படிப்புப் பெருமை இல்லாத காமராசரின் படைப்புப் பெருமை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

படிப்புப் பெருமை இல்லாத காமராசரின் படைப்புப் பெருமை!

 "பெரியார் பேருரையாளர்" அ. இறையன்

தமிழர்தம் இனமீட்பர் தந்தை பெரியார் அவர்கள் பெருந்தலைவர் காமராசரை "இரட்சகர்" (காத்தருளி) என்று அழைத்தார். அய்யாவின் அந்தச் செயல் வெறும் முகமன் தன்மை படைத்ததன்று: அது பெரும் பொருளாழம் கொண்டது.

இன்று கோடிக்கணக்கானோர் தொடக்கக் கல்வியும், உயர்பள்ளி - மேனிலைப் பள்ளிப் படிப்பும் தமிழகத்தில் எய்துகின்றனர் என்றால், இந்த உவப்புக்குரிய நன்னிலைக்கு மூலகாரணர் காமராசர் அவர்களே. தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லா இருபால் மாணாக்கர் தற்போது இத்தளை பேர் இந்திய ஆட்சியின் உயர் பணிகள் பலவற்றையும் எட்ட முடிகிறதெனில், இது காமராசர் திட்டமிட்டு உள்ளத் திண் மையுடன் உஞற்றிய உழைப்பின் அறுவடையே!

"கல்வி கல்வி" என்று பார்ப்பனரல்லார்க்கான நயன்மைக் கட்சி மூலவர்கர் விருப்பம் தெரிவித்துக் கொண்டிருந்ததும், "படிக்க வையுங்கள், படிக்க வையுங்கள்" எனப் பெற்றோரை நோக்கி ஒவ்வொரு நாளும் ஓராயிரம் தடவைகள் உரிமைக் காவலர் அய்யா அவர்கள் உணர்த்திக் கொண்டிருந்ததும் நடப்புண்மையானமை படிப்புப் பெருமை மேவாத காமராசரின் படைப்புப் பெருமை என்பதனை நன்றியறிவார் ஒப்புவர். 

தமிழகக் கல்வித் துறையில் பல நிலைகளில் 1951ஆம் ஆண்டிலிருந்து முப்பத்தேழு ஆண்டுகாலம் பணிபுரிந்த எனக்கு நாட்டு நடைமுறைகளைக் கொண்டு காமராசரின் கல்வித் தொண்டு பற்றிய தந்தை பெரியாரது மதிப்பீடு எவ்வளவு திட்ப நுட்பமானது என்பதை அடிக்கடி எண்ணிப் பேசி மகிழ முடிகிறது. படித்துக் கொண்டிருக்கிற. பணிகட்குச் சென்று கொண்டிருக்கிற இளையவர்களை குறிப்பாகச் சிற்றூர்ப் பகுதிகளைச் சார்ந்தவர்களைக் காணும் போதெல்லாம் காமராசரது தொண்டின் அருமையும், அவர் அத்தொண்டினை நிறைவேற்றிய பாணியின் தனித் தன்மையும் என் நினைவுக்கு வரத் தவறுவதில்லை , ஆம்; இன்று தமிழ்நாட்டில் ஓரளவு படித்தோராயினும் சரி, உயர் பள்ளி - மேனிலைப் பள்ளிக் கல்வி முடித்தோராயினும் சரி, பட்டங்கள் வழங்கப் பெற்றோராயிலும் சரி, பணிகளில் சேர்க்கப் பெற்றோராயினும் சரி, நாற்பத்தைந்து அகவைக்குட்பட்ட நாட்டுப்புறத் தோன்றல்கள் அனைவரும் காமராசரைத் தான் நன்றியோடு கருத்தில் தாங்க வேண்டியவர்கள். ஏன்? எதற்காக?

காமராசர் ஆட்சிப் பொறுப்பை 1954-இல் ஏற்றபோது தமிழ்நாட்டில் 9000 தொடக்கப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. வெள்ளையரின் ஆட்சிக்குப் பிறகு நடந்த முதலாம் பொதுத் தேர்தலையொட்டிப் பெருஞ் சூழ்ச்சியின் பயனாக அரசோச்ச வந்த 'வர்ணாசிரம' வெறியர் ஆச்சாரியார், ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருந்த 15,000 பள்ளிகளில் 6000 பள்ளிகளை மூடியிருந்தார். எஞ்சியிருந்த பள்ளிகளும் இயங்கின என்று சொல்லி விட முடியாது. அப்போதே ஒரு நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த நான் இதனை நன்கு அறிவேன். 

பள்ளிகளில் ஒரு வேளைப் படிப்பு மட்டும் போதுமென்றும் மறுவேளை அவரவர் குலத்தொழிலைக் குழந்தைகள் பயில வேண்டுமென்றும் மூதறிஞர் ஆச்சாரியார் 'அருளுள்ளத்துடன்' ஆணை பிறப்பித்திருந்தார். அந்த ஏற்பாட்டினை எதிர்த்துத் தந்தை பெரியாரவர்களும் நம் இயக்கத்தினரும் கடுமையான போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். ஆசிரியப் பெரு மக்களும், அத்திட்டம் திரும்பப் பெறப்பட வேண்டுமென வலியுறுத்தினர். என்னைப் பொறுத்தமட்டில் இரண்டு வேளைகளிலும் மாணாக்கர் பள்ளிபிலேயே இருந்து கல்வி பயிலுமாறு செய்யப்பட்டனர் என்றாலும் பல பள்ளிகளிலும் ஆச்சாரியாரின் 'அரும்பெரும்' திட்டத்தினை நிறைவேற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய இருந்தமையால், குழப்பமே நிலவியது! ஏன், 'காங்கிரஸ்' என்னும் பேராயக் கட்சியில் காமராசரைப் பின்பற்றிய சட்டமன்ற உறுப்பினர்களுங்கூட ஆச்சாரியார் கெட்ட நோக்கோடு அறிமுகம் செய்த ஜாதித் தொழிற் படிப்பு முறை கைவிடப்பட்டாக வேண்டுமென்று கிளர்ந்தெழுந்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் ஆச்சாரியார் வெளியேற்றப்பட்டு, காமராசர் முதல்வரானார். "தமிழின மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளில் காமராசர் ஈடுபடுவாரேயானால் அவரின் ஆட்சிக்கு என் ஒத்துழைப்பு இருக்கும்; அப்படிக்கில்லாமல் 'புதிய மொந்தையில் பழைய கள்' என்பதுபோல் அவரது அரசு இயங்குமானால் எனது ஒத்துழைப்பை விலக்கிக் கொள்வேன்' என்ற தந்தை பெரியாரின் கூற்றினைத்  தம் உள்ளத்தில் குடியேற்றி வைத்திருந்த காமராசர், மூடப்பட்டுக் கிடந்த பள்ளிகளை உடனடியாகத் திறந்திடக் கட்டளையிட்டார். 

அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை அவர். அதுதான் காமராசரின் தனிச் சிறப்பு! அய்யாவின் பதிவு தமக்குத் தேவை என்பதற்காக அவர் நடிக்கவில்லை . நம் தமிழ்ப் பிஞ்சுகட்கான கல்வியின் இன்றியமையாமையை அவர் நன்குணர்ந்திருந்தார். எனவே, மேலும் நிறையக் கல்விக்கூடங்கள் திறக்கப்பட வேண் டுமென்று அவர் தீர்மானித்தார். 

அதற்காக அவர் கையாண்ட எளிதான முறையினைக் கேளுங்கள்: ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பு பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்போரின் பொறுப்பில் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் ஆங்காங்கே ஓராசிரியர் பள்ளிகள் என்பவை திறக்கப்பட்டன. 'வேலையற்றோர் நிவாரணத் திட்டம்' எனும் பெயரில் ஓரா சிரியர் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. "Planning Commission Schools under une mployment Relet Scheme என்று அவை ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டன.

1950களில் உயர்நிலைப்பள்ளி நீக்கப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று (அந்த நாள்களில் அதுவே குறிப்பிடத்தக்க போதிய படிப்பு!) வேலையில்லாதிருந்த ஆயிரக்கணக்கானோர் ஓராசிரியர்களாக அமர்த்தப்பட்டனர். ஆசிரியர்ப் பயிற்சி பெறாதோர் அவர்கள் என்பது கவனித்தற்குரியது. பயிற்சி பெற்றோராகவே போட வேண்டுமென்று குறியாக இருந்திருந்தால் அக்காலத்தில் அவ்வளவு பேர் கிட்டியிருக்க மாட்டார்கள், ஒரு சில ஆண்டுகளில் அந்த ஆசிரியரனைவரும் முறையான ஆசிரியர்ப் பயிற்சி பெற்றுத் திரும்புமாறு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. படிப்படியாக ஓராசிரியர் பள்ளிகளில் இரண்டு - மூன்று ஆசிரியர்கள் இடம் பெறும் நிலை உண்டாக்கப்பட்டு விட்டது.

அந்தக் காலகட்டத்தில் தமிழக அரசின் கல்வித் துறையில் ஆசிரியராக முதலில் அமர்த்தப்பட்ட நான், குறுகிய காலத்தில் பள்ளி ஆய்வாளனாக மாற்றப்பட்டுத் தொண்டாற்றும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். எனவே, பள்ளிகளின் எண்ணிக்கைப் பெருக்கத்தில் எனக்கு நேரடிப் பட்டறிவு உண்டு. 300-க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் மக்கள் வாழும் சிற்றூர்களைக் கண்டுபிடித்து அந்த ஊர்களிலெல்லாம் பள்ளிகளை அமைக்கும் பெரும் பணியினைப் பள்ளி ஆய்வாளர்களாக இருந்தோர் நன்கு உழைத்து நிறைவேற்றினர்.

பள்ளிகளை நிறுவினால் மட்டும் போதுமா? அன்றாடங் காய்ச்சிக் குடும்பங்களைச் சேர்த்த பாலர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்பதற்கு என்ன உறுதி, பள்ளிக்கு ஒரு வேளை வந்தாலும் பட்டினியால் வாடும் வறிய குடும்பங்களில் பிறந்த சிறு பிள்ளைகள் பசியுடன் பாடங் கேட்டால் பயன் விளையுமா? இதை ஆழமாய்க் கருதிப் பார்த்த காமராசர் ஏழைக் குழந்தைகட்கு இலவசமாகப் பகலுணவு வழங்கும் திட்டத்தினைச் செயற்படுத்தினார். கல்வியலுவலர்கள் பகலுணவுத் திட்ட அரசுதவித் தொகைகளுக்கான காசோலைகளை எடுத்துக் கொண்டு பல ஊர்களுக்கும் விரைந்து அவற்றைத் தலைமையாசிரியர்களிடம் சேர்ப்பித்த நிகழ்ச்சிகள் இன்றும் நினைவில் இருக்கின்றன.

ஊராட்சி ஒன்றியங்கள் உருவான பிறகு படிப்படியான முறையில் மூன்று ஆண்டுகளில் கட்டாயக் கல்வித் திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வந்தார் காமராசர். அந்தக் கட்டத்தில் ஒன்றியங்களில் அமர்த்தப்பட்டிருந்த கு(ச)முகக் கல்வியலுவலர்ககளின் துணையோடு ஊர் ஊராகச் சென்று பெற்றோர்களைக் கூட்டிச் சங்கம் அமைத்து. தமிழ்ச் சிறார்களைக் கல்வி பபில் வைப்பதில் சரகக் கல்வியதிகாரிகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவித்துக் காட்டினர்.

1959ஆம் ஆண்டிலிருந்து 62ஆம் ஆண்டு வரை அருப்புக்கோட்டையிலும், விருதுநகரிலும் பணியாற்றிய எனக்குப் பெருந் தலைவர் காமராசரோடு அணுக்கமாய்ப் பழகுகின்ற நல்வாய்ப்பு நிறையக் கிட்டியது.

அதற்கும் முந்தியே அப்பெருந்தலைவரிடம் ஒரு சிறு அளவில் நான் அறிமுகமாகியிருந்தேன். பறம்புக்குடி மன்னர் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் நாற்பது ஆண்டுகட்குமுன் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அங்கு வருகை புரிந்த முதலமைச்சர் காமராசரைப் போற்றும் பாடலொன்றை இயற்றி அதை மாணாக்கரே ஆர்வம் மேலிடப் பாடுமாறு ஏற்பாடு செய்திருந்தேன். இசையின் இனிமையாலும் பாட்டினுள் அடங்கியிருந்த ஆட்சியின் அருஞ் செயல்களைச் சுட்டிக் காட்டும் பட்டியலாலும் அரிய வகையில் உணர்ச்சி வயப்பட்ட காமராசர், அப்பாடலை என்னிடமிருந்து பெற்று 10,000 படிகள் அச்சிடுமாறு, தம்முடன் வத்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டிக் கொள்ளும் விந்தை அப்போது நேர்ந்தது! மேலும் கல்வி ஆய்வு அலுவலராக நான் மாற்றமுற்ற பின்னர் அய்த்தாண்டுத் திட்ட விளக்க நடவடிக்கைகளில் நானும் நிறையப் பங்கேற்க வாய்த்ததால் மாவட்ட ஆட்சியர், துணையாட்சியர் போன்ற அதிகாரிகளிலிருந்து கீழ்மட்ட அலுவலர்கள் வரை அரசின் பல துறையினர்க்கும் நான் தெரிந்தவனானேன்.

அந்த நிலையில் முதலமைச்சர் முகவை மாவட்டப் பகுதிகளில் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட வேளைகளில் உடன் செல்லும் அதிகாரிகளின் பரிவாரக் குழுவில் நானும் அடங்கி அவரின் நல்லெண்ணத்தைப் பெறும் நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளிச் சீரமைப்பு மாநாடு, சீருடைகள் வழங்கும் மாநாடு, புத்தகப் பைகள் வழங்கும் மாநாடு போன்று நாங்கள் ஏற்பாடு செய்த பல மாநாடுகளில் கலந்து கொண்ட முதல்வர் அம்முயற்சிகளைப் பேருவகையோடும், பூரிப்புடனும் பாராட்டி ஊக்குவித்த செய்திகள் இங்கு தேவையில்லை, பல சிற்றூர்களில் எவ்வாறு திடீர்ப் பள்ளிகள் முளைத்தன என்பதை மட்டும் குறிப்பிடவேண்டும்.

மக்களிடம் குறை கேட்கும் சுற்றுப் பயணங்களில் காமராசரிடம் அக்காலத்திய சிற்றூர் மக்கள் வைத்த கோரிக்கைகளில் முதன்மையானவையாக இருந்தவை மூன்று. மின்சாரம், இணைப்புச் சாலை, பள்ளி என்பவையே அவை. நிலையான பரந்த ஒளியை ஊர் முழுதும் பாய்ச்சவல்ல மின்சாரம் தங்களின் சுவையற்ற - சந்தம் மாறா வழமையான நாட்டுப்புற வாழ்வுக்குப் புதிய வெளிச்சம் கொண்டு வந்து சேர்க்கும் என நம்பினர் - சலித்துப் போயிருந்த மக்கள், முதன்மைச் சாலைகளைச்  சென்றடைய வெறும் ஒற்றையடிப் பாதைகளையும் கரடுமுரடான பழைமையான வண்டிப் பாதைகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள், முறையான இணைப்புச்சாலை போடப்பட்டு விட்டால் இன்றியமையா உடனடி உதவிகட்காகப் பேருந்துகள் ஓடும் சாலையை விரைந்தடைய எளிதாக - ஏந்தாக விருக்குமென்று சரியாகவே அவர்கள் கற்பனை செய்தனர். அடுத்த ஊரில் இருக்கும் பள்ளிக்குத் தம் பிஞ்சுகளை அன்றாடம்  அனுப்பி வைப்பதிலுண்டான தொல்லைகள் நீங்கும் வண்ணம் தம் ஊரிலேயே பள்ளியொன்று திறக்கப்பட்டால் தம் பிள்ளைகள் எழுதப் படிக்க மட்டுமாவது அடிப்படைக் கல்வி பெற்றுவிட முடியுமே என ஆர்வப்பட்டனர் பெற்றோர்.

காமராசர் அந்தச் சூழ்நிலையில் எப்படி வினையாற்றினார் என்பது ஆர்வந்தூண்டவல்ல வழக்கமீறிய - தனித்தன்மையான செய்தி அரசின் பணவொதுக்கீட்டிற்கிணங்க இணைப்புச் சாலை அமைப்பதற்கான வாய்ப்பு பற்றி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் அவ்வூருக்கெனத் தனியே ஒரு பள்ளி நிறுவுவதற்கான கல்வித்துறை நெறிகள் குறித்து என்னிடமும் (பிற்பகுதிகளில் உரியகல்வி அலுவலரிடமும்) கலந்து பேசிய பின்பு, குழுமிய மக்களிடம் முதல்வர் இப்படி கூறுவார்.

"மின்சாரம் வந்து கொண்டேயிருக்கிறது.   தமிழ்நாட்டில் அத்தனை சிற்றூர்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்குள் மின்சாரம் வழங்கிவிட வேண்டுமென்று அரசு முழு மூச்சாக முயற்சியில் இறங்கியுள்ளது. ஆகவே உங்களுக்கு இன்னும் சில மாதங்களில் மின்சாரம் வழங்கப்பட்டு விடும். இதை நீங்கள் உறுதியாக நம்பலாம். அடுத்து இணைப்புச் சாலைபற்றி உங்கள் பி.டி.ஓ.விடம் பேசினேன். கையிருப்பில் உள்ள நிதி ஒதுக்கீட்டிற்குத் தகுந்தபடி கூடிய விரைவில் செய்துவிடுவதாக அவர் உறுதி கூறியிருக்கிறார். மூன்றாவதாக நீங்கள் கேட்டுள்ள பள்ளிக்கூடத்தை இதோ இங்கு இருக்கிறாரே இன்ஸ்பெக்டர், (என்னைப் புன்னகையுடன் சுட்டிக்காட்டி) இவர் நினைத்தால் அந்தச் சட்டம் இந்தச் சட்டம் என்று இடையூறு செய்யாமல் இருந்தால் - டி.ஈ.ஓ. அவர்களின் ஒப்புதலோடு உடனடியாக ஒரு துணைப் பள்ளிக்கூடத்தையாவது இங்கு உண்டாக்கிவிட முடியும். சட்டங்களைக் காட்டி அதிகாரிகள் செய்யும் குறுக்கீடுகளால்தான் உடனடியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியாமல் சுணக்கம் ஏற்பட்டு விடுகிறது!"

இப்படிப் பேசி எங்களை நோக்கிச் சிரித்துக்கொண்டே கண் சிமிட்டிவிட்டு, சற்று நிறுத்துவார் பெருந்தலைவர்.

நான் அடக்கத்துடன் எழுந்து நின்று ஆனால், அச்சமின்றி உரிமையுணர்வோடு கருத்துரைப்பேன். "பெருமதிப்பிற்குரிய முதல்வரய்யா அவர்கள் குறிப்பிட்டபடி, சட்டம் என்று எடுத்துக் கொண்டால் இந்த ஊரில் பள்ளி உண்டாகவே முடியாது. இவ்வூர் மக்கள் தொகை 300-க்கும் குறைவுதான். அருகிலேயே ஒரு கல் தொலைவுக்குள் தொடக்கப்பள்ளி இருக்கிறது. ஆனால் இக்குடியிருப்பிலிருந்து 20-க்கும் மேற்பட்ட சிறுபாலர்கள் அன்றாடம் நடந்து சென்று அப்பள்ளியில் படித்து விட்டு வீடு திரும்பும் நிலை கவலையளிக்கக் கூடியது. இரண்டு ஊர்களுக்கும் இடையே ஏதேனும் வாய்க்கால் உள்ளதா என்று நான் இங்கே கேட்டபோது, ஓர் ஓடையுண்டு என்றார்கள். அந்தக் காரணம் போதும், ஓடையில் நீர் ஓடுவதுண்டா என்பதைப் பற்றிக் கருதாமல், இயற்கைத் தடை - Natural barrier - இருப்பதால் இக்குடியிருப்பில் துணைப்பள்ளி(Feeder School) பொன்றைத் திறக்க நான் பரிந்துரை செய்யமுடியும்.''

என் கருத்துரையில் பொதிந்து கிடக்கும் பல பொருள்களை எண்ணி, முதல்வர் முகமலர்ச்சியோடு, ரொம்ப சந்தோசம்! இதற்காகத்தான் இந்த இன்ஸ்பெக்டரைக் கையோடு கூட்டிக் கொண்டு வருகிறேன். அவரின் பரிந்துரையை மாவட்டக் கல்வி அதிகாரி மறுக்கமாட்டார். அப்புறமென்ன? இங்கேயே இப்போதே பள்ளிக்கூடத்தைத் திறந்துவிடலாம்னேன்" என்றுரைத்து, "ஊர்க்காரங்க கேட்ட மூன்றில் ஒன்றை உடனடியாகக் கொடுத்தாச்சய்யா" என அறிவிப்பார். 

காமராசர் ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள், எப்படியெல்லாம் முளைத்தன என்னும் வரலாற்றை இன்றைய இளைஞர் தங்கள் மூளைகளில் பதிவு செய்துகொள்ள வேண்டுமென்ற விருப்பத்தினாலேயே இவற்றை எழுத நேர்ந்தது. தற்போது வாழும் தமிழக மக்களில் பாதியளவுப் பேர் காமராசர் தோற்றுவித்த பள்ளிக் கழனிகளில் விளைந்திட்ட பயிர்களே. தமிழக அரசின் வருவாயில் காற்பங்கினைக் கல்வித்துறையில் அந்த நாள்களில் நீண்ட காலத் திட்டமாக அவர் முதலீடு செய்ததன் பலன்களைத்தான் இந்த நாள்களில் நாடு நுகர்ந்து கொண்டிருக்கிறது. அவரின் படைப்பாற்றல் இது!

'காத்தருளி காமராசர்' என்பதாகத் தந்தை பெரியார் அழைத்த தொலைநோக்கினையும் பொருத்தத்தையும் தற்காலத் தமிழ்த் தலைமுறையினர் தேர்ந்து தீர்மானிக்கட்டும்!

('விடுதலை' 15.7.1995 பக்.2)


No comments:

Post a Comment