கரிசல் காட்டில் மலர்ந்த இலக்கிய வாதியான கி.ராஜ்நாராயணன் அவர் களுக்கு கோவில்பட்டியில் இறுதி நிகழ்வின் போது அரசு மரியாதை - அவரது மண்ணில் அவருக்கு நினைவுச் சின்னம் ஏற்பாடு செய்யப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அறிவித்தது, புதியதோர் சாதனையாகும். தமிழ் இலக்கிய படைப்பாளிக்கு இப்படி ஒரு தனிச் சிறப்பு செய்யும் அறிவிப்பை இதற்குமுன் எவரும் செய்யாத நிலையில் அச்சாதனை பாராட்டுக்குரியது.
அதுபோலவே திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியரும், சிறந்த தமிழ் இலக்கிய ஆய்வாளரும், பகுத்தறிவாளருமான பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களுக்கும், நெல்லைச் சீமையில் குறிப்பாக அவர் வாழ்ந்த பாளையங்கோட்டையில் நினைவுச் சின்னம் அமைத்திடவும், அவருக்குரிய மற்ற சிறப்பான பெருமைகளைச் செய்யவும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரிய அறிவிப்பினைச் செய்ய வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஆய்வாளர் வரிசையில் முன் வரிசையில் நின்ற திராவிட உணர் வாளரும், பெரியாரிஸ்ட்டுமான தொ. பரமசிவன் அவர்களைப் பெருமைப்படுத்துவது தமிழ்நாடு அரசுக்கு மேலும் பெருமை சேர்க்கும்.
தக்காரைத் தக்க வகையில் அடையாளம் காணும் தகைமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு என்ற வரிசையில் இது இன்றியமையாததாகும்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
4-7-2021
No comments:
Post a Comment