2 லட்சம் வேலைவாய்ப்புக்கு வகை செய்யும் தமிழ்நாடு அரசின் கொள்கை வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 24, 2022

2 லட்சம் வேலைவாய்ப்புக்கு வகை செய்யும் தமிழ்நாடு அரசின் கொள்கை வெளியீடு

சென்னை,ஆக.24- காலணி உற்பத்தி யில் முன்னணி இடத்தில்உள்ள தமிழ் நாட்டில், காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியில் மேலும் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் மாநாடு சென்னையில் நேற்று (23.8.2022) நடைபெற்றது. இம் மாநாட்டில் காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை - 2022-அய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

பாரம்பரியமான தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் காலணி உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தற்போதைய சூழலில் தோல் இல்லாத சிந்தெடிக் லெதர் மற்றும் பைபர் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களின் உற்பத்தி தேசிய அளவிலும் உலகள விலும் வளர்ச்சியடைந்து வருகிறது. தோல் துறையின் முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு உணர்ந்துள்ளது. அத்துடன், தோல் இல்லாத பொருட் களின் உற்பத்தித் துறையில்உள்ள வேலைவாய்ப்புகளின் முக்கியத்துவத் தையும் அறிந்துள்ளது.

மேலும், காலணி உற்பத்திப் பிரிவுக்கானஉலகளாவிய சந்தை வாய்ப்புகளை ஊக்கப்படுத்துவதும் அவசியமாகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு தனியான கொள்கையை உருவாக்குவதன் மூலம், தற்போது காலணி உற்பத்தித் துறையில் உள்ளவர் களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க முடியும் என்று அரசு நம்புகிறது.

காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்ப்பது மற்றும் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக் குவது என்ற இலக்கை எட்டும் வகையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

காலணி, தோல் பொருட்கள் தயாரிப்பு தொடர்பான குழுமங்கள், பூங்காக்கள், பொதுவான வசதிகள் என கட்டமைப்பு வசதிகளைஏற்படுத்துதல், தோல் இல்லாத காலணிகள் உற்பத்திக் கான கட்டமைப்பு வசதிகளை உரு வாக்கி, சார்பு தொழில் நிறுவனங்களுக்கு உதவுதல், தனித்துவ திறன் பயிற்சி திட்டங்கள் மூலம், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவ னங்களுக்கு திறன் வாய்ந்த தொழிலாளர்களை வழங்குதல்,

காலணி, தோல் பொருட்கள், தோல் இல்லாத காலணிகள் ஏற்றுமதியை ஊக்குவித்தல், தோல் பொருட்கள் பிரிவில் இருந்துதோல் இல்லாத காலணி மற்றும் இதர பொருட்கள் பிரிவுக்கு மாற்றம் செய்யும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ஊக்கமளித்தல், காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி தொழிலை எளிதாகதொடங்குவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை இக்கொள்கையின் முக்கிய திட்டங்களாகும்.

மேலும், சிப்காட், சிட்கோ மற்றும் பொது - தனியார் பங்களிப்பில் தோல் இல்லாத காலணி உற்பத்திக்கான குழுமங்கள் அடிப்படையில் பூங்காக் கள் அமைக்கப்பட உள்ளன. இந்த பூங்காக்களில் சேமிப்புக் கிடங்குகள், வடிவமைப்பு அரங்கம், பயிற்சி மய்யம், பரிசோதனை கூடம், காலணி தயாரிப்புக்கான தொழிற்சாலைகள், ஷூ பாக்ஸ் தயாரித்தல் உள்ளிட்டவை இருக்கும். மேலும், ஏற்கெனவே உள்ள தோல் பொருட்கள் குழுமங்களின் வளர்ச்சிக்கும் அரசு உதவி புரியும்.

அனைத்து விதமான பணியா ளர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுவ துடன், காலணி தயாரிப்பு குழுமங்கள் அமைந்துள்ள மாவட்டங்களின் அரு கில், மத்திய தோல் ஆராய்ச்சிநிறுவனம், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில் நுட்ப நிறுவனம் உள்ளிட்ட நிறுவ னங்களுடன் இணைந்து பயிற்சி மய்யங்கள் நிறுவ அரசு ஒத்துழைப்பு நல்கும். 

மேலும், கிராமங்கள், நகர்ப் புறங்களில் இருந்து பணியாளர்கள் இதுபோன்ற தொழில் குழுமங்களுக்குச் செல்வதற்காக பேருந்து நேரங்களை மாற்றுதல் அல்லது புதிய வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தோல் காலணி, தோல் பொருட்கள் தயாரிப்பு, தோல் இல்லாத காலணிகள் தயாரிப்பு, ஒருங்கிணைந்த குழுமங்கள், காலணி தயாரிப்பு தொடர்பான இதர தொழில்கள் இவற்றுக்கு சிறப்புத் தொகுப்பு திட்டங்கள் செயல்படுத் தப்படும்.

குறிப்பாக, விற்றுமுதல் அடிப்படையிலான மானியம், நில மதிப்பு ஊக்கத் தொகை, பயிற்சிக்கான மானியம், தரச்சான்றுஊக்கத்தொகை, அறிவுசார் சொத்து மானியம், வட்டி மானியம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இதுதவிர, காலணி மற்றும் தோல் பொருட்கள் வடிவமைப்பு மய்யங் களுக்கு சிறப்பு மூலதன மானியம், பயிற்சி மானியம் உள்ளிட்டவை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment