"திராவிட மாடலின்" பொருளாதார வளர்ச்சி தமிழ்நாட்டுக்கு 60 ஒப்பந்தங்கள் - ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 5, 2022

"திராவிட மாடலின்" பொருளாதார வளர்ச்சி தமிழ்நாட்டுக்கு 60 ஒப்பந்தங்கள் - ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு

சென்னை, ஜூலை 5  “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற “முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களுக்கான வணிக உற்பத்தியை தொடங்கிவைத்து, 22,252 கோடி ரூபாய் முதலீட்டில் 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஜூலை 4) சென்னையில் தொழில் துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி  - தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டின் வாயிலாக மொத்தம் 60 திட்டங்களின் மூலம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில், 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது.

 தமிழ்நாடு முதலமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31ஆம் நிதியாண்டிற்குள் தமிழகத்தினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஆகியவற்றையும் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார்.

டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் தொடக்கம்: மாநிலத்தில் நிதித் தொழில் நுட்பங்கள் பரவலாக பின்பற்றப்படுவதை அதிகரிக்கும் வகையில், டிஎன்டெக்ஸ்பீரியன்ஸ்  (TNTecxperience) திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் மூலம் தனிநபர்கள் / புத்தொழில் நிறுவனங்கள் / குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், நிதி தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை மேலும் மேம்படுத்தும் வகையில், நிதி நுட்ப சேவைகளை இலவசமாகவோ அல்லது சில காலத்திற்கு குறைவான கட்டணத்திலோ பெறலாம்.

மேலும், டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் திட்டத்திற்கான இணையதளத்தையும் (https://tntecxperience.com) தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நிதி தொழில் நுட்ப முதலீட்டுக் களவிழா – TN PitchFest –தமிழகத்தில் உள்ள புத்தொழில்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் வகையிலும், தமிழகத்தில் உள்ள புத்தொழில் சூழலை தொழில் மூலதன நிறுவனங்கள் மற்றும் புது முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் ஒரு நிதிநுட்ப முதலீட்டுக் களவிழா (TN PtichFest), தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

வழிகாட்டி நிறுவனமும், StartupTN , நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தினை மேற்கொள்கின்றன. இந்த நிகழ்விற்கான விவரங்களை https://tntecxperience.com/users/tnpitchfest  என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

நிதி தொழில் நுட்ப நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்த நிகழ்வில், 11 நிதி தொழில் நுட்ப நிறுவனங்களுடன் நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.

நிதி தொழில் நுட்ப நிறுவனங்களுக்கான ஊக்கத் தொகுப்புச் சலுகை: நிதி தொழில் நுட்பக் கொள்கையின் கீழ் ஊக்குவிப்புச் சலுகை வழங்குவதற்கு நிதி நுட்ப ஆட்சிமன்றக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 2 நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகுப்புச் சலுகை அளிப்பதற்கான ஆணைகளை, தமிழ்நாடு முதலமைச்சர் அந்நிறுவனங்களுக்கு வழங்கினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

65,373 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 58,478 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்பட்ட 7 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

59,871 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 16,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்படும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

மொத்தம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.

22,252 கோடி ரூபாய் முதலீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்

தமிழ்நாடு முதலமைச்சர் 22,252 கோடி ரூபாய் முதலீட்டில், 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

1,497 கோடி ரூபாய் முதலீட்டிலான திட்டங்களை தொடங்கி வைத்தல்

தமிழ்நாடு முதலமைச்சர் மொத்தம் 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பின்வரும் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினைத் தொடங்கி வைத்தார்கள்.

இந்த திட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருச்சிராப் பள்ளி, தஞ்சாவூர், கரூர், ஈரோடு, கோயம் புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022 வெளியீடு

2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் 

அறிவித்தவாறு, தமிழ்நாடு முதலமைச்சர் உயிர் அறிவியல் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை 2022-அய் வெளியிட்டார்.

தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022 வெளியீடு

2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்தவாறு, தமிழ்நாடு முதலமைச்சர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப் படுத்தும் வகையில், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை 2022-அய் வெளியிட்டார்.

 அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு முதலமைச்சர் பாராட்டு

முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, தொழில்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர் தங்கம் தென்னரசு. இந்த முறை அமைச்சரவையில் அவருக்கு அதே துறையை வழங்குவதா, வேறு துறையை வழங்குவதா என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தொழில்துறையை தேர்வு செய்தேன்.

கடந்த காலங்களில் மிகத் தொய்வாக இருந்த இந்த துறையை மீட்க ஆர்வமான, திறமையான, துடிப்பான பல்வேறு முயற்சிகளை துணிச்சலாக செய்யும் தங்கம் தென்னரசு இருந்தால்தான் சரியாக இருக்கும் என நினைத்து அவர் பெயரை டிக் செய்தேன். என்னுடைய தேர்வு சரியானது என்பதை நித்தமும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். தமிழக தொழில்துறையை தங்கமாக மாற்றி வருகிறார். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment