‘‘தேர்தல் பத்திரமும் - உச்சநீதிமன்றத் தீர்ப்பும்'' சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 5, 2024

‘‘தேர்தல் பத்திரமும் - உச்சநீதிமன்றத் தீர்ப்பும்'' சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் வேண்டுகோள்!

featured image

* நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல – மக்கள் விரோத அரசே!
*இந்தப் பாசிச ஆட்சியை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டார்கள்!
*எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாளும் வலுப்பெற்று வருகிறது!

* ஆளும் பி.ஜே.பி., குறுக்கு வழியில் வெற்றிபெற முயற்சிக்கிறார்கள்?
நூற்றுக்கு நூறு ஒப்புகைச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்!
இதனை வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் உச்சநீதிமன்றம் செல்லவேண்டும்!
சமூகநீதி – மதச்சார்பின்மையைக் காப்பாற்ற தேர்தல் ஓர் ஆயுதம் என்பதை மறவாதீர்!

சென்னை, மார்ச் 5 நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஜனநாயக விரோத – மக்கள் விரோத ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை வீழ்த்த தேர்தலை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தவேண்டும். தேர்தலை நடத்தும் முறையில் மாற்றம் தேவை. நூற்றுக்கு நூறு ஒப்புகைச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படவேண்டும். இதனை வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும். இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரையில் நாளும் வலுப்பெற்று வருகிறது. வரும் தேர்தலில் அது வெற்றிப் பெறப் போவது உறுதி! ஜனநாயகத்தை வென்றெடுப் போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘தேர்தல் பத்திரமும் –
உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!’’
நேற்று (4.3.2024) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘தேர்தல் பத்திரமும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பும்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:

சிறப்பான தருணத்தில், சிறப்பானவர்களுடைய கருத்துகளோடு….
இது சிறப்புமிகுந்த சிறப்புப் பொதுக்கூட்டம் என்று போட்டிருந்தாலும், இது ஒரு சிறப்பான தருணத்தில், சிறப்பானவர்களுடைய கருத்துகளோடு, சிறப்பாக நடந்துகொண்டிருக்கின்ற இந்தப் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்து, அனைவரையும் வரவேற்று விளக்கவுரையாற்றிய கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
எனக்கு முன்னால், ஓர் அற்புதமான உரையை, ஓர் அரிய தருணத்தில் சிறப்பாக, என்றைக்கும் சிறுத்தைகள், தேர்தல் களத்தைக் கூட போராட்டக் களமாகவே அதை ஆக்கிக் கொண்டிருக்கக் கூடிய வலிமையும், தெளிவும், கொள்கை உணர்வும் கொண்டவர்கள் என்பதைக் காட்டக்கூடிய வகையில், இந்தத் தேர்தல் பத்திரத்தோடு, பத்திரமான தேர்தல் எப்படி நடப்பது என்பதையும் நம்மு டைய சகோதரர் திருமா அவர்கள் இங்கே விளக்கியிருக் கிறார்.
தேர்தல் பத்திரம் – ‘பத்திரமான தேர்தல்’ என்ற இரண் டையும் இணைத்து மிகச் சிறப்பான வகையில், வழி முறைகளையும் இங்கே மிக முக்கியமாக எடுத்துக்காட்டி யிருக்கிறார்.

அற்புதமான ஒரு சட்ட விளக்கத்தை, எல்லோருக்கும் புரியும்படியான வகையில்….
நம்முடைய மூத்த வழக்குரைஞர் இரா.விடுதலை அவர்கள் அற்புதமான ஒரு சட்ட விளக்கத்தை, எல் லோருக்கும் புரியும்படியான வகையில் விளக்கியிருக் கிறார். அவர் மூத்த வழக்குரைஞர், மேனாள் அட்வகேட் ஜெனரல். விடுதலை என்று ஒருவருக்குப் பெயர் இருக்கிறதா? என்று பலர் நினைக்கலாம். ‘விடுதலை’ நாளிதழ் ஒரு பக்கம் அதன் வேலையைச் செய்கிறது. நம்முடைய வழக்குரைஞரும் இன்றைக்கு அதையே செய்தார்.
அவருடைய அருமைத் தந்தையார், என்னுடைய அருமைச் சகோதரர் இராகவானந்தம் அவர்கள், தன்னு டைய குழந்தைக்கு ‘‘விடுதலை” என்றுதான் பெயர் வைத் தார். அவருடைய சகோதரருக்கு ‘‘ஈரோடு” என்று பெயர் வைத்தார்.

தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட,
கொள்கைக் குடும்பத்தில் பூத்த மலர்!
இன்றைக்குக்கூட உச்சநீதிமன்றத்தில், விடுதலை என்று அழைக்கக்கூடிய நிலை வந்தாயிற்று. டில்லிக்குப் போனாலும், விடுதலைதான். எனவே, அந்த அளவிற்கு உள்ள கொள்கைக் குடும்பங்கள். தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட, கொள்கைக் குடும்பத்தில் பூத்த மலர் அவர். அந்த வகையில், அவர் காய்த்து, கனிந்து, இன் றைக்கு மிக அற்புதமான உரையை நிகழ்த்தினார்.
அதேபோன்று, நம்முடைய பேராசிரியர் ஜவாஹி ருல்லா அவர்கள். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஓர் அரசியல் கல்வியியலாளர். அவர் இதற்கு முன்பு, வகுப்பறையில்தான் பாடம் எடுத்தார். இன்றைக்கு அவர் மக்கள் முன், ஒரு பேராசிரியராக ஆழமான கருத்துகளை, ஆதாரப்பூர்வமான கருத்துகளை எடுத்து வைத்தார்.
எனது சகோதரர் எழுச்சித் தமிழர், என்றைக்கும் பெரியார் திடலுக்கு உரியவர். என்றைக்கும் கொள்கை யாளராக இருக்கக் கூடியவர். அதனால்தான் விளக்க வுரையை தெளிவாக ஆற்றினார். நிறைய பேர் இங்கே வந்திருக்கிறீர்கள்.
ஏதாவது கிடைக்காதா என்று சிலர் வந்திருக்கிறார்கள். ஏனென்று கேட்டால், சில பேர் கதவைத் திறந்திருக் கின்றோம் என்கிறார்கள்; சிலர் ஜன்னலைத் திறந்திருக் கின்றோம் என்கிறார்கள்; சில பேர் கதவையே கழற்றி விட்டோம் என்கிறார்கள்.

தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கொள்கைக் கூட்டணியை அசைக்க முடியாது!
ஆனால், எதுவானாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள கொள்கைக் கூட்டணியை அசைக்க முடியாது.
இப்பொழுது பிரச்சினை என்னவென்றால், புதிதாக சிலர் கூட்டணிக்கு வருபவர்களை எப்படி இணைப்பது? என்பதுதான் தலைவருக்கு இருக்கின்ற கவலையே தவிர, வேறொன்றுமில்லை.
ஏனென்றால், இந்தக் கூட்டணியில் இருக்கின்றவர்கள் இடந்தேடிகள் அல்ல – ‘சீட்’ நாடுபவர்கள் அல்ல. கொள்கையைப் பாதுகாக்கக் கூடியவர்கள்.
தேர்தல் பத்திரத்தைப்பற்றி கூடுதலாக ஒரு தகவலைச் சொல்கிறேன்.
எதிர்க்கட்சிக்காரர்கள் அல்லது மோடியை எதிர்க்கக் கூடியவர்கள், பி.ஜே.பி.யை, ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்க்கக் கூடியவர்கள். ஆகவே, இவர்கள் தேர்தல் பத்திரத்தை எதிர்த்துப் பேசுகிறார்கள்; இவர்களுக்கு வாய்ப்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று வந்திருக்கின்றது. ஆகவே, அதைக் காட்டிப் பேசுகிறார்கள் என்றெல்லாம் கூட சொல்லிவிட முடியாது.

‘‘பழைய வார்ப்புகளை உடைத்தெறிவோம்; இந்தியாவின் பொருளாதாரம் குறித்த
ஒரு புதிய பார்வை!’’
உங்களுக்கெல்லாம் இந்தத் தகவல் தெரியவேண்டும்; இங்கே மூன்று பேரும் உரையாற்றியதில் பல செய்தி களைத் தெளிவாக நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். நான்காவதாக நான் சொல்லுகின்றபொழுது இதோ இந்தப் புத்தகத்தைப் பாருங்கள் – ‘‘பழைய வார்ப்புகளை உடைத்தெறிவோம்; இந்தியாவின் பொருளாதாரம் குறித்த ஒரு புதிய பார்வை” என்ற தலைப்பில் வெளி வந்திருக்கின்ற புத்தகம். இதை எழுதியவர் ரிசர்வ் வங்கியின் தலைவராக இருந்து, அரசாங்கத்திற்கு ஆலோசகராக இருந்த, மிகப்பெரிய பொருளாதார வல்லுநரும், சிந்தனையாளருமான ரகுராம் ராஜன் அவர்கள்தான். அவரோடு ரோகித் லாம்பா என்கிற பேராசிரியர் இணைந்து எழுதிய புத்தகம்தான் அது.
இந்தியாவினுடைய எதிர்கால பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று சொல்லக்கூடியது இந்தப் புத்தகம், ஆங்கிலத்தில் வெளிவந்தது. அதை தமிழில் குமாரசாமி அவர்கள் மொழி பெயர்த்திருக்கிறார்.
கூட்டத்தில் மொழி பெயர்த்து சொல்லுவதற்கு ஆங் கிலப் புத்தகத்தை நான் ஏற்கெனவே படித்துவிட்டேன். மிகவும் வசதியாக இருக்கும் என்பதால்.
‘‘Book Review. Breaking the Mould: Reimagining India’s Economic Future”
இது அறிவார்ந்த அரங்கம். இங்கே வந்திருக்கின்ற மக்கள் – பேராசிரியர்கள், கல்வியாளர்கள், வழக்குரை ஞர்கள், சான்றோர்கள் எல்லோருமே தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
அந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியில், தேர்தல் பத்திரத்தைப்பற்றிய ஒரு கருத்தைச் சொல்கிறார்.
இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள், ஒன்றிய அரசுக்கு எதிரானவர்கள்; ஆகவே, இதனைச் சொல் கிறார்கள் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்.

உலக அளவில் புகழ்பெற்ற ஒரு நிபுணருடைய கருத்து!
உலக அளவில் புகழ்பெற்ற ஒரு நிபுணருடைய கருத்துதான் இது. தேர்தல் பத்திரம் குறித்து, உச்சநீதி மன்றம் தன்னுடைய கருத்தைச் சொல்லுவதற்கு முன்பே – அதாவது 2022 ஆம் ஆண்டே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

‘‘தேர்தல் நிதி’’ என்ற தலைப்பில்….
‘‘தேர்தல் நிதி” என்ற பகுதியில் அவர் சொல்கிறார்,
‘‘அரசியல் கட்சிகள் தொடர்ந்து, தம்முடைய பெருபான்மை நிதியை அநாமதேய நன்கொடை கள்மூலம் ரொக்கமாகப் பெறுவது கவலையளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்த, காலஞ்சென்ற மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, அதனால் இந்திய அரசியல் கட்சி கள் நிதி சேர்க்கின்ற முறையை சுத்தப்படுத்துவதற்கு முயற்சிகள் தேவை என்று வாதிட்டார்.”
இதுவே ஆர்.எஸ்.எஸினுடைய ஒரு வித்தியாசமான அணுகுமுறையாகும். அவர்கள் எப்பொழுதும் மனதில் ஒன்று வைத்திருப்பார்கள்; வெளியில் ஒன்று சொல்லு வார்கள். உதட்டிற்கும், உள்ளத்திற்கும் அவர்களுக்குச் சம்பந்தமே கிடையாது.
மேலும் அவர் தொடர்கிறார்,

கடந்த நான்கு ஆண்டுகளில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள
தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகியுள்ளன!
‘‘2018 இல் இத்தேர்தல் பத்திரங்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. ரொக்கமாக 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அநாமதேய நன்கொடை பெறுவது அதில் தடை செய்யப்பட்டது. ஓராயிரம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய்வரை மதிப்புடைய பத்திரங்கள் விற்கப்பட்டன. இந்திய குடிமக்கள் யார் வேண்டு மானாலும் அவற்றை வாங்கி, தங்களுக்குப் பிடித்த கட்சிகளுக்கு அவற்றை நன்கொடைகளாக வழங்கலாம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தேர்தல் பத் திரங்கள் விற்பனையாகியுள்ளன. ‘துரதிருஷ்டவச மாக’ இப்பொழுது நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் பத்திர முறையால், நாட்டில் நிலவுகின்ற நெறி பிறழ்ந்த முதலாளித்துவத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
இன்னும் சொல்லப்போனால், நெறி பிறழ்ந்த முதலாளித்துவத்தை அது மேலும் ஊக்குவிக்கவே செய்யும். இந்தப் பத்திரங்கள் வெளிப்படைத்தன் மையை மேம்படுத்தவில்லை. நன்கொடையாளர் கள் பெயர்கள் பொதுமக்களிடமிருந்தும், பிற அர சியல் கட்சிகளிடமிருந்தும் மறைக்கப்படுகின்றன.

விற்பனையாகியுள்ள தேர்தல் பத்திரங்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவை, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் இவை என்று அரசு சாரா அமைப்புத் தெரிவிக்கிறது.
இந்த விற்பனை பெரும்பணம் படைத்த தனி நபரிடமிருந்தும், பெரும் நிறுவனங்களிடமிருந்து தான் வந்திருக்கவேண்டும். இந்த நன்கொடைகள் நல்லெண்ணத்தின் அடிப்படையில், சுய விருப்பத் தோடு வழங்கப்பட்டவையா? அல்லது பின் னாளில், காரியம் சாதித்துக் கொள்ளுகின்ற நோக் கத்தில் வழங்கப்பட்டவையா? என்பதை பொது மக்கள் ஒருநாளும் தெரிந்துகொள்ள முடியாது.
எடுத்துக்காட்டாக, இறக்குமதியை உயர்த்து வதின்மூலமோ, அரசு மானியங்கள் மூலமோ பொதுச்சொத்துகள் ஏலமிடப்படுவதின்மூலமோ அல்லது பொதுத் துறை வங்கிகள் வழங்குகின்ற கடன்கள்மூலமோ பலன் அடைந்திருக்கின்ற துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு அதிக அளவில் நிதி வழங்கி யிருப்பதை பொதுமக்கள் தெரிந்துகொண்டால், இரண்டும், இரண்டும் நான்கு என்று கணக்குப் போட்டு, அவர்களால் சிறப்பான முறையில் சிந்தித்து, தேர்தல்களில் வாக்களிக்க முடியும். ஆனால், தற்போது நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் பத்திர அமைப்பு முறையில் அது சாத்திய மில்லை.

தேர்தல் பத்திரங்களை விநியோகிக்கின்ற வங்கி, ஒரு பொதுத் துறை வங்கி!
ஆட்சியில் இருக்கின்ற அரசால், இந்தத் தேர்தல் பத்திரங்களைத் தவறாகப் பயன்படுத்த முடியும். இவற்றை விநியோகிக்கின்ற வங்கி, ஒரு பொதுத் துறை வங்கியாக இருப்பதால், ஆட்சியில் இருக்கின்ற அரசால், பத்திரங்களை வாங்கியுள்ள நபர்களின் பெயர்களையும், அப்பத்திரங்களைப் பெற்றுள்ள கட்சிகளின் பெயர்களையும் வெளிப் படுத்தக் கோரி, அந்த வங்கி அதிகாரிகள்மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும்.
இதில் உள்ள இத்தகைய ஆபத்தை, ஆசை காட்டுதல் அல்லது மிரட்டுதல்கள் மூலம் அரசால் தங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்திருக்கின்ற தனி நபர்களும், நிறுவனங் களும் பெரிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை வழங்கத் துணியமாட்டார்கள்.
அதனால், அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படு கின்ற நன்கொடைகள் இப்போது சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ள வழியான ரொக்கமாக நன்கொடை அளிக்கின்ற முறைமூலமாகத்தான் கொடுக்கப்பட வேண்டும்.

விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு….
இப்படி ரொக்கமாகத் திரட்டப்படுகின்ற கட்சி நிதிகள் கணக்கில் காட்டப்பட முடியாத பணமாக இருக்கும் என்பதால், ஆட்சியில் இருக்கின்ற அரசு, அக்கட்சிகளின்மீது விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு, அவற்றைக் கைப்பற்ற முடியும்.”
ஒன்றிய அரசின் கைகளில் இருப்பது திரிசூலம். திரிசூலத்தின் ஒரு முனை சி.பி.அய். இன்னொரு முனை – அமலாக்கத் துறை; மூன்றாவது முனை வருமான வரித் துறை.
இதைத்தான் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் இங்கே அழகாக எடுத்துச் சொன்னார். எவ்வளவு பேருக்கு நன்கொடை கொடுத்திருக்கிறார்கள் – மிரட்டி, உருட்டி வாங்கியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் எதிர்க்கட்சிகள் அறிய முடியாது.
இப்படி செய்துகொண்டுள்ள ஒன்றிய அரசு, மோடி அரசு ஊழலை ஒழிக்கிறோம், ஊழலை ஒழிக்கிறோம்; புதிய அவதாரம் எடுத்திருக்கிறேன் என்று சொல்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் முதலில் குரலை உயர்த்திப் பேசுகிறார்; பிறகு திடீரென்று குரலை குறைத்துப் பேசுகிறார்!
அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி இன்று (4-3-2024) மாலை தமிழ்நாட்டிற்கு வந்த அவர், இன்றைக்கு மிக வேகமாகவும், உருக்கமாகவும் பேசினார். வேகமாகப் பேசிவிட்டு, திடீரென்று குரலை குறைத்துக்கொண்டு பேசு கிறார்.
சில நாள்களுக்கு முன்பு நடிகர் சத்யராஜ் அவர்கள் நடித்த திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு ஏற்பட்டது. அந்தத் திரைப்படத்தின் பெயர் ‘‘மகாநடிகன்” என்பது. அந்தப் படத்தை இப்பொழுது எடுத்திருந்தால், சத்யராஜை அழைத் திருக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக நடிப்பதற்கு யாரை கூப்பிட்டு இருப்பார்கள் என்பது உங்களுக் கெல்லாம் தெரியும்; அதனைச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.
பிரதமர் மோடி பேசுகிறார், ‘‘ஒவ்வொரு முறை யும் தமிழ்நாட்டிற்கு நான் வரும்பொழுதெல்லாம், தி.மு.க.விற்குப் பயமாக இருக்கிறது. அந்தக் கூட் டணியினரை நான் பயமுறுத்திக் கொண்டிருப் பதற்குக் காரணம் என்னவென்றால்…” என்று அவர் ஆரம்பிக்கிறார்.

பயப்பட வேண்டியவற்றிற்கு அறிவாளிகள் பயப்படுவார்கள்!
வாதத்திற்காக நான் சொல்கிறேன், ‘‘பயப்பட வேண் டியவற்றிற்கு அறிவாளிகள் பயப்படுவார்கள். கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடப் போகிறது என்று எல்லோரும் பயப்பட்டார்கள். அதற்காக எல்லோரும் மாஸ்க் அணிந்தார்கள். இல்லை, இல்லை நான் பெரிய வீரன், மாஸ்க் அணியமாட்டேன்” என்றால், யாருக்கு நட்டம்?
புற்றுநோய் எப்படி வருகிறது, எப்படி ஆளைக் கொல்லுகிறது என்று தெரியாது.
அதுபோன்று மதவெறி, ஜாதி வெறி, பதவி வெறி, ஊழல் வெறி இவை அத்தனையும் வருகிறது என்று சொல்லக்கூடிய அளவில் வளர்ந்து வருகின்றன.
இவ்வளவு பேர் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதை பேராசிரியர் ஜவாஹிருல்லா சொன்னார். சகோதரர் திருமா அவர்கள் அதனை விளக்கிச் சொன்னார்.

‘புனித’ கங்கை நீரை எடுத்துத் தெளித்தால், எப்பேற்பட்ட ஊழலும் காணாமல் போய்விடுமாம்!
அதனால்தானே வாரணாசி தொகுதியில் நிற்கிறார் நம்முடைய பிரமதர் மோடி அவர்கள். அங்கே ‘‘கங்கா ஜலம்” ஓடுகிறது – ‘‘மிகவும் சுத்தமானது” – அந்தத் ‘‘தூய் மை”யான ‘புனித’ கங்கை நீரை எடுத்துத் தெளித்தால், எப்பேற்பட்ட ஊழலும் காணாமல் போய்விடும்” என்கிறார்.
ஆகவே, வாரணாசி தொகுதியில் இருந்து அவர் வெற்றி பெற்று பிரதமர் ஆனதால், அவருடைய கைகளில் நிறைய அளவிற்கு ‘‘கங்கா ஜலம்” இருக்கிறது. ‘புனித’மான கங்கை நீர் இருப்பதால், அதை தெளித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண் டிருக்கின்றார்கள். ‘புனித’ நீரா? அசுத்த நீரா? என்பது உலகத்துக்கே தெரியும்.
ஏன் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்பது குறித்து இன்றைய ‘விடுதலை’யில்கூட ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறோம்.

