சிந்திக்கச் சொன்னால் நிந்திப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 13, 2024

சிந்திக்கச் சொன்னால் நிந்திப்பதா?

featured image

கங்கையைப் போல் காவிரியைப்போல்
கருத்துகள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
1 ) முருகன் தெய்வானைத் திருமணம்
ஏட்டில் உள்ள கதையா ? பொம்மைக் கல்யாணமா?
2) This is not “NEET” Exam Question
Just very simple question – can you think & answer

மகா விஷ்ணுவுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் தான் மாமன்னர் உயர்திரு நரகாசுரன் அவர்கள். இரண்டு கடவுளுக்கும் பிறந்தவர் எப்படி அரக்கனாக இருக்க முடியும்? சிந்தித்தால் பதில் கிடைக்கும். “அய்யய்யோ அது எங்கப் பரம்பரைக்கே ஆகாதுங்க” என உங்கள் மைண்ட் வாய்ஸ் என்றால் படுத்துத் தூங்குங்கோ தீபாவளி அன்னிக்கு – அதுதான் நீங்க மாமன்னர் நரகாசுரனுக்குச் செய்கின்ற மரியாதை!

நடந்த நிகழ்வின் அடிப்படையில்!
3) தீண்டாமைக் கொடுமையை நேரில் பார்த்த இளவயது பெண் அஞ்சல் ஊழியர் !
நமக்குத் தெரிந்த இளவயது பெண் அஞ்சல் ஊழியர் ஒருவர் ஒரு ஏகாதசி அன்று சிறீரங்கம் கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசித்த பின் கோயில் மண்டபத்தின் – ஓரத்தில் குடும்பத்துடன் அமர்ந்துள்ளார். இதைப் பார்த்த அங்குள்ள குருக்கள் அவர்களை எழுந்திருக்கச் சொல்லி – அந்த இடத்தைக் கூட்டித் தண்ணீர் விட்டுக் கழுவிச் சுத்தப்படுத்தி உள்ளார்கள். இந்தத் தீண்டாமைக் கொடுமையை நேரில் அனுபவித்த அந்த இளவயது பெண் அஞ்சல் ஊழியர் – அஞ்சலகத்திற்கு வந்து உதவி அஞ்சல் அதிகாரியிடம் தம் கோபத்தைக் கொட்டிக் கொண்டிருந்தார். சபாஷ் ! உள்ளபடியே இந்த இளவயது பெண் அஞ்சல் ஊழியரை – நாம் மனதாரப் பாராட்டித் தான் ஆக வேண்டும், ஏன்?
ஏனென்றால் ஒரு பெருங்கூட்டத்தைக் கூட்டி ஒரு மாட்டைக் காயடித்தால் அது வலியினால் துடிதுடித்துச் சாகுமே தவிர மான உணர்ச்சியால் சாகாது. அதே நேரம் அதே பெருங்கூட்டத்தைக் கூட்டி – ஒரு மனிதனை அல்லது ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்திப் பலப் பிரயோகம் செய்தால் அவர்கள் வலியினால் துடிதுடித்துச் சாகும் முன்னே மான உணர்ச்சியால் தமது உயிரைத் துறந்து விடுவார்கள் ! வேறு உயிர் இனங்களிலிருந்து இந்த மான உணர்ச்சி ஒன்றுதான் மனிதனை வேறுபடுத்திக் காண்பிக்கின்றது “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகென்பார் பெரியார்” ! இது இந்த இளவயது பெண் அஞ்சல் ஊழியருக்கு இருக்கின்றது. இதை மற்ற பெண்கள் குறிப்பாகச் சவுராட்டிரச் சமூகப் பெண்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே நமது பேராவா ! “மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது; அது அவ்வை சொன்னது; அதில் அர்த்தம் உள்ளது,”! ஆம் ! நாமும் அந்த அஞ்சல் ஊழியர் பெண்ணும் அவ்வைப்பாட்டி போட்டுத் தந்த பாதையில் ! மற்ற பெண்களின் பாதை எப்படி? Choice is yours! Think about it!

4) பெரியார் மட்டுந்தான் திட்டினரா? ஏன் பாரதியார் திட்டவில்லையா?
“கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்”, எனத்திட்டி விட்டாராம் பெரியார். இங்குள்ள அரைகுறைகள் குதிக்கின்றன.
“ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்”
எனத் திட்டவில்லையா பாரதியார்? தப்புச் செஞ்சா வாத்தியார் திட்டத்தான் செய்வார். அது புரியாமல் அல்லது – அதை மறைத்து அம்மாணவன் வாத்தியார் மேல் பழிபோட்டால் – எப்படி இருக்குமோ அப்படித் தானே இருக்கின்றது இங்குள்ள அரைகுறைகளின் பேச்சும் மூச்சும்? சிந்திக்கும் திறன் இருந்தால் சிந்தியுங்கள். ஆனால் ஒப்பாரி வைப்பதை மட்டும் விட்டுத் தொலையுங்கள்.

5. பகவத் கீதையிலே கிருஷ்ண
பரமாத்மா சொல்வது என்ன?
காலங்களில் அவள் வசந்தம்; மாதங்களில் அவள் மார்கழி என அவருடைய காதலியை வர்ணித்துச் சொல்கின்றார் கவியரசு கண்ணதாசன். ஆனால் பகவத் கீதை கிருஷ்ண பராத்மாவோ “மாதங்களில் நான் மார்கழி” எனச் சொல்லிக் கொள்கின்றார். இதொன்று போதாதா மார்கழி மாதம் நல்ல மாதம் என்பதற்கு அடையாளம் ? கிருஷ்ண பரமாத்மாவையே கும்பிட்டு அவன் சொல்ற நல்ல மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் அனைத்தையும் புறக்கணித்தால் இது பக்திக்கு அடையாளமா?

ஆண்டவா! இதென்ன கூத்து ? உடனே இத மாத்து!
நவக்கிரகங்களைச் சுற்றி வருபவர்கள் அவர்களின் வேண்டுதலை விட – ‘இது, எத்தனாவது பவுண்டு?”, என்ற கணக்கே அவர்கள் மனதில் மேலோங்கி நிற்கின்றது. ஏ 1 ஆண்டவா! சர்வ சக்தி வாய்ந்த தீயாவது உன் பக்தாள்களுக்கு மன ஒருமைப் பாட்டைக் (Concentraction) கொடுத்துத் தொலைக்கக் ‘கூடாதா? சாதாரணமாகப் பணம் எண்ணும் போதுகூட 100 தாள்கள் வரவேண்டிய இடத்தில் 99 அல்லது 101 வந்து விடும் – மனஒருமைப்பாடு குலைந்தால் – ஆனால், வேண்டுதல் என்பது எவ்வளவு பெரியது ? அதை மனஒருமைப் பாட்டுடன் செய்யாமல், “இது எத்தனாவது ரவுண்டு?” என்று எண்ணிக் கொண்டிருப்பதா ? இதை நாம் சுட்டிக் காட்டினால் அர்த்தமில்லாமல் உன் பக்தாள்கள் நம் முதுகு மீது ஏறி குதிரைச் சவாரி செய்வார்கள். கடைசியில் நாம் மன்னிப்புக் கேட்க வேண்டியதாகி விடும். நீ ஆச்சு! உன் பக்தாள்கள் ஆச்சு! நடுவிலே நாம் யார்? என்னமோ போடா மாதவா?

நடந்த நிகழ்வின் அடிப்படையில்!
7) நிமிர்ந்த நன்னடை எங்கே? நேர்கொண்ட பார்வை எங்கே?
மகாகவி பாரதியார் இவ்விரண்டும் பெண்கள் அனைவருக்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினார். ஆனால் நடைமுறையில் அப்படி யாருக்கும் இல்லை. இருந்தாலும் இந்த ஞான பூமியில் – ஒன்றிய அரசின் National Savings Institute துறையைச் சேர்ந்த சிறுசேமிப்பு மகளிர் முகவர்களுக்காவது இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் பொது மக்களிடமிருந்து முதலீடு திரட்டி அதை அஞ்சலகத்தில் செலுத்தி – அரசின் கொள்கைத் திட்டத்துக்கு வலு சேர்ப்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் எந்த அளவுக்குக் கம்பீரமாக இருக்க வேண்டும்?

இங்கே அஞ்சலகத்தில் வேலை பார்க்க வருகின்ற மனமுதிர்ச்சி அற்ற (Immature) பெண்கள் சிலர் – தாம் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்துவதாக நினைத்து மகளிர் முகவர்கள் கொண்டு வரும் வாடிக்கையாளர்களின் தொடர் வைப்பு (RD) பாஸ் புத்தகத்தில் – உடனுக்குடன் பதிவு செய்து தராமல் அவர்களின் வசதிக்காகவோ – சோம்பேறித் தனத்துக்காகவோ – 3, 4 மாதங்களுக்கு ஒருமுறை பதிவு செய்து தருகின்றார்கள். அதாவது This they do without the knowledge of the senior Superintendent of post office. இது தெரியாமல் இந்த இடத்தில் – மகளிர் முகவர்கள் அஞ்சலகத்திற்குக் கீழே தாங்கள் வேலை பார்ப்பதாகக் கற்பனை செய்து கொண்டு – நாம் வியக்கின்ற அளவுக்கு அடக்க ஒடுக்கமாகப் பேசா மடந்தையாளர்களாக இருக்கின்றார்கள் – அல்லது அஞ்சல் ஊழியர்களுக்கு வக்காலத்து வாங்கிப்பேசுகின்றார்கள் ஆதலால் தற்போது இது விமர்சனம் செய்யும் பேசு பொருளாகி விட்டது.

மாமன்னர் துரியோதனின் அருமைச் சகோதரர் மாவீரன் உயர்திரு துச்சாதனன் பாஞ்சாலியைத் துகில் உரிக்கும் போது – பஞ்ச பாண்டவர்கள் – கைகட்டி – வாய்ப்பொத்தி – அமைதியாக நின்றார்கள் என்றால் அவர்கள் பந்தயத்தில் தோற்றுப் போனதால்! அப்படி என்ன இங்கே ஒரு இக்கட்டான நிலைமை மகளிர் முகவர்களுக்கு வந்திருக்கின்றது – அமைதி காப்பதற்கும் ? அச்சம் கொள்வதற்கும்?

அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே!
எனப் பாரதியார் 100 ஆண்டுகளுக்கு முன்னமேயே பாடி விட்டுச் சென்றது இன்று இங்கே ஒன்றிய அரசின் கொள்கைக் திட்டத்துக்கு – வலு சேர்க்கும் மகளிர் முகவர்களுக்குப் பொருந்தி விடுகின்றதே – என நினைத்துப் பார்த்தால் உள்ளம் குமுறுதம்மா! இதை யாரிடம் சொல்லித் தேற்றிக் கொள்வதம்மா?
இது ஏதோ வெறும் அலுவலகச் செய்தியாக மட்டும் பார்த்து விடக்கூடாது. ஏனென்றால் இந்த இந்திய துணைக் கண்டத்திலேயே அஞ்சலகத்தில் மட்டுந்தான் நிமிர்ந்த நன்னடையோடு நேர்கொண்ட பார்வையோடு மகளிர் முகவர்கள் நிற்க முடியும். வாய்ப்புள்ள இடத்திலேயே வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறினால்?

8. ஒருவன் திட்டித் தீர்ப்பான்! இன்னொருவன் கொண்டாடித் தீர்ப்பான்! யார் செய்வது சரி?
கல்வி வேலை வாய்ப்பில் பார்ப்பனர் ஒருவருக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் அந்தப் பார்ப்பனர் – பெரியாரையும் – அம்பேத்கரையும் திட்டித் தீர்ப்பான். ஆனால் – அதே கல்வி வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடம் கிடைத்து விட்டால் பெருமாளைக் கொண்டாடித் தீர்ப்பார்கள். பார்ப்பனர்கள் நடைமுறை (Practical Life) வாழ்க்கையைப் பார்த்துப் பெரியாரையும் அம்பேத்கரையும் திட்டுகின்றனர். ஆனால், இந்த நன்றி கெட்ட பிற்படுத்தப்பட்ட ஜென்மங்கள் வாழ்க்கையைப் பார்க்காமல் – கற்பனை உலகத்தில் வாழும் பைத்தியங்களாக இருக்கின்றார்கள். ஆக இந்தப் பைத்தியங்களுக்கும் சேர்த்து நாம் வைத்தியம் பார்க்க வேண்டியுள்ளது. எல்லாச் சுமைகளும் பெரியாரிஸ்டுகள் மீது! பார்ப்போம் – விடுவதாக இல்லை!
– தொகுப்பு: ம.சு.மோதிலால்

No comments:

Post a Comment