மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் குரங்கு அம்மைக்கு சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் மா.சு. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 17, 2022

மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் குரங்கு அம்மைக்கு சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் மா.சு.

சென்னை, ஜூலை 17  தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத் துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவமனைகளில் குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். 

சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை நோய் பரிசோதனை மேற்கொள்வதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (16.7.2022) ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

குரங்கு அம்மை நோய் குரங்கு அம்மை நோய், விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகையான வைரஸ் மூலமாக ஏற்படுகிறது. விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு, பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை முழுமையாக சமைக்காமல் உண்ணுதல், பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தல், பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாளுதல் போன்ற காரணங்களால் பரவுகிறது. 

கண்டறியப்பட்டுள்ளது

ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு சுவாச காற்றில் நீர் திவலைகள் மூலமாகவோ, பாதிக்கப் பட்டவரின் உடல்திரவம் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபர்கள் அணியும் உடையை அணிவதன் மூலமாகவோ பரவும். ஆணுடன் உடலுறவு கொள்ளும் ஆண் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் இந்நோயினால் எளிதில் பாதிக்கக்கூடியவர்கள் என்றும், இவர்கள் மூலம் அவர்களுடன் தொடர்பு கொள்பவர்களுக்கும் இந்நோய் எளிதில் பரவும். 

  குரங்கு அம்மை நோய் பாதிக்கப் பட்டவர்களுக்கு காய்ச்சல், தடிப்பு, கொப்பளம் போன்ற அறிகுறிகள் தென்படும். கடந்த மே மாதம் முதல் இதுவரை 63 நாடுகளில் இருந்து 9 ஆயிரத்து 647 பேர் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த மே 22-ஆம்  தேதி முதற்கொண்டு தமிழக பன்னாட்டு விமான நிலையங் களுக்கு வந்த வெளிநாட்டு பயணிகள் 4 லட்சத்து 84 ஆயிரத்து 612 பேருக்கும் கரோனா மற்றும் குரங்கு அம்மை நோய்க்கான காய்ச்சல் மற்றும் கொப்பளங்கள் உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. 

சிறப்பு மருத்துவர்கள் நியமனம்

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மட்டும் 3 லட்சத்து 67 ஆயிரத்து 388 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

மேலும், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் புற நோயாளிகளுக்கான சரும வியாதி, குழந்தைகளுக்கான புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு மற்றும் தடுப்பூசி பிரிவு அமைத்தும், குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தியும், அவ்வார்டு களில் சிறப்பு மருத்துவர்களை பணியில் ஈடுபடுத்தி கவனமுடன் செயல்பட வேண்டும் என அனைத்து சுகாதார பணிகள் இணை இயக்குநர்களுக்கும், மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்துதல் குரங்கு அம்மை நோய் தொற்றின் அறிகுறிகளுடன் உள்ளவர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை உடனடியாக தனிமைப் படுத்தி, நோய் கட்டுப்பாட்டு நடவடிக் கைகள் மேற்கொள்ளவும் அவர்களின் மாதிரிகளை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் மூலம் பூனே, தேசிய வைராலஜி நிலையத்திற்கு பரிசோ தனைக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment