தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்திற்கு நூறு புதிய பேருந்துகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 21, 2024

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்திற்கு நூறு புதிய பேருந்துகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

featured image

சென்னை, ஜன.21 அரசு போக்கு வரத்துக் கழகங்களுக்காக புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட 100 பேருந் துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (20.1.2024) தொடங்கி வைத்தார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு அக் டோபர் 19-ஆம் தேதி சட்டப் பேர வையில் 110-விதியின் கீழ் பேசிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக் களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாகவும், ரூ.500 கோடிக்கு 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார். மேலும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

புதிய பேருந்துகள்

முதலமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 2023-_2024-ஆம் ஆண்டுக் கான நிதிநிலை அறிக்கையில், ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந் துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப் பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும், நீலகிரி மாவட்டத்துக்கென மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 16 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசாணையும் வெளியிடப் பட்டுள்ளது.
அந்த அறிவிப்புகளின்படி, பொது மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களில் புதிய பேருந்துகளை இயக்கிடும் வகையிலும் ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 ‘பிஎஸ் 6′ பேருந்துகளை கொள் முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 100 பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவ தற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மத்திய பணிமனையில் நேற்று (20.1.2024) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

சீரமைப்பு

அப்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசிய தாவது: கடந்த 10 ஆண்டு காலம் சீர் கெட்டிருந்த போக்குவரத்துத் துறையை சீரமைத்து, துறை உயிர்ப்போடு செயல் படும் வகையில் பல்வேறு நடவடிக் கைகளை முதலமைச்சர் எடுத்து வரு கிறார். அதன் அடிப்படையில் புதிய 100 பேருந்துகள் தொடங்கி வைக்கப் படுகின்றன.

போக்குவரத்துத் தொழிலாளர் களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையும் கடந்த ஆட்சியில் உரிய காலத் தில் முடிக்கப்படவில்லை. அதுவும் திமுக ஆட்சிக் காலத்தில்தான் சிறப் பாக பேசி முடிக்கப்பட்டது. குறிப்பாக ஊழியர்களின் கோரிக்கையான ‘பே மேட்ரிக்ஸ்’ அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டதோடு, 5 சத வீத ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.

அதேபோல் மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் 20 சதவீதம் வழங்கப்பட்ட தீபாவளி ஊக்கத் தொகை கடந்த ஆட்சியில் 8 சதவீதமாக குறைக்கப் பட்டது.

இதையும் மீண்டும் 20 சதவீத மாக முதலமைச்சர் உயர்த்தி அறிவித்து, ஊழியர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார்.
அதேபோல், துறை சீரழிந்த நிலையில் பெண்களுக்கு கட்டண மில்லா பேருந்து சேவையை வழங்கி அதற்கான தொகையை கழகங் களுக்கு வழங்கியதால் உரிய நேரத்தில் ஊழி யர்கள் ஊதியம் பெறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment