புதுமை கண்ட பெண்ணினாய் வா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

புதுமை கண்ட பெண்ணினாய் வா!

கரோனா பீதி மற்றும் முழு ஊரடங்கால் உலகம் தளர்ந்துபோய் கிடந்த காலகட்டத்தில் லட்சுமி என்.மேனன் உற்சாகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி புதுமையாக எதையாவது உருவாக்கி மக்களின் துயரைத் துடைத்துக்கொண்டிருந்தார். மக்களை ஒருங்கிணைத்து, மக் களுக்காக அவர் உருவாக்கிய திட்டங்கள் மகத்துவமானவை. மக் களுக்கு அவை மிகுந்த பலன் அளித்து வருவதால், லட்சுமியை விருதுகள் தேடிவந்துகொண்டிருக்கின்றன.

இவர் சமூக சேவைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொள்ள, இவர் பார்த்த ஒரு காட்சிதான் காரணமாக இருந்திருக்கிறது.

நான் எவ்வளவோ முயற்சித்தும் என்னால் மறக்க முடியாத காட்சி அது. ஒரு பிஞ்சுக்குழந்தை துளிஅளவு துணிகூட இல்லாமல் கட்டாந்தரையில் விரலை சப்பியபடி படுத்துக்கிடந்தது. அருகில் இருந்த அதன் தந்தை, காற்றை ஊதி பலூனை நிரப்பிக்கொண்டிருந்தார். அதன் தாய், சற்று தூரத்தில் அதை கொண்டுபோய் விற்பனை செய்துகொண்டிருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெங்களூருவில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் நான் இந்த காட்சியை கண்டேன்.

`இது போன்ற குழந்தைகளுக்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும்' என்று யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், கோட்டயத்தில் தையல் யூனிட் நடத்திக்கொண்டிருந்த என் தோழி போனில் அழைத்தாள். `தைப்பதற்காக அளவெடுத்து வெட்டிப்போட்ட துணிகள் என்னிடம் நிறைய இருக்கின்றன. அதை எதற்காவது பயன்படுத்த முடியுமா? என்று சொல்' என்றாள். உடனே நான், அந்த துணிகளை கொண்டு பிஞ்சுக்குழந்தைகளுக்கு சிறிய படுக்கை உருவாக்க முடியுமா என்று யோசித்தேன். என்னால் அதை உருவாக்க முடிந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.. என்கிறார், லட்சுமி.

புதுமையாக எதையாவது உருவாக்கி, மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவி செய்வது லட்சுமியின் வழக்கம். அவரது கண்டுபிடிப்புகள் எளிமையானதாகவும், பயன்மிக்கதாகவும் இருக்கும்.

பெங்களூருவில் பாலத்தின் அடியில் அந்த காட்சியை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியதும், தோழியின் தையல் யூனிட்டிற்கு சென்று வெட்டிப்போட்ட துணிகளை எல்லாம் சேகரித்தேன். அந்த பகுதியில் உள்ள பெண்களை அழைத்து, துணிகளை கோர்த்து, கூந்தல் பின்னுவதை போன்று பின்னி சிறிய படுக்கைகளாக உருவாக்க சொன்னேன். சிறப்பாக அதனை உருவாக்கி ஏழை பிஞ்சுக் குழந்தைகளுக்கு வழங்கினேன்.

கரோனோவால் திடீரென்று ஊரடங்கு போடப்பட்டதும் அந்த யூனிட்டில் துணிகள் தைப்பது முடங்கியது. அவர்கள் பி.பி.. கிட், மாஸ்க் தயாரிக்கத் தொடங்கினார்கள். கரோனாவின் தாக்கத்தின் ஆரம்ப காலத்தில் நோயாளிகள் படுத்த படுக்கைகளை எரித்தார்கள். அதனால் படுக்கைகளின் தேவை அதிகமாக இருந்தது. நான் பி.பி.. கிட் மற்றும் மாஸ்க்குகளின் வெட்டப்பட்ட பிசுறுகளை எல்லாம் சேகரித்தேன். இரண்டரை கிலோ பிசிறுகளில் ஒரு படுக்கையை உருவாக்கிவிட்டேன். கரோனா நோயாளிகளுக்கு இது மிக செலவு குறைந்த படுக்கையாகிவிட்டது.

அத்தகைய படுக்கைகளை தயார் செய்து, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள கரோனோ நோயாளிகளுக்கு வழங்கினோம். `வேல்ட் எக்கனாமிக் போரம்' 2021 தாவோஸ் அஜண்டாவில் தென்னிந்தியாவில் உள்ள திட்டமாக அதை சேர்த்து அங்கீகரித்தனர். கரோனா காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்களின் பட்டியலில் அய்.நா.சபை, கேரளாவில் இருந்து எங்களது இந்த திட்டத்தை இணைத்துக்கொண்டது. கரோனா காலகட்டத்தில் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தபோது பத்துக்கும் அதிகமான புதிய திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி மக்களுக்கு உதவினோம். அத்தகைய சேவைகளுக்காக பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன என்கிறார், லட்சுமி.

தினமும் வீடுகள்தோறும் சென்று அரிசி மற்றும் தானியங்களை சேகரித்து, மாதத்திற்கு ஒருமுறை ஏழைகளுக்கு கொடுக்கும் `கோ'வீடு என்ற திட்டத்தையும் லட்சுமி நடைமுறைப்படுத்தினார். இந்த திட்டத்தை இப்போது சென்னையில் உள்ள கலை மய்யமான தட்சின்சித்ரா ஏற்றெடுத்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.

லட்சுமி செயல்படுத்தும் திட்டங்களில் குறிப்பிடத்தக்கது, சம்மான். போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போதுமான உடைகள் இல்லை என்பதை கேள்விப்பட்ட இவர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உடைகளை கைத்தறியில் தயார்செய்து அனுப்புகிறார். அய்.நா.சபையின் உதவியுடன் செயல்படுத்தப்படும் அந்த திட்டத்திற்குதான் சம்மான் என்று பெயர்.

மேலும் ஏழைகளுக்கு குறைந்த செலவில் வீடுகட்டிக்கொடுக்கும் திட்டம் ஒன்றையும் இவர் நடைமுறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். புதுமைகள் படைக்கும் இந்த பெண்ணுக்கு புகழ் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment