"நாங்கள் இந்துக்கள் அல்ல!" லிங்காயத்துகள் அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 27, 2023

"நாங்கள் இந்துக்கள் அல்ல!" லிங்காயத்துகள் அறிவிப்பு!

ஜாதிவாரியாக புதியதாக கணக்கெடுப்பு நடத்தினால் ‘லிங்காயத்துகள்’ தங்களை இந்துக்கள் அல்ல என பதிவு செய்ய வேண்டும் என கருநாடகாவின் வீரசைவ லிங்காயத்துகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது – பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கருநாடகாவில் லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடாக்கள் ஆகியவை பெரும்பான்மைப் பிரிவுகள். லிங்காயத்துகள் தற்போது இந்துக்களாக இருந்தாலும் தங்களை வீரசைவ லிங்காயத்துகள் என தனி மதமாகவே அங்கீகரிக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
இந்த நிலையில் கருநாடகாவின் தாவணகெரேவில் வீர சைவ லிங்காயத்துகளின் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ், பாஜகவை சேர்ந்த லிங்காயத் தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், பி.ஒய். விஜயேந்திரா, பசவராஜ் பொம்மை, லக்‌ஷ்மி ஹெப்பல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாநாட்டுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சாமனூர் சிவங்கசரப்பா, லிங்காயத் அமைப்பின் பன்னாட்டு தலைவர் என்ற முறையில் தலைமை வகித்தார்.
கருநாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காந்தராஜ் கமிட்டி அமைக்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சர் சித்தராமையாதான் இந்த கமிட்டியை அமைத்தார்.

ஆனால் இந்த கமிட்டியின் அறிக்கை ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இதனால் காந்தராஜ் கமிட்டி அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கருநாடகாவின் பெரும்பான்மை ஜாதி அமைப்புகள் வலியுறுத்துகின்றன. கருநாடகாவில் ஆளும் காங்கிரஸிலும் இந்த காந்தராஜ் கமிட்டி அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்கிற குரல்கள் வலுத்துள்ளன. இதனால் புதியதாக அறிவியல் பூர்வமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அப்படி புதியதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் போது, லிங்காயத்து ஜாதியினர் தங்களை “‘இந்து மதம்’ ‘இந்து’க்கள் என பதிவு செய்யக் கூடாது; வீரசைவ லிங்காயத்துகள் என தனி மதமாகவே பதிவு செய்ய வேண்டும்” என அழைப்பு விடுத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது – லிங்காயத் மாநாடு! மேலும் வீரசைவ லிங்காயத்துகளின் கீழ் வரும் உள்ஜாதிகளை ஓபிசி (இதர பிற் படுத்தப்பட்டோர்) பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநாட்டில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் ‘இந்துக்கள்’ என்ற அடிப்படையில் வாக்கு வங்கிகளை ஒருங்கிணைத்து நிற்கும் பாஜகவுக்கு, தென்னிந் தியாவில் அக்கட்சி பலமாக இருக்கக் கூடிய ஒரே மாநிலமான கருநாடகாவில் நாங்கள் இந்துக்களே இல்லை என்று பெரும் பான்மை ஜாதிகளில் ஒன்றான லிங