ஏடுகள் - இதழ்கள்- வாசிப்பு
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் எழுத்தர் பணிக்கான தொடக்க நிலை தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து முழு ஆய்வு செய்யவேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். எஸ்.பி.அய். அதிகாரிகள் அளித்துள்ள பதில் திருப்திகரமாக இல்லை என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பி.ஜே.பி. ஆட்சியைப் பொருத்தவரையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி. இந்த நிலையில்தான் பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்று கூறி 10 விழுக்காடு இடங்களை பார்ப்பன உயர்ஜாதியினருக்குத் தாரை வார்த்த ஆட்சி மத்திய பா.ஜ.க. ஆட்சி.
எனவே, தோழர் வெங்கடேசன் எம்.பி., அவர்கள் சந்தேகப்படுவதில் நிரம்பவே நியாயம் இருக்கிறது.
என்ன ஆச்சரியம்
இருக்க முடியும்?
கேள்வி: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் ‘சோ' நினைவு முனைவர் பட்டப் படிப்பு தொடங்கப்பட இருப்பதுபற்றி...?
பதில்: சோ போன்ற அளவற்ற பன்முகத்தன்மை உள்ள ஒருவரைப் பெற்றதற்கு, தமிழகம் பெரும் பேறு செய்திருக்கவேண்டும். அவர் நினைவைப் போற்ற தனியார் அமைப்பான சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகம் முன்வந்ததை நாம் பாராட்டுகிறோம்: - ‘துக்ளக்', 23.12.2020.
‘‘நான் ஒரு அரசியல் புரோக்கர். நான் சொல்லுவதைக் கேட்டு உருப்பட்டவர்கள் யாருமில்லை.''
‘‘நான் ‘துக்ளக்' நடத்துவது வயிற்றுப் பிழைப்புக்கே!''
‘‘பகுத்தறிவு என்றால் பித்தலாட்டம்!''
‘‘பெண்ணுக்கு இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா?''
‘‘பெரிய மனுஷன் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சொன்னதுக்காக அ.தி.மு.க. பொருளாளர் சவுந்தரபாண்டியனை நான் வேவு பார்த்தது உண்மை!''
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்குக் கையாளாக இருந்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணியிடம் சங்கராச்சாரியார் சொல்லிக் கொடுத்த கேள்விகளைக் கேட்டவர் சோ. புரோக்கர், ஆள்காட்டி வேலை செய்வோர், கையாளாக செயல்பட்டவர் என்னும் வரிசையில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு பார்ப்பனர்பற்றி ஒரு பார்ப்பனர் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்புத் தொடங்குவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
அதுவும் ஒரு சங்கராச்சாரியார் பல்கலைக் கழகமாயிற்றே!
நினைவூட்ட வேண்டியது...
ஜாதியில்லாத சமுதாயத்தை நோக்கிச் செல்லும்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு - ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி (‘இந்து தமிழ் திசை', 19.12.2020).
மிகவும் சரியான கேள்வியே!
இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக, ஜாதி ஒழிக்கப்படுகிறது (தீண்டாமைக்கு மூலக் கரு ஜாதி தானே!) என்று அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்று தந்தை பெரியார் கேட்டுக் கொண்டாரே, ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தியதற்காக திராவிடர் கழகத் தோழர்கள் ஆறு மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை ஏற்றார்களே, அதையும் நீதிமன்றத்திற்கு நினைவூட்ட வேண்டியது நமது கடமை!
No comments:
Post a Comment