செஞ்சி சிறுத்தது - பகுத்தறிவுப் பெரும்படை பெருத்தது! செஞ்சிக் கோட்டையைக் கலக்கிய பகுத்தறிவாளர் பேரணி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 20, 2022

செஞ்சி சிறுத்தது - பகுத்தறிவுப் பெரும்படை பெருத்தது! செஞ்சிக் கோட்டையைக் கலக்கிய பகுத்தறிவாளர் பேரணி!

- மின்சாரம் -

மாநிலப் பகுத்தறிவாளர் கழகத்தின் பவள விழா நிறைவையொட்டி விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற மாநாடும் - பேரணியும் அப்பகுதி மக்கள் இதற்குமுன் கண்டிராத எழுச்சியின் பிரவாகம்.

கிளம்பிற்றுக்காண் பகுத்தறிவாளர் பட்டாளம்

சரியாக மாலை 4.30 மணிக்கு மாநில மாநாடு நடைபெற்ற வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்திலிருந்து பேரணி புறப்பட்டது.

விழுப்புரம் மண்டல திராவிடர் கழக செயலாளர் க.மு.தாஸ்  இளம்பரிதி பேரணிக்குத் தலைமை வகித்தார். விழுப்புரம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

தோழர்கள் நால்வர் நால்வராக அணிவகுத்து மூட நம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை விண்ணிடிந்து வீழ்ந்ததோ என்கிற அளவுக்குக் குறிப்பிடப்பட்ட முழக்கங்களுடன் அணிவகுத்துப் புறப்பட்டனர்.

கருஞ்சட்டைப் பேரணி பெருத்ததோ - செஞ்சி  சிறுத்ததோ என்கிற அளவுக்குப் பேரணி பெருவெள் ளமாக செஞ்சிக்குள் பாய்ந்தது. கட்டுப்பாட்டுடன் பெரியார் பிஞ்சுகள்முதல் பெரியார் பெருந்தொண்டர்கள் வரை அணிவகுத்தது செஞ்சி வாழ்ப்பெருமக்களைச் சிலிர்க்க வைத்தது.

சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் பேரணியும், அதில் இடம்பெற்ற மூடநம்பிக்கை ஒழிப்புக் காட்சிகளும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

பேரணியின் வருகையை ஒலிபெருக்கிமூலம் அறி வித்துக் கொண்டே சென்றார் வழக்குரைஞர் அமர்சிங்.

பெண்கள் தீச்சட்டி ஏந்தி 'தீச்சட்டி இங்கே, மாரியாத்தாள் எங்கே?' என்று முழக்கமிட்டு வந்த காட்சி பொதுமக்களை - குறிப்பாகப் பெண்களைப் பெரிதும் ஈர்த்தது.

தீச்சட்டி ஏந்தி வந்த வீராங்கனைகள்

சென்னை வழக்குரைஞர் வீரமர்த்தினி, ஓசூர் செல்வி செல்வம், திருவாரூர் செந்தமிழ்ச்செல்வி, சென்னை பசும்பொன், சென்னை மரகதமணி, சென்னை க.சுமதி, திருப்பத்தூர் வெண்ணிலா, முகப்பேர் செல்வி, தாம்பரம் உத்ரா, அம்பத்தூர் சரோஜா, மத்தூர் ஜான்சிராணி, ஆவடி பத்மினி, புதுச்சேரி இளவரசி, சென்னை ஆற்றலரசி, திருவள்ளூர் லோகநாயகி, ஷீப்னா முதலிய வீராங்கனைகள் தீச்சட்டி ஏந்தி முழக்கமிட்டு வீர நடை போட்டு வந்தனர்.

வீர விளையாட்டுகள்

கறம்பக்குடி முத்து தலைமையில் சுருள்கத்தி, சிலம்பம், தீப்பந்தம் விளையாட்டு, பூசாரிகள் தலையில் தேங்காய் உடைத்துக்காட்டி கடவுள் சக்தியைப் பார்த்தீர்களா என்ற புரூடாவை உடைத்துக் காட்டும் வகையில் ஊர்வலப் பாதையெல்லாம் கடவுள் இல்லை என்று சொல்லி, தலையில் தேங்காய் உடைத்துக்காட்டி வந்த காட்சி இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஆத்தூர் சுரேஷ் முக்கியமாக அதை செய்து காட்டினார். சிறுவர்களே சூடம் கொளுத்தி கையில் ஏந்தி, நாக்கில் வைத்துக் காட்டி வந்தனர்.

அரிவாள்மீது ஏறி நின்று அசத்தினர்

பேராவூரணி தோழர் நீலகண்டன் மக்கள் கூடிக் கூடி நிற்கும் இடங்களில் எல்லாம் இந்தக் காட்சியைச் செய்துகாட்டி அசத்தினார்.

அலகுக்குத்தி கார் இழுத்த காட்சியை 

என்ன சொல்ல! என்ன சொல்ல!!

கோவில் திருவிழாக்களில் சிறுசிறு சப்பரங்களை முதுகில் அலகுக் குத்தி இழுத்துக்காட்டி, இதுதான் கடவுள் சக்தி என்று எகத்தாளமாகப் பேசுவதுண்டு. 'அந்தக் கதை எல்லாம் இங்கு வேண்டாம், இதோ அம்பாசிடர் காரையே இழுத்துக்காட்டுகிறோம்' என்று செயல்படுத்திக் காட்டிய வீரர்கள் கமலம்பாக்கம் தேவராஜ் (திண்டிவனம்), ஜெ.பா.மாரிமுத்து (சின்ன சாட்டிரான்பாக்கம்), திண்டிவனம் சுரேஷ் ஆகியோர் ஆவர்.

ஆடிப்பாடி கடவுள் மறுப்புப் பாடல்களைப் பாடி அனாயாசமாக செடல் காவடி எடுத்து வந்த தோழர்கள் திண்டிவனம் பன்னீர்செல்வம், ஓசூர் சித்தார்த்தன், கிருட்டினகிரி பர்கூர் ஞானசேகரன் ஆகியோர் ஆவர்.

கழகக் கொடிகள் அணிவகுப்பு

பெரியார் பிஞ்சுகள், மகளிர், மாணவர் கழக, இளைஞரணி, பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தின் கழகக் கொடி ஏந்தி கம்பீரமாகப் பகுத்தறிவு முழக்கமிட்டனர்.

பகுத்தறிவு ஆசிரியரணியினரும், பகுத்தறிவாளர்களும் பெரியார் பொன்மொழி பதாகைகளை ஏந்தி வந்தனர்.

சடையார்கோவில் நாராயணசாமி குழுவினர் வழங்கிய பெரியார் பிஞ்சுகளின் கோலாட்டம் வெகு சிறப்பு.

பாடகர் கோடையிடி கோவிந்தன், ந.அன்பரசு (துறையுண்டார் கோட்டை), கு.திலீபன் (சடையார்கோவில்), தவில் இசைக் கலைஞர் முனியாண்டி, பம்பை இசைக் கலைஞர் முத்து காளி மற்றும் 20 மாணவர்கள் (பெரியார் பிஞ்சுகள்).

சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தைபெரியார், அண்ணல் அம்பேத்கர் மார்பளவு உருவச்சிலையுடன் ஊர்வலத்தில் முழக்கமிட்டபடி சென்றனர்,

கடலூர், கிருட்டினகிரி, திருப்பத்தூர், திருநெல்வேலி, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் சார்பில் பதாகைகளுடன் இளைஞர்கள், பொறுப்பாளர்கள் எழுச்சி முழக்கமிட்டபடி சென்றனர்.

புதுகை பூபாளம் குழுவினரின் நகைச்சுவை சிந்தனை விருந்தான கலைநிகழ்ச்சியுடன் மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கின.

 கொட்டும மழைலுயிம் அலகு குத்தி மூடநம்பிக்கையை முறியடித்து காரை இழுதத திண்டிவனம் தோழர்களைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு  செய்தார்,ஒலிபெருக்கியில் முழுக்கம்

யாழ் திலீபன், மதிவதனி, பா.மணியம்மை, த.சீ.இளந்திரையன், குடந்தை சங்கர், ஆத்தூர் பழனிவேல், உரத்தநாடு மனோகரன், காரைக்குடி வைகறை, டாக்டர் காஞ்சி கதிரவன்.

தாம்பரம் பெரியார் பிஞ்சு கோவன் சித்தார்த்தன் சிலம்பம்.

செக்கடிகுப்பம் காத்தவராயன் குழுவினர் கழகப் பாடல் பாடினர்.

தலையில் அரிவாள் வெட்டி காட்டுதல் - விஜயேந்திரன் (பெரம்பலூர்)

தருமபுரி இயற்கை கலைக் குழுவினர் பறையிசை. பகுத்தறிவாளர் கழகக் கலைப் பிரிவு செயலாளர் மாரி கருணாநிதியின் சிறப்பான ஏற்பாடு இது!

பேரணி வழித்தடம்

தேசூர்பாட்டை சாலை, மாதாக்கோவில், சிங்கவரம் சாலை, குளத்தங்கரை, காந்தி பஜார், திருவண்ணாமலை சாலை, மாநாட்டு மேடையில் முடிவடைந்தது.


மழைக்குத் தண்ணீர் காட்டிய  மகத்தான செயல்!

மாலை நேர மாநாடு நடைபெறும் திறந்தவெளி அரங்கின் சிறிது தூரத்தில் கழகத் தலைவர் தனி மேடையில் நின்று பேரணியைப் பார்வையிட்டு, அனைவருக்கும் வணக்கம் கூறினார். பொதுமக் களும் கழகத் தலைவருக்குத் தங்கள் வணக்கத்தைக் கூறி, மரியாதையை வெளிப்படுத்தினர்.
திடீர் மழை பெய்து பேரணிக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. திறந்தவெளி மாநாட்டை எப்படி நடத்துவது என்று  ஒரு நிமிடம் திகைப்பு!
உடனே, மாநாட்டை மண்டபத்திற்குள் மாற்றும் முடிவு எடுக்கப்பட்டு, வாயு வேகத்தில் திறந்தவெளி மாநாட்டு மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அத்தனைப் பொருள்களையும் கழகப் பட்டாளம் வள்ளி அண்ணாமலை மண்டபத்திற்கு மாற்றிய அந்தப் போர்க்கோல காட்சியை எவ்வளவு பாராட்டி னாலும் தகும்.
மாநாட்டு நிகழ்ச்சிகள் இரவு 11.30 மணிவரை நடந்தாலும், பெருந்திரள் கலையாமல் செவிமடுத்தது தனிச் சிறப்பு.

No comments:

Post a Comment