"வாருங்கள் படிப்போம்..." அய்யா ஆசிரியர் அவர்கள் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 29, 2021

"வாருங்கள் படிப்போம்..." அய்யா ஆசிரியர் அவர்கள் உரை

 - மதுரை வா.நேரு

"வாருங்கள் படிப்போம்" என்னும் வாட்ஸ்அப் குழு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் மற்றும் பேராசிரியர் உமா. மகேஸ்வரி அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டு, தொடர்ந்து சனிக்கிழமை தோறும், மாலையில் நூல் விமர்சனக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் குழுவின் 50ஆம் வார நிகழ்வுக்கு,சிறப்பு அழைப்பாளராக, 'தி திராவிடன் மாடல்' என்னும் நூல் பற்றி உரையாற்றுவதற்காகத் திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டு,அய்யா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வின் தொடக்கத்தில் முதல் வாரம் தொடங்கி, 49 வாரங்கள் வரை ,விமர்சனம் செய்யப்பட்ட நூல்கள், நூல் விமர்சனம் செய்த ஆளுமைகள், இந்தக் குழுவிற்கு ஆலோசகர்களாக இருப்பவர்கள், விமர்சனம் செய்யப்பட்ட நூல்களின் ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள் என்று வெகுசிறப்பாக,கணினி பவர்பாயிண்ட் மூலமாக, இந்தக் குழுவில் உள்ள திருமதி ரேணுகா குணசேகரன் அவர்களின் வடிவமைப்பில் திரையில் காட்டப்பட்டது. தொடர்ந்து இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உமா.மகேஸ்வரி அவர்கள் தமிழர் தலைவரையும், மற்றவர்களையும் வர வேற்று உரையாற்றினார். தொடர்ந்து அறிமுக உரையினை கோ.ஒளிவண்ணன் நிகழ்த்தினார்.

கோ.ஒளிவண்ணன்

இந்த 50ஆம் ஆண்டு விழாவிற்கு அய்யா ஆசிரியர் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்தால் மிக நன்றாக இருக்கும் என்று இந்தக் குழுவினர் நினைத்தோம். ஒரு மனதாக அய்யா ஆசிரியர் அவர்களை அழைப்பது என முடிவு செய்தோம்.நான் சிறுவயதில் 7,8 வயதாக இருக்கும் போது ,எனது தந்தை கோபாலகிருஷ்ணன் அவர்களோடு பெரியார் திடலுக்குப் போயிருக்கிறேன். அங்கு சிங்கம் போல அமர்ந்திருந்த தந்தை பெரியாரைப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பின்பு அய்யா ஆசிரியர் அவர்கள்தான் எல்லாம்.ஏதாவது ஒரு கூட்டத்தில் அய்யா ஆசிரியர் பேசுகிறார் என்றால்,5,6 புத்தகங்கள் அவர் பக்கத்தில் இருக்கும். பேசிக் கொண்டு இருக்கும்போதே அந்தப் புத்தகங்களை எடுத்து, ஆதாரங்களைக் காட்டுவார்.பேசிக்கொண்டிருக்கும்போதே புத்தகத்தை எடுப்பது,புத்தகத்தைப் புரட்டுவது,குறிப்பிட்ட பக்கத்தை எடுத்து ஆதாரத்தைக் காட்டி பேசுவது மிக லாவகமாக இருக்கும்.பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.

புத்தகங்கள் மீது எனக்கு காதல் வருவதற்கு எனது தந்தையார் கோபாலகிருஷ்ணன் ஒரு காரணம் என்றால், அதே அளவிற்கு எங்கள் சமூகத்தந்தை அய்யா ஆசிரியர் அவர்களும் ஒரு காரணம்.அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந் திருப்பது மிகவும் சிறப்பு.. சென்ற ஆண்டு இதே காலகட்டத் தில் பேரா.உமா மகேஸ்வரி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது ஏன்,நாம் வாருங்கள் படிப்போம் என்னும் ஒரு குழுவை ஆரம்பிக்கக்கூடாது என்பது பற்றிப்பேசினோம்.ஆரம்பத்தில் ஆரம்பித்தபோது மிகக்குறைவானவர்கள்தான் இருந்தார்கள். நேரு அவர்கள்,குமரேசன் அவர்கள், சபாரத் தினம் அவர்கள் என்று இப்படித்தான் ஒரு சிறு குழுவாக ஆரம்பித்தோம்.இன்றைக்கு நூறு பேர் இதில் இணைந்து விட்டு,இன்னும் 50 பேர் இணைவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு இந்தக் குழு பெரிய அளவில் விரிவடைந்து இருக்கிறது.இதற்கு மிக முக்கிய காரணம் இதன் ஒருங்கிணைப்பாளர் பேரா.உமா மகேஸ்வரி அவர்களின் ஈடுபாடும் ஒருங்கிணைப்பும்தான் காரணம். வாரவாரம் சனிக்கிழமை தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.ஒரு அமைப்பின் மேன்மை அதன் தொடர்ச்சியில்தான் இருக்கிறது என்று சொல்வார்கள். கோலாகலமாக, சிலர் ஆரம்பிப்பார்கள், அதனைத் தொடர்ந்து நடத்தமாட்டார்கள்.அந்தவகையில் தொடர்ச்சியாக  ஒரே வகையான பிரிவாக இல்லாமல்,பல்வேறு வகையிலான பிரிவு களில் எடுத்து, ஜூலை மாதம் வரை திறனாய்வு செய்வதற்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது என்று சொன்னால் பேரா.உமா மகேஸ்வரி அவர்களின் ஈடுபாட்டிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அய்யா ஆசிரியர் அவர்களையும் புத்தகத்தையும் எப் போதுமே பிரிக்கமுடியாது. எப்போதுமே அவர் புத்தகக் காதலர்தான்.சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சிக் காக சென்னையிலிருந்து மதுரைக்குப் போனோம். ஒரு 5,6 பேர் போனோம்.நாங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னால் எங்களோடு பயணித்த மருத்துவர் ஷாலினி அவர்கள் எங்களிடத்தில் ஒரு புத்தகம் கொடுத்தார். ஆசிரியரிடமும் கொடுத்தார். ’கொஞ்சம் டார்வின், கொஞ்சம் டாக்கின்ஸ்என்னும் புத்தகம். மருத்துவர் ஷாலினி எனது பக்கத்தில்தான் விமானத்தில் அமர்ந்திருந்தார். விமானம் புறப்பட்டவுடன் நான் தூங்கி விட்டேன். மதுரைக்கு வந்தபோதுதான் விழித் தேன். ஷாலினி அவர்கள் என்ன தோழர் இப்படி தூங்கி விட்டீர்கள் என்றார். தூங்கினால்தான் புத்துணர்ச்சியாக இருக்கும் என்றேன் அவரிடம். அவர் சிரித்துக்கொண்டார். விமானத்தில் இருந்து இறங்கி, வாகனத்தில் பயணம் செய்த போது, ஆசிரியர் ஷாலினியிடம், ’அம்மா, இந்தப் புத்தகத்தை நான் படித்துவிட்டேன்என்றார். எனக்கு பெரிய அதிர்ச்சி. அவ ரோடு ஒப்பிடும்போது நான் சின்னப்பையன். நம்ம வயதுக்கு நாம தூங்கிட்டு வரணும் என்று நினைத்தோம். அய்யா ஆசிரியர் அவர்கள் இந்த வயதில் படித்துவிட்டு வந்திருக்கிறாரே என்று நினைத்து வெட்கப்பட்டேன்.. படித்தது மட்டும் இல்லாமல், அந்தப் புத்தகத்தில் குறிப்பு எல்லாம் எடுத்து வைத்திருந்தார். அதைப் பற்றி விவாதித்தார்.

அதைப்போல இன்னொரு நிகழ்வு. சில ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் பன்னாட்டு மய்யம் அமைப்பின் சார்பாக ஜெர்மனியில் கலோன் நகரத்தில் ஒரு மாநாடு நடந்தது.அந்த நகரத்தின் பல்கலைக்கழகத்தில் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் நானும் கலந்துகொண்டேன். ஒரு பேப்பரை நானும் பிரசண்ட் செய்தேன். அந்த மாநாடு முடிந்து எல்லோரும் அங்கிருக்கும் நதியில் ஒரு குரூஸ் போகலாம் என்று முடிவுசெய்தார்கள். நானும் சென்றேன். அய்யா ஆசிரியரும் வந்திருந்தார்.. நாங்கள் போய்விட்டு ஊரை யெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு வரும்போது நேரம் 4, 4.30 இருக்கும்.அவ்வளவு அசதி. வந்தவுடன் பார்த்தேன். அய்யா ஆசிரியர் அவர்கள் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். 8,9 மணி வரை படுத்துத்தூங்கிவிட்டு, கீழே வந்து பார்த்தால், ஆசிரியரும் அவரோடு பேசிக்கொண்டிருந்தவரும், வெளி யில் சென்று விட்டு  உள்ளே வருகிறார்கள். நான் கேட்டேன். ‘அய்யா எங்கே போயிருந்தீர்கள் என்று?” என்னய்யா, நீங்க வராமப் போயிட்டீங்க, இங்கே ஒரு அருமையான புத்தகக் கடை இருக்கிறது. போய்விட்டு வந்தோம்என்றார். ஒரு பதிப்பாளர்,எழுத்தாளர் என்ற முறையில் நான் ஆசிரியர் முன்னால் மீண்டும் வெட்கப்பட்டேன். அவர் புத்தகத்தை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதை பலமுறை அறிந் திருக்கிறேன்.அவரின் இளமையின் ரகசியமே, புத்தகங்கள் தான். இன்றைக்கு 88 முடிந்து 89 நடந்துகொண்டிருக்கும் வேளையில், ஒரு 50 ஆண்டுகள் குறைந்த வயதுடைய இளமையோடு இந்த நிகழ்வுக்கு வந்திருப்பதற்கு மகிழ்ச் சியைத்  தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் குழுவின் 1000-மாவது நிகழ்விலும் அய்யா உற்சாகமாக கலந்து கொள்வார் கள்Ó என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

அய்யா ஆசிரியர் அவர்கள் உரை:

மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் நடைபெறக் கூடியவாருங்கள் படிப்போம்என்று ஒரு அற்புதமான குழுவினை அமைத்து, ஒவ்வொரு வாரமும் மிகச்சிறப்பான வகையிலே அயர்வில்லாமல், சோர்வில்லாமல், அதுவும் இந்தக் கரோனா காலகட்டத்திலே மன அழுத்தத்தாலும், தனியே இருக்கக்கூடிய காலகட்டத்திலும், மிகச்சிறப்பான ஒரு மாமருத்துவத்தைப் போல, இதனை மிகச்சிறப்பாக செய்துகொண்டிருக்கக் கூடிய அனைவருக்கும் பாராட்டுகள். குறிப்பாக தோழர் உமா மகேஸ்வரி அவர்களுக்கும் அதே போல தோழர் ஒளிவண்ணன் அவர்களுக்கும், அந்தக் குழு வினைச் சார்ந்த தோழர்களுக்கும் என்னுடைய மனம் உவந்த நன்றியை, மகிழ்ச்சியை, பாராட்டினை தெரிவித்துக் கொள் கின்றேன்.

அருமை நண்பர்களே, புத்தகங்கள் நமக்கு புத்தாக்கங்கள்.கற்பது, படிப்பது, வாசிப்பது எனப் பல  நிலைகள் இருக்கக் கூடிய நிலையிலே நாம் படிக்கக்கூடிய புத்தகங்களை வாசிப் பதும் சுவாசிப்பதும், அடுத்த கட்டத்திலே நாம் படிக்கக்கூடிய புத்தகங்களைக் கற்பதும், ’கற்பவை நிற்க அதற்குத் தகஎன்பதைப் போல அதைப் பின்பற்றக்கூடிய வகையிலே வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதற்கும், நம்மை நாமே செதுக்கிக் கொள்வதற்கும் புத்தகங்கள் நிச்சயமான ஒரு அறிவு முனைகள், ஏவுகணைகள். எனவேதான் புத்தகங் களைப் படிக்கிறபோது நமக்கு அயர்வில்லை. சோர்வில்லை. பயணங்களைச் சுருக்கி விடுகிறது. சோர்வுகளை நீக்கி விடுகிறது. உற்சாகத்திற்கு அது புதுவழிவகையை ஏற்படுத்து கிறது. அந்த வகையிலே எனக்கு புத்தகங்களைப் படிக்கிற போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.ஏராளமாகச் சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் இங்கு இருக்கிறவர்களுக்குத் தேவையில்லை. இது அறிவார்ந்த ஒரு அவை. இந்த அவை யிலே வெளியிலே நின்றுகொண்டும், பிற இடங்களிலிருந்தும் கேட்டுக்கொண்டிருக்கும் பெருமக்களுக்கு அன்பார்ந்த வணக்கமும் நன்றியும்.

இன்றைக்கு நான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட, புத்தகம் 'தி திராவிடன் மாடல்'. நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்ட போது அண்மையிலே ஒரு சிறப்பான முறையிலே ,பொருளா தாரத்திலே  சிறப்பாக வெளியிட்டிருக்கக்கூடிய புத்தகம் இது.திராவிடர் இயக்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு, பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967இல் ஆட்சியை அமைத்த பிற்பாடு, திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு,திராவிடர் ஆட்சி ஒரு மாட்சி என்று சிறப்பாக அமைந்த நேரத்திலே, அதை மய்யப்படுத்தி, மிக ஆழமாக, இதுவரை செய்யாத, ஒரு சிறப்பான ஆய்வினை செய்து வெளிவந்திருக்கும் புத்தகம் இது.மிகச்சிறப்பான வகையிலே நம்முடைய தமிழ் நாட்டிலே இருக்கக்கூடிய  டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் என்று சொல்லக் கூடிய, அதிலே ஆய்வாளர்களாக இருக்கக்கூடிய இரண்டு பேராசிரியப் பெருமக்கள் அதிலே இருந்து தயாரித்து கனடா நாட்டினுடைய அந்த சிறப்பிலும் பங்கேற்று அதிலும் ஆய்வு செய்யக்கூடிய  நூலாசிரியர் பேராசிரியர் கலையரசன் அவர் களுக்கு சிறந்த ஆய்வாளர் என்ற வகையிலே நம் நெஞ்சம் நிறைந்த நமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் கலையரசன் அவர்கள் இந்த நூலாசிரியர். அவர்கள் எப்படி சிறப்பான வகையிலே இதனை உருவாக்குவதற்கு  அவருக்கு அடித்தளமாக,வழிகாட்டியாக இருக்கக்கூடிய அருமை பேராசிரியர் விஜயபாஸ்கர் அவர்களும் பாராட் டப்பட வேண்டியவர். இந்த இரண்டு பேரும் இணைந்து இந்ததிராவிடன் மாடல்என்ற அற்புதமான நூலை உருவாக்கி, 16.04.2021 சிறப்பாக ஒரு மாதத்திற்கு முன்னாலே  இதனை மிக நன்றாக வெளியிட்டபோது, இந்த அழைப் பிதழை பேராசிரியர் வெங்கடாசலபதி அவர்கள் கொடுத்து என்னை அழைத்தபோது மிகுந்த மகிழ்ச்சியோடு, அந்த நூல் எப்போது கிடைக்கும் என்று சொன்னபோது, நூல் அன்று மாலையே கிடைத்தது. அதை விரைந்து படித்தபோது எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

ஏனென்றால் மற்றவர்கள் இதுவரை செய்யாத பணி என்பது மட்டுமல்ல,செய்யத் துணியாத ஒரு பணியை,இதன் மூலமாக இதனுடைய ஆசிரியர், பொருளியல் அறிஞர் ஆய்வாளர் கலையரசன் அவர்களும், அவர்களை வழி நட்த்தி சிறப்பான வகையிலே அவருக்கு ஆக்கமும் ஊக்க மும் தந்த பேராசிரியர் விஜயபாஸ்கர் அவர்களும் மிகுந்த அளவிற்கு ஒரு அற்புதமான வரலாற்றுப்பூர்வமான ஒரு  நூலை, இதுவரை இல்லாத அளவிற்கு, இது பொருளாதார சம்பந்தப்பட்ட நூல் என்று சொன்னாலும் திராவிட இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தக்கூடிய அளவிற்கு அளித்திருக் கிறார்கள்..அப்படிப்பட்ட நிலையிலே இந்த அமைப்புகளைப் பற்றிப் பொதுவாக பேசிவிட்டுப்போகிறவர்களுக்கு மத்தியில் எவ்வளவு பெரிய ஆழமான ஆய்வு.

அறிஞர்கள் ,இதற்கு முன்னாலே வெளி நாட்டவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள். ஹாட் பிரே ஜூனியர் என்பவர் திராவிடர்  ஆய்வு என்பதை முதன் முதலில் மிகச் சிறப்பாகச் செய்தார்கள்.அதுபோல ரிஷி கவர்ன்ஸ் செய்தார். பெரியார் அவர்களைப் பற்றி ஈசா விஸ்வநாதன் அவர்கள் நம் நாட்டிலே இருந்து ஆஸ்திரேலியா பல்கலைக் கழகத்திற்குச் சென்று  அதனைச்செய்தார்கள். அதைப்போல மற்றவர்கள் இப்போது சிறப்பாக செய்துகொண்டு வரும் நேரத்திலே பல செய்திகளை எல்லாம் முன்னாலே எடுத்து இதில் அவர்கள் தொகுத்துச்சொல்லி ஒரு குறிப்பிட்ட செய்திகளை எடுத்து, ஆழமாகத் தொடுத்து, ஆதாரபூர்வமாக புள்ளி விவரங்க ளோடு இந்தச் செய்திகளைச் சொல்கிறார்கள்.

இதிலே இந்தப் புத்தகத்தை மதிப்பாய்வு செய்வது,நூல் மதிப்புரை செய்வது, புத்தக விமர்சனம் செய்வது போல நான் செய்யவில்லை. இந்தப் புத்தகத்தினுடைய தேவை என்ன? இந்தப்புத்தகத்திற்கு ஏன் அந்தத் தலைப்பு வந்தது? அந்தத் தலைப்பு எவ்வளவு பொருத்தமானது? அந்தத் தலைப்புக்குப் பின்னால் இருக்க்க்கூடிய இலட்சிய வெற்றிகளும், போராட் டங்களும், அதனை நிகழ்த்தியவர்களுடைய சாதனைத் திறன்களும் எப்படிப்பட்டது என்பதையெல்லாம் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்ட வேண்டும். இந்த அறிவார்ந்த அவையிலே, இது ஒரு ஆங்கிலப்புத்தகம் என்ற காரணத்தால், இதிலிருந்து பல பகுதிகளைப் படித்தால் அது நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். பலருக்கு சலிப்பும் தட்டும்.எனவேதான் இந்த நூலை அறிமுகப்படுத்துகிறபோது, இந்த அறிவார்ந்த அவையிலே, இந்த நூலைப் பற்றி பலபேர் அறிந்திருப்பார்கள். இந்த நூல் எளிதிலே எங்கு கிடைக்கும் என்று சொல்கிற போது,பெரியார் புத்தக நிலையத்திலே கூட, பெரியார் திடலிலே அதனை வாங்கிப் பரப்பவேண்டும் என்ற எண்ணத்திலே அதனை நாங்களும் வாங்கி அதனை அளித்துக்கொண்டிருக்கின்றோம். ஆகவே நான் இந்த நூலைப் பொறுத்தவரையிலே அங்கே அந்த வாய்ப்புகள் இருக்கிறது.ஆங்கிலத்திலே படிக்கக் கூடிய வாய்ப்புள்ள வர்கள் இந்த நூலை வாங்கக்கூடிய சூழலைப் பெறலாம். படிக்கலாம்.

அடுத்து நண்பர்களே, இந்த நூலைப் பொறுத்தவரையிலே ,அவர்கள் அமைத்த முறையினை,தலைப்புகளிலேயே ரொம்ப ஆழமான தலைப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.

தி திராவிடன் மாடல்என்று சொல்வது இருக்கிறதே, இதற்கு ஒரு துணிவும் தெளிவும் வேண்டும்.இந்த நூலாசிரி யர்கள் தெளிவோடு எழுதியிருக்கிறார்கள். துணிவோடு அந்த முயற்சியிலே இறங்கியிருக்கிறார்கள். இதுதான் மிக முக்கியமானது. துணிவு என்று சொல்வதற்கு என்ன காரணம்? புத்தகங்கள் எழுதுவதற்கு என்ன துணிவு என்று கேட்டால், ஆராய்ச்சியாளர்களுக்கு என்ன துணிவு என்று கேட்டால், நிச்சயமாக துணிவுதான். ஆராய்ச்சியாளர்கள் எது சிக்கல் இல்லாத, எது பிரச்சினைக்கு உள்ளாகாத பொருள் என்று எடுத்துக்கொண்டு, அவர்கள் அதனைச் செய்வார்கள். ஆனால் இதிலே எந்த இடத்திற்கு மற்றவர்கள் போகவில் லையோ, போக அஞ்சி இருக்கிறார்களோ, அந்த இடத்திற்கு இவர்கள் துணிந்து இருக்கிறார்கள். துணிந்தது மட்டுமல்ல, அதனை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்கள் என்பதுதான், நடுவு நிலைமையிலிருந்து எங்களைப் போன்றவர்களின் கருத்தாகும். அந்த இயக்கத்திலே ஏறத்தாழ 75 ஆண்டுகளுக் கும் மேலாக எங்களை ஒப்படைத்துக்கொண்டுள்ள, அந்த இயக்கத்திலே பணியாற்றக்கூடிய எங்களைப் போன்றவர் களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்கெனவே பல புத்தகங்களிலே அறிவு ஆசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆட்சி, அதனுடைய விளைவாக வந்திருக்கக்கூடிய திராவிட மாடல், அதே போல ஆற்றல்மிகு கலைஞர், தன்னைமானமிகு சுயமரியாதைக் காரன்என்று ஆக்கிக்கொண்டு 5 முறை சிறப்பாக  முதல மைச்சர் ஆக இருந்து அவர் செய்த சாதனைகள், இவை களெல்லாம் அதேபோல எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி, ஒரு கட்டத்திலே அம்மையார் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி என்று இப்படி எல்லாவற்றையும் இணைத்து  வந்தா லும் திராவிட இயக்கம் என்ற சிறப்புதான் அவர்களுக்கு.

எனவே திராவிடியன்  மாடல் என்று வருகின்றபோது,இந்த 50 ஆண்டுகால வரலாற்றை,அரை நூற்றாண்டு கால வரலாற்றை, நீங்கள் 50வது நிகழ்வை நடத்துகிறீர்கள். இந்த 50வது நிகழ்விலே, 50 ஆண்டுகள் வரலாற்றைச் சொல்லும் நூலை ஆய்வு செய்வது மிகப்பொருத்தமானது.அந்த வகையிலே அவர்கள், இந்த நூலை எப்படிப் பிரித்திருக் கிறார்கள் என்பதை மட்டும், இந்த அவையில் இருப்பவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்கள் என்ற காரணத்தால், இந்த தலைப்புகள் ஒவ்வொன்றையும் மொழிபெயர்க்க வேண்டும் என்று அவசியமில்லை. அந்த வகையில்தான் 8 தலைப்பு களில் சிறப்பாக இந்தக் கருத்துகளை சொல்லியிருக்கிறார்கள். ஓர் ஆய்வாக இருந்தாலும், அது ஓர் ஆற்றொழுக்காக, வரலாற்றை படிப்பது போல,அதுவும் பொருளாதாரத் தத்து வங்களை சொல்லக்கூடிய  ஒரு புத்தகம் என்று சொல்கின்ற போது, அந்தப் பொருளாதாரத் தத்துவங்கள் வாசிப்பாளர் களுக்கு ஒரு சங்கடத்தை, நெருடலை உருவாக்கும். ஏனென் றால் எல்லோரும் அந்த ஆய்வு முறையிலேயே கலந்து கொள்ளக்கூடிய நிலையிலேயே வருகின்றபோது, ஏனென் றால் அடிக்கடி அந்த ஆய்வாளர்கள் இடையிலே தங்கள் ஆய்வை நிலை நிறுத்தி ,நாங்கள் தரவுகளோடு எழுதுகிறோம், தானாக எழுதவில்லை என்று சொல்லக்கூடிய அந்த நிலையை  உருவாக்கி காட்டுவது அவர்கள் பணியாகும்.அந்த வகையிலே முதலில் எடுத்தவுடன்The Dravidian Model - An Introduction  “ திராவிட மாடல் ஓர் அறிமுகம் .

இரண்டாவதாக ‘Conceptualising Power in Caste Society’.அடிப்படையிலேயே திராவிட மாடலுக்கு மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால் பிறவியினாலே ஒரு வன் உயர்ந்தவன், பிறவியினால் இன்னொருவன் தாழ்ந்த வன், பிறவியினால் உயர்ந்தவன் மட்டும்தான் படிக்க வேண்டும். பிறவியினாலே தாழ்த்தப்பட்டவர்கள் மற்ற உரிமைகள் அற்றவர்களாக, அடிமைகளாக விலங்குகளை விடக்கீழே இருக்கவேண்டும் என்பதைக் காலங்காலமாக ஒரு வர்ண தர்மமாக, பிறவி அடிப்படையில் ஒரு சமுதாயக் கொடுமையை நிலை நாட்டியிருக்கக்கூடிய ஒரே நாடு,ஒரே சமுதாயம், நம்முடைய நாடு. இதனை எதிர்த்துத்தான் திராவிட இயக்கமே பிறந்தது. இந்த உரிமைகளை மீட்டு எடுப் பதற்காகத்தான் திராவிடர் இயக்கம் உருவாயிற்று.அதற்கு அரசியல் அதிகாரம் இருந்தால்தான், அந்த வாய்ப்புகளைப் பெறமுடியும், கல்வி உரிமைகளைப் பெறமுடியும். கல்வியிலே, உத்தியோகத்திலே வாய்ப்புகளைப் பெறமுடியும் என்று கருதிய காரணத்தினால்தான் திராவிடர் இயக்கம் என்ற ஒன்று பிறக்கவேண்டிய அவசியம், நெருக்கடி ஏற்பட்டது. இதை மற்றவர்கள் ஏற்படுத்தினார்கள்.அதற்கு ஈடு கொடுத் தார்கள். அதை அழகாக இந்த இடத்திலே ஒவ்வொரு தலைப்பின் ஊடாக, வெகு லாவகமாக ஏனென்றால் இது ஒரு ஆய்வு நூல். இது ஒரு பிரச்சாரக் களமல்ல. ஓர் இயக்கத் தின் சார்பாக வெளியிடக்கூடிய நூலோ, மற்றதோ அல்ல. ஆய்வு அறிஞர்கள் வெளியிடக்கூடியது என்று சொல்கின்ற போது அந்த நிலையிலிருந்து கொஞ்சம் கூட வழுவாது, நழுவாது, மிகத்தெளிவாக இதிலே அவர்கள் செய்திருக் கிறார்கள்.

மூன்றாவதாக “Democratising Education". கல்வியைப்பொதுமைப்படுத்துவது. எல்லோருக்கும் எல்லாமும். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய போது, தன்னுடைய இயக்கம் எதற்காகத் தொடங்கப்பெற்றது ,அதனுடைய இலக்கு என்ன?, நோக்கம் என்ன? என்று சொல்கின்றபோது இரண்டே சொற்களிலே, சமூக  நீதி, எல்லா நீதிகளையும் வலியுறுத்தினார்கள். இரண்டே இரண்டு சொற்கள். வள்ளுவருடைய குறள்கூட ஏழு சொற்கள் வரும்.” அனைவர்க்கும் அனைத்தும்”, அவ்வளவுதான். இந்த அனைவர்க்கும் அனைத்தும் என்பது இருக்கிறதே அதுதான் “Democratising Education"

அந்தப் பின்னணியில்தான் இந்தத் தலைப்புகளைப் பாருங்கள். ”Democratising Care“. மக்கள் நல்வாழ்வு என்பது இருக்கிறதே, அதுகூட வசதி உள்ளவர்களுக்கு,வாய்ப்பு உள்ளவர்களுக்கு, உயர் ஜாதிக்காரர்களுக்கு, அல்லது வேறு சில ஜாதிக்காரர்களுக்கு என்று ஒரு சமூக வாய்ப்பிலே இருந்த ஒரு சமுதாயத்திலே அடித்தட்டிலே இருக்கக்கூடிய மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கி கீழ்மட்டத்திலே இருக்கக்கூடிய, மிகப்பெரிய அளவிலே இருக்கக்கூடிய உயர்ந்த தகுதியிலே இருக்கக்கூடியவர்கள் என்பது அல்ல, ஏனென்றால் இதிலே அதற்குத்தான் முதலில் எடுத்தவுடன் சொல்கிறார்கள், மற்ற நாடுகளிலே வகுப்புகள், அதாவது வர்க்கங்கள் உண்டு.அதாவது கிளாஸ். ஆனால் நம் நாட்டிலே  வருணம் உண்டு.வகுப்புகள், வருணம். வகுப்புகள் பிறவி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை.

                                                              (தொடரும்)

No comments:

Post a Comment