இரண்டரை ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 60,567 அரசுப் பணியிடங்கள் வழங்கப்பட்டன தமிழ்நாடு அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 19, 2024

இரண்டரை ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 60,567 அரசுப் பணியிடங்கள் வழங்கப்பட்டன தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, பிப்.19 கடந்த மூன்று ஆண்டுகளில் 60,567 பேர் அரசு பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மாதம் வரை 60,567 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விபரத்தை முதலமைச்சர் குறிப்பிட்டி ருந்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில், அரசு பணிக்கான பணியாளர்களை தேர்வு செய்வதற்காக உள்ள தேர்வு முகமை களான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரி யம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம், கடந்த இரண்டரை ஆண்டுகளில் வெவ்வேறு அரசு துறை களில் உள்ள காலி பணியிடங் களுக்காக, ஜனவரி 2024 வரை, 27,858 அரசு பணியா ளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

இது தவிர, பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக, ஜனவரி 2024 வரை 32,709 நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள் ளனர். துறைவாரியான நியமனங்களைப் பொறுத்தவரை நீதித்துறையில் 5,981 பணியிடங்களும், பள்ளிக்கல்வித்துறையில் 1,847 பணியிடங்களும், வருவாய்த் துறையில் 2,996 பணியிடங்களும், சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத் துறையில் 4,286 பணியிடங்களும், ஊரக வளர்ச்சித் துறையில் 857 பணியிடங்களும், உயர் கல்வித் துறையில் 1,300 பணியிடங்களும், காவல்துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் மற்றும் சத்துணவு போன்ற அரசின் பிற துறைகளின் வாயிலாக 15,442 பணியிடங்களும் அந்தந்த துறைகளின் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டன.
அந்த வகையில் 32,709 இளைஞர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டு காலத்திற்குள் (27,858 + 32,709) மொத்தம் 60,567 நபர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பை உருவாக்கிட உலக முதலீட்டாளர் மாநாடும் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக நம் மாநிலத்தின் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட தமிழ் நாடு அரசு வழிவகை செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment