தமிழ்நாடு அரசு செய்தி அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 17, 2024

தமிழ்நாடு அரசு செய்தி அறிக்கை

featured image

அண்ணாமலையின் மும்மொழிக் கொள்கை என்ற பகல் கனவுக்கு இங்கு வாய்ப்பில்லை!
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்! தமிழ்நாடு அரசு திட்டவட்டம்!
அரசுத் துறைகளை கணினிமயமாக்கியது கலைஞர் செய்த தகவல் தொழில்நுட்பப் புரட்சி!
பெரியார் காட்டிய பாதையில் அரசு செயல்படும்!

சென்னை, ஜன. 17- தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொட ரும் என்றும் அண்ணாமலையின் மும்மொழிக் கொள்கை என்ற பகல் கனவுக்கு இங்கு வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் திட்ட வட்டமாக அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :-
பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது தமிழ்நாடு அரசு. அதன்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற் காக ‘’மைக்ரோசாஃப்ட் ஜிணிகிலிஷி திட் டம்’’ என்னும் ஒரு திட்டத்தை நாட்டிலேயே முதன் முறையாகக் கொண்டு வந்திருக்கிறது.

வரலாற்றை மாற்றவோ,
திரிக்கவோ கூடாது!

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறுகை யில். இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித் திருந்தார். மேலும் வெகு விரைவில் மும் மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக்கூடாது. தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது.

தந்தை பெரியாரின்
தொலைநோக்குப் பார்வை!

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ் நாட்டுக்கென்று வரலாறும் பாரம்பரியமும் உண்டு. 1970 ஜூலை 16ஆம் தேதி அன்றைய கிண்டி பொறியியல் கல்லூரியில் (இன்றைய அண்ணா பல்கலைக்கழகம்) நடந்த தமிழ் மன்ற விழாவில் தந்தைபெரியார் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அங்கு சென்ற தந்தை பெரியாரிடம் கல்லூரிக்கு என புதிய கம்ப்யூட்டரை வாங்கி இருப்பதாக அங்கு இருக்கும் பேராசிரியர்கள் தெரிவிக்க அதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டார். பெரியார் படியேறிச் செல்ல முடியாத முதுமையில் இருந்தாலும், முதல் மாடிக்கு தன்னை தூக்கிச் செல்லுமாறு வேண்டி, அங்கு சென்று அந்த கம்ப்யூட் டரைப் பார்த்தார். அப்போது அதற்கு கணினி என்கிற பெயர் வைக்கப்படவில்லை. அய்.பி.எம் கம்ப்யூட்டர் 1620 மாடல்கணினி அது. எந்த தேதியைச் சொன்னாலும் அதன் கிழமையை மிகச்சரியாக அக்கணினி சொல்லிவிடும் என்கிற செய்தியை அங் குள்ள பேராசிரியர்கள் சொல்ல பெரியார் சில தேதிகளை சொல்லி, கிழமை சரியாக வருகிறதா என்று பார்த்தார். தன்னுடைய பிறந்த நாளையும் அவர் சொல்ல சரியாக சனிக்கிழமை என்று கூறியது அந்தக் கணினி. அவரிடம் இந்த கணினி பற்றி கூறியது அன்றைய பேராசிரியரும் பின் னாளில் துணைவேந்தரும் ஆன வா.செ.குழந்தைசாமி அவர்கள். வருங்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒருதகவல் தொடர்பு கருவி இருக்கும் என்று இன்றைய செல்போன் குறித்து அன்றே கணித்து சொன்னவர் பெரியார்.

தொழில் நுட்பத் துறையில் கலைஞர் உருவாக்கிய தனி கொள்கை!

இதன் தொடர்ச்சியாக 1997லேயே அன் றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து தமிழ்நாட்டுக்கென தனியே தகவல் தொழில் நுட்பத் துறைக்கான கொள்கை ஒன்றை உருவாக்கி, தனியாக ஒரு துறையை உரு வாக்கி அதற்கென ஒரு அமைச்சரை நிய மித்தார். தகவல் தொழில்நுட்பத்துறை பற்றி நாட்டின் பிற மாநிலங்கள் இதுகுறித்து பெரிதும் விழிப்புணர்வு அடையாத கால கட்டத்திலேயே தொலைநோக்குப் பார்வை யோடு கலைஞர் அவர்கள் சிந்தித்து இதற் கான திட்டங்களைத் தீட்டினார்.
டைடல்பார்க் போன்ற கட்டமைப்புகளை மாநிலத்தில் உருவாக்கி உலக நிறுவனங் களின் முதலீட்டு மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டினார். இதன்மூலம் சென்னை ஒரு அய்.டிஹப் ஆக மாறியது இன்றைக்கு பழைய மாமல்லபுரம் சாலை முழுவதும் காணப்படும் அய்.டி. நிறுவனங்கள் அனைத் திற்கும் அன்றே வித்திட்டது அன்று கலை ஞர் அவர்கள் உருவாக்கிய தனி கொள்கை தான்.
இதையடுத்து அரசுத் துறைகளை கணினி மயமாக்கியது கலைஞர் அவர்கள் செய்த தகவல் தொழில்நுட்பப் புரட்சி. E-governance எனப்படும் மின் நிர்வாக முறையை முதன் முதலில் திருவாரூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாகவே குக்கிராமங்கள் தொடங்கி தலைநகரம் வரை படிப்படியாக ஒவ்வொரு துறையும் கணினிமயமாகி ஊழியர்களின் பணிச் சுமையை குறைத்தது. தகவல்சேமிப்பும் எளிதாகி இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவுக்கென 2020-லேயே தனி கொள்கை!

இந்த தொடர் ஓட்டத்தின் தொடர்ச்சியாக செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை தமிழ்நாட்டில் 2020இல் உருவாக் கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன் பாகவே இவையெல்லாம் நடந்தன.
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்து விட்டது. எடுத்துக்காட்டாக தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 % ஆக ஆக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால் அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின்படி(All India Survey of Higher Education (AISHE) தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதிவி கிதத்தை 2019-2020 கல்வியாண்டிலேயே எட்டி விட்டது. 2035ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதத்தை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது தேசிய கல்விக் கொள்கை. ஆனால் தமிழ்நாடு 100 சதவீதத் தையே 2035இல் எட்டிவிடும்.
தமிழ்நாட்டிற்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை!
தமிழ்நாடு அரசு செய்ததை, செய்து கொண்டிருப்பதை தேசிய கல்விக் கொள்கை யில் இணைத்து விட்டு தேசிய கல்விக் கொள்கையின் படி தமிழ்நாடு செயல்படு கிறது என்று சொல்வது நகைப்புக்குரியது. குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்து தமிழ் நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. நாட்டின் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு எப்பொழுதும் தொழில் நுட்பத் துறையில் குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.
முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்றவற்றில் வருங்காலத்தில் மிகத் தீவிரமாக பயிற்சிகள் அளிக்கப்படும். ஏனெ னில் செயற்கை நுண்ணறிவை கையிலெ டுக்கும் மாநிலமே இன்னும் பத்தாண்டுகளில் முன்னணி மாநிலமாக இருக்கப் போகிறது.
பெரியார் காட்டிய பாதையில்
அரசு செயல்படும்!
பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பது போலமும் மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை; இருமொழிக் கொள்கையே தொடரும். இவ்வாறு தமிழ் நாடு அரசு திட்ட வட்டமாகத் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment