர்கள், இன்றைக்கு ஆசிரி யரும் முதலமைச்சரும் பெரியாரின் பகுத்தறிவு என்பதை மீட்டுகிற போது அவர்கள் எழுப்புகின்ற நாதம் பெரியார், பகுத்தறிவு, சமூக நீதி என்ற இடத்தில் ஒன்றாக இருக்கிறது, இரண்டு இயக்கங்களுக்குமான உறவு நீடிக்கிறது என்றார். 1981 முசிறி கல்லூரியில் தான் படித்த போது மண்டல் கமிஷன் பற்றிய பயிற்சி முகாமில் அன்றைக்கு புத்தகத் தோடு பேசிய அதே குரல், அதே வேகம், அதே விவேகம், அதே ஆசிரியர், அதே சிந்தனைத் தெளிவுடன் இன் றைக்கும் அப்படியே பேசுகிறார் என்று உருக்கமாக பதிவு செய்தார். பெரியார் தமிழருக்கு தந்த சிறந்த கொடை தான் ஆசிரியர் என்றார். 

இன்றைக்கு எல்லா நிறுவனங்களும் பிஜேபி கையகப் படுத்தும் என்ற அபாயம் உருவாகி இருக்கிறது. அதை கேள்வி கேட்க விடுதலை இருக்க வேண்டும். மோடியை யும், அமித்ஷாவையும் வீட்டிற்கு அனுப்ப விடுதலையும், முரசொலியும் தேவை என்று அழுத்தமாக பதிவு செய்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இருக் கும் வார்த்தைகளான சோசியலிஸ்ட் (ஷிஷீநீவீணீறீவீst) செக்யூ லர் (sமீநீuறீணீக்ஷீ), என்பதை நீக்க இன்றைக்கு உச்சநீதிமன்ற வரை செல்கிறார்கள் என்பதையும், 1972ல் கேசவானந்த பாரதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினையும் விளக்கி, நாடாளுமன்றமே முகவுரையில் கை வைக்கக் கூடாது என்பதை சான்றோடு பதிவு செய்தார். இன்றைய நிலையில் யார் இந்து? நான் ஏன் இந்து? என்று வெளிப்படையாக இனி முரசொலியும், விடுதலையும், தீக்கதிரும் எழுத வேண்டும் என்றார். இந்து என்றால் சூத்திரன், விபச்சாரி மகன் பஞ்சமன் தீண்டத்தகாதவன் என்று இருக்கும்போது, நான் ஏன் விபச்சாரி மகன்? நான்  ஏன் தீண்டத்தகாதவன்? என்ற கேள்விகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். எத்தனை பேர் இப்படி இருக்க விரும்பு கிறீர்கள் என்று எழுத வேண்டும். வெற்றி பெற வேண்டும் நீங்கள் பெரியாரையும் கலைஞரையும் - வயதில் விஞ்ச வேண்டும் என்றார். எங்கள் சுயநலத்திற்காக நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று தனது விருப்பத்தையும், ஆசிரியர் மீது கொண்ட பற்றினையும் விளக்கி, பாராட்டி அமர்ந்தார். (தமிழர் தலைவர் முழு உரை முதல் பக்கம்)

நிகழ்விற்கு திராவிட மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உணர்ச்சிமிகு இணைப்புரை வழங்கினார். இறுதியில் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, வழக்குரைஞர ணித் தலைவர் த.வீரசேகரன், வழக்குரைஞர் ஆ.வீரமர்த் தினி, மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மருத்துவர் மீனாம்பாள், சி.வெற்றி செல்வி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங் களமுருகேசன், த.க.நடராசன், திராவிடர் கழக மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம், வழக்குரைஞரணி, பகுத்தறிவாளர் கழகம், பெரியார் பகுத்தறிவு கலை இலக் கிய அணி, பகுத்தறிவு கிராமப்பிரச்சார அணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தொழிலாளர் கழகம், திராவிடர் விவ சாயத் தொழிலாளர் கழகம், திராவிடர் கழக தகவல் தொழில் நுட்பஅணி மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலத் தலை வர்கள், செய லாளர்கள், மாவட்ட கழகத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப் பாளர்கள் பெருந் திரளாக விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் விழுப்புரம் மாவட்டத்தின் குக்கிராமங்களி லிருந்து பேராசிரியர் திருமாமணி தலைமையில்  கே.தன சேகரன், எம்.முருகையன், ஜெ.சுவாதி, ஜெ.நிலா, டி.வளர்மதி, சிலம்பரசன், மணி, சுப்பிரமணி, ராஜ், திருமால், பழனிவேல், வெற்றி, சக்தி, பிரதீஷ் ஆகியோர் பறையிசை முழக்கத்துடன் மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பகுத்தறிவு சுடரை வழங்கி மூன்றாவது தவணையாக சந்தாக்களை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் அளித்தனர்.

குறிப்பாக  சொல்ல வேண்டும் என்றால் நேற்றைய விழா தமிழ் நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைக்கும் நாட்காட்டி - நாட் குறிப்பேயாகும். 

ஆகா, அத்தகைய தலைவரை நாம் பெற்றிருக்கிறோம்! 

அய்யா பணியை ஆசிரியர் தலைமையில் நிறை வேற்றிக் காட்டுவோம்.

தொகுப்பு: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி


No comments:

Post a Comment