குருதிக் குடும்பத்தைவிட, கொள்கைக் குடும்பம் மிகவும் முக்கியம்!
‘‘தமிழ்நாட்டில், குடும்ப அரசியல், குடும்ப அரசியல்” என்று சொல்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எங்களுக்குக் குருதிக் குடும்பத்தைவிட, கொள்கைக் குடும்பம் மிகவும் முக்கியம்.
எழுச்சித் தமிழரும், அதேபோன்று ஜவாஹிருல்லா அவர்களும், இங்கே மேடையில் இருக்கின்ற அத்துணைப் பேரும் யார் என்ன ஜாதி என்று தெரியுமா?
கொள்கை எங்களை இணைக்கிறது; மனிதநேயம் எங்களை இணைக்கிறது; லட்சியம் எங்களை இணைக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல – இந்தியா முழுவதும் எடுபடாத மோடியின் வித்தை!
மோடி வித்தைகள் தமிழ்நாட்டில் மட்டும் எடுபடாது என்றில்லை; இந்தியா முழுவதும் எடுபடாது என்பது இப்பொழுது மிகத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
மக்கள் இன்றைக்குத் தெளிவாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழ்நாடு பெரியார் மண்; இந்த மண்ணை யாரும் தொட முடியாது.
ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு நேராகவே சொன்னார், ‘‘இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், உங்களால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது” என்று.
அதற்காகவே பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார். இன்னும் ஆறு முறை, பத்து முறை வருவேன் என்று சொல்கிறார்.

தமிழ்நாட்டில் மோடி குடியேறினாலும் –
பி.ஜே.பி. குடியேற முடியாது!
பிரதமர் மோடி அவர்களே, தமிழ்நாட்டிலேயே நீங்கள் குடியேறினாலும்கூட, நீங்கள்தான் குடியேறலாமே தவிர, நீங்கள் சார்ந்துள்ள பி.ஜே.பி. குடியேற முடியாது.
அப்படி பி.ஜே.பி. வளராமல் செய்வதற்கு உங்களு டைய ஆள்களே தயாராக இருக்கிறார்கள். நீங்கள் வைத்திருக்கின்ற தலைவர்களே போதும்; அதற்கு – நீங்கள் இங்கே வளராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை அழகாகச் செய்து கொண்டிருக் கிறீர்கள்.
இப்பொழுது அண்ணாமலைக்குப் போட்டியாக, பிரதமர் மோடியே வந்துவிட்டார்.
ஒவ்வொரு முறையும் அண்ணாமலை ஓட்டைக் குறைத்துக் கொண்டிருந்தார். இப்பொழுது அண்ணாமலைக்கும் – பிரதமர் மோடிக்கும் போட்டி என்னவென்றால், ‘‘நான் அதிகம் குறைப்பதா? நீங்கள் அதிகம் குறைப்பதா?” என்று. டெபாசிட்டை இழக்க வைப்பதில் யார் முன்னணியில் இருக்கிறோம் என்பதற்கான போட்டி மிக வேகமாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து மனிதாபிமானத்தோடு ஆறுதல் கூறினாரா?
இன்றைக்கு இந்தியா முழுவதும் பிரதமர் மோடி யார் என்று தெரிந்துவிட்டது. என் குடும்பம், இந்திய மக்களே என் குடும்பம் என்று சொல்கிறாரே, இந்திய மக்கள் இவருடைய குடும்பம் என்று நினைத்திருந்தால், திருநெல்வேலிக்குச் சென்றாரே, மழை, புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண நிதி கொடுக்க வேண்டாம்; அவர்களைச் சந்தித்து மனிதாபிமானத்தோடு ஆறுதல் கூறினாரா? தூத்துக்குடியிலிருந்துதானே மற்ற மற்ற இடங்களுக்குப் போனார்.
இன்றைக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துவ தற்கான திட்டங்களை உருவாக்குவதற்குத்தானே இங்கே வந்திருக்கின்றார்கள். இதையெல்லாம் தமிழ் நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்திருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டை அவர்களால் என்றைக்கும் அசைக்க முடியாது என்று தெரியும். தென்னாட்டிலும் அவர் களுக்கு வாய்ப்பு இல்லை. தெலங்கானாவில் அசைத்துப் பார்க்கலாம் என்று நினைத்தார்கள்; அங்கேயும் அவர் களால் முடியவில்லை. கேரளாவை அவர்களால் நினைத் துப் பார்க்க முடியாது. இப்படி எல்லாப் பகுதிகளிலும் அவர்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது.

ஒன்று சேரமாட்டார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டார்கள்!
‘இந்தியா’ கூட்டணியில் உள்ளவர்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டார்கள். ஏனென்றால், கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளில் உள்ள ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் இந்தியா கூட்டணியைப்பற்றி தவறான செய்திகளை வெளியிட்டார்கள்.

தனி நபருக்காக ஒரு விமான நிலையத்திற்குப் பன்னாட்டு தகுதியை வழங்கியது மோடி பா.ஜ.க. அரசு!
அம்பானியின் வீட்டுத் திருமணத்திற்காக, உலக நாடுகளில் உள்ளவர்கள் விமானத்தில் வந்து இறங்குவதற்காக, தனியே ஒரு உத்தரவுப் போட்டு, ஒரு விமான நிலையத்திற்கு (ஜாம்நகர்) பன்னாட் டுத் தகுதியை வழங்கியது ஒன்றிய மோடி அரசு.
ஒரு தனி மனிதருக்காக, கார்ப்பரேட்டுக்காக இப்படி செய்தார்கள் என்றால், இந்த ஆட்சி யாருக்காக நடக்கிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரப்பூர்வமான உதாரணத்தை காட்டவேண் டிய அவசியமில்லை.
இவையெல்லாம் மக்களுக்கு இன்றைக்குப் புரிந்துவிட்டது.

உத்தரப்பிரதேசத்தில் 5 லட்சம் பேர் திரண்ட பொதுக்கூட்டம்!
உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியிடையே சமூகமான உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது; நேற்று முன்தினம் (3-3-2024) பீகாரில் மிகப்பெரிய அளவிற்கு 5 லட்சம் பேர் திரண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மோடியின் கூட்டத்திற்காக பணம் கொடுத்து அழைத்து வருவதுபோன்று, அழைத்து வரப்பட்டக் கூட்டமல்ல அது. ஏனென்றால், பணம் கொடுத்து அழைத்து வருவதற்கு, அவர்களிடம் பணம் கிடையாது.
டில்லியில், ஆம் ஆத்மியும் – காங்கிரசும் கூட்டணி யிடையே உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. அதேபோன்று காஷ்மீரிலும் ஒப்பந்தம் வந்தாயிற்று. மகாராட்டிரத்திலும் இந்தியா கூட்டணியின் உடன்பாடு ஏற்பட்டு
விட்டது.

வெற்றி பெறப் போவது ‘‘இந்தியா” கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது!
37 சதவிகித ஆதரவை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தார் களே, அந்த முறை – வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நடக்காது. வெற்றி பெறப் போவது இந்தியா கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது.
ஆனாலும், ‘‘நாங்கள் வெற்றி பெறுவோம்; எங்களைக் கண்டு பயப்படுகிறார்கள்” என்று பிரதமர் மோடி சொல்கிறார்.

ஓட்டுப் பெட்டி கருத்தரிக்கிறதாம்!
எப்படி வெற்றி பெறுவார்கள்?
ஓட்டுப் பெட்டி கருத்தரிக்கிறதாம். கருத்தரிக்கிற ஓட்டுப் பெட்டி நம்முடைய நாட்டில் இருக்கக் கூடாது.
ஓட்டுப் பெட்டியில் வித்தைகள் காட்டலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதைத் தடுப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம்.
ஊழலை ஒழிப்பதற்காக தேர்தல் பத்திரங்கள் கொண்டு வந்தோம் என்று சொன்னார்கள், சரி. ஆனால், அதனுடைய நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், ‘‘பத்திரமான தேர்தல்” நடைபெறவேண்டும்.
‘‘பத்திரமான தேர்தல்” நடைபெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்றால், நூறு சதவிகிதம் ஒப்புகைச் சீட்டுத் தேர்தல் முறையை நடத்தவேண்டும்.
தேர்தல் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு அடையாளம், இங்கே பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் சொன்னார்கள். 6 ஆம் தேதி பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திர விவரப் பட்டியலை கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன், வாய்தா வாங்கி விட்டார்கள்.
மேடையில் இங்கே மூன்று வழக்குரைஞர்கள் இருக்கிறோம். நானும், திருமாவளவனும் தெருவில் வாதாடுகின்ற வழக்குரைஞர்கள். மூத்த வழக்குரைஞர் விடுதலை உச்சநீதிமன்றத்தில் வாதாடக் கூடியவர். பிரபலமான சட்ட நிபுணராவார்.

நூற்றுக்கு நூறு ஒப்புகைச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தவேண்டும்
எப்படி இருந்தாலும், இன்றைக்கு அவர்களுடைய நோக்கம் என்னவென்றால், ஏதாவது வித்தைகள் நடத்தவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில், கடைசியாக அவர்கள் நம்பக் கூடியது என்னவென்றால், மக்கள் வாக்களித்து நாம் ஆட்சிக்கு வர முடியாது. ஆனாலும், ஆட்சிக்கு வருவோம் என்று ஒரு பிரச்சாரத்தைப் பரப்புகிறார்கள். அதனை எந்த அடிப்படையில் அவர்கள் சொல்கிறார்கள் என்றால், ஓட்டுப் பெட்டியில் வித்தைகளைக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள். அதனை அனுமதிக்க முடியாத அளவிற்கு, நூற்றுக்கு நூறு ஒப்புகைச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தவேண்டும் என்ற ஒரு கருத்தை வலியுறுத்தவேண்டும் என்பதை இந்தக் கூட்டத்தின்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் பத்திரமாக நடக்கவேண்டுமானால், ஒப்புகைச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
உடனடியாக ஒரு வேண்டுகோள் இந்தக் கூட்டத்தின்மூலமாக வைக்கிறோம். தமிழ்நாடு இதற்கு வழிகாட்டவேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் மனு போடவேண்டும்!
இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒவ்வொருவரும் உச்சநீதிமன்றத்தில் மனு போடவேண்டும்; ‘‘இதுபோன்ற பயம் எங்களுக்கு இருக்கிறது; நியாயமான பயம்தான் அது. ஆகவே, ஒப்புகைச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படவேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடவேண்டும்.
உச்சநீதிமன்றம் உடனே உங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கொடுத்துவிடுமா? என்று நீங்கள் கேட்கலாம்.

மிகப்பெரிய மக்கள் இயக்கமாக
ஆகவேண்டும்!
சாதகமோ, பாதகமோ தீர்ப்பளிக்கவேண்டியது உச்சநீதிமன்றம். ஆனால், இந்தியா முழுவதும் உள்ள மக்களை முன்கூட்டியே எச்சரிக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக ஆகவேண்டும்.
விஷமம் செய்கின்ற அதிகாரிகளுக்கு அச்சம் வரும். ஏனென்றால், சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில், தேர்தல் அதிகாரி செய்த வேலை என்னவென்று உங்களுக்கெல்லாம் தெரியும். அப்படி முரண்பாடு செய்த தேர்தல் அதிகாரியின்மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்ற சூழ்நிலை வந்தாயிற்று.
ஆகவே, இந்த முறை அவர்களுக்குத் துணை போக முடியாது என்ற எண்ணத்தை அதிகாரிகளுக்கு உண்டாக்கவேண்டும்.

பொதுமக்களை ஆயத்தப்படுகின்ற
ஓர் எச்சரிக்கை மணி!
எனவேதான், உளவியல் ரீதியான ஒரு சட்டப் போர்; உ,ளவியல் ரீதியான கருத்து – பொதுமக்களை ஆயத்தப்படுகின்ற ஓர் எச்சரிக்கை மணி!
ஆகவேதான், தேர்தல் பத்திரத்தைப்பற்றி கருத்துச் சொன்ன நீங்கள், பத்திரமான தேர்தல் நடத்துவதற்கு நம்மால் முடிந்த அளவிற்கு அத்தனையையும் செய்யவேண்டும். அது இங்கிருந்து கிளம்பட்டும். தமிழ்நாடு வழிகாட்டட்டும்!

மக்களுக்கு அறிவுறுத்துவோம்,
வெற்றி பெறுவோம்!
ஒரு போர் நடைபெறுகின்ற நேரத்தில், வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கையோடு நாம் நடைபோடவேண்டும். வெற்றியா? தோல்வியா? என்பதைப்பற்றிக் கவலையில்லை. மக்களுக்கு அறிவுறுத்துவோம், வெற்றி பெறுவோம்!
வளர்க ஜனநாயகம்!
ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!
சமூகநீதியைப் பாதுகாப்போம்!
மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம்!
தேர்தலை அதற்கு ஓர் ஆயத்தமாக, ஒரு கருவியாக நாம் பயன்படுத்துவோம்!

பொது ஒழுக்கச் சிதைவை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்
ஒழுக்கத்தைக் காப்பாற்றுவோம் – பொது ஒழுக்கச் சிதைவை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்பதுதான் இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம்.
வந்திருந்த அனைவருக்கும் நன்றி!
வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment