நேரு, இந்திராவை விமர்சிப்பதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

நேரு, இந்திராவை விமர்சிப்பதா? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடில்லி,பிப்.7- நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற் றினார். ஒன்றாம் தேதி, இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் (5-2-2024) பிற்பகலில், மக்களவையில் பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திரா காந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி கடுமையாகப் பேசினார்.

‘எக்ஸ்’ தள பதிவில்…
இந்தநிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியதாவது:-
மக்களவையில் பிரதமர் மோடி மிகவும் மோசமாக நடந்து கொண் டார். அதேபோல இன்றும் (6-2-2024) மாநிலங்களவையில் அவரது செயல்பாடு இருக்கும். நேருவை அவர் அரசியல் ரீதியாக தாக்கவில்லை. தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளார்.
வாஜ்பாய், அத்வானி போன்ற பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இதுபோன்ற ஒரு வார்த்தையை பயன் படுத்தவில்லை. பிரதமர் மோடி இவ்வாறு செய்ததன் மூலம் அவர் வகிக்கும் பதவியை இழிவுபடுத்தி விட்டார். பிரதமர் மோடி இவ்வாறு பேசியதன்மூலம், தான் ஒரு புத்திசாலி என்று நினைத்துக்கொள்கிறார். உண்மையில் அவர் வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல. பிரதமராக மக்களவையில் மோடி ஆற்றும் கடைசி உரை இதுவாக இருக்கும் என்று இந்திய மக்கள் மற்றும் இளைஞர்கள் முடிவு செய்துவிட்டதாக அதில் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment