காற்று மாசு இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டு குறையும் ஆய்வில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

காற்று மாசு இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டு குறையும் ஆய்வில் தகவல்

புதுடில்லி, ஜூன் 15  காற்று மாசு காரணமாக இந்தி யர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சிகா கோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் (ஏகியூஎல்அய்) அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது: இந்தியாவின் கங்கைச் சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது.

அதிக மாசு கொண்ட நாடுகளில் வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் கரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்கு வரத்து முற்றிலும் முடங்கிய நிலையிலும், நாட்டின் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே இருந்தது.

இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி அனைவருக்கும் சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் வரை குறையும் எனத் தெரிய வந்துள்ளது.

 1998ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் சராசரி காற்று மாசு ஆண்டுக்கு 61.4 சதவீதம் அதிகரித்துள்ளது.   தற்போதைய நிலை தொடர்ந்தால் டில்லி மக்களின் ஆயுட்காலம் 10.1 ஆண்டுகளும், உத்தரப் பிரதேச மக்களின் ஆயுட்காலம் 8.9 ஆண்டுகளும், பீகார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகளும் குறையும்.

மொத்தத்தில் காற்று மாசு காரணமாக சராசரியாக இந்தியர்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறையும். 


No comments:

Post a Comment