அன்னை மணியம்மையார் ஆனந்தக் களிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

அன்னை மணியம்மையார் ஆனந்தக் களிப்பு!

அன்னை மணியம்மையார் ஆனந்தக் களிப்பு!
(புரட்சிக் கவிஞரின் “தலைவாரிப் பூச்சூட்டி உன்னை” பாடல் மெட்டு)

தன்னலம் போற்றாத வாய்மை! – எங்கள்
தந்தையின் வாழ்வினை நீட்டிய தாய்மை!
இன்னல் படர்ந்தாலுந் தன்னைத் – தந்து
இயக்கத்தைக் காத்தபெண் சிங்கம்மணி யம்மை!

தந்தை பெரியாரின் பின்னே – வந்து
தாயென்றே காத்தாரே கழகத்தை நன்றே!
சிந்தையெல்லாம் கொள்கை ஒன்றே! – அன்னை
சீர்மிகச் சேர்த்தாரே இனப்பகை வென்றே!

இளமைக் கனவெல்லாந் துறந்து – இந்த
இயக்கத்திற் களித்தாரே தன்னை உவந்து!
கழகத்தின் களமெல்லாம் அடர்ந்து – பொங்கிக்
கனலுமிழ்ந் தார்த்தாரே மணியம்மை சுடர்ந்து!

வீர மணிசெய்த கொல்லர்! – அதை
வீரிய ஒலிகுன்றாப் படிசெய்த வல்லர்!
காரிய மெனவந்தால் மல்லர்! – எங்கள்
கருஞ்சேனைத் தலைநின்று போரிட்ட வில்லர்!

வேதியத்தின் சனாதன வேரைக் – கொய்ய
வீதிவந்து தமிழணங்காய்ச் செய்தாரே போரை!
சாதியற்ற சமநிலமாய் ஊரை – மாற்றச்
சலியாதே ஓட்டினாரே பகுத்தறிவுத் தேரை!

இராமலீ லாவெனுங் கூத்து! – அதில்
இராவண வேந்தன்சீர் பாழ்படல் பார்த்துத்
திராவிடத் தாயென ஆர்த்துப் – பொம்மை
இராமன்மேல் தீயிட்டார் தரையினில் சாய்த்து!

தந்தையென் றெழுதிடல் நிறுத்து! – சொன்னார்
தரங்கெட்ட தணிக்கையர் உண்டு கொழுத்து!
வந்தேறி மிரட்டலை எதிர்த்து – அன்னை
வழமையைத் தொடர்ந்தாரே தந்தையென் றழைத்து!

அன்னை மணியம்மை வாழ்க! – எம்மை
ஆளாக்கி ஆதரித்த அருமைத்தாய் வாழ்க!
பெண்மைத் திடமுரைத்தார் வாழ்க! – எம்மைப்
பேணுதற்காய்ப் பிறப்புற்றார் சீரென்றும் வாழ்க!

– செல்வ மீனாட்சி சுந்தரம்

No comments:

Post a Comment