குற்றவியல் நீதித் துறையில் இருக்கும் சிரமமான செயல்முறைகள் தான் பெரிய தண்டனைகளாகும் தலைமை நீதிபதி ரமணா கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

குற்றவியல் நீதித் துறையில் இருக்கும் சிரமமான செயல்முறைகள் தான் பெரிய தண்டனைகளாகும் தலைமை நீதிபதி ரமணா கருத்து

ஜெய்ப்பூர், ஜூலை 17 ஒரு வழக்கு எத்தனை ஆண்டுகள் நடக்கும்? இதே கேள்வியை நீதிபதிகளாகிய நாங்களும், வெளிநாட்டிற்குச் செல்லும்போது எதிர்கொள்கிறோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறினார்.  

ஜெய்ப்பூரில் நேற்று (16.7.2022) நடைபெற்ற 18வது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டத்தில் நீதித்துறை, சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் ஆகியவை இணைந்து, சட்ட சேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டன. இதில் கலந்துகொண்ட ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், "இந்த ஆண்டு முதல், தொலைதூர சட்ட சேவை குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்" என்று தெரவித்தார். மேலும், "சுதந்திரம் அடைந்து 75ஆவது ஆண்டில் அடியெடுத்துள்ள போது, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அய்ந்து கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பது கவலை அளிப்பதாக அவர் கூறினார். வழக்குகளின் நிலுவைகளைக் குறைப்பதில் நீதித்துறை மற்றும் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த முயற்சி வேண்டும்" என்பதை அவர் வலியுறுத்தினார். 

ஜெய்ப்பூரில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய தலைமை நீதிபதி ரமணா பேசுகையில், வழக்குகள் நிலுவையில் இருப்பது கவலை அளிப்பதாக கூறிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சரின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டியது தனது பொறுப்பு என்று கூறினார். 

"குற்றவியல் துறை நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க, ஒரு முழுமையான செயல் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாததே இதற்கு முக்கிய காரணம் ஆகும். ஒரு வழக்கு எத்தனை ஆண்டுகள் நடக்கும்? இதே கேள்வியை நீதிபதிகளாகிய நாங்களும், வெளிநாட்டிற்குச் செல்லும்போது எதிர்கொள்கிறோம். வழக்குகள் நிலுவையில் இருப்பதற்கான காரணங்கள் உங்கள் அனைவருக்கும் தெரியும். அதை நான் விரிவாகக் கூற வேண்டியதில்லை. கடந்த முறை நடந்த தலைமை நீதிபதிகள் மாநாட்டில் இதை நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். 

நீதிபதி காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும், நீதித்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தாததும் முக்கிய காரணம் என உங்கள் அனைவருக்கும் தெரியும். விசாரணைக் கைதிகளை நீண்ட காலம் சிறையில் அடைக்க வழிவகுத்த செயல்முறை குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

 நமது குற்றவியல் நீதி அமைப்பில் இருக்கின்ற "செயல்முறை அல்லது நடைமுறை" தான் தண்டனையாக விளங்குகிறது எனலாம். அவசரமான, கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகள் தொடங்கி, பிணை பெறுவதில் உள்ள சிரமமான செயல்முறை வரை, இத்தகைய செயல்முறை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இத் தகைய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதில் நீதித் துறை எப்போதும் முன்னோடியாக உள்ளது. எனது ஒரே வேண்டுகோள், காலியிடங்களை நிரப்புவதுடன், உள் கட்டமைப்பு வசதிகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான்" என்று தலைமை நீதிபதி கூறினார்.

கோத்ரா கலவரம் பற்றிய எஸ்.அய்.டி. அறிக்கை குறித்து ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

புதுடில்லி. ஜூலை.17 2002 கோத்ரா கலவரத்துக்குப் பின் முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஹ்மத் பட்டேல் முயற்சி செய்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

மோடி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க சமீபத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டீஸ்டா சேதல்வாடுடன் கைகோர்த்து செயல்பட்டதாக அஹ்மத் பட்டேல் மீது குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், இறந்து போன ஒருவரான அஹ்மத் பட்டேல் மீது அபாண்டமாக பழிசுமத்துவது மிகவும் வேதனை அளிக்கிறது.

தனது ஆட்சியில் நடந்த கோத்ரா வன்முறை குறித்து இதுவரை வாய்திறந்து எதுவும் கூறாத பொறுப்புகளை தட்டிக் கழித்த அரசுக்கு தலைமை வகித்த நரேந்திர மோடியின் ஆட்சியில் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்று காட்டமாக கூறியிருக்கிறார்.

கீழ்த்தரமான அரசியல் செய்து வருபவர்களுக்கு வக்காலத்து வாங்குவதில் சிறப்பு புலனாய்வு குழு கைதேர்ந்தது என்பது அதன் முன்னாள் தலைவருக்கு பிரதமர் அளித்த கௌரவத்தில் இருந்தே தெரியவரும் என்று ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


 


No comments:

Post a Comment