தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது ஏன்? அதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 6, 2024

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது ஏன்? அதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் வினா

சென்னை,பிப்.6- கச்சத்தீவு அருகில் மீன் பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் நிகழ்வாக இருந்து வருவதால் அதை தடுக்க ஏன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது.
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த 6 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கடந்த ஜன. 22ஆம் தேதி கைதுசெய்தனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவரான பீட்டர் ராயன், சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும்நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (5.2.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மவுரியா, ‘‘கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்க தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் உரிமை உள்ளது. கச்சத்தீவு பகுதிகளை இந்தியாதான் இலங்கைக்கு தாரை வார்த்துள்ளது. அப்போது இருநாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை இலங்கை மதிப்பதில்லை.
தற்போது 23 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல், கச்சத்தீவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணஒன்றிய, மாநில அரசு கள் இணைந்த கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும்’’ என கோரினார்.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், ‘‘இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீன வர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும் பத்துக்கு நாளொன்றுக்கு ரூ.250 உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், ‘‘கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதுதொடர் நிகழ்வாக இருந்து வருவதால் அதை தடுக்க ஏன் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வில்லை’’ என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பினர். பின்னர், இதுதொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத் துள்ளனர்.

No comments:

Post a Comment