தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 7, 2022

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் பெருமிதம்

 பெரியார் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டிலும், இந்தியாவில் உள்ள சில பகுதிகளில் உள்ளவர்களுக்கும் - அமெரிக்கா - ஆஸ்திரேலியா - கனடா - மலேசியா - சிங்கப்பூர் மற்றும் அய்ரோப்பிய கண்டத்தில் உள்ள தமிழர்களுக்குத்தான் தெரியும்!

இன்றைக்குப் பெரியாரைப்பற்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் பேசுகிறார்கள் என்றால், 

அதற்கு முதல் காரணமும் - முதன்மைக் காரணமும் - 

ஒரே காரணமும் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்தான்!

பொத்தனூர், ஜூலை 7  பெரியார் வாழ்ந்த காலத்தில், தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் தெரியும்; இந்தியாவிலே சில பகுதிகளில் உள்ள தமிழர்களுக்குத் தான் தெரியும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மலே சியா, அய்ரோப்பிய கண்டத்தில் உள்ள நம்முடைய தமிழர்களுக்குத் தெரியும். ஆனால், இன்றைக்கு பெரியார் அவர்களை, உலகம் முழுவதும் படித்தறிந் தவர்கள் தெரிந்திருக்கின்றார்கள். இந்திய நாட்டில் இருக் கின்ற அத்தனை பேரும் இன்றைக்குப் பெரியாரைப்பற்றி பேசுகின்றார்கள் என்று சொன்னால், அதற்கு முதல் காரணமும், முதன்மைக் காரணமும், ஒரே காரணமும் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்தான் என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன் அவர்கள்.

பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் நூற்றாண்டு விழா

கடந்த 3.7.2022 அன்று பொத்தனூரில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவரும், மூத்த பெரியார் பெருந்தொண்டருமான பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழாவில், தமிழ் நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பெரியாருடைய கொள்கைகள் நாட்டிலே பரப்பப்படவேண்டும் என்றுதான்...

ஆனால், அவரைப் பொறுத்தவரையில், இன்றைக்கு அவர் தன்னைப்பற்றி பேசவில்லை. பெரியாருடைய கொள்கைகள் நாட்டிலே பரப்பப்படவேண்டும் என்பதுபற்றித்தான் பேசிவருகிறார்.

யார் இந்த சுயமரியாதைக்காரர்கள்?

யார் இந்தப் பெரியார் வழியில் வருகின்ற கருஞ்சட்டைக்காரர்கள் என்று கேட்டால்,

கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் என்று கொச்சைப்படுத்தப்பட்டனர்.

என்னைப் பொறுத்தவரையில், கொச்சைப்படுத்து கின்ற விஷயம் அதுவல்ல  - அது வேறு விஷயம்.

அவரவருக்கு எது பிடிக்குமோ? பிடித்தால், அதைப் பார்த்து வணக்கம் போடு; பிடிக்கவில்லை என்றால், போய்விடு.

என்னைப் பொறுத்தவரையில், எனக்கும் அதன்மேல் மரியாதை கிடையாது; அதற்கும் என்மீது மரியாதை கிடையாது. நான் அதைப்பற்றி கவலையும்படுவதில்லை.

கடவுள் மறுப்பு என்பது 

ஏன் வந்தது?

ஆக, அப்படி இருக்கும் நிலையை மாற்றி, பெரியாருடைய கொள்கைகள் ஆயிரம் என்று சொன்னால், அதில் ஒரு கொள்கை கடவுள் மறுப்பு என்பது.

அதிலும் கடவுள் மறுப்பு என்பது ஏன் வந்தது என்று சொன்னால், உயர்ந்த ஜாதிக்காரர்களை நீங்கள் தாக்கினால், அது கடவுளைத் தாக்குவது போல் என்று சில ஜாதி வெறியர்கள் சொன்ன பொழுது,

அப்படியென்றால், நான் கடவுளையும் எதிர்ப்பேன் என்று ஆரம்பித்தார் தந்தை பெரியார்.

இதைக் காட்டிலும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன...

சுயமரியாதை இயக்கம் தந்த வளர்ச்சி

இன்றைக்குப் பெண்ணடிமை நீக்கப்பட்டு இருக்கிறது; பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கப்பட்டு இருக் கிறது; கீழ் ஜாதி என்று சொல்லக்கூடியவர்கள் படிக்க முடிகிறது; உயர்ந்த பதவிகளில் வர முடிகிறது; நீதி மன்றங்களில் நீதிபதிகளாகவும் வர முடிகிறது என்று சொன்னால், அது உங்களைப் போன்றவர்களுடைய இயக்கமான சுயமரியாதை இயக்கம் தந்த வளர்ச்சி என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இன்றைக்கு அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

இன்றைக்கு மு.க.ஸ்டாலின் அவர்களைப் பொறுத்த வரையில் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று சொல்கின்றார். அதை நாம் புரிந்துகொண்டு வரவேற்கின்றோம்.

நம்முடைய கொள்கைகளை நூற்றுக்கு நூறு அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குக் கார ணங்கள் பல. இருந்தாலும் நம்முடைய கொள்கைகளில் ஒத்துப் போகின்றார், அவரை நாம் வரவேற்போம், அவரைப் பாராட்டுவோம் என்று இன்றைக்கு நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் செய்துகொண்டிருக்கின்றார்.

மனிதனை மனிதன் சுமக்கக்கூடாது

சில சமயங்களில், நமக்கு ஒவ்வாத சில விஷயங்கள் - மனிதனை மனிதன் சுமக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தியவர் டாக்டர் கலைஞர்.

ஆனால், இன்றைக்கு சில சமூக விரோதிகள் - மடாதிபதிகள் என்று சொல்லித் திரிகின்ற அந்த கபட வேடதாரிகள் மனிதர்களை சுமக்கச் சொல்லி, செல் கின்றார்களே, ஒவ்வொரு மடாதிபதிகளும் நம்மைப் போலவா இருக்கின்றார்கள். ஒரு டன் இருப்பார்கள் போலிருக்கின்றதே!

அவர்களை நான்கு பேர், ஆறு பேர், எட்டு பேர், பத்து பேர் பல்லக்கில் அமர வைத்துத் தூக்கிக் கொண்டு போகவேண்டும் என்றால், இது என்ன ஜனநாயக நாடா? மக்கள் வாழுகின்ற நாடா? அல்லது மிருகங்கள் வாழுகின்ற காடா? என்கிற சந்தேகம் நமக்கு எழுகின்றது.

அதைக் கடுமையாக எதிர்த்தவர் தமிழர் தலைவர் அவர்கள்.

மனசாட்சிப்படி நடந்துகொள்பவர் 

நம்முடைய தமிழர் தலைவர்

நம்முடைய நண்பர்களாக இருக்கலாம்; நமக்கு வேண்டியவர்களாக இருக்கலாம்; ஆனால், யார் தவறு செய்தாலும், அதைச் சுட்டிக்காட்டுவோம் என்கிற மனப்பான்மை இருக்கின்றதே, அதுதான் மனசாட்சியின்படி நடந்துகொள்கின்ற விஷய மாகும் என்று நான் சொல்கின்றேன்.

இன்றைக்கு நமக்குத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் கிடைத்திருக்கின்றது; அது ஒரு நல்வாய்ப்புதான், அதை இல்லையென்று நான் மறுக்கவில்லை.

நம்மைப் போல், உறுதியாக, நம்மைப்போல் என்றால், என்னை விட்டுவிடுங்கள், நானும் அரசி யலில் இருக்கின்றேன் - வாக்குகள் வாங்குவதற்கு சில சமயம் மனசாட்சிக்கு எதிராகக்கூட நடக்க வேண்டி இருக்கும்.

ஓட்டு வங்கி அரசியலுக்குப் போனவர்களுடைய தலையெழுத்து

வாக்கு சேகரிக்கச் செல்லும்பொழுது, ஒரு பெரிய கல்லைக் காண்பித்து, ஓர் அபூர்வ தெய்வம் என்று சொன்னால், அவர்களைத் திருப்திப்படுத்த, அந்தக் கல்லைப் பார்த்து கும்பிடத்தான் செய்யவேண்டும். ஏனென்றால், ஓட்டு வங்கி அரசியலுக்குப் போனவர் களுடைய ‘‘தலையெழுத்து!’’

நான் நினைக்கிறேன், இதுவரையில் ஒரு வீணான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டோமோ - இந்த ஓட்டு வங்கி அரசியலுக்குப் போயிருக்க வேண்டாமே! சமு தாய சீர்திருத்தத்தில், பகுத்தறிவு இயக்கத்தில் நம்மை நாம் ஆட்படுத்திக் கொண்டால், ஒருவேளை யாருக்கு நண்பராக இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய மனசாட்சிக்கு உண்மையானவனாக நான் இருந் திருப்பேன்.

க.ச. அவர்களையும், உங்களையும் பார்க்கும்பொழுது எனக்குப் பொறாமையாக இருக்கின்றது

அதைச் செய்கின்ற நம்முடைய தமிழர் தலைவர் அவர்களையும், நூறாண்டுகளைக் கடந்திருக்கின்ற நம்முடைய க.ச. அவர்களையும், உங்களையும் பார்க் கும்பொழுது எனக்குப் பொறாமையாக இருக்கின்றது.

ஏனென்றால், இன்றைக்கு தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் வகிக்கின்ற பொறுப்பு சாதாரண பொறுப்பல்ல. 45 நிறுவனங்களுக்குமேல் நடத்திக் கொண்டிருக்கின்றார். அத்தனை நிறுவனங்களும் மக்களுக்குப் பயன் படக்கூடிய நிறுவனங்கள். மக்களுக்கு சுயமரியாதை யையும், பகுத்தறிவையும் சொல்லிக் கொடுக்கின்ற நிறுவனங்கள். யாருடைய தனிப்பட்ட வசதிக்காகவும் இருக்கின்ற நிறுவனங்கள் அவை அல்ல.

‘விடுதலை’ நாளிதழுக்கு 

60 ஆண்டுகால ஆசிரியர்

‘விடுதலை’ நாளிதழுக்கு 60 ஆண்டுகாலமாக ஆசிரியராக இருக்கிறார். நான் சிறுவனாக இருக்கும் பொழுது ‘விடுதலை’யைப் பார்க்கமாட்டேன்; பார்க்க மாட்டேன் என்றால், எனக்கு இருந்த அறிவு அவ்வளவு தான் அந்தக் காலத்தில். 

அந்தக் காலத்தில் ‘தினத்தந்தி’யில் இருந்த கவர்ச்சி ‘விடுதலை’யில் இல்லை. ஆனால், இன்றைக்கு ‘விடுதலை’ என்பது ஒரு அழகான காகிதத்தில், நேர்த்தி யாக அச்சிடப்பட்டு, பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கை மட்டுமல்ல, உலகச் செய்திகளும் அதில் உண்டு; வேலை வாய்ப்புச் செய்திகளும் அதில் உண்டு. எல்லோரும் படிக்கத்தக்க வகையில், ஆசிரியர் அவர்கள் அதை மாற்றியிருக்கின்றார் என்றால், அதை நாம் எந்த அளவிற்குப் பாராட்டவேண்டும்.

இதைத்தான் அண்ணா கூட ஒருமுறை சொன்னதாக, என்.வி.நடராசன் சொன்னதாகச் சொல்வார்கள்.

பெரியார், வீரமணி அவர்களுக்குக் கொடுத்த சுதந்திரம் என்பது மிகப்பெரிய சுதந்திரம் என்றார்கள். எப்படியென்றால், ‘விடுதலை’யை எப்படி வேண்டு மானாலும் மாற்றி நீங்கள் செய்துகொள்ளுங்கள். நேர்த்தியாகக் கொண்டு வந்தது எல்லாம் தமிழர் தலைவர் அவர்கள் செய்தது என்று அண்ணாவும், என்.வி.நடராசனும் பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதை நான் படித்திருக்கிறேன்.

‘விடுதலை’ நாளிதழ் அழகாக - பயனுள்ளதாக - மக்களுக்கு ஏற்புடையதாக வெளிவருகிறது

எனக்கு ‘விடுதலை’ நாளிதழ் தபாலில் வரு கின்றது; இன்றைய விடுதலை என்பது நாளைக்கு எனக்கு வராது. மூன்று, நான்கு நாள்கள் கழித்து, நான்கு நாள்கள் ‘விடுதலை’ நாளிதழும் மொத்த மாக வரும். அதை நான் ஆவலோடு வாங்கி ஒவ்வொன்றையும் இப்பொழுது படிக்கின்றேன். இவ்வளவு காலமாகப் படிக்காது இருந்த ஒரு மூடனாக நான் இருந்திருக்கின்றேன் என்று நான் இப்போது நினைக்கின்றேன்.

அவ்வளவு அழகாக, பயனுள்ளதாக, தமது மக்களுக்கு ஏற்புடையதாக இன்றைக்கு ‘விடுதலை’ வெளிவருகின்றது என்றால், அதற்கும் அவர்தான் காரணம்.

பல புத்தகங்களை வெளியிடுகிறார்கள். தமிழர் தலைவர் அவர்களுக்கு யார் வந்து சால்வை அணிவித் தாலும், உடனே புத்தகத்தை அவர்களுக்குக் கொடுப்பார். அந்த விஷயத்தில், தந்தை பெரியார் அவர்கள் இலவசமாகத் தருவாரா? இல்லையா? என்று தெரியாது. எனக்குத் தெரிந்தவரை இலவசமாகத் தரமாட்டார்; ஏனென்றால், கூட்டம் முடிந்தவுடன், புத்தகங்கள் எத்தனை ரூபாய்க்கு விற்றது - கொடு பணத்தை என்று சொல்லி, இதில் எட்டணா குறைவாக இருக்கிறது என்று சொல்லக்கூடியவர் பெரியார் அவர்கள்.

பணம் பெரிதல்ல; கொள்கைகள் பரவியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்

ஆனால், தமிழர் தலைவரைப் பொறுத்தவரையில், பணம் பெரிதல்ல - கொள்கைகளைப் பரப்பியாக வேண் டும் என்பதில் உறுதியாக இருக்கின்ற காரணத்தினால், பணத்தைப்பற்றிக் கவலைப்படாமல், வருகின்றவர் களுக்கெல்லாம் புத்தகங்களைத் தருவார்.

பெரியார் சொன்ன ஆயிரம் விஷயங்களில் கடவுள் மறுப்பும் ஒன்று. அவர் நாத்திகர்தான், இங்கே இருக் கின்றவர்களில் பல பேர் நாத்திகர்கள்தான். இங்கே இருப்பவர்களில் பல பேர் கடவுளைக் கும்பிடுகிறவர் களாக இருப்பார்கள். ஆனால், அது தவறல்ல. நமக்குத் தவறு என்று தெரிகிறது; ஆனால், அவர்களுக்கு அது சரி என்று தெரிகிறது. அவர்கள் அதை செய்துவிட்டுப் போகும். அவர்களுடைய உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.

ஆக, நம்முடைய கொள்கைகளை ஏற்காதவர்களை நாம் மதிக்கக்கூடாது என்று இருக்கக்கூடாது. நமக்கு எப்படி சிந்தனை இருக்கின்றதோ, அறிவு இருக்கின்றதோ, அப்படியே அவர்களுக்கும் இருக்கும் என்று நாம் நம்பு கின்றோம். ஒருவேளை சற்று குறைவாக இருக்கலாம்.

ஆனால், அதைப்பற்றி நினைக்கவேண்டியதோ, அதை வைத்து மற்ற நல்ல விஷயங்களை ஒதுக்க வேண்டும் என்று சொன்னால், அது கூடாது என்றுதான் நான் சொல்கிறேன்.

தமிழர் தலைவர் அவர்களுக்கு 

நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்

நம்முடைய தமிழர் தலைவர் அவர்களைப்பற்றி நான் நிறைய பேசவேண்டும் என்று ஆசை.

ஒருவேளை நான் பேசி, அது ஏதாவது ஒரு வகையில் அவருக்கு இடையூறு வந்துவிடக் கூடாது.

எந்த வீரத்தோடு, பெரியார் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றாரோ, அதே வீரத் தோடும், விவேகத்தோடும் அவர் நடந்துகொண் டிருக்கின்றார் என்பதை நான் சொல்லியே ஆகவேண்டும் - அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

நம்முடைய தமிழர் தலைவருடன் ஈரோடு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபொழுது, ஒரு விஷயத்தை எதார்த்தமாகப் பேசினேன். அது பெரிய விஷயமாகப் போயிற்று. டில்லியிலிருந்து தாழ்த்தப்பட்டோர் ஆணை யத்திலிருந்து இளங்கோவனுக்கு நோட்டீசு என்று செய்தி வந்தது. ஆனால், அதற்குத் தெளிவாகப் பதிலளித்து ‘விடுதலை’யில் தமிழர் தலைவர் அவர்கள் எழுதினார்.

என்னால்கூட அந்த விளக்கத்தைக் கொடுத்திருக்க முடியாது. நீதிபதி கேட்டால், அப்படித்தான் சொல்வேன்; செய்வதை செய்துகொள்ளுங்கள் என்று கோபத்தில், அறியாமையின் காரணமாக நான் சொல்லியிருக்கலாம். ஆனால், அதற்குத் தகுந்த விளக்கத்தைச் சொன்னவர், நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள். அவரை நான் கண்டிப்பாகப் பாராட்டவேண்டும்.

இன்றைக்கு 100 வயது இளைஞர் சண்முகம் அவர்களை நாம் பாராட்டுகின்றோம் என்று சொன்னால், 90 வயதிலும் விறுவிறுவென்று ஓடிக் கொண்டிருக்கின்ற ஆசிரியர் அவர்களையும் நாம் பாராட்டவேண்டும்

முதல் காரணமும், முதன்மைக் காரணமும், ஒரே காரணமும் நம்முடைய தமிழர் தலைவர்தான்

பெரியார் வாழ்ந்த காலத்தில், தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் தெரியும்; இந்தியா விலே சில பகுதிகளில் உள்ள தமிழர்களுக்குத்தான் தெரியும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, அய்ரோப்பிய கண்டத்தில் உள்ள நம்முடைய தமிழர்களுக்குத் தெரியும்.

ஆனால், இன்றைக்கு பெரியார் அவர்களை, உலகம் முழுவதும் படித்தறிந்தவர்கள் தெரிந்திருக் கின்றார்கள். இந்திய நாட்டில் இருக்கின்ற அத் தனை பேரும் இன்றைக்குப் பெரியாரைப்பற்றி பேசுகின்றார்கள் என்று சொன்னால், அதற்கு முதல் காரணமும், முதன்மைக் காரணமும், ஒரே காரண மும் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்தான் என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

பெரியாரையும் தெரியாது; 

என்னையும் தெரியாது

எனக்கு வயது 74. நானும் காங்கிரஸ் பேரியக்கத்தில் 40 ஆண்டுகாலமாக இருக்கிறேன். முன்பெல்லாம் டில்லிக்குப் போகும்பொழுது, என்னை சிலர் அறிமுகப் படுத்துவார்கள், ‘’இவர்தான் பெரியாரின் பேரன்’’ என்று சொல்வார்கள். அவர்களுக்குப் பெரியாரையும் தெரி யாது; என்னையும் தெரியாது.

ஆனால், இப்பொழுது என்னை அறிமுகப்படுத்தும் பொழுது, ‘’ஓ, பெரியாருடைய பேரனா நீங்கள்? அவருக் குத்தான் குழந்தைகளே இல்லையே; பிறந்த ஒரு பெண் குழந்தையும் இறந்துவிட்டதே - பிறகு எப்படி நீங்கள் பெரியாருடைய பேரன்’’ என்று கேட்பார்கள்.

இன்றைக்குப் பெரியாரைப்பற்றி எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள்

அய்யா, பெரியாருடைய அண்ணனுக்கு நான் பேரன், அதனால் அப்படி சொல்கிறார்கள். எங்கள் ஊரில், எங்களுடைய அப்பாவின் தம்பியை, சித்தப்பா என்று அழைப்போம்; அதேபோல, எங்கள் தாத்தா வினுடைய தம்பியை, சின்ன தாத்தா என்று சொல்வோம்; நாங்கள் எல்லாம் செல்லமாக தாடித் தாத்தா என்று சொல்லுவோம் என்று இவ்வளவு விளக்கமும் சொல்லவேண்டி இருக்கிறது. 

காரணம் என்ன? இன்றைக்குப் பெரியாரைப்பற்றி எல் லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதை செய் தது யார்? நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் தானே!

நான் அவரைக் கேட்டுக்கொள்வது, நீங்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தவர். இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஓடி ஆடிக் கொண்டிருக்கின்ற எல்லா அரசியல்வாதிகளைவிட, அதிகமாக ஓடுவது நீங்கள் தான்.

உண்மையான கூட்டம் கூடுவது என்பது 

திராவிடர் கழகத்திற்கு மட்டும்தான்!

இன்றைக்கு நம்முடைய சந்திரசேகரன் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தபொழுது சொன்னேன்; உண்மை யான கூட்டம் கூடுவது என்பது திராவிடர் கழகத்திற்கு மட்டும்தான். மற்ற கூட்டங்கள் எல்லாம், கூட்டப்படுகின்ற கூட்டம்.

இந்த அரங்கம் நிரம்பி இருக்கின்றது என்று சொன் னால், அத்தனை பேரும் தானாகவே வந்தவர்கள் இங்கே. இன்றைக்கு மரியாதைக்குரிய பெரியவர் சண் முகம் அவர்களுடைய உறவினர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள்.

மற்ற கூட்டங்கள் அப்படியல்ல; ஆக, உண்மையான கூட்டம் யாருக்குக் கூடுகிறது என்று சொன்னால், சுயமரியாதைக்காரர்களுக்கு, திராவிடர் கழகத்துக்காரர் களுக்குத்தான்.

திராவிடர் கழக, சுயமரியாதைக்காரர்கள் கூட்டத் திற்கு நீங்கள் வருவதற்கு யாரும் காசு கொடுக்கமாட் டார்கள்; ‘விடுதலை’, ‘உண்மை’, போன்ற இதழ்களுக்கு சந்தாக்களை நம்மிடம் கேட்பார்கள்.

ஒரு சிறப்பான பொது இயக்கம் என்று சொன்னால், அது திராவிடர் கழகம் ஒன்றுதான். சிறுசிறு  நன்கொடை களைத் திரட்டி, அதை நாட்டு மக்களுக்காக செலவழிக்கக் கூடிய இயக்கம் நம்முடைய தமிழர் தலைவர் தலை மையில் இருக்கக்கூடிய திராவிடர் கழகம்தானே தவிர, வேறு அல்ல.

மற்ற இயக்கங்களைச் சார்ந்தவர்கள், மக்களை ஏமாற்றி, கொழுத்த பணக்காரர்களிடம் லஞ்சமாகப் போகும் பணத்தில்தான், அவர்கள் பொதுக் காரியங் களைச் செய்கிறார்கள்; அப்படி பொதுக் கா£ரியங்களை செய்யும்பொழுதுகூட, சொந்தக் காரியத்திற்கு எவ்வளவு செய்ய முடியுமோ, அவ்வளவு செய்துகொண்டு, மீதியை பொதுக் காரியங்களுக்குச் செய்கிறார்கள். இன்றைக்கு நாடு இதுபோன்ற ஒரு அபாயகரமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

தமிழ்நாட்டில், மோடியால் 

தலையெடுக்க முடியாது

நான் தமிழ்நாட்டில் இருக்கின்ற காரணத்தினால், ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில், இங்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால், நமக்கு மோடி என்கிற பயங்கரவாதியைப்பற்றி அதிகம் தெரிய வில்லை. இங்கே அவரால் தலையெடுக்க முடியாது.

ஆனால், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் உள்ள மக்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கின்றார். மதத்தின் பெயரால் நாட்டிலே கலவரத்தை ஏற்படுத்த வேண்டும்; இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சண்டை மூட்டவேண்டும்; இந்துக்களிலேயே மேல் ஜாதிக்காரர்களுக்கும், கீழ்ஜாதிக்காரர்களுக்கும், தாழ்த் தப்பட்ட மக்களுக்கும் இடையே வேற்றுமையை சொல்லி, கலவரம் விளைவிக்கவேண்டும்; உயர் ஜாதியைச் சேர்ந்த இந்துக்களைத் தவிர, வேறு யாரும் இந்தியாவில் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தைக் கொண்டவராக மோடி இருக்கிறார்.

யூத இனத்தை அழித்த ஹிட்லரைவிட 

கொடிய மனம் படைத்தவர்தான் மோடி

எப்படி ஹிட்லரும், முசோலினியும் நாசிசத்தையும், பாசிசத்தையும் வளர்ப்பதற்காக எதிரிகளைக் கொன்று குவித்தார்களோ, குறிப்பாக ஹிட்லர், யூத இனத்தையே அழித்தாகவேண்டும் என்ற முடிவெடுத்து, எவ்வளவு கொடுமையான வேலைகளைச் செய்தாரோ, அதைவிட அதிகமாக செய்யக்கூடிய மனம் படைத்தவர்தான் இந்த மோடி.

ஆகவே, நீங்கள் எல்லாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சிக்கு, நம்முடைய முழு ஆதரவையும் தந்தாக வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் பாரதீய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் தலைதூக்கக் கூடாது. அவர்கள் பணத்தை செலவழிக்கிறார்கள் கோடி கோடியாக - ஒவ்வொரு மாவட்டத்திலும், பா.ஜ.க.வின் சார்பில் தலைமைக் கழகம் கட்டப்படவேண்டும் என்பதற்காக 2 கோடி , 3 கோடி என ரூபாயைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்நாடு காப்பாற்றப்படவேண்டும் என்றால், மோடியின் ஆட்சி ஒழிக்கப்படவேண்டும்

இன்றைக்கு நாட்டிலே எப்படியாவது கலகத்தை மூட்டிவிட வேண்டும் என்று நினைக்கின்றார்கள். நம் மைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்றால், மோடியின் ஆட்சி ஒழிக்கப் படவேண்டும்; ஸ்டாலின் நம்முடைய ஆதரவைப் பெறவேண்டும் என்று சொல்லி விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு  தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் 

ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.


No comments:

Post a Comment