6 ஆவது முறையாக தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

6 ஆவது முறையாக தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு

மத்திய அரசு - தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, ஜூன்30 இந்தியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 5ஆவது தடவையாக நீட்டிக் கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது.


இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் நோய்த் தொற்று பரவல் வேகமாக அதிகரித்ததால் கடந்த 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதேபோல் மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.


இந்த நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூன்29) ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, தமிழ கத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.



இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


இந்தியா முழுவதும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ், 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத் தியது. இதைத்தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலை மையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 30ஆம் தேதி (இன்று) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.


கட்டுப்பாடுகள், தளர்வுகள்


மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் முதலமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், தற்போது எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால்தான், கொரோனா நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது எனவும், நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளும், கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என கருத்துகளை தெரிவித்தார்கள்.


ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு


பல்வேறு தினங்களில் முதல்-அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக கடந்த 22 ஆம்  தேதி நடத்தப்பட்ட காணொலி காட்சியில், மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்த கருத்து களின் அடிப்படையிலும், ஊரடங்கை தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரின் தலை மையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந் துரையின் அடிப்படையிலும், நேற்று பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தா லோசித்து, கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 30ஆம் தேதியுடன் (இன்று) முடிவ டைய உள்ள ஊரடங்கு உத்தரவு, ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.


சென்னை, மதுரையில் முழு ஊரடங்கு


எனினும், முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளான பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடி பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், பெரு நகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய்ப்பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.


இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டம், 2005இன் கீழ் 19.6.2020 அதிகாலை 12 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங் களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24.6.2020 அதிகாலை 12 மணி முதல் 30.6.2020 (இன்று) இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு, கொரோனா நோய்த்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் 5.7.2020 வரை தொடரும்.


19.6.2020-க்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 12 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12 மணிவரை தொடரும். மதுரையிலும் இதே நிலை.



ஞாயிற்றுக்கிழமைகளில்


முழு ஊரடங்கு


5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமைகள்) எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.


பேருந்து போக்குவரத்து நிறுத்தம்


மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.


அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும். வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நா ட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.


முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் இடங்களில் ஜூன் 30ஆம் தேதிவரை (இன்று) வழங்கப்பட்ட இ-பாஸ் ஜூலை 5ஆம் தேதிவரை செல்லும். இதற்கு மீண்டும் புதிய இ-பாஸ் பெறத் தேவை இல்லை.


நகர்ப்புற, பெரிய வழிபாட்டு தலங்களில் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.


ரயில் போக்குவரத்துக்கும், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.


திருமணங்களில் 50 பேருக்கு மேல் கூடாது


திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகளின்படி, திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.


சென்னை தவிர மற்ற பகுதிகளில் (நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர) ஜூலை 1ஆம் தேதியில் (நாளை) இருந்தும்; காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் உள்ள முழு ஊரடங்குக்கு உட்பட்ட பகுதிகளில், 6ஆம் தேதியில் இருந்தும் சில பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.


தேநீர்க் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.


உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.


ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்சாவும் அனு மதிக்கப்படுகிறது. மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் அனுமதிக்கப்படுகிறது.


பொது இடங்களில் அய்ந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறை களின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.


தொழிற்சாலைகள்


ஜூலை 5ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திரு வள்ளூர், மதுரை மாவட்டங்களில் உள்ள தொழிற் சாலைகளைப் பொருத்தவரை தற்போதுள்ள நடை முறை அதாவது, தொழிற்சாலை வளாகத்திலேயோ, அதன் அருகிலேயோ தொழிலாளர்கள் தங்க வைக்கப் பட்டு பணிபுரிய அனுமதிக்கும் நடைமுறை தொடர் வதற்கும் மற்ற பகுதிகளில் தற்போதுள்ள இ-பாஸ் முறை தொடர்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்ட பகுதிகளைத் தவிர்த்து மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங் களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள், அந்த மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திலிருந்து வந்து பணிபுரிவதற்கு, தொழிற்சாலை அல்லது நிறுவனம் அந்தந்த மாவட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து அனுமதி பெற்று தொழிலாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கலாம். இந்த அனுமதி அட்டை, தொழிற்சாலை அல்லது நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தை ஒட்டியுள்ள மாவட்டத்திற்கு மட்டுமே பொருந்தும். பிற மாவட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 மத்திய உள்துறை


அமைச்சகம் உத்தரவு


நாடு முழுவதும் ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலை யில் தற்போது அமலில் உள்ள பொது முடக்கத்துக்கான புதிய நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


அதன்படி நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு 2.0 ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல தடை நீடிக்கிறது.


அத்தியாவசியத் தேவைகளுக்கு அனுமதி


நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூலை 31 வரை பொது முடக்கம் அமலில் உள்ளது. அந்தப் பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் அனுமதி யளிக்கப்பட்டுள்ளது.


இதுதவிர பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவ னங்கள், பன்னாட்டு விமான சேவைகள், மெட்ரோ ரயில் சேவைகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜூலை 31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.


சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, மதம், கலாசார நிகழ்ச்சிகள் உள்பட மக்கள் அதிகளவில் கூடும் கூட்டங்களுக்குத் தடை நீடிக்கிறது.


ஜூலை 15 முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் பயிற்சி நிறுவனங்கள் செயல்படலாம். இங்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வழங்கப்படும்.


பொது இடங்கள், பணியிடங்கள் மற்றும் பயணங் களின்போது முகக் கவசம் அணிவது கட்டாயம்.


இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசியத் தேவைகள் மற்றும் மற்ற தளர்வுகள் தவிர்த்து ஊரடங்கு அமலில் இருக்கும்.


No comments:

Post a Comment