ஸநாதன சக்திகளை ஒழிக்க அரசமைப்புச்சட்டமே சிறந்த ஆயுதம் : நீதிபதி கே.சந்துரு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

ஸநாதன சக்திகளை ஒழிக்க அரசமைப்புச்சட்டமே சிறந்த ஆயுதம் : நீதிபதி கே.சந்துரு

featured image

சென்னை, பிப். 24- அரசமைப்புச் சட்டமே நமது பேராயுதம். அதை ஒழிக்க நினைக்கும் ஸநாதன சக்திகளிடம் இருந்து பாதுகாப்போம் என்று நீதிபதி கே.சந்துரு கூறினார்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய மாநிலக்குழு அலு வலகம் திறப்பு விழா 20.2.2024 அன்று சென்னை சைதாப் பேட்டையில் நடைபெற்றது.
அலுவலகத்தை சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு திறந்து வைத்தார். இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீதிபதி கே.சந்துரு பேசியதன் சுருக்கம் வருமாறு:
உச்சநீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வாதாட முடியும். இதற்கு மாறாக, மாற்றுத்திறனாளி பெண்ணை சைகை மொழியில் பேச அனுமதித்து, அதை மொழிபெயர்ப்பாளர் மூலம் புரிந்து கொண்டு உச்சநீதிமன்ற தலை மை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

பல்வேறு மதங்களின் பாரம்பரியம்
பூமியில் பிறந்தவர்கள் அனைவரும் சமம். ஸநாதனத்திற்கு எதிரான சமத்துவம் என்ற வார்த்தை அரசமைப்புச் சட்டத்தில் உள்ளது.
வழக்குரைஞர்களை கூட சைகை மொழியில் வாதாட அனுமதிப்பேன் என்று தலைமை நீதிபதி கூறியிருக்கிறார். நமது பிரச்சினை அனைவரின் காது களிலும் விழத் தொடங்கி உள்ளதை புரிந்துகொள்ளவேண்டும். பூரி ஜெகநாதர் தேர் ஊர்வலத்தில், பக்தர்கள் கைகளை உயர்த்தி, மாற்றுத் திறனாளிகளின் சைகை மொழியில் கை தட்டி பாராட் டுவதை போன்று கும்பிட்டார்கள்.
இறைவனுக்கு சைகை மொழியும் தெரிந்திருக்கிறது. கலைஞர் முதலமைச் சராக இருந்த போது கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய உத்தர விட்டார். அத னை எதிர்த்த வழக்கை விசாரித்த போது, இறைவனுக்கு மொழி மட்டு மல்ல, சைகை மொழியும் தெரிந்தி ருக்க வேண்டும் என்று கூறி தள்ளு படி செய்தேன்.
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் இருக்கும் என்று முகவுரையில் உள்ளது.
இந்த வார்த்தைகளை புத்தரிடம் இருந்து எடுத்ததாக அம்பேத்கர் கூறி னார். பல்வேறு மதங்களின் பாரம்பரியம் சேர்ந்ததுதான் இந்திய நாட்டின் பன்முகப் பாரம்பரியம்.

யார் பக்கம்?
அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள கோவிலில் பால ராமன் சிலையை வைத்துள்ளனர். அதைச் செய்த சிற்பியால், இனி அந்தச் சிலையைத் தொட முடியாது. உற்பத்தி செய்தவன் அதி லிருந்து விலக்கப்படுகிறான். இதைத்தான் ஸநாதனம் என்கிறோம். ஸநாதன அமைப்பு முறையில், நலிவுற்ற மக்களுக்கு கல்வி, வீடு, பாது காப்பு இல்லை. அதையெல்லாம் வேர் அறுக் கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் அளித்தார். ஸநாதனத்தை ஒழிக்க, அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும். எனவே, பொதுத் தேர்தலில் ‘இந்தியா’வின் பக்கமாக, பாரதம் என்று ஸநாதனத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் பக்கமா என்பதை உறுதி செய்யுங்கள்.
கட்டை விரலை உயர்த்தினால் அதை அறுத்த காலம் மாறி, தற்போது மை வைக்கும் புதிய இந்தியாவில் இருக்கிறோம். மாற்றுத்திறனாளி களுக்கு நிவாரணம் கொடுக்கும் பிரிவையும் கொண்டுள்ள அரசமைப்புச் சட்டம் நம்முடைய பேரா யுதம்.

அதை ஒழிக்க முயற்சிப்பவர் களிடம் இருந்து பாதுகாப்போம். இவ்வாறு கூறினார்.
விழாவுக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஜான்சிராணி தலைமை தாங்கினார். சங்கக் கொடியை மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் ஏற்றி வைத்தார். கல்வெட்டை சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் திறந்து வைத்தார். தோழர் டி.லட்சு மணன் உருவப்படத்தை துணைத் தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணா திறந்து வைத்தார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் துணைத்தலைவர் பி.சம்பத், காயிதேமில்லத் கல்லூரி தாளாளர் தாவூத் மியாகான், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் டி.செந்தில் குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா, தேசிய பார்வை யற்றோர் இணையத் தலைவர் பி.மனோ கரன், மாற்றுத்திறனாளிகள் சங்கங் களின் கூட்டமைப்பு தலைவர் ப.சிம்ம சந்திரன், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து, பேரா.கல்பனா, கருணை டிரஸ்ட் ஆர்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
அமைப்பின் தென்சென்னை மாவட் டச் செயலாளர் எம்.குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment