முதியோர்களின் முக்கிய கவனத்துக்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

முதியோர்களின் முக்கிய கவனத்துக்கு...


முதுமை என்பது எப்படி தவிர்க்கப்பட முடியாததோ அப்படித்தான் முதிய வயதில் நோய் எதிர்ப்புச் சக்தி வயது ஏற, ஏற - ஆண்டுகள் உயர, உயர குறைந்து எதிர் விகிதாச்சாரத்தில் இருக்கவே செய்யும். இது இயற்கை. ஆனால் போதிய மருத்துவக் கவனம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். மனந்தளர்ந்து விட வேண்டாம்.



50 வயதுக்கு மேற்பட்ட இரு பிரிவினர் களும் நிமோனியா போன்ற காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றை ஒரே முறை போட்டுக் கொண்டால் அதன் பிறகு அந்த பயம் தேவையே இல்லை என்பது மருத்துவர்கள் கூற்றாகும்.


முதியோருக்கான நலம் பற்றி மிகவும் கவலை எடுத்துக் கொண்டு அவர்கள் நலப் பாதுகாப்பாளராகவும், அதை ஒரு தொழிலாக அல்ல-தொண்டாக, தொண்டறமாகச் செய்து வருபவர் சிறந்த மனித நேயரான மருத்துவ மாமனிதர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் அவர் கள் ஆவார்கள்.


அவர் முதியவர்கள் எப்படி கவனத்துட னும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அளித்துள்ள விளக்கம் ஒரு நாளேட்டில் வெளிவந்துள்ளது (‘தினத்தந்தி‘, 29.10.2020). அதனை அப்படியே தருகிறோம் - விளக்கம் ஏதும் தேவையில்லை ஆதலால் -


நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள


முதியோர்களுக்கு ஏன் தடுப்பூசி போட வேண்டும்?


டாக்டர் வி.எஸ்.நடராஜன் விளக்கம்


நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முதியோர்களுக்கு ஏன் தடுப்பூசி போட வேண்டும் என்பதற்கு டாக்டர் வி.எஸ்.நடராஜன் விளக்கம் அளித்துள்ளார்.


முதியோருக்கான நோய்கள் மற்றும் அதற்கான தடுப்பூசி குறித்து சென்னை முதியோர் நல டாக்டர் வி.எஸ்.நடராஜன் கூறியதாவது:


முதுமை கால நோய்கள்


நோய் தடுப்பு என்றால் குழந்தைகளுக்கு மட்டும் தான் என்ற காலம் போய், முதியவர் களுக்கும் உண்டு என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி வயது ஆக ஆக, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது. முக்கியமாக பாக்டீரியா, வைரஸ் மற்றும் பாரசைட் போன்ற தொற்றுக் கிருமிகளி லிருந்து நமது உடலை நோய் எதிர்ப்பு சக்தி பாதுகாக்கிறது. இன்புளூயன்ஸா, நிமோ னியா, காசநோய், பூஞ்சை காளான், நீர்த் தாரையில் ஏற்படும் தொற்று நோய்கள் ஆகியவை முதுமை காலத்தில் வரக்கூடிய முக்கிய நோய்கள் ஆகும். தோல் மிகவும் மிருதுபடுவதால் சுலபமாக தோல் சிராய்ப்பு அல்லது புண்கள் ஏற்படலாம். ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினால் சிறுநீர்ப் பையில் நீர் தேங்கி பூச்சித் தொல்லைகளுக்கு வழி வகுக்கலாம்.


தடுப்பூசி


பெண்களுக்கு ஹார்மோன் குறைவினால் பிறப்புறுப்புகளில் வறட்சி ஏற்பட்டு பூச்சி தொல்லைகள் வர வாய்ப்பு உண்டாக்கலாம். எனவே முதுமைக்காலத்தில் நலமாய் வாழ சீரான உணவு முறையும், உடற்பயிற்சியும் எப்படி அவசியமோ அதுபோல தடுப்பூசியும் அவசியம். இன்புளூயன்ஸா இது வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு தொற்று நோய். இந்த நோய் முக்கியமாக குளிர் காலத்தில் தான் தாக்கும். இதற்காக தடுப்பூசி ஆண்டிற்கு இருமுறை போட்டுக் கொள்வது நல்லது. பக்க விளைவுகள் கிடையாது. ஆஸ்துமா, நீரிழிவு நோய், இருதய நோய், புற்று நோய் மற்றும் சிறுநீரக தொல்லை உள்ளவர்கள் போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.


முதுமையில் நோயின் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு நிமோனியா மரணத் தைக் கூட விளைவிக்கும். 50 வயதைக் கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதால் நிமோனியா, சளி, காய்ச்சல் வராமல் தடுக்கப் படுகிறது. இதனால் குடும்பத்தில் உள்ளவர்க ளுக்கு பரவாது.


சேமிப்பு


டெட்டனஸ் தடுப்பூசி ஹெப்படைட்டிஸ் பி போட்டுக் கொள்வது நலம். மஞ்சள் காமாலை நோயை தடுக்க ஹெப்படைட்டிஸ் பி தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. வயதான வர்கள் எல்லோருக்கும் ஹெப்படைட்டிஸ் பி பரிந்துரைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு தடுப்பூசியும் ஒரு சிறிய சேமிப்பு.


- இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


எனவே வருமுன்னே காக்க முதியவர்கள் விழிப்புடன் செயல்படுவீர்களாக!


No comments:

Post a Comment