உலகில் "நாத்திக இயக்கத்தை தலைமையேற்று நடத்திய முதல் பெண்" - அன்னை மணியம்மையார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

உலகில் "நாத்திக இயக்கத்தை தலைமையேற்று நடத்திய முதல் பெண்" - அன்னை மணியம்மையார்

featured image

முனைவர்
அதிரடி க.அன்பழகன்
மாநில அமைப்பாளர்,
கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம்

தொன்மைத் திராவிடர் இனத்தின் உயர் நாகரிகமும் – உன்னத வாழ்வியலும் – ஏற்றமிகு பண்பாடும் – எழுச்சிமிகு சிறப்புகளும் சீர்கெடக் காரணமான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்கொண்டு, களங்கண்டு, போராட உதித்த திராவிடர் இயக்கத்தின் உயிர்க்காற்றாய் – ஒப்பற்ற இலட்சியக் கொள்கையின் ஊற்றாய் தோன்றிய தந்தை பெரியாரின் கொள்கை வழிநின்று – அய்யாவின் நிழலாக பணியாற்றி – அய்யாவிற்குப் பின் அவரிடத்தை தலைமை ஏற்று நடத்திய திராவிடர் இயக்கத்தின் தாய் அன்னை மணியம்மையரின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் 10.3.2024.

நூற்றாண்டு கண்ட இயக்கமாம் திராவிடர் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அன்னை மணியம்மையார் நூற்றாண்டு கடந்து 105ஆவது பிறந்த நாள் காண்கிறார்.
வேலூரில் தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் திரு.கனகசபை – பத்மாவதி ஆகியோரின் மகளான காந்திமதி என்ற பெண்தான் பின்னாளில் கே.அரசியல் மணி என்றும், கே.ஏ.மணி என்றும் அழைக்கப்பட்டார். திரு.கனகசபை அவர்களின் குடும்ப நண்பர் “அண்ணல் தங்கோ” அவர்கள்தான் இவருக்கு பெயர் மாற்றம் செய்தார்.
தநதை பெரியார் தனக்கு உதவியாளராக பணியாற்ற – உடல் நலம் மற்றும் கழகப் பணிகளை கவனிக்க ஒருவர் முழு நேரப் பணியாளராக தேவைப்படுகிறார் என்ற செய்தியறிந்த கழகத் தொண்டர் கனகசபை தனது மூத்த மகள் மணியம்மையாரை (கே.அரசியல் மணி) பெரியாரிடம் ஒப்படைத்தார்.

தந்தை பெரியார் தனது இயக்கத்தின் எதிர்காலப் பணி சிறப்புடன் தொய்வின்றி நடைபெற – தனது சொத்துகளை அறக்கட்டளையாக்கி அதன் வழி இயக்கம் இலக்கு நோக்கி இயங்கிடச் செய்ய விரும்பினார். தனது வாழ்விணையர் நாகம்மையாரும் – அவர்களுக்குப் பிறந்த பெண் மகவும் மறைவுற்ற சூழலில், அன்னை மணியம்மையாரை தனது சட்டப்படியான வாரிசாக்கி – அதன் மூலம் தனது சொத்துகள் யாவையும் இரத்த உறவு சொந்தங்களுக்குச் சேராமல் பாதுகாத்து இயக்கச் சொத்தாக்கினார். இலட்சியப் பணிக்கு சொந்தமாக்கினார்.
திருமணம் என்ற ஏற்பாட்டால் நடைபெற்ற இக்காரியம் ஒரு இயக்கத்தின் தொடர் பணிக்கு வித்தானது. ஆனால், அன்னை மணியம்மையார் மிகப் பெரும் இழிவுப் பட்டங்களை சுமந்திட இடமானது. அவையனைத்தையும் தாங்கிக் கொண்டு தான் ஏற்றுக் கொண்ட தத்துவத்தின் தலைவருக்கு – திராவிடர் இனம் மானமும் அறிவும் பெற போராடும் ஒரு புரட்சியாளர்க்கு பணி செய்யும் வாய்ப்பும் – அவரது பேரியக்கத்திற்கு காப்பாளராக இருக்க தனக்குக் கிடைத்திட்ட மிகப் பெரும் பொறுப்பும் பெருமைக்குரியது என்றெண்ணி பணி தொடர்ந்தார்.
தந்தை பெரியாரை காப்பதில் ஈன்ற தாயாகவும் – நலம் பயப்பதில் செவிலித் தாயாகவும் ஈடற்ற தொண்டு செய்து தொண்டின் சிகரமாக விளங்கினார் அன்னை மணியம்மையார்.
தாய் – தந்தை இல்லாத நிர்க்கதியாய் விடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்த்து ஆளாக்கி – அறிவூட்டி வாழ்வில் ஒளி பெற குழந்தைகள் காப்பகம் உருவாக்கி அய்யாவின் மனித நேயத் தொண்டிற்கு மகுடம் சூட்டினார். தொண்டறத்தின் உச்சந் தொட்டார்.

