தமிழ்நாடு அரசு வரவு-செலவு திட்டம்: தலைவர்கள் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 20, 2024

தமிழ்நாடு அரசு வரவு-செலவு திட்டம்: தலைவர்கள் பாராட்டு

featured image

சென்னை, பிப். 20- தமிழ்நாடு அரசு வரவு-செலவு திட்டம் பற்றி தமிழ்நாடு தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

வைகோ

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் மற்றும் தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக் குகளை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை வழங்கி இருக்கிற நிதி அமைச்ச ருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தியாவின் இரண்டாவது பெரிய பொரு ளாதார பலம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இயற்கைப் பேரிடர், ஒன்றிய அரசின் பாராமுகம், நிதி நெருக்கடி, வளர்ச்சித் திட்டங் களுக்கு நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ஒன்றிய அரசின் கடும் நிபந்தனைகள், ஜிஎஸ்டி வரி வருவாயில் ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி இழப்பு, வருவாய் பற்றாக்குறை ரூபாய் 44 ஆயிரத்து 907 கோடி அளவுக்கு உயர்வு, நிதிப் பற்றாக்குறை ரூபாய் 94,060 கோடியாக அதிகரிப்பு போன்ற கடுமையான சூழ்நிலையி லும் திறன் மிக்க நிதி மேலாண்மை நடவடிக்கை களை மேற்கொண்டு வரும் அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசை பாராட்டி வாழ்த்துகிறேன்.
சமூக நீதிக்கு அடித்தளமாக, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
2024-25 வரவு செலவு திட்ட அறிக்கையில் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கிலோ மீட்டர் கடற்கரை பகுதிகளை மய்யமாகக் கொண்டு நெய்தல் மீட்சி இயக்கம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கு ரூபாய் ஆயிரம் கோடியில் “தொல்குடி” திட்டம், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் “தமிழ்ப் புதல்வன் திட்டம்”, இராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம், புற்றுநோய் மேலாண்மை இயக்கம் போன்ற புதிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை ஆகும்.
“தடைகளை தாண்டி -வளர்ச்சியை நோக்கி” எனும் 2024-2025 நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட் டின் சமச்சீரான வளர்ச்சிக்கும்,“எல்லோருக்கும் எல்லாம்” என்னும் திராவிட இயக்க அடிப்படைக் கோட்பாட்டின் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது. இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ் சமூகத்தின் தொன்மை நல் மரபுகளை முன்னெடுத்து வளர்த்தெடுக்க நிதி நிலை அறிக்கை கவனம் செலுத்தி இருக்கிறது. சிலப்பதி காரம், மணிமேகலை உட்பட தமிழ் இலக்கியங்கள் பிற மொழிகளில் பெயர்த்து வழங்கவும் தொல்லியல் ஆய்வுகளை மேலும் ஆறு மய்யங் களுக்கு விரிவுபடுத்தியிருப்பதும், கீழடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்கும் திட்டம் மற் றும் பழங்குடி மக்கள் மொழிகளை ஆவணப் படுத்தும் திட்டம் போன்றவை சிறப்பானது.

குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, நீர்வளத்துறையில் 5 ஆயிரம் ஏரிகள், குளங்கள் உட்பட காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளும் புனரமைக்கும் திட்டமும், 2 ஆயிரம் மேல்நிலைத் தொட்டி கட்டும் திட்டமும் முக்கியமானது. இடை பாலினத்தவர்களுக்கு கல்வி, விடுதி இலவசமாக வழங்குவதும், கல்லூரி கல்வி செலவை அரசே ஏற்பதும் அவர்களின் சமூக ஒப்புதலுக்கு வழிவகுக்கும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 720 கோடியும் மாணவர்கள் கல்விக் கடன் வழங்குவதும் உயர் கல்வி பெறும் மாண வர்களுக்கு மாதம் ரூ,1000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ் புதல்வன் திட்டமும் வரவேற்கத்தக்கது. ஒன்றிய அரசு கட்டமைப்பில் தமிழர் பங்கேற்பு அதிகரிக்க சிறப்புப் பயிற்சி மய்யங்கள் அமைப்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கைப் பேரிடர் இரண்டு முறை தாக்கிய தால் பெரும் சவாலை சந்தித்த போது, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு ரூபாயும் வழங்காமல் வஞ்சித்து விட்ட பாஜக ஒன்றிய அரசின் பாரபட்ச போக்கை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர், மாநில அரசுகள் கடன் வாங்கும் வரம்புகளில் கடுமையான நிபந்தனைகளை விதித்து நிதித் தாக்குதல் நடத்தி வருகிறது என்பதை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூபாய் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பதாக கூறியுள்ளார்.
வரும் ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என உறுதியளித் துள்ள நிதிநிலை அறிக்கை அரசுத்துறைகளிலும், நிறுவனங்களிலும் பத்தாண்டுகளுக்கும் மேலான ஒப்பந்தத் தொகுப்பூதிய பணியாளர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஆசிரியர், அரசுப் பணியாளர் பழைய ஓய்வூதியம் போன்றவை இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே நீடிக்கிறது. மொத்தத்தில் தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் வளர்ச்சி பெற வேண்டும் என்ற சமூக நீதி கண்ணோட்டம் கொண்ட நிதி நிலை அறிக்கை தடைகள் பலவற்றையும் தாண்டி சாதனை படைக்கும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற் குழு வரவேற்கிறது. – இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,


ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் இயற்கை பேரிடர் இரண்டு முறை தாக்கியும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு தராதது, கடன் வாங்கும் வரம்புகளில் கடுமையான நிபந்த னைகளை விதித்து மாநிலங்களை தவிக்க வைத் துள்ளது, மின்சாரம் உள்ளிட்டு பாரபட்சமான நடவடிக்கைகள் காரணமாக மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாயின. ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு, மாநில அரசுகளின் வருமானம் குறைந்து – செலவி னங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை உருவாக்கும் நோக்கிலும் சிறந்த முறையில் நிதிநிலைஅறிக்கை தயாரிக்கப்பட்டுள் ளது. அடுத்த இரண்டு ஆண்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழை குடும்பங்களின் 5 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து அவர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் பாராட்டத் தக்கது.
அதேபோன்று, குடிசை இல்லா தமிழ்நாடு என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் கண்டறி யப்பட்ட 8 லட்சம் குடிசை வீடுகளில் ஒரு லட்சம் வீடுகளை ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபாய் 3 1/2 லட்சம் என்ற வகையில் ஒவ்வொரு வீடுக ளையும் கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டம் மிக சிறப்பு வாய்ந்த திட்டம். தமிழகத்தில் ஏறத்தாழ 50 சதவிகிதம் பேர் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று கொண்டிருக்கும் நிலையில் புதுமைப்பெண் திட்டமும், காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சரும், நிதியமைச்சரும் நிதிநிலை அறிக்கை தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும்போது இப்பகுதியினரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டு மென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொல்.திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவள வன் கூறியதாவது:

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ள அனைத்து அம்சங்களையும் விடுதலைச்சிறுத் தைகள் கட்சி சார்பில் வரவேற்று பாராட்டுகி றோம். குறிப்பாக குடிசை இல்லா தமிழ்நாடு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் அறிவிப்பு, வறுமை ஒழிப்பு திட்டம், வடசென்னை வளர்ச்சித் திட்டம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் காலை உணவு திட்ட விரிவாக்கங்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். குடிசை இல்லா தமிழ்நாடு திட்டத்தில் வீட்டுக்கான மதிப்பீட்டுத்தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி, வீட்டின் பரப்பளவையும் அதிகரிக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.

கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற மேனாள் உறுப்பினருமாகிய கே.ஏ.எம்.முஹம்மது அபூ பக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது,

இந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கக் கூடிய வகையில் பல நல்ல திட்டங்கள் அறி விக்கப்பட்டு இருப்பதால், மக்களாட்சி தத்துவத் தின் மாண்புகள், திட்டங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன. “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்” என்ற அடிப்படையில், சிறுபான்மை சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சிறுபான்மை அஸ்தஸ்தை எந்தவித சிரமமின்றி, எளிதில், பெறுவதற்கான ஆணையை வெளி யிட்டு, ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் வரவேற்பை இந்த அரசு பெற்றுள்ளது. புதிதாக, வழிப்பாட்டுத் தலங்கள் தொடங்குவதற்கும், புரனமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், அனுமதி வேண்டி, பல்லாண்டுகள் காத்திருக்கும் சிரமங்களை உணர்ந்து, இந்த அரசு, இடர் பாடுகளை களைந்திட, விரிவான வழிக்காட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பும், மேலும். சிறுபான்மையின ரின் நீண்ட நாள் கோரிக்கைகளை இந்த அரசு ஏற்று இருப்பதோடு, இந்த நிதிநிலை அறிக் கையில், சிறுபான்மை நலத்துறைக்கு 1,429 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இருப்பதற்கும், சிறு பான்மை சமுதாயத்தின் சார்பாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பாகவும், வாழ்த்து களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கி றோம்.
தமிழ்நாட்டை சிறப்போடு, ஆட்சி செய்து வரும், திராவிட மாடல் நல்லாட்சி, இந்தியா முழுவதிலும், படர்ந்திட, எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில், ஒன்றியத்தில் மதசார்பற்ற “இந்தியா கூட்டணி” ஆட்சி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலோடு உருவாகிட, நாளும் உழைத்திடுவோம்.
-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment