ஒன்றிய அரசுக்கும் - டில்லி யூனியன் பிரதேச அரசுக்குமிடையே பனிப் போர்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

ஒன்றிய அரசுக்கும் - டில்லி யூனியன் பிரதேச அரசுக்குமிடையே பனிப் போர்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் விசாரணை

புதுடில்லி, ஜூலை 13 டில்லியில் அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் யார் வைத்திருப்பது என்பது தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வுக்கு பரிந்துரைக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

டில்லி யூனியன் பிரதேச அரசாக செயல் பட்டபோதிலும் நாட்டின் தலைநகர் என்பதால், நகரின்பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஒன்றிய அரசின் பாதுகாப்புப் பிரிவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். அதாவது நகரில் பாதுகாப்பு, பேரணி, அனுமதி அளித்தல் உள்ளிட்ட அனைத்து அதி காரங்களும் ஒன்றிய அரசு தன்னிடத்தில் வைத் துள்ளது. இதனால் டில்லி காவல்துறையினர் சுதந் திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

டில்லி நகரின் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கவேண்டும் என்று டில்லி மாநில அரசு கேட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கை டில்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது.

இந்த வழக்கு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதை எதிர்த்து ஆம் ஆத்மி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதிஎன்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி ஆகியோர் அடங் கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.ஆம் ஆத்மி அரசு தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞருமான அபிஷேக்மனு சிங்வி ஆஜரானார். அப்போதுஅவர் வாதிடும்போது, “இதை மிகவும் அவசரமான வழக்காக கருதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவேண்டும். எனவே உச்சநீதி மன்றத்தில் இதை பட்டியலிட வேண்டும்” என்றார். இதற்குத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஒப்புக்கொண்டார்.

வாதத்தின் முடிவில் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிகாரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது யார் என்ற விவாதம் எழுந்துள்ளதால் இந்த விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வின் அதிகாரப்பூர்வமான தீர்ப்புக்காக பரிந் துரைப்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்.

No comments:

Post a Comment