அய்யாவின் மறைவிற்குப் பிறகு இயக்கத்திற்கு தலைமை ஏற்கும் பெரும் பொறுப்பேற்றார். அய்யாவின் வேண்டுகோளை ஏற்று இயக்கம் காக்க “திருமணம் என்ற ஏற்பாட்டிற்கு” தன்னை ஒப்படைத்திட்ட அன்னை – அய்யாவின் மறைவிற்குப் பிறகு இயக்கத்திற்கு தலைமையேற்று காக்கும் அரணாகவும் – இயக்கத் தொண்டர்களை இயக்கிடும் ஈடில்லாத் தலைமையாகவும் விளங்கினார்.

அம்மா தலைமையேற்ற காலத்தின் அளவு சில ஆண்டுகள்தான் என்றாலும் – வரலாற்றுச் சிறப்புமிக்க களங்கள் கண்ட காலமாக இயக்க வரலாற்றில் நிற்கிறது.
ஆரியக் கூட்டம் இராமலீலா எனும் பேரால் திராவிடப் பேரரசர் இராவணன் மற்றும் கும்பகர்ணன் முதலானோர் உருவப் பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்திடும் கொடுமை கண்டு கொதித்தெழுந்த அன்னை மணியம்மையார் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் – பெரியார் திடலில் இராவண லீலாவை நடத்தி இராமன். இலட்சுமணன் முதலானோர் உருவப் பொம்மைகளை தீயிட்டுக் கொளுத்தி – இனமானம் காத்திடும் களமாடி – இந்திய ஒன்றியத்தின் இரத்த ஓட்டத்தையே நிறுத்திக் காட்டிய பேராற்றல் மிக்க வீராங்கனை அன்னை மணியம்மையார் ஆவார்.

அய்யா உயிருடன் வாழ்ந்த காலத்தில் 1957இல் ஜாதியை ஒழிக்க – ஜாதியை அங்கீகரிக்கும் அரசியல் சட்டப் பிரிவை கொளுத்திட பெரியார் ஆணையிட்ட போர்க்களத்தில் கலந்துகொண்டு சிறையேகி சிறையிலேயே மறைந்திட்ட பட்டுக்கோட்டை இராமசாமி – மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் புதைக்கப்பட்ட உடல்களை போராடிப் பெற்று திருச்சி மாநகரில் மிகப் பெரும் வீர வணக்கப் பேரணி நடத்தி, இந்தியாவையே திணறடித்த வீராங்கனை அன்னை மணியம்மையார்.
அய்யா மறைவிற்குப் பின் தன் பெயரிலிருந்த பெரியார் கொடுத்திட்ட விவசாய நிலங்களை விற்று – அறக்கட்டளையில் சேர்த்து – தஞ்சையில் இயங்கிடும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கிட காரணமானவர்தான் நம் அன்னை மணியம்மையார். அதன் நீட்சியாகத்தான் நமது இயக்கத்தின் அறப்பணி – கல்விப்பணி பல்கலைக்கழகமாக இன்று ஓங்கி வளர்ந்து உயர்கல்வியில் உயர்ந்து நிற்கிறது.

தந்தை பெரியாரின் பெரும்பணியை தன் அரும்பணியால் சிறக்கச் செய்த – பெரியாரை பல்லாண்டு காலம் வாழச் செய்த பேராற்றல் கொண்ட வீராங்கனை அன்னை மணியம்மையாரின் 105ஆம் பிறந்த நாளில், பெரியார் வழி நடந்திட்ட அவரது தொண்டறம் வென்றிட சூளுரைப்போம்.

No comments:

Post a Comment