இந்தியாவில் மத வன்முறைபற்றி அமெரிக்க ஆணையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 2, 2020

இந்தியாவில் மத வன்முறைபற்றி அமெரிக்க ஆணையம்

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியா மத வன்முறை நாடுகளின் பட்டியலில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலில் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது.


இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன - சகிப்புத் தன்மை மொத்தமாக குறைந்துவிட்டது என்று அமெரிக்க அரசுக்கு சொந்தமான பன்னாட்டு சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.


பன்னாட்டு மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் 2015ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் நடக்கும் மதச் சிறுபான்மையினர் மீதான வன்முறையினை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. இந்த ஆணையம் அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு ஆகும். சுதந்திரமாக செயல்படக் கூடிய இந்த ஆணையம் அமெரிக்க அரசுக்கும், அந்நாட்டு அதிபருக்கும் கொள்கை திட்டங்களை வகுத்து கொடுக்கக்கூடிய  தாகும். உலகம் முழுக்க இருக்கும் மத ரீதியான நடவடிக்கைகள் சண்டை குறித்து தொடர்ந்து கண்காணித்து அது தொடர்பான பரிந்துரைகளை அந்நாட்டு அரசுக்கு இந்த அமைப்பு வழங்கும். உலகம் முழுக்க மத ரீதியான தாக்குதல்கள் மற்றும் செயல்பாடுளை இந்த ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.


இந்த நிலையில் 2020ஆம் ஆண்டிற்கான அறிக்கையை இந்த ஆணையம் இப்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன, சகிப்புத்தன்மை மொத்தமாக குறைந்துவிட்டது என்று  தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவை இந்த ஆணையம் "குறிப்பாக அக்கறை கொள்ள வேண்டிய நாடு “Country of Particular Concern (PC)" என்ற பட்டியலில் சேர்ந்துள்ளது.


இது பன்னாட்டு மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் உருவாக்கும் ஒரு மிக முக்கிய பட்டியல் ஆகும். எந்த நாட்டில் எல்லாம் மோசமாக மத சுதந்திரம் உள்ளது, மத தாக்குதல்கள் உள்ளனவோ அந்த நாடுகளை எல்லாம் இந்த பட்டியலில் இந்த ஆணையம் சேர்க்கும். இப்படி பட்டியலில் இருக்கும் நாடுகள் மீது அமெரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இது பரிந்துரை செய்யும்.


இந்தப் பட்டியலில் தான் இந்தியா தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன, சகிப்புத்தன்மை மொத்தமாக குறைந்து விட்டது. அங்கு சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதை அந்நாட்டு மத்திய அரசு அனுமதிக்கிறது.


அந்நாட்டு மத்திய அரசு இதில் இணைந்து சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறது. அதேபோல் அவர்களுக்கு எதிப்பான வெறுப்பு உமிழும் பேச்சுக்களை ஊக்குவிக்கிறது. இந்தியாவில் பாஜக தலைவர்கள் நாடு முழுக்க என்ஆர்சி கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அதேபோல் குடியரிமை சட்டதிருத்தச் சட்டத்தை அமல்படுத்த திட்டமிடுகிறார்கள். இதனால் பலகோடி இஸ்லாமிய மக்கள் நாடுகளை, வீடுகளை இழக்க நேரிடும். பலர் குடியுரிமையை இழப்பார்கள் என்றும் கூறியுள்ளது.


மேலும், இந்தியா மீது இதனால் கடுமையாக நடவடிக்கையை எடுக்க அமெரிக்காவிற்கு அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அமெரிக்க அரசு இந்தியா மீது இதனால் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். அதேபோல் இந்திய அரசு அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற அதிகாரிகள், நபர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மொத்தமாக தடை விதிக்க வேண்டும்


இந்தியாவில் சிறுபான்மையினர் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். நாளுக்கு நாள் இந்தியாவில் நிலைமை மோசமாகி வருகிறது என்று அந்த அறிக்கையில் அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது. கடைசியாக 2004இல் குஜராத்தில் கலவரம் நடந்த போது இதேபோல் இந்தியாவை சிபிசி பட்டியலில் பன்னாட்டு மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் சேர்த்து இருந்தது. அதன்பின் மீண்டும் அதே பட்டியலில் இந்தியாவை மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் சேர்த்துள்ளது.


அமெரிக் அதிபர் ஒபாமா இந்தியா வந்த போது - அவருக்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இடித்துக் கூறியதுண்டு.


இந்தியா சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தவரை சிறப்பாகவே இருந்து வந்திருக்கிறது என்று நயமாக இடித்துக் கூறியதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.


அமெரிக்க அதிபர் இந்தியப் பிரதமரைப் புகழ்வதும், இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரைப் புகழ்வதும் ஏதோ சடங்காச்சாரமாக ஒரு பக்கத்தில் நடந்து கொண்டுதான் வருகிறது. யார் யாரை ஏமாற்றுகிறார்களோ?


No comments:

Post a Comment