புகையிலை விற்பனை 7,693 கடைகள் மூடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 23, 2024

புகையிலை விற்பனை 7,693 கடைகள் மூடல்

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுகன் தீப் சிங் பேடி தகவல்

சென்னை, பிப்.23 தமிழ்நாட்டில் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட 7,693 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் புகையிலை மற்றும் நிகோடின் அடங்கிய பொருட்களுக்கு அரசு தடை விதித் துள்ளது. ஆனாலும், தடையை மீறி பல இடங்களில் புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, பள்ளி, கல்லூரிகள் அரு காமையில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறையினர் ஒருங்கிணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, 2023 நவ.1-ஆம் தேதி முதல் இதுவரை புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட7,693 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க 391 கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 7,693 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 39,359கிலோ புகையிலை பொருட்கள் அழிக்கப்பட் டுள்ளன. அவர்களிடமிருந்து ரூ.6.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தற்போது அபராதத் தொகை உயர்த்தப்பட் டுள்ளது. எனவே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை சிறையில் இருந்து
18 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை
இராமேசுவரம், பிப்.23 வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் படகுகளின் ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் நடைமுறையை இலங்கை அரசு அண்மையில் அமல்படுத்தியது.
இதனடிப்படையில் தமிழ்நாடு மீனவர் மெல்சனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்தும், தண்டனையை ரத்து செய்யக் கோரியும் இராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்று (22.2.2024) 6-ஆவது நாளாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்.9ஆ-ம் தேதி கடலுக்குச் சென்ற19 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று (22.2.2024) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், “ஒரு படகின் உரிமையாளர் அன்றன் சசிக்குமார் படகின் ஓட்டுநராகவும் இருந்து சிறை பிடிக்கப்பட்டதால் அவரது படகு மட்டும் நாட்டுடமையாக்கப்படுகிறது. மற்றொரு படகின் ஓட்டுநர் ஜான்சன் (38) என்பவ ருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.
மேலும், 18 மீனவர்களை மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்து உத்தரவிட்டார். மற்றொரு படகின் உரிமையாளரான அலெக்ஸ் மே 14-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment