தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் ஓர வஞ்சனை நிதிநிலை அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 2, 2024

தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் ஓர வஞ்சனை நிதிநிலை அறிக்கை

featured image

தமிழ்நாடு முதலமைச்சர் விமர்சனம்
நாடாளுமன்றம் முன் தி.மு.க. சார்பில் போராட்டம்

சென்னை, பிப்.2 “தமிழ்நாட்டில் மக்கள் நலனை முழுமையாகப் புறக் கணித்து, தமிழ்நாடு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட் டுள்ளது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண் டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனை யும் செய்யாத பாஜக அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடை பெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய் துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த காலச் சாதனைகளையும் இந்த நிதிநிலை அறிக்கை சொல்ல வில்லை; நிகழ்காலப் பிரச்சினை களுக்கு தீர்வு காண்பதாகவும் இது அமையவில்லை; எதிர்காலப் பயன் களுக்கு உத்தரவாதம் தருவதாகவும் இல்லை. மொத்தத்தில், ஏதுமற்ற அறிக்கையை வாசித்தளித்திருக் கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன்.
ஆட்சிக் காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலு கைகளைப் பொதுமக்கள் எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள். பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைக்குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு ஏமாற் றத்தையே பரிசளித்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை. வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இருக்கும் என்று நடுத்தர மக்கள் எதிர் பார்த்தார்கள். அதனையும் வழங்க வில்லை; எந்தப் பொருளுக்கும் வரிக் குறைப்பு வழங்கப்படவில்லை. சலுகைகளும் ஏதுமில்லை; சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. உழவர்களின் மிக முக்கியமான கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு உண்டா? அதுவும் இல்லை. இப்படி ‘இல்லை… இல்லை…’ என்று சொல்வதற்காக எதற்கு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்? நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது ‘இல்லா நிலை’ நிதிநிலை அறிக்கை யாக மட்டுமே அமைந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காணவில்லை. பணவீக்கம் குறையவில்லை. வறுமை ஒழிக்கப் படவில்லை. வேலையில்லாத் திண் டாட்டம் ஒழியவில்லை. ஆனால் இதையெல்லாம் செய்து காட்டி விட்டதாக பொய் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதி யமைச்சர்.
மகளிருக்கு இடஒதுக்கீடு வழங் கப்படவில்லை.

வழங்கிவிட்டதாகத் தங்களுக்கு தாங்களே தோளைத் தட்டிக் கொள்கிறார்கள்.
மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக் கக் குழு அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மக்கள்தொகை குறைந்துவிட்டதைக் காரணம் காட்டி சில மாநிலங்களில் தொகுதி களின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் திட்டத்தின் சூழ்ச்சியாக இக்குழு அமைக்கப்படுகிறதா எனச் சந்தேகம் ஏற்படுகிறது. மக்கள் தொகை குறைந்துவிட்டது என்று சொல்லி, நாடாளுமன்றத் தொகு தியின் எண்ணிக்கையைக் குறைக் கும் அதேவேளையில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்கக் குழு அமைக்கப்படும் என ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு
ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு
நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் மாநிலங் களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய வரிகள் மீது கூடுதல்வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை ஒன்றிய அரசு தொடர்ந்து வசூலித்து வரு கிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை ஒன்றிய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்து வத்துக்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

எய்ம்ஸ் – தமிழ்நாட்டுக்கு
மட்டும் ஓரவஞ்சனை!
இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாகப் புறக் கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட் டுள்ளது என்று நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019ஆ-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே… என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாடு மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாடு மக்கள் இளித்தவா யர்களா? பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?
காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளப் புதிய திட்டங்களை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள் ளார். ஆனால் தமிழ்நாடு அண்மை யில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க இதுவரை எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்பது தமிழ் நாட்டு மக்களையே ஒட்டுமொத்த மாக ஏமாற்றுவதாகும்.

வெள்ளப் பாதிப்பு
மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டு களாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, ‘தீவிர இயற்கைப் பேரிடர்’ (Calamity of severe nature) ஆக அறிவிக்க வேண்டும் என்றும் இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். அது குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. 31 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத் தொகை கேட்டோம். அது குறித்தும் ஏதுமில்லை.
மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டுகாலமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத் துக்கான நிதியை ஒன்றிய அமைச் சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப் படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் உண்மையில் நகர்ப்புறப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருந்தாலும் ஒன்றிய அரசின் பங்கு வெறும் 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே. இதில் மாநில அரசின் பங்கு 7.50 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் நாட்டைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா பற்றி குறிப்பிட்டது மட்டுமின்றி நாட்டில் தற்போது 80 கிராண்ட் மாஸ்டர் நிலை விளையாட்டு வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டி ருக்கிறார். ஆனால் உலகமே வியக் கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியைத் தமிழ் நாட்டில் நடத்தியதை ஒன்றிய நிதியமைச்சர் வசதியாக மறந்தது ஏன்?
“சமூகநீதியை அரசின் கொள் கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறோம். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்” என சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையைச் சரிசம விகிதத்தில் ‘பறிப்பதுதான்’ பாஜக பின்பற்றும் சமூகநீதி ஆகும். சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பாஜக அடைந்திருப் பதைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றும்; ஜூலை மாதம் நாங்கள்தான் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வோம் என்றும் அமைச்சர் சொல்லி இருப்பது உச்சகட்ட நகைச்சுவை. நிதிநிலை அறிக்கையை அரசியல் பேராசை அறிக்கையாக ஆக்கி இருக்கிறார். நிதிநிலை அறிக்கையில் மக்களை ஏமாற்றியது போல, மக்களும் ஏமாற்றத்தை பாஜகவுக்கு வருகிற தேர்தலில் வழங்குவார்கள்.

“புதிய இந்தியாவை இண்டியா கூட்டணி உருவாக்கும்!”
2047-ஆம் ஆண்டு புதிய இந்தியாவைப் படைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள். 2014-ஆம் ஆண்டு முதன்முதலாக நரேந்திர மோடி, பிரதமர் ஆனபோது புதிய இந்தியா பிறந்ததாகச் சொன் னார்கள். 500,1000 ரூபாய் நோட்டு களைத் தடை செய்தபோதும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என் றார்கள். 2019ஆ-ம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததும் புதிய இந்தியா பிறந்தது என்றார்கள். ஆனால் 2024 வரை புதிய இந்தியா பிறக்கவே இல்லை. 2047-ஆம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது என்பதே உண்மை. புதிய இந்தியாவை ‘இண்டியா’ கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.

தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாடு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித் துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் . இந்த நிதிநிலை அறிக் கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக எம்.பி.,கள் நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியார் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment