‘நீட்' தேர்வை ரத்து செய்யவேண்டும்: பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 10, 2020

‘நீட்' தேர்வை ரத்து செய்யவேண்டும்: பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும்

பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்


சென்னை, ஜூலை 10 நீட் தேர்வை நிகழாண்டில் ரத்து செய்யவேண்டும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப் பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.


இத் தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார்.


ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் வரம்பு களை நிர்ணயிப்பதில் தற்போது உள்ள நடை முறையே பின்பற்றப்படவேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அமைச்சர்


சி.விஜயபாஸ்கர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இதுகுறித்து மேலும் தெரிவித்தி ருப்பதாவது:


இளநிலை, முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பு இடங்களை நிரப்பும்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றுவதில்லை என்பதால் அதுகுறித்து மத்திய அரசுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதியன்று தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதற்கு எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில், ஓ.பி.சி., பிரிவினருக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி கடந்த ஜனவரியில் மற்றுமொரு கடிதம் அனுப்பப்பட்டது.


இதுதொடர்பாக கடந்த மாதம் 6-ஆம் தேதி முதல்வர் தலைமையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எடுத்த முடிவின்படி அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு அரசினால் அளிக்கப்படும் இடங்களில், தமிழ்நாட்டில் பின் பற்றப்படுவதைப்போல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி (பிற்படுத்தப்பட்டோர் 30 விழுக் காடு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 விழுக்காடு) நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் பட்டது.


ஏழை, எளிய மாணவர்களுக்கும், குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி பயில்வதற்கு தடையாக இருக்கும் 'நீட்' தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை வலி யுறுத்தி கடந்த புதன்கிழமை (ஜூலை 8) பிரத மருக்கு தமிழக முதல்வர் கடிதம் ஒன்றை அனுப்பி யுள்ளார்.


தற்போதுள்ள காலகட்டத்தில் ‘நீட்' தேர்வினை நடத்துவது மிகவும் கடினம் என்றும், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத் துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் அதில், முதல்வர் வலியுறுத்தி யுள்ளார்.


ஒபிசி பிரிவினருக்கு மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் சேர்க்கைக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீடு கிரிமிலேயர் பிரிவினருக்கு வழங்கப் படுவதில்லை. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு அதிகமாக இருப்பவர்கள் கிரிமி லேயர் பிரிவில் சேர்க்கப்படுவர்.


இந்த வருமானத்தை கணக்கிடும்போது, ஊதியமோ அல்லது விவசாயம் மூலம் பெறப்படும் வருவாயோ இதுவரை கணக்கில் எடுத்துக் கொள் ளப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது அவ் விரண்டையும் மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளப் போவதாக செய்திகள் வந்துள்ளன. தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையமும் இதனைப் பரிந்துரை செய்ய உள்ளதாகத் தெரிகிறது.


தமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாக பிற்படுத்தப் பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பின ருக்கென இடஒதுக்கீடு கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பணிகளில் நியமனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை ஆகியவற்றிற்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, சமூக நீதியைக் காப்பதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இட ஒதுக்கீடு என்பது சமூகம் மற்றும் கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படவேண்டும். பொருளாதார அடிப்படை யில் இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு குந்தகத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது.


ஆகவே, மத்திய அரசுப் பணிகளில் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்படும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் கிரிமிலேயர் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று பிரதமருக்குத் தமிழக அரசு கடிதம் வாயிலாக ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது.


தமிழக அரசு சமூகநீதியை காப்பதுடன் பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் நலனைக் காப்பதிலும் முன்னோடியாக விளங்கி வருகிறது என்று அந்த அறிக்கையில் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.


இக்கோரிக்கையை திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment