10 ஆண்டு ஆட்சியில் சாதனைகள் இல்லை- எங்கு பார்த்தாலும் ‘மோடி, மோடி!' என்ற விளம்பரங்களே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 7, 2024

10 ஆண்டு ஆட்சியில் சாதனைகள் இல்லை- எங்கு பார்த்தாலும் ‘மோடி, மோடி!' என்ற விளம்பரங்களே!

featured image

இந்துக்கள் அல்லாதாரை மற்றவர்களாக்கிக் காட்டுவதைத் தவிர பொருளாதார மேம்பாடோ, மோடி அளித்த உறுதிமொழிகளோ ஏதுமில்லை!
பிரபல அரசியல் பொருளாதார நிபுணர்
பரகலா பிரபாகர் எழுதிய நூலுக்குப் பதில் எங்கே?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

கடந்த 10 ஆண்டுகால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் வெற்று விளம்பரங்களைத் தவிர வாக் குறுதிகளோ, பொருளாதார மேம்பாடோ ஏதுமில்லை. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் எழுதிய நூலுக்கு எந்தவிதப் பதிலும் அளிக்காதது ஏன்? ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடிபற்றிய விளம்பர வெளிச்சங்கள் அங்கிங்கெனாதபடி இந்தியா முழுவதிலும்!
விமான நிலையங்களா?
இரயில்வே நிலையங்களா?
தொலைக்காட்சிகளிலா?
வானொலிகளிலா?

எங்கு பார்த்தாலும்
பிரதமர் மோடி, மோடி என்ற விளம்பரங்கள்!
சீரியல்களுக்கு இடையில்கூட கண்மூடிக் கண் திறப்பதற்குள்ளாக மோடியின் உத்தரவாதங்கள், புதிய பிராண்ட் – வானொலி, ரேடியோ முழுவதும் ஹிந்தி, சமஸ்கிருத மயம் எங்கும் – ஆங்கிலச் செய்திகளில்கூட பிரதமர் மோடியின் ஹிந்தி முழக்கங்கள்!
ஆளுங்கட்சியின் அதிகார எல்லை மீறுதல் எல்லை யற்று, 2024 பொதுத் தேர்தலை மய்யப்படுத்தியே இத் தகைய விளம்பர மின்னல் வேகத் தாக்குதல் வாக் காளர்மீது!
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், இவ்வாட்சியில் முதலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்று எதிர்க்கட்சியினர் அல்லாத எக்கட்சியையும் சாராத இளைஞகள், வாலிபர்கள், பொதுவான பொரு ளாதார நிபுணர்கள் எழுப்பி வரும் கேள்விக்கு நேரடி யான பதிலோ, நேர்மையான பதிலோ ஆளுந்தரப்பில் தரப்படுகின்றனவா?
‘‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்பவருக்குக் கொட் டைப் பாக்கு விலை சொன்ன” பழமொழிக்கொப்ப ஏதேதோ சொல்கின்றனர்!

நாட்டின் 80 சதவிகித பணப் பெருக்கம் –
10 சதவிகித கார்ப்பரேட் முதலாளிகள் வசமே!
‘‘நாட்டின் 60 சதவிகித பணப் பெருக்கம் 10 சதவிகிதத் திற்குள்ள கார்ப்பரேட் முதலாளிகளிடம்தான் உள்ளது” என்று மிகப் பிரபல பொருளாதார வல்லுநர்கள் – நிதி ஆலோசகர்களாக இந்திய அரசிலும், ரிசர்வ் வங்கியிலும் பணிபுரிந்தவர்களே கூறுவதை மறுக்க முடிகிறதா?
கடந்த 60 ஆண்டுகளில் ஜிடிபி என்ற நாட்டின் வளம் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது?
பசி தீர்க்கும் உலக நாடுகளின் வரிசையில் – அதுவும் ஜி-20 நாடுகளிடையேகூட அதற்கு இந்தியா ‘ரொட் டேஷன்’ முறையில் தலைமை தாங்கியதையே ஏதோ இமாலயச் சாதனை – விஸ்வ குரு – உலகத்திற்கே தலைமை தாங்கும் தகுதிக்கு உயர்ந்துவிட்டார் என்று வாரி விட்ட வார்த்தை விளையாட்டுதானே மிச்சம்!
‘‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம்!”
‘‘ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்ச ரூபாய், அவரவர் வங்கிக் கணக்கில் பொத்தென்று வந்து விழும்” – உத்தரவாதம் நிறைவேறியதா?
‘‘விவசாயிகள் வாழ்வாதாரம் – கடந்த 10 ஆண்டுகளில் மோடி – பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் இரட்டிப்பு மடங்காக்குவோம்” என்று பிரதமர் சொன்ன உத்தரவாதம் என்னவாயிற்று?

தமிழ்நாட்டு மீனவர்கள்பற்றி –
உயர்நீதிமன்றமே கேள்வி கேட்டுள்ளதே!
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலைச் செய்யும் நிலையில், இலங்கைக் கடற்படையால் நாளும் கைது, இலங்கையில் சிறைவாசம், படகுகள் பறிமுதல் – இது ஒரு தொடர் படலமாகவே நீடிக்கிறதே! 2014 இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பா.ஜ.க. பிரதமர் மோடி, மீனவர்களுக்குக் கொடுத்த உத்தரவாதம் – ‘‘கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உங்களைக் காங்கிரஸ் புறக்கணித்தது; நாங்கள் ஆட் சிக்கு வந்தால், உடனே உங்களுக்குப் போதிய தொழில் பாதுகாப்புத் தரப்படும்” என்றார்.
இரண்டாம் முறை பா.ஜ.க. மோடி அரசு ஆட்சியைப் பிடித்தபோது, ஓர் இணையமைச்சரிடம் கொடுக்கப்பட்ட பல துறைகளுடன், மீன்வளத் துறையும் தரப்பட்டது.
அதனால் ஏற்பட்ட பலன் – பூஜ்ஜியம்தானே! இத் தனைக்கும் இலங்கை, இந்தியாவின் தயவை எதிர் பார்த்து – கடன் வாங்கி தனது நாட்டில் ஆட்சியை நடத்தும் நிலையில், பொருளாதார வறட்சியில் சிக்குண்டுள்ள நாடு!
நேற்று (6-2-2024) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியே கேட்டுள்ளார் – ‘‘ஒன்றிய அரசு – மீனவர்களின் உரிமையை, நலனைப் பாதுகாக்க ஏன் தவறியது? அவர்களுக்குரிய பாதுகாப்பை, தொழில் உரிமையைக் காக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேட்டு, மறைமுகமாக, அதன் கேளாக் காதுகளுக்கு ஓங்கி கூறியுள்ளதற்காவது பதில் வேண்டாமா?

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் எழுதிய ‘‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்” எனும் நூல் என்ன சொல்லுகிறது?
நாளும் தவறான – உண்மைக்கு மாறான தகவல்களை வளர்ச்சித் துறையில் இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அதீதமான சாதனை செய்துள்ளதாக விளம்பரத் தம்பட் டத்தை ஊடகங்களை ஊதுகுழலாக்கிச் செய்கிறார்களே, உண்மை நிலவரம் என்ன?
‘‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்” என்ற தலைப்பில் பிரபல அரசியல் பொருளாதார நிபுணர் பரகால பிரபாகர் (அவர் எக்கட்சியையும் சாராதவர்) என்ன எழுதியுள்ளார் என்பதைப் படியுங்கள்:
‘‘நாம் சுபமான நாட்களில் (‘அச்சே தின்’), தற்போது ஓர் அமிர்த காலத்தில் இருப்பதாகவும், அரசு குறிப்பாக பிரதமரும், அவரது அதிகாரவர்க்க அடிமைகளும் திரும்பத் திரும்பக் கூறிவருகின்றனர்.
அவர்கள் தம் பெருமையைச் சொல்லுவதெல்லாம் எவ்வளவு பொய்யானவை, தவறான தோற்றம் தருபவை என்பதை இந்த நூலில் இருக்கும் கட்டுரைகள் உணர்த் தியிருக்கும்” என்று 320 பக்கங்களில் எழுதியுள்ளதற்கு (அது வெளிவந்து ஒரு மாதம் ஆகியிருக்கிறது) ஏன் மறுப்புரை வரவில்லை, இதுவரை?
அந்த நூலின் 75 ஆம் பக்கத்தில் உள்ள பகுதியைப் படியுங்கள், பரப்புங்கள்!
இவர் எந்தக் கட்சியையும் சாராதவர் என்பதை மக்களுக்கு விளக்குங்கள்.

இவற்றிற்கு இடையில், அண்மையில்கூட இடைக் கால நிதிநிலை அறிக்கையில் தமது முதுகைத் தாமே தட்டிக் கொண்ட ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கணவர் என்பதைவிட, இந்திய நாட்டின் எதிர்கால ஜனநாயகம்பற்றி ஆழ்ந்த கவலையும், பொறுப்புணர்வும் கொண்டு சிந்தித்துள்ள ஓர் அரசியல் பொருளாதார மேதை என்பதை வாக்காளர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள்.
‘‘நல்ல நிர்வாகம், பொருளாதார மேம்பாடு, ஊழல் ஒழிப்பு, ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கி களிலிருந்து இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவது, வறுமை ஒழிப்பு என மோடி அளித்த வாக்குறுதிகள் கைவிடப்பட் டுள்ளன. இந்துத்துவம் என்கிற சரக்கை ஆட்சி என்கிற சுற்றுப் பாதையில் செலுத்துவதற்கான விண்வெளிக் கலத்தை வானில் செலுத்தத் தேவை யான நெருப்புதான் அந்த வாக்குறுதிகள். அவற்றை நிறைவேற்ற வேண்டுமென்கிற பொறுப் புணர்வினை அளவுகோலாக வைத்து இந்த ஆட் சியை எடை போட ஆளும் நிறுவனம் அனுமதிப் பதில்லை. அந்த வாக்குறுதிகளை இப்போது சிதிலமடைந்து கிடக்கின்றன. பழைய வாக் குகளைக் குறித்து எழுப்பப்படும் கேள்வி கள் அரசாங்கத்தைத் தொடுவதில்லை. அரசுடைய செயல்பாட்டின் அடிப்படையில் தன் அரசியலுக்கான நியாயத்தையும், வலிமையையும் பெற பா.ஜ.க. நினைக்கவில்லை. இந்து அடை யாளத்தை அடித்து நிலை நிறுத்துவதில்தான் அதன் நியாயமும், வலிமையும் அடங்கியிருக் கின்றன. இந்துக்கள் அல்லாதோரை ‘மற்றவர்களாக் கும்’ நடைமுறைதான் அதனுடைய அதிகாரத்தின் மூலாதாரம். ஜனநாயகம் என்பதை, நீதி, சமத்துவம், பகிர்தலின் அடிப்படையிலான வாழ்க்கை ஆகிய விழுமியங்களிலிருந்து பிரித்தெடுத்து, பெரும் பான்மையின் ஆட்சி என்கிற தாழ்நிலைக்குக் கொண்டு செல்லும் பேய்த்தனமான திட்டம் அது. ஜனநாயகம் என்பது ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு கும்பலின் ஆட்சியென்கிற சிந்தனையை ஜாதி, வர்க்க பேதமின்றி ஏராளமான இந்துக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர்.”

மோடி ஆட்சியில் அன்றாடம்
உண்மை பலியாகிறது!
உண்மை கள பலியாவது முன்பெல்லாம் யுத்த காலங்களில் என்பது ஆங்கிலப் பழமொழி.
தேர்தலில் மட்டுமல்ல, அன்றாடம் நித்தம் நித்தம் பா.ஜ.க. மோடி ஆட்சியில் அது மாலை போட்ட ஆட்டுக்கிடாபோல பலியாகிறது ஜனநாயகம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
7-2-2024

No comments:

Post a Comment