சிறுபான்மையினரைத் தாக்க ஆர்.எஸ்.எஸ். பயிற்சி கான்பூர் நகர் கிழக்கு பாலாஜி பூங்காவில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடைபெற்றது, - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

சிறுபான்மையினரைத் தாக்க ஆர்.எஸ்.எஸ். பயிற்சி கான்பூர் நகர் கிழக்கு பாலாஜி பூங்காவில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடைபெற்றது,

 இந்த முகாமில் இரண்டு பிரிவாக நின்று கொண்டனர். ஒரு பிரிவினர் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடனும், மற்றொரு பிரிவினர் சிறுபான்மையினர் அணியும் ஆடைகளைப் போன்றும் அணிந்து கொண்டிருந்தனர். 

 திடீரென்று 'தேசத்தைக் காக்க, கலவரக்காரர்களை துரத்துங்கள்' என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. உடனே ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்தவர்கள் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்களைப் போன்று ஆடை அணிந்திருந்தவர்களை தாக்கத் துவங்குகின்றனர்.

 அவர்களும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கையில் குச்சிகள் மற்றும் கற்களை எடுத்து தாக்கத் துவங்குகின்றனர். 

அதாவது சிறுபான்மையினர் என்றாலே வெறுக்கத்தக்கவர்கள் -  நாட்டைப் பிளவுபடுத்து பவர்கள் - அவர்களை விரட்ட வேண்டும் என்ற வெறியை ஊட் டுவதற்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். 

 சமீப காலமாக வட இந்தியாவில் சிறுபான்மையினர்  வாழும் பகுதிகளுக்கு ஹிந்துத்துவ அமைப்பினர் செல்கின்றனர். திடீரென்று சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்கள் மீது கற்களை வீசுகின்றனர். எதிரில் இருப்பவர்களை அடிக்கின்றனர். கொலை செய்கின்றனர். தட்டிக்கேட்டால் மறுநாள் அப்பகுதி வீடுகளை - ஆளும் மாநில அரசே புல்டோசர் கொண்டு இடிக்கிறது, 

 கேட்டால் சட்டவிரோத கட்டடம் என்று கூறுகிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இத்தகைய நிகழ்வுகள் நடக்கின்றன. மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகள்  அடிக்கடி நடக்கின்றன.   இதெல்லாம் 'ஷாகா' பயிற்சி என்ற பெயரில் திட்டமிட்டு கலவரம் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இவர்கள் தான் தமிழ்நாட்டில் மாணவர்களுக்குக் காலை மற்றும் மாலை வேளைகளில் யோகா, ஆன்மீக நல்லொழுக்கம், ஹிந்துரக்சா (பாதுகாப்பு) பயிற்சி என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றனராம். 

 இவர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் நேரடியாக கலவரத்தில் கைதேர்ந்த கலவரக்காரர்கள் போல் இறங்குகின்றனர். இவர்களுக்குப் பக்கத் துணையாக பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும், காவல்துறையும் இருக்கின்றன. இவர்கள் தமிழ்நாடு முழுவதும் நகரங்களை விட்டு, தூரமாக இருக்கும் குக்கிராமங்களில் முகாமிட்டு அங்கு கல்வி அறிவு குறைந்த பெற்றோர்களிடம் படிப்பு, எதிர்காலம் என்று பொய் சொல்லி, அவர்களின் பிள்ளைகளை அழைத்துச்சென்று நாம் எல்லாம் ஹிந்துக்கள்  - இந்த அரசு ஹிந்துவிரோத அரசு - என்று அவர்கள் மனதில் தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் குறித்து வெறுப்புக் கருத்துக்களை திணிக்கின்றனர். 

இத்தகைய காணொலிகளைப் பார்த்த பின்பும் கலாச்சாரப் பயிற்சி என்ற போர்வையில் நுழையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்குமா தமிழ்நாடு அரசு? என்ற கேள்வி செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால் அமைதிப் பூங்காவான - நல்லிணக்க நன்னிலமான தமிழ்நாடும் - உ.பி.யாக  பிஜேபி ஆளும் மாநிலங்களைப் போல் மாறக் கூடும்.

பொதுவாக தமிழ்நாடு தந்தை பெரியாரால், அவர் கண்ட திராவிட இயக்கத்தால் பக்குவப்படுத்தப்பட்ட பூமி என்றாலும், நய வஞ்சகமாக, தந்திரமாக அப்பாவி மக்களை ஏமாற்றி, குக்கிராமங்களில் தங்கள் மதவாத நோக்கத்துக்கான அடிப்படை வேலைகளைச் செய்ய ஆம்பித்துள்ளனர். தலைநகரான சென்னையில்கூட ஆட்டோ நிறுத்தங்களில் பிள்ளையார் பொம்மைகளை வைத்து அவர்களின் திட்டத்துக்கான "பிள்ளையார் சுழி" போடப்பட்டு வருகிறது.

ஜாதி, மத வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று நமது முதல் அமைச்சர் அறிவித்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.  ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் நடவடிக்கைகளின்மீது கவனம் தேவை! தேவை!!

குறிப்பு: கான்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்  படத்தினை முதல் பக்கம் காண்க.


No comments:

Post a Comment