சென்னையின் குடிநீர் தேவைக்காக 400 மில்லியன் லிட்டர் அளவு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 8, 2022

சென்னையின் குடிநீர் தேவைக்காக 400 மில்லியன் லிட்டர் அளவு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

சென்னை, ஏப்.8 -சென் னைக்கு குடிநீர் தேவைக்காக 400 மில்லியன் லிட்டர் அளவு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் நடைபெறுவதாக சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். 

தமிழ்நாடு சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

இங்கு பேசிய அனைத்து கட்சியினரின் கருத்துகளையும் உள்வாங்கி கொண்டு இந்த துறை நிச்சயமாக சிறப்பாக செயல்படும். இந்த துறையின் பணி என்பது சுத்தம், பசுமை, ஆரோக்கிய சூழல் அடிப்படை வசதி, பொருளாதார வளர்ச்சி, வறுமை நிலையை அகற்றுதல், திட்டமிட்ட நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்குவது போன்ற தொலை நோக்கு திட்டங்களாகும்.

இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை செம்மையாக அமைத்து கொள்ள போட்டி தேர்வுக்கு தயாராகும் நோக்கில் நூலகம் மற்றும் அறிவுசார் மய்யங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறந்த உள் கட்டமைப்புகளை ஒவ்வொரு நகரத்திலும் ஏற்படுத்தும் வகையிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ளவற்றை மேம்படுத்துதல், புதிய சந்தைகள் ஏற்படுத்துதல், மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுதல், பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல் போன்ற எண்ணற்ற பணிகள் திட்டமிட்டு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பான குடிநீர்: அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் சென்னை மக்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளானார்கள். முதலமைச்சரின் சீரிய முயற்சியால் மக்களின் துயரங்கள் களைய பட்ட போதும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட ரூ.500 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் இருந்து பல்வேறு வடிகால் பணிகள் எடுக்கப்பட உள்ளன. மழையினாலும், வெள்ளத்தாலும் நகர்ப்புற மக்கள் பாதிக்காத வகையில் தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் கடந்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மழைநீர் வடிகால் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

சிங்கார சென்னை திட்டம்: அனைத்து நகராட்சி பள்ளிகளிலும் திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் நவீன உபகரணங்கள், சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துதல், உடற்பயிற்சி கூடங்களை அமைத்தல் போன்ற பணிகளை அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் படிப்படியாக ஏற்படுத்தப்படும். குப்பைகள் தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே தேங்கியுள்ள குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மூலம் அகற்றி நிலங்கள் மீட்கப்படும். சாலை ஓர நடைபாதை வியாபாரிகள், மகளிர் சுய உதவி குழுக்கள் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியானது 87.17 லட்சம் மக்களை கொண்டுள்ளது. மழைநீர் வடிகால் கட்டும் திட்டம், பெண்களை பாதுகாக்கும் நிர்பயா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் கனவுத் திட்டமான சிங்கார சென்னை 2.0 சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடல்நீர்-குடிநீர் திட்டம்: ரூ.2,327 கோடியில் 6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.10,447.55 கோடி மதிப்பீட்டில் 11 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் 2ஆவது கூட்டு குடிநீர் திட்டம் உள்பட 16 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. 5 பாதாள சாக்கடை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 400 மில்லியன் லிட்டர் அளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறுவ பணிகள் நடந்து வருகிறது. இந்த துறைக்கு அதிகமாக நிதியை ஒதுக்கி பணிகளை செய்ய முதலமைச்சர் உத்தரவு தந்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment