பெண்கள் விவாகரத்து பெறும் உரிமை கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 5, 2024

பெண்கள் விவாகரத்து பெறும் உரிமை கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கொச்சி, ஜன. 5- இல்லற வாழ்வில் பாலியல் கொடுமைக்கு ஆளானால் விவாகரத்து பெற மனைவிக்கு உரிமையுள்ளது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கேரள மாநிலம் எர்ணாகுளம் நகரை சேர்ந்தவர் 24 வயது இளம் பெண். இவர் விவாகரத்து கேட்டு எர்ணாகுளம் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், எனது கணவர் பாலியல் உறவில் ஈடுபடுமாறு தூண்டுவதாகவும், ஆபாச படங்களை பார்க்குமாறு கட்டாயப் படுத்தி வற்புறுத்துவதாகவும், எனது விருப்பத்துக்கு மாறாக கணவர் செயல்படுவதால் விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விவாகரத்து பெறுவதற்கான காரணம் ஏற்புடை யது அல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக இளம்பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார் இந்த மனுவை நீதிபதிகள் அமிர்த் ராவல், சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

பாலியல் வக்கிரம் குறித்த நபர்களின் கருத்துகள் மாறு படும். வயது வந்தோர் தங்கள் சுதந்திரம் மற்றும் சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் செயல்களில் ஈடுபட்டால், அது அவர்கள் விருப்பம் அதில் நீதிமன்றங்கள் தலையி டாது. மனைவியின் விருப்பத்துக்கும் மாறாக பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினால், அது உடல் மற்றும் மன ரீதியான கொடுமை யாக அமையும். திருமண வாழ்வில் மனைவியிடமிருந்து உடல் சுகம் பெறுவதற்காக, அவரை வலுக்கட்டாயமாக விருப்பத்துக்கு மாறாக வக்கிர செயல்களில் கணவர் ஈடுபட தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண்கள் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய உரிமை உண்டு, மனுதாரரின் கணவர் தனது இச்சைக்கு இணங்க மறுத்த மனைவியை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டு, விவாகரத்து வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment