இந்தியா கூட்டணி ஆட்சிதான் டில்லியில் - கலைஞரின் அடுத்த பிறந்த நாளை வரும் ஜூன் 3 இல் டில்லியில் வெற்றி விழாவாகக் கொண்டாடுவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 2, 2024

இந்தியா கூட்டணி ஆட்சிதான் டில்லியில் - கலைஞரின் அடுத்த பிறந்த நாளை வரும் ஜூன் 3 இல் டில்லியில் வெற்றி விழாவாகக் கொண்டாடுவோம்!

featured image

* கலைஞர் சிலை வெறும் உருவமல்ல! எதிர்ப்பிலே எதிர்நீச்சல் போட்ட தத்துவம்!

* 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் சாதனைகள் எல்லாம் வேதனைகள்தாம்!

* விவசாயிகள் தலைநகர் டில்லியிலே மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகிறார்கள் – கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றவில்லை மோடி அரசு
* விவசாயிகளுக்குத் துரோகம் செய்பவர்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை!

* தமிழ்நாட்டிலோ சொன்னதை மட்டுமல்ல – சொல்லாததையும் சேர்த்து மக்கள் நலத் திட்டங்களை வாரி வழங்குகிறது
‘திராவிட மாடல்’ அரசு! * பிரதமர் மோடி மீண்டும் வரமாட்டார் – மீண்டு வரவும் மாட்டார்!

மணப்பாறையில் கலைஞர் சிலையைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் முழக்கம்!
மணப்பாறை, மார்ச் 2 கடந்த 10 ஆண்டுகளாக இந்தி யாவை ஆளும் மோடி தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி, கொடுத்த எந்த வாக்கையும் காப்பாற்றவில்லை. டில்லி தலைநகரிலேயே பல மாநில விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர். ஆனால், ஒன்றிய அரசோ, அவர் களுக்கு முன்னால் துப்பாக்கியை நீட்டுகிறது – பலரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். விவசாயிகளை வஞ்சிப்பவர்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.. பிரதமர் மோடி மீண்டும் வரமாட்டார் – மீண்டு வரவும் மாட்டார். வரும் தேர்தலில் வெற்றி பெறப் போவது இந்தியா கூட்டணி ஆட்சிதான். அதன் வெற்றி விழா வினை – கலைஞரின் அடுத்த பிறந்த நாள் விழாவை வரும் ஜூன் 3 ஆம் தேதி இந்தியா கூட்டணி வெற்றி விழாவாகக் கொண்டாடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நூற்றாண்டு விழா நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு!
நேற்று (2-3-2024) மாலை மணப்பாறையில் நூற்றாண்டு விழா நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:

இந்தியாவே, திராவிட இந்தியாவாக
மாறப் போகிறது!
‘‘வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்று
உடலினால் பலராய்க் காண்பார்”
என்ற சொல்லுக்கு இணங்க, இந்த மணப்பாறை இன்றைக்கு ஒரு புதிய வரலாற்றைப் பெற்றிருக்கிறது – பெருமையோடு அமைத்திருக்கிறது. இன்றைய விழா நம்முடைய இந்தியாவினுடைய ஒப்பற்ற முதலமைச்ச ராகத் திகழ்ந்து, தமிழ்நாட்டை மட்டும் ஆண்டுகொண் டிருக்கக் கூடிய திராவிடத்திற்கு இல்லை – இந்தியாவே, ‘திராவிட மாடல்’ இந்தியாவாக மாறப் போகிறது என்று சொல்லக்கூடிய அளவில், ஒரு பெரிய திருப்பத்தை உருவாக்கக்கூடிய நம்முடைய ஆற்றல் வாய்ந்த முதலமைச்சர் அவர்களுடைய பிறந்த நாள் விழா என்ற பெருவிழா – திருவிழா – அதில் கலைஞர் சிலை திறப்பு விழா என்ற பெருமையோடு நம்முடைய மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் முன்னி லையில் விழா சிறப்புற நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது.

பள்ளிக் கல்வித் துறைக்காக 44 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது!
இந்த ஆண்டு எவ்வளவு நிதிநிலை நெருக்கடி இருந் தாலும்கூட, ஒன்றிய அரசு, மோடி பா.ஜ.க. அரசு எத்த னையோ வித்தைகளை செய்தாலும்கூட, அவ்வளவை யும் தாண்டி நம்முடைய முதலமைச்சரின் சாதுரியத் தினால், நம்முடைய அமைச்சர் பெருமக்களுடைய ஒத்துழைப்பினால், சிறப்பாக அந்த நிதிநிலை அறிக் கையில், 44 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் அவருடைய துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய பெரு மைக்குரிய அமைச்சர் இங்கே அமர்ந்திருக்கின்றார்.
மற்ற துறைகளுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை. ஆனால், இவருடைய துறைக்கு இவ்வளவு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. எதற்காக? பள்ளிக்கூடத்திற்காக – நம்முடைய பிள்ளைகளுக்காக – எதிர்கால சந்ததிகளுக்காக.
ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்தால், பல சிறைச் சாலைகளை மூடுவதற்குச் சமமாகும்.
அதனால்தான், மனுதர்மத்தில் என்ன எழுதினான் என்றால், எதைக் கொடுத்தாலும், சூத்திரர்களுக்கு, ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். கல்விக் கண்களை குத்தி னார்கள். அதுபோல, பெண்களுக்குப் படிப்பு கூடாது – பெண்கள் படிக்கவே கூடாது என்று சொல்லக்கூடிய ஒரு சமுதாயத்தை மாற்றி, இன்றைக்கு புரட்சி, புதுமை செய்பவர்களுடைய வரிசையைத்தான் மேடையில் அமர்ந்திருக்கின்ற வரிசையில் பார்க்கின்றீர்கள்.

என்னுடைய அன்பான பாராட்டுதல்கள்,
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
சிலையை ஏற்பாடு செய்த நம்முடைய ஒன்றிய பொறுப்பாளர் இராமசாமி போன்றவர்கள், அவரோடு ஒத்துழைக்கக் கூடியவர்கள்; அதேபோல, இந்த மேடை யில் இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய அன்பான பாராட்டுதல்கள், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
மணப்பாறை என்று சொன்னாலே, இயக்கத்திற்கு ஒரு பெரிய கடப்பாரை மாதிரி இருக்கக்கூடிய பலமான ஒரு பகுதி.
ஒரு காலத்தில் கலைஞருக்கே எதிர்ப்புக் காட்டிய ஒரு பகுதி இது. நம்முடைய இயக்கம் எதிர்ப்பிலே வளர்ந்த ஒரு இயக்கம். அப்படிப்பட்ட இந்த இயக்கத் திலே, இன்றைக்கு நாம் வென்றிருக்கின்றோம்; நாளைக் கும் இந்தியா முழுவதும் வெல்ல இருக்கிறோம்.

‘‘திராவிடம் வெல்லும் – நாளைய வரலாறு
அதை சொல்லும்!”
‘‘திராவிடம் வெல்லும் – நாளைய வரலாறு அதை சொல்லும்” என்று காட்டக்கூடிய அளவிலே இன்றைக்கு இருப்பதற்கு அடையாளம்தான், இங்கே கம்பீரமாக கையைக் காட்டிக்கொண்டு நிற்கிறாரே, நம்முடைய வீரமிக்க மாண்புமிகு மானமிகு கலைஞர் அவர்கள்.
கலைஞர் அவர்களுடைய பெருமையை இங்கு இன்றைக்கு வந்திருக்கக் கூடிய சகோதரிகள், தாய்மார் கள் எல்லோரும் அறிந்து, தெரிந்திருக்கின்றீர்கள். உங் கள் அனைவருக்கும் வாழ்த்துகள், வணக்கம் தெரிவிக் கின்றோம்!

கலைஞருடைய சிலை என்பது வெறும் உருவம் மட்டுமல்ல -எதிர்ப்பிலே நீச்சல் அடித்த தத்துவம்!
கலைஞருடைய சிலை என்பது வெறும் உருவம் மட்டுமல்ல – மிகப்பெரிய தத்துவம் – எதிர்ப்பிலே நீச்சல் அடித்த தத்துவம்.
உங்களுக்கு எந்தவிதமான துன்பங்கள், தொல்லை கள் வந்தாலும்கூட, இந்த சிலையைப் பார்க்கவேண்டும்.
வரிசையாகப் பார்த்துக் கொண்டே வாருங்கள் – அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் – எதிர்நீச்சல் அடித்தே பழக்கப்பட்டவர்கள்.
அதுபோலவே, எந்த நிலையிலும் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் அறிஞர் அண்ணா அவர்கள்.
அதுபோலவே, இவர்களிடத்தில் பயின்று, ஈரோட்டு குருகுலத்தில் பயின்றவர் நம்முடைய அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய – இன்றைக்குச் சிலையாகவும், சீலமாகவும் இருக்கக்கூடிய கலைஞர் அவர்கள்.
இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே வந்தால், அந்தப் பாராட்டிலேதான் இந்த சிலையினுடைய தத்துவம் அடங்கியிருக்கிறது.

 

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!
சிலை திறப்பு விழாவிற்கு மார்ச் ஒன்றாம் தேதியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் – ‘‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பது”போன்று.
பள்ளிக்கல்வித் துறையில், பள்ளிகளில் எப்படி கெட்டிக்காரத்தனமாக எல்லா வகைகளிலும் ஆசிரியர் களைப் பயன்படுத்துகிறார்களோ, அதேபோலத்தான் இன்றைக்கு இந்த விழாவிற்கான வாய்ப்பைக் கொடுத் திருக்கிறார்கள்.
அதற்கு என்னுடைய மகிழ்ச்சி கலந்த நன்றியை, பாராட்டினை அமைச்சர் அவர்களுக்கும், அத்துணை பேருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் அவர்கள் என்னை ஒரு சங்கடத்திற்கு ஆளாக்கியிருக்கிறார்!
இதுவரையில் அவர் என்னை சங்கடப்படுத்தியது இல்லை. இப்பொழுதுதான் என்னை அவர் ஒரு சங்கடத்திற்கு ஆளாக்கியிருக்கிறார். அந்த சங்கடத்தை நான் மறுக்காமல், ஏற்றுக்கொண்டேன்.
என்னுடைய திருமணத்தின்போது, 65 ஆண்டு களுக்கு முன்பு, தாலி இல்லாமல், ஞாயிற்றுக்கிழமை மாலை, கொழுத்த ராகுகாலத்தில் அய்யா – அம்மா ஆகியோர் சேர்ந்து எங்கள் இரண்டு பேருக்கும் மோதிரம் போட்டார்கள்.
தாலி வேண்டாம் என்கிறோமே, மோதிரம் மட்டும் போடவேண்டுமா? என்று நினைத்தோம்.
அய்யா கொடுத்ததினால், மறுப்பு தெரிவிக்காமல், மோதிரம் அணிந்துகொண்டோம்.
தந்தை பெரியார் உரையாற்றுகின்ற கூட்டங்களில், அன்னை மணியம்மையார் அவர்கள் புத்தகம் விற்றுக் கொண்டிருப்பார். அப்பொழுது புதுப்பெண்ணான என்னுடைய துணைவியாரும் அவரோடு இருப்பார்.
மோதிரம் அணிந்து ஒரு வாரம்கூட ஆகவில்லை. அந்த மோதிரம் கொஞ்சம் தளர்ச்சியாக இருந்ததினால், காரைக்காலில் புத்தகம் விற்கும்பொழுது, எங்கோ விழுந்துவிட்டது.
அய்யா அவர்கள், அதனைத் தேடச்சொன்னார்கள். என்னுடைய கையில் அவர்கள் அணிவித்த மோதிரம் இருந்தது. நான் எந்தவிதமான நகைகளையும் அணிய விருப்பப்படாதவன். அந்த நிகழ்வு எனக்கு வசதியாகப் போனதால், என்னுடைய துணைவியார் கைகளில் மோதிரம் இல்லையே என்று சொல்லி, என்னுடைய கைகளில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டேன்.

அமைச்சரோடு சேர்ந்து மணப்பாறை தோழர்கள், சிறைப்பிடித்ததுபோன்று,
என்னை ஆளாக்கிவிட்டார்கள்!
அன்றைக்கு நான் கழற்றிய மோதிரத்தை, என் றைக்குமே நான் போட்டது கிடையாது. ஒரு சின்ன நகை யைக்கூட நான் அணிவதில்லை. ஆனால், இன்றைக்கு நம்முடைய அமைச்சர் அவர்களோடு சேர்ந்து மணப்பாறை தோழர்கள், சிறைப்பிடித்ததுபோன்று, என்னை ஆளாக்கிவிட்டார்கள்.
இங்கே இருப்பவர்கள் எல்லாம் மூன்றாவது தலை முறை. அமைச்சர் அவர்களுடைய தாத்தா அன்பில் அவர்கள், தந்தை பெரியாரின் செல்லப் பிள்ளை – திராவிட இயக்கத்தின் நல்ல பிள்ளை.
இன்னுங்கேட்டால், பெரியார் அவருக்கு வைத்த பெயர் ‘‘சர்வ கட்சிப் பிரமுகர்” என்பதுதான். கட்சியைத் தாண்டி பொதுவாகவும் இருக்கக்கூடியவர்.

அண்ணா, கலைஞருக்கு மோதிரம் போட்டார் என்ற வரலாறெல்லாம் உண்டு.
கலைஞருக்கு ஏன் சிலை திறந்திருக்கின்றோம்?
அதைவிட நமக்குக் களமாடுவதுதான் மிகவும் முக்கியம். இன்றைக்குச் சிலையாக இருக்கின்ற நம்மு டைய கலைஞருக்கு ஏன் சிலை திறந்திருக்கின்றோம்?
இங்கே தாய்மார்கள் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். இன்னுங்கேட்டால், 33 சதவிகித இட ஒதுக்கீடுகூட நாடா ளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ நிறைவேற்றப்பட வில்லை. வழக்கம்போல மோடி வித்தை காட்டுவார்.

பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் என்றைக்கு நடைமுறைக்கு வரும் என்றே தெரியாது!
அப்படி அவர் காட்டிய வித்தைகளில் ஒன்றுதான், நாடாளுமன்றத்தைத் திடீரென்று கூட்டி, நாங்கள் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை மீண்டும் புதுப்பிக்கிறோம் என்று சொன்னார். ஆனால், அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதே தவிர, மனுதர்ம முறைப்படி, கடைசி வரையில் என்ன சொன்னார்கள் என்றால், அந்த சட்டம் எப்பொழுது செயலுக்கு வரும் என்றால், தெரியாது என்ற பதில்தான் அதற்கு.
ஒரு திரைப்படத்தில் சொல்வது போன்று ‘‘வரும், ஆனால், வராது” என்பதுபோல.
பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதே, அது எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் என்று யாராவது கேட்டுப் பாருங்களேன்.
அதற்குப் பதில் இல்லை!
மோடியின் பா.ஜ.க.வோடு கூட்டணி சேருவதற்கு யாரும் தயாராக இல்லை. அங்கே கூட்டணி, பெரிய பூட்டணியாக இருக்கிறது. பெரிய பூட்டாகப் போட்டிருக் கிறார்கள். ‘‘கதவு திறந்திருக்கிறது, கதவு திறந்திருக்கிறது – வாங்க, வாங்க” என்று சொல்கிறார்கள். கொஞ்ச நாள் கழித்து, திறந்த கதவைக் கழற்றியே வைத்துவிட்டார்கள். கழற்றி வைத்த பிறகும், அங்கே போவதற்கு யாரும் தயாராக இல்லை என்ற ஆத்திரத்தைத் தாங்க அவரால் முடியவில்லை.

பிரதமர் மோடி கோபத்தின் உச்சிக்குச் சென்று ‘‘தி.மு.க. காணாமல் போய்விடும்‘’ என்கிறார்!
நம்முடைய அமைச்சர் உரையாற்றியபொழுது சொன்னாரே, தமிழ்நாட்டிற்கு ஏன் அடிக்கடி மோடி வருகிறார் என்றால், அவருக்கு ஏற்பட்ட கோபத்தினால் தான் – ‘‘தி.மு.க. காணாமல் போய்விடும்” என்று சொல்லியிருக்கிறார்.

‘‘தி.மு.க. காணாமல் போய்விடும்‘’ என்று!
மோடி அவர்களே, உங்கள் வரலாற்றை மறந்து விட்டீர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வயது என்ன? திராவிடர் கழகத்தினுடைய வயது என்ன? அதற்கு முன்னோடியாக இருக்கக்கூடிய இயக்கத்தினுடைய வயது என்ன? இவற்றிற்கெல்லாம் முன்னால் இருக்கின்ற காங்கிரஸ் கட்சியினுடைய வயது என்ன? பி.ஜே.பி.யினுடைய வயது என்ன?
பி.ஜே.பி. தொடங்கப்பட்டதே 1980 ஆம் ஆண்டு தான். திராவிட முன்னேற்றக் கழகம், அய்யாவினுடைய இயக்கத்திலிருந்து பிரிந்தது என்று சொன்னாலும், அவர்கள் சொல்லியதுபோல இரட்டைக் குழல் துப்பாக்கி. இந்த இரட்டைக் குழல் துப்பாக்கியில், ஒரு குழல் 1949 இல் பிரிந்தது.
எனவே, 74 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, மிகப்பெரிய எதிர்ப்புகளையெல்லாம் சந்தித்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தைக் காணாமல் போகச் செய்வதற்கு எந்தக் கொம்பனாலும் முடியாது. அதற்குத்தான் கலைஞர் அவர்கள் இங்கே சிலையாக இருக்கிறார்.

அன்றைக்குப் பிடித்த கைகள், இன்றும், என்றும் பிடித்த கைகளாகவே இருக்கின்றன!
நெருக்கடி காலத்தில், நாங்கள் எல்லாம் மிசா கைதி களாக சிறைச்சாலையில் இருந்தோம். இன்றைய முதல மைச்சர் அவர்களை அடித்து, ரத்தம் சொட்டச் சொட்ட, இரவு 12 மணிக்குசென்னை மத்திய சிறைச்சாலையில் தள்ளியபொழுது, மேலே வந்து விழுந்தார். யார் விழுந்தது என்று தெரியாது, ஏனென்றால், இருட்டு.
யார் என்று கேட்டபொழுது, ‘‘ஸ்டாலின்” என்றார்.
‘‘வாங்க தம்பி, வாங்க” என்று சொல்லி, அவர் கைகளைப் பிடித்து, ‘தைரியமாக இருங்கள்’ என்றேன்.
அன்றைக்குப் பிடித்த கைகள், இன்றும், என்றும் பிடித்த கைகளாகவே இருக்கின்றன.
அந்த நேரத்தில், வடநாட்டு அமைச்சர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள் தெரியுமா?

‘‘இனிமேல் தி.மு.க இருக்காது” என்று சொன்னவர்கள்தான் இன்றைக்கு இல்லை!
‘‘இனிமேல் தி.மு.க. இருக்காது; இனிமேல் தி.மு.க இருக்காது” என்று சொன்னார்கள். ஆனால், அப்படி சொன்னவர்கள்தான் இன்றைக்கு இல்லை. அதை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அப்படி சொன்ன வர்களைக் காணவில்லை.
இன்றைய இளைஞர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும் – நாங்கள் எல்லாம் மிசா கைதிகளாக சிறைச்சாலையில் இருந்தபொழுது, செய்தியாளர்கள் கலைஞரிடம், ‘‘உங்கள் ஆட்சியை ஏன் கலைத்தார்கள் தெரியுமா? உங்கள் மகன், உங்கள் இயக்கத் தோழர்களை, உங்கள் இயக்கத்தை ஆதரித்தவர்கள் எல்லோரையும் மிசா கைதிகளாக சிறைச்சாலையில் வைத்திருக்கிறார்கள்; அவர்கள் வெளியே வருவார்களா என்கிற உத்தரவாதம் கிடையாது. அதற்கு என்ன காரணம் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
‘‘என்ன காரணம்? நீங்களே சொல்லுங்களேன்” என்று அமைதியாகக் கேட்டார் கலைஞர் அவர்கள்.
செய்தியாளர்கள் சொன்னார்கள், ‘‘டில்லியிலிருந்து வந்தவர்கள், உங்கள் மேல் என்ன குற்றச்சாட்டு சொல்கிறார்கள் என்றால், ‘‘தேசிய நீரோட்டத்தில் கலக்க வில்லையாம்” – அதனால்தான், உங்கள் இயக்கத்துக்காரர் களையெல்லாம் மிசா சட்டத்தில் கைது செய்திருக் கிறார்கள். இதற்கு உங்களுடைய பதில் என்ன?” என்று கேட்டனர்.

‘‘நான் ஈரோடு போனவன்; ஒருபோதும் நீரோடு போகமாட்டேன்’’ என்றார் கலைஞர்!
நம்முடைய கலைஞர் அவர்கள், ஈரோட்டுக் குருலத் தில் பயின்றவர், பதறாமல் அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார், ‘‘நான் ஈரோடு போனவன்; ஒருபோதும் நீரோடு போகமாட்டேன்” என்றார்.

திராவிட முன்னேற்றக் கழகம்தான் ‘இந்தியா கூட்டணி’ உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது!
இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது; அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்போம் என்று அன்றைக்குத் துணிச்சலாக சொன்னபொழுது, அன்றைக்கு மிரட்டியவர்கள்கூட, கலைஞர் பக்கம்தான் இன்றைக்கு வந்து நிற்கிறார்கள். கலைஞர்தான் அந்தக் கட்சிக்கு, இயக்கத்திற்கு மிகப்பெரிய அளவிற்கு ஆதரவு குரல் காட்டினார். திராவிட முன்னேற்றக் கழகம்தான், இன்றைக்கு அனைவரையும் அரவணைத்து, ‘இந்தியா கூட்டணி’ உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது.
பிரதமர் மோடிக்கு ஏன் அந்த அளவிற்குக் கோபம் வருகிறது என்றால் நண்பர்களே, பெரிய அளவிற்கு எதிர்பார்த்து இங்கே வந்தார். இங்கே வந்தவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால், அவருக்குக் கோபம் ஏற்பட்டுத்தான் தி.மு.க. காணாமல் போகும் என்று சொல்லியிருக்கிறார்.
இங்கே ஓர் அரைவேக்காடு சொன்னார், ‘‘எல்லாமே பேசி முடித்தாகிவிட்டது; நீங்கள் வந்து உங்கள் முன்னிலையில் கையெழுத்துப் போடவேண்டியதுதான் பாக்கி; எல்லா கட்சிக்காரர்களும் நம் பின்னால்தான் இருக்கிறார்கள்” என்று.
ஆனால், அவர் நினைத்தபடி, ஒருவரும் வர வில்லையே என்ற கோபம்தான் அவருக்கு.
தமிழ்நாட்டில் அவர்களுக்குக் கதவு சாத்தப்பட்டது மட்டுமல்ல; இங்கே மட்டுமல்ல, தென்னாட்டிலேயே அவர்களுக்குக் கதவு சாத்தப்பட்டு விட்டது.

முப்பெரும் சாதனைகளைச் செய்த
அறிஞர் அண்ணா!
இதற்கெல்லாம் அடித்தளமிட்டவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள். அதற்குத் திட்டமிட்டு, அண்ணா அவர்கள் முப்பெரும் சாதனைகளைச் செய்தார், ஓராண்டு கால ஆட்சியில்.
தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர்.
அதற்கு அடுத்தபடியாக, சுயமரியாதைத் திருமணங் கள் சட்டப்படி செல்லும்.
தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை என்று சொல்லி இருமொழிக் கொள்கைதான் என்றாக்கினார்.
அந்த முப்பெரும் சாதனைகளில் யாராலும் கைவைக்க முடியவில்லை.
அண்ணா அவர்கள் உடல்நலக் குறைவாக இருக்கும் பொழுது சொன்னார், கலைஞர் உள்பட நாங்கள் எல் லோரும் இருந்தோம். ‘‘நான் வெளிநாட்டில் இருந்த பொழுது ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டேன்; இந்த ஓராண்டில் மூன்று சாதனைகளை செய்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அந்தக் கோபத்தில், டில்லியில் இருப்பவர்கள், ஆட்சியைக் கலைக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். உங்களால் முடியுமா? என்று நான் கேட்கமாட்டேன்.

அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான்; தி.மு.க.தான் இந்த நாட்டை ஆளுகிறது!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளவற்றைப் பயன்படுத்தி நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்ய லாம்; ஏனென்றால், உங்கள் கைகளில் அதிகாரம் இருக்கிறது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் ஆட்சியில் வந்து அமர்வீர்கள் அல்லவா – அந்த நேரத்தில், நாங்கள் கொண்டு வந்த முப்பெரும் சாதனை களை மாற்றலாம் என்று நீங்கள் முயற்சி செய்வீர் களேயானால், தமிழ்நாட்டு மக்கள் முன் நம்மால் நடமாட முடியுமா? என்கிற ஓர் அச்சம், பயம் உங்களுக்கு இருக்கும். அந்த அச்சம் எவ்வளவு நாள்கள் உங்களுக்கு இருக்கிறதோ, அவ்வளவு நாளும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான்; தி.மு.க.தான் இந்த நாட்டை ஆளுகிறது என்று அதற்குப் பொருள்” என்று அறிஞர் அண்ணா சொன்னார்.
அதை நிரூபித்துக் காட்டியவர், இன்றைக்கு சிலையாக இங்கே இருக்கக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

உதயநிதி போன்றோர் அடுத்த தலைமுறையினர் இன்றைக்குத் தயாராகிவிட்டனர்!

தி.க.வும் – தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொன்னார்கள். துப்பாக்கியையும் தாண்டி, பீரங்கி போன்றவர் நம்முடைய மு.க.ஸ்டாலின் அவர்கள். அவரையும் தாண்டியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி அவர்கள். நாங்கள் எல்லாம் பல மணிநேரம் சொல்லு கின்ற விளக்கத்தை, ஒரே ஒரு செங்கல்லை எடுத்துக் காட்டி, அதனை ஒரு சில நிமிடங்களில் விளக்கிக் காட்டுகின்ற உதயநிதி போன்றோர் அடுத்த தலை முறையினர் இன்றைக்குத் தயாராகிவிட்டனர் – மகேஸ் பொய்யாமொழி போன்றவர்கள் தயாராகிவிட்டனர்.
ஆகவேதான், நீங்கள் தோண்டத் தோண்ட நீர் வந்துகொண்டே இருக்கும். இது ஊற்று, இந்த ஊற்றை உங்களால் தடுக்கவே முடியாது.
தாய்மார்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்ற காலகட்டம், என்றைக்காவது தமிழ்நாட்டு வரலாற்றில் உண்டா?
தாய்மார்கள் இங்கே ஏராளமாக வந்திருக்கிறீர்கள். இந்தத் தாய்மார்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்ற காலகட்டம், என்றைக்காவது தமிழ்நாட்டு வரலாற்றில் உண்டா?

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு? என்று கேட்டார்கள். அதுதான் மனுதர்மம்.
மோடி மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார் என்றால், பெண்களுக்கு கல்வி கற்கின்ற அந்த வாய்ப்பைக் கொடுக்கமாட்டார்.
அதனால்தான் கலைஞர் அவர்கள், ஊதுகின்ற அடுப்பே வேண்டாம்; திருகியதும் எரிகின்ற அடுப்பு களைத் தாய்மார்களுக்குக் கொடுத்தார்.
ஊதாங்குழல் என்றால் என்னவென்று இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரியாது!
இன்றைய தாய்மார்களிடம் நான் கேட்கிறேன், ‘‘இன் றைக்கு எந்த வீட்டிலாவது ஊதாங்குழல் இருக்கிறதா?” ஊதாங்குழல் என்றால் என்னவென்று இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரியாது.
அதற்கு முன்பு, கணவனுக்கும்- மனைவிக்கும் சண்டை வந்தால், ஊதாங்குழலை எடுப்பார்கள். அது போன்ற வாய்ப்புகள் எல்லாம் இப்பொழுது கிடையாது.காரணம், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒப்பற்ற ஆட்சி, திராவிடத்தினுடைய ஆட்சி அதனை மாற்றிக் காட்டியிருக்கிறது.

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் சுயமரியாதை முதல் மாகாண மாநாடு
1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாடு நடைபெற்றது. என்னைப் போன்றவர்கள், உங்களில் பலர் பிறக்காத காலம். கலைஞர் அவர்கள் பிறந்து 5 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
அந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் போடுகிறார்கள், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை உண்டு; பெண்களும் எல்லா உத்தியோகங்களுக்கும் போகவேண்டும்; பெண்களும் படிக்கவேண்டும் என்று சொல்லி, ஆண் பிள்ளைகளுக்குத்தான் சொத்தில் உரிமை என்று இருப்பதை, பெண் பிள்ளைகளுக்கும் கொடுக்கவேண்டும் என்று தீர்மானமாகப் போடப் பட்டது.
ஏறத்தாழ 95 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் போட்டவர் தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கத்தின் மூலமாக. அன்றைக்கு 5 வயது குழந்தை கலைஞர் அவர்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய அண் ணல் அம்பேத்கர் அவர்கள், பெண்களுக்கும் சொத் துரிமை வேண்டும் என்று முயற்சி செய்தார். அந்த முயற்சியில் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. அவர் பதவியை விட்டே போகக்கூடிய அளவிற்கு ஆரியம் செய்தது.
பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி!
ஆனால், தமிழ்நாட்டில், அண்ணாவிற்கு அடுத்து, கலைஞர் அவர்கள் முதலமைச்சரானவுடன், இந்தியா விற்கே வழிகாட்டக்கூடிய அளவிற்கு, பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி – கலைஞருடைய ஆட்சி.

இன்றைக்கு இங்கே கைகாட்டிக் கொண்டு நிற்கின் றாரே, அன்றைக்கே பெண்களுக்கு சம உரிமை என்று சொன்னவர்தான்.
இங்கே தாய்மார்கள், சகோதரிகள் எல்லாம் அமர்ந்திருப்பதைப் பார்த்து, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் பக்கம் பார்த்தால், ஆண்கள் எல் லாம் நின்று கொண்டிருக்கிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று பெண்கள் நாற்காலியில் அமர முடியுமா? ஆண்கள் விட்டிருப்பார்களா? முடியாது. ஆனால், இன்றைக்கு பெண்களே, நீங்கள் நாற்காலியில் அமரக்கூடாது என்று சொல்லட்டுமே!
பெண்களுக்குத் துணிச்சலைக் கொடுத்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம்!
‘‘நாங்கள் எவ்வளவு காலம் நின்று கொண்டிருந்தோம், கொஞ்ச காலம் ஆண்கள் நிற்கட்டுமே! அதில் என்ன கஷ்டம் அவர்களுக்கு?” என்கிற துணிச்சல் பெண் களுக்கு இருக்கிறது என்றால், அந்தத் துணிச்சலைக் கொடுத்த இயக்கம்தான் திராவிடர் இயக்கம். அந்த இயக்கமே ஒரு கற்கோட்டை என்பதுதான் மிக முக்கியமானது.

ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டு வெறும் 29 பைசாவை தருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு
பெண்களுக்குத் தாய்வீட்டிலிருந்துகூட சீர் வருமோ, வராதோ என்கிற சந்தேகம் இருக்கலாம்; ஆனால், இன்றைக்கு மாதம் பிறந்தவுடன், ஒவ்வொரு குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கிலும் ஆயிரம் ரூபாய் வருகிறது – எவ்வளவோ நிதி நெருக்கடியிலும்! இந்தத் திட்டம் எல்லாம் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான், நம்முடைய தமிழ்நாட்டிலிருந்து ஒரு ரூபாய் வாங்கிக் கொள்ளும் ஒன்றிய அரசு, திருப்பி 29 காசுதான் கொடுக்கிறது.

அப்படிப்பட்ட ஒன்றிய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நாள் நெருங்கிவிட்டது. அதற்குத் தயாராக வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள். அதற்குத் தளபதியாக நிற்கின்றவர்தான் நம்முடைய தளபதி அவர்கள்.
எனவே, அவருடைய சிறப்பான தொண்டு உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
பத்திரிகை, ஊடகங்கள் எல்லாம், ‘‘மீண்டும் மோடி வருவார், மீண்டும் மோடி வருவார்” என்று செய்திகளை வெளியிடுகின்றன.

‘‘மீண்டே’’ வரமாட்டார் மோடி!
‘‘மீண்டும்” மோடி அல்ல; ‘‘மீண்டே” வரமாட்டார் மோடி. இந்த அளவிற்கு எதிர்ப்பு இருக்கின்ற காரணத் தால், அவரால் மீண்டே வர முடியாது. ஏனென்றால், இது ஜோசியமல்ல – நாங்கள் ஒன்றும் ஜோசியத்தை நம்புகிறவர்கள் அல்ல. அறிவுபூர்வமாகச் சொல்பவர்கள் நாங்கள்.

பெரும்பாலான மக்கள் மோடியை –
பா.ஜ.க.வை ஆதரிக்கவில்லை!
இதுவரை இரண்டு முறை ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அதுகூட வித்தைகளினால் வந்திருக் கிறார். அந்த வித்தைகளில்கூட, மக்களிடம் அவர் வாங்கிய ஓட்டுச் சதவிகிதம் என்பது 37 சதவிகிதம்தான். நூறு சதவிகிதத்தில், 37 சதவிகிதம்தான் வாங்கியிருக்கிறார் என்றால், மீதமுள்ள 63 சதவிகித மக்கள், பெரும்பாலான மக்கள் மோடியை ஆதரிக்கவில்லை.
ஆனாலும், நம்முடைய தேர்தல் முறையில், அதிக இடங்களைப் பெற்றவர்கள் என்பதினால், அவர்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார்கள்.
இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலை என்ன? நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு எதிர்ப்பாகத்தான் இருக்கிறார்கள்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? மோடி!
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல் களின் இடையே ஒரு விளம்பரத்தை கொடுக்கிறார்கள். மோடி தோன்றுகிறார்; இவர் எப்பொழுது சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் என்று எல்லோரும் ஆச்சரியத் தோடு பார்த்தால், ‘‘மோடியின் உத்தரவாதம், உத்தர வாதம்” என்று பிரச்சாரம் செய்கிறார்.
‘‘சரி, ஏற்கெனவே கொடுத்த உத்தரவாதத்தை, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா?” என்று மக்கள் கேட்கிறார்கள்.
‘‘வேலையில்லா திண்டாட்டத்தினால் இன்றைக்கு படித்த இளைஞர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக் கிறார்களே, நீங்கள் ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னீர்களே, எப் பொழுது கொடுப்பீர்கள்?” என்று கேட்டால், ‘‘நாங்கள் எப்பொழுது சொன்னோம்?” என்கிறார்.
நீங்கள் அப்படி சொன்னதற்கு ஆதாரம் இருக்கிறதே, என்று சொன்னால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விட்டு, அது ‘‘ஜூம்லா” என்கிறார்.
இதுவரையில் அப்படிப்பட்ட வார்த்தையையே நாம் கேள்விப்பட்டது இல்லை. ஹிந்தி அதற்குத்தான் பயன்படுகிறது.
‘‘ஜூம்லா” என்றால், புரூடா என்று அர்த்தமாம். ஏமாற்றுகிறோம் என்று அர்த்தமாம்!
மோடி கொடுத்த இன்னொரு உறுதிமொழி என்னவென்றால், ஒவ்வொருவரும் வங்கிக் கணக்கைத் திறங்கள்; அந்த வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் பொத்தென்று விழும் என்று சொன்னார்.
நீங்கள் சொன்ன 15 லட்சம் ரூபாய்
என்னாயிற்று?
அதை நம்பி, இருக்கின்ற காசை வைத்து வங்கிக் கணக்கைத் திறந்து, அந்தக் காசையும் திரும்ப வாங்க முடியவில்லையே என்று அவதிப்பட்டுக் கொண்டிருக் கின்றார்கள் மக்கள்.
நீங்கள் சொன்ன 15 லட்சம் ரூபாய் என்னாயிற்று? என்று கேள்வி கேட்கிறார்கள் மக்கள்.
‘‘மோடியின் உத்தரவாதம்” என்று விளம்பரப் படுத்துகிறீர்களே, மூன்றாண்டுகளுக்கு முன்பு டில்லியில் இரவு, பகலாகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் என்ன கேட்டார்கள்?
நாங்கள் விளைவிக்கும் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையைக் கொடுங்கள் என்றுதானே கேட்டார்கள்.
அப்படி அவர்கள் கேட்டவுடன், அவர்கள் போராட்டம் நீடித்தவுடன், ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றார் மோடி.

இவர் கொடுத்த வாக்குறுதியை நம்பி, அன்றைக்கு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தி னார்கள்.
ஆறு விவசாயிகளைக் கொன்று இருக்கிறீர்கள்!
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்மீது போடப் பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவோம் என்று மோடி அரசு சொன்னது. ஆனால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதினால், சில வாரங்களுக்கு முன்பு ‘‘டில்லி சலோ” என்ற முழக்கமிட்டு டில்லியை நோக்கி பஞ்சாப், அரியானா, சண்டிகர் போன்ற மாநிலங் களிலிருந்து வந்த விவசாயிகளைத் தடுப்பதற்காக முள்வேலிகளை அமைத்தும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கொடுமையாக நடந்து, ஆறு விவசாயிகளைக் கொன்று இருக்கிறீர்கள்.
தலைநகரத்திற்குள் விவசாயிகள் வரக்கூடாது என்கிற மக்கள் விரோத ஆட்சி வேறு எங்கேயாவது இருக்க முடியுமா? என்பதை எண்ணிப் பாருங்கள்.

புதுவை – தமிழ்நாடு உள்பட
40-ம் நமதே என்பதைவிட 400-ம் நமதே என்பதுதான் முக்கியம்!
விவசாயிகள் அதனை உணர்ந்துவிட்டார்கள். தென் னாட்டில் ஏற்கெனவே கதவு சாத்தியாகிவிட்டது பா.ஜ.க.விற்கு. ஆந்திராவில் வர முடியாது; தெலங்கானா வில் வர முடியாது; கருநாடகாவில் வர முடியாது; கேரளாவில் வர முடியாது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். புதுவை – தமிழ்நாடு உள்பட 40-ம் நமதே என்பதைவிட 400-ம் நமதே என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு வடநாட்டிலும் தயாராகிவிட்டார்கள்.
‘‘மீண்டும் நாங்கள் வருவோம், நாங்கள் வருவோம்” என்று பா.ஜ.க.வினர் சொல்வதெல்லாம் ஏமாற்று வேலைதான் தோழர்களே!

இந்தியாவிற்கே வழிகாட்டினார்
நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின்!
ஆகவேதான், இந்த நேரத்தில், இங்கே கலைஞர் சிலையைத் திறந்து வைத்திருக்கின்றோம் என்று சொன்னால், அதனுடைய அடையாளத்தை, ஊட்டு கின்ற உணர்வை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
இந்தியாவிற்கே வழிகாட்டினார் நம்முடைய தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.
எப்படியென்றால், எதிர்க்கட்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்தார். பல கட்சிகளாக, பல கருத்துள்ளவர்களாக இருக்கிறார்களே, ஒருவருக்கொரு வர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களே, அவர் கள் எல்லாம் ஒன்று சேர்வார்களா? என்று சொன்ன நேரத்தில்,
‘‘யார் வரவேண்டும் என்பது முக்கியமல்ல; யார் வரக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியம்!’’
நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘யார் வரவேண்டும் என்பது முக்கியமல்ல; யார் வரக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியம்” என்றார்.

நோய்க் கிருமியை அடையாளம் காட்டுவதுதான் மிகவும் முக்கியம். அந்த நோய்க் கிருமியை அழிப்பது தான் அதைவிட மிகவும் முக்கியம்.
ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது என்றால், எல்லோரும் தண்ணீரைக் கொண்டு வந்தோ, மணலைக் கொண்டு வந்தோ அந்தத் தீயை அணைப்பதற்கான முயற்சியை செய்வார்கள். அந்த நேரத்தில் ஒருவர், ‘‘அவர் கருப்புச் சட்டைக்காரர், அவர் தீயை அணைப்பதற்குத் தண்ணீரை ஊற்றக்கூடாது” என்று சொல்வாரா? அல்லது கருப்புச் சட்டைக்காரர் ஒருவர் வந்து, ‘‘அவர் நெற்றியில் நாமம் போட்டிருப்பவர்; ஆகவே, அவர் நெருப்பை அணைப்பதற்குத் தண்ணீர் ஊற்றக்கூடாது” என்று சொல்வாரா?
தீயை அணைக்க யார் வேண்டுமானாலும் வரலாம். தீயை அணைக்கவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.

இந்தியா கூட்டணிதான்
வெற்றி பெறப் போகிறது!
அதுபோல, இன்றைக்கு மதவெறி தீ, ஜாதி வெறி தீ, பதவி வெறி தீயை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது ஒன்றிய மோடி பா.ஜ.க. ஆட்சி. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறப் போகிறது.
கலவரம் ஏற்பட்ட மணிப்பூர் பகுதிக்கு இதுவரையில் பிரதமர் மோடி சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க வேயில்லை.

பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட வராத பிரதமர் மோடி!
ஆனால், தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகின்ற மோடி, இராமேசுவரம் போகிறார், தனுஷ்கோடிக்கு போன்ற மற்ற மற்ற இடங்களுக்கெல்லாம் செல்கிறார். மழை, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களைத் தாண்டித்தான் செல்கிறார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியைக் கொடுக்கவில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ‘‘பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட வராத மரபில்லாத நீங்கள், அவர்களைப் பார்த்து வாக்குக் கேட்பதற்கு என்ன உரிமை இருக்கிறது உங்களுக்கு?” என்கிற உணர்வு இன்றைக்கு இந்தியா முழுவதும் வந்துவிட்டது.
கிழக்கே மணிப்பூர், வடக்கே காஷ்மீரில் தேர்தலே நடத்தவில்லை. அங்கேயும் பிரதமர் மோடியால் செல்ல முடியவில்லை. அங்கேயும் இந்தியா கூட்டணி அமைந் திருக்கிறது. டில்லியில் ஆம் ஆத்மி கெஜ்ரிவாலோடு கூட்டணியை காங்கிரஸ் அமைத்துவிட்டது.
உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவோடு கூட்டணி. மகாராட்டிரத்தில் இந்தியா கூட்டணி அமைத்திருக்கிறது.

‘‘ஸ்டாலின்தான் வராரு,
ஸ்டாலின்தான் வரப் போறாரு!’’
தென்னாட்டில் ஏற்கெனவே இந்தியா கூட்டணி பலமாக அமைந்துவிட்டது. ‘‘ஸ்டாலின்தான் வராரு, ஸ்டாலின்தான் வரப் போறாரு” என்று சொன்னோம். அதேபோன்று இந்தியா கூட்டணிதான் ஒன்றிய ஆட்சிப் பொறுப்புக்கு வரப் போகிறது என்று எல்லோரும் சொல்லுங்கள். இது ஒன்றும் மந்திரமல்ல- இதுதான் நடைமுறை. ஏனென்றால், அவதிப்பட்டவர்களுக்குத் தான் தெரியும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் கொடுமை கள்பற்றி.
இன்றைக்கு நாம்தான் வழிகாட்டுகின்றோம். தமிழ் நாடுதான் வழிகாட்டுகிறது.

ஜூன் மாதம் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாளை டில்லியில் நடத்தப் போவது உறுதி!
ஆகவே நண்பர்களே, இன்றைக்கு மணப்பாறையில் கலைஞர் சிலையைத் திறந்திருக்கின்றோம். நாடாளு மன்றத் தேர்தல் முடிந்து, இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஒன்றியத்தில், இந்தியா கூட்டணி ஆட்சி மே மாதம் வரப் போகிறது. ஜூன் மாதம் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாளை டில்லியில் நடத்தப் போவது உறுதி!
காரணம் என்ன?
மக்களுக்குத் தெரியும். ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் கொடுமைகளால் மக்கள் கொதித்துப் போயிருக்கின் றார்கள்.
‘‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை”

விவசாயிகளை எதிர்த்த ஆட்சி என்றைக்கும் நிலைத்தது கிடையாது. ஆனால், விவசாயிகளை நீங்கள் இன்றைக்கு எதிர்த்திருக்கிறீர்கள்; தொழிலாளர்களை அழித்திருக்கின்றீர்கள். இளைஞர்களுக்கு வேலை இல்லை.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலை?
நீட் தேர்வு என்ற பெயரால், மிகப்பெரிய அளவிற்குக் கொடுமைகள் நடைபெற்று இருக்கின்றன.
திராவிட இயக்கம் இல்லையென்றால், இன்றைக்கு இத்தனை டாக்டர்கள் வந்திருப்பார்களா? நூறு ஆண்டு களுக்கு முன்பு என்ன நிலை?
மருத்துவக் கல்லூரிக்கு மனு போடவேண்டும் என்றாலே, சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும். அதை மாற்றியது திராவிட இயக்கம் அல்லவா!
இன்றைக்குப் பள்ளிக் கல்வியை முடித்து, கல்லூரியில் படிக்கின்ற பெண் பிள்ளைகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய்.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிக்கூடங்களில் சேருவதற்கே ஆட்கள் இல்லை!
தனியார் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளைச் சேர்த் தார்கள் பெரும்பாலான மக்கள். நம்முடைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் புரட்சிகரமான திட்டங்களால், தி.மு.க. அரசினால், இன்றைக்குத் தனியார் பள்ளிக்கூடங் களில் சேருவதற்கே ஆட்கள் இல்லை. அதுபோன்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

காரணம் என்ன?
பள்ளிக்கூடங்களில் பகல் உணவுத் திட்டத்தை திராவிட இயக்கம்தான் தொடங்கியது. அதற்குப் பிறகு கல்வி வள்ளல் காமராசர் கொடுத்தார். அதற்குப் பிறகு, எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்குப் பிறகு கலைஞர் அவர்கள், சத்துணவு என்றால், உண்மையாக சத்துணவாக இருக்கவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? மாணவர்களுக்கு வாரம் தோறும் இரண்டு முட்டைகளைக் கொடுத்தார்.
உடனே சிலர், பார்த்தீர்களா, பார்த்தீர்களா முட்டை யைப் போட்டு சைவ பிள்ளைகளைக் கெடுக்கிறார் என்றார்கள்.
உடனே கலைஞர் அவர்கள் இரண்டு வாழைப் பழங்களைக் கொடுத்தார் அந்தப் பிள்ளைகளுக்கு. அதனால், வாழை விவசாயிகளுக்கு லாபம்.

காலைச் சிற்றுண்டி திட்டத்தைக் கொண்டு வந்தது ‘திராவிட மாடல் ஆட்சி!
அதற்கடுத்ததாக ஆட்சிக்கு வந்த நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இது வரையில் பகல் உணவு, சத்துணவுதான் பள்ளிக்கூடங் களில் கொடுக்கப்பட்டது. ஆனால், காலையில் பிள்ளைகளை சாப்பிட வைத்து அனுப்புவதற்காக பெற்றோர் எவ்வளவு பாடுபட்டு இருப்பீர்கள். அந்தக் கஷ்டம் இனிமேல் உங்களுக்கு வேண்டாம் – காலைச் சிற்றுண்டி திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது ஸ்டாலின் ஆட்சி, தி.மு.க. ஆட்சி, திராவிட ஆட்சி.
ஆகவே, இப்படிப்பட்ட சாதனைகளுக்கு மேல் சாதனை. கடுமையான நிதி நெருக்கடியிலும் இந்த சாதனைகளைச் செய்துகொண்டிருக்கின்ற ஆட்சி ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்!
என்ன ஆனாலும், மக்கள் நலனைப் பேணிக் காக் கின்ற ஆட்சி இது. பெண்கள் நலன், குழந்தைகள் நலன் களைப் பாதுகாக்கக் கூடிய ஆட்சி.

பிரதமர் உரையாற்றும் கூட்டங்களுக்கு
கூலிக்கு ஆட்களை அழைத்து வருகிறார்கள்
அந்த ஆட்சியை எதிர்த்து அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதினால்தான், கூலிக்கு ஆட்களை அழைத்து வருகிறார்கள் அவர்கள் நடத்து கின்ற கூட்டத்திற்கு.
இந்தக் கூட்டத்தில், தமிழ் தெரிந்தவர்கள்தான் இருக் கிறீர்கள். மணப்பாறையைச் சேர்ந்தவர்கள், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள்தான் இங்கே இருக்கிறீர்கள்.
திருப்பூரில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்திற்கு, திருப் பூரில் வெளிமாநிலத்திலிருந்து பணியாற்றக்கூடியவர் களையெல்லாம் விலை கொடுத்து அழைத்து வந்திருக் கிறார்கள். அதனால்தான் மோடி ஹிந்தியில் பேசினார்.
ஆகவேதான், இந்த இயக்கம் என்பது, மக்களுக்காக! எங்களுக்காக அல்ல – ஸ்டாலினுக்காக அல்ல – கலை ஞருக்காக அல்ல – பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக் காக அல்ல – இங்கே இருக்கக்கூடிய திராவிட முன் னேற்றக் கழகத் தோழர்களுக்காக அல்ல – கூட்டணிக் கட்சித் தோழர்களுக்காக அல்ல – உங்களுக்காக – உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நண் பர்களே! அதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்!

காட்சிக்காக அல்ல!
இந்த இனத்தின் மீட்சிக்காக!
ஆட்சி எதற்காக – காட்சிக்காக அல்ல!
இந்த இனத்தின் மீட்சிக்காக!
நம்முடைய மக்களின் உயர்விற்காக – இதையெல்லாம் புரிந்துதான் இங்கே முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையைத் திறந்து வைத்துப் பிரச்சாரம் செய்கிறோம் என்றால், தெளிவாக நினைத்துப் பாருங்கள், ஒன்றியத் தில் இந்தியா கூட்டணி ஆட்சிதான் வரப்போகிறது.
ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி இருந் தால்தான், தென்னாட்டில் கதவை சாத்தமாட்டார்கள்.
அம்பேத்கர் அவர்களால் பெண்களுக்கு சொத் துரிமை தரக்கூடிய சட்டத்தைக் கொண்டு வர முடியாததால், பதவியிலிருந்து விலகினார்; அதை கலைஞர் அவர்கள் செய்தார் என்று சொன்னேன் அல்லவா!

மிகப்பெரிய போர் வீரர்,
எதிர்நீச்சல் வீரர் கலைஞர்!
கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. ஆட்சி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்தபொழுதுதான், பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தி.மு.க. காரணமாக இருந்தது என்பது எப்படி வரலாறோ, அதுபோல, எல்லா திட்டங்களையும் கொண்டு வருவதற்கு, இந்தியா கூட்டணியின் ஆட்சி வெற்றிகரமாக நம்முடைய தலைவர்களுடைய வழிகாட்டுதலில் நடைபெறவிருக் கிறது – அதற்கு அடிக்கல் நாட்டிய மிகப்பெரிய போர் வீரர்தான், எதிர்நீச்சல் வீரர்தான் கலைஞர் அவர்கள். அதனுடைய தொடக்கம்தான் இந்த சிலை திறப்பு விழா!

கலைஞர் இதுவரையில் தோற்றதாக
வரலாறே கிடையாது!
எனவேதான், கலைஞர் இதுவரையில் தோற்றதாக வரலாறே கிடையாது. கலைஞர் நின்ற எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றார். அதுபோல, இங்கே அவருடைய சிலையை திறந்து வைத்திருக் கின்றோம்.
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! உறுதி என்பதைச் சொல்லி, வெள்ளம்போல் திரண்டிருக்கின்ற நீங்கள், உங்களுடைய நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; யாரும் ஏமாந்து விடாதீர்கள்.
வித்தையிலேயே மிகவும் ஆபத்தான வித்தை, வேடிக்கையான வித்தை மோடி வித்தையாகும்.

மோடியின் வித்தை இனிமேல் எங்கும் பலிக்காது என்பது
தெள்ளத் தெளிவாகிவிட்டது!
அந்த மோடி வித்தை எங்கே பலித்தாலும், இங்கே பலிக்காது என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம். இப்பொழுது அவருடைய வித்தை எங்கேயும் பலிக்காது என்பது இந்தியா முழுவதும் தெரிந்துவிட்டது.
இதுதான் இன்றைய பணி!
இவ்வளவு பெரிய நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த உங்களுக்கெல்லாம் நன்றி!

திராவிட இந்தியாவை
உருவாக்க இருக்கின்றோம்!
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென்னாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இன்றைக்குக் கலைஞருடைய தத்துவங்கள், பெரியாருடைய தத்துவங்கள், அண்ணாவினுடைய தத்துவங்கள் இந்தியாவை ஆளப் போகிறது.
வரப் போவது புதிய இந்தியா!
சமதர்ம இந்தியா!
மதச் சார்பற்ற இந்தியா!
திராவிட இந்தியாவை உருவாக்க இருக்கின்றோம். அதுவும் தமிழ்நாட்டிலிருந்துதான் போகவிருக்கிறது.

வெற்றியோடு சந்திப்போம்!
புதிய ஒன்றிய ஆட்சியோடு சந்திப்போம்!
அதற்கு முன்னோட்டம்தான் இந்த கலைஞர் சிறப்பு விழா! சிறப்பாக விழாவிற்கு ஏற்பாடு செய்த தோழர் களுக்கும், சிறப்பாக வரவேற்ற நம்முடைய அமைச்சர் அவர்களுக்கும் நன்றி! நன்றி!!
மீண்டும் சந்திப்போம்!
வெற்றியோடு சந்திப்போம்!!
புதிய ஒன்றிய ஆட்சியோடு சந்திப்போம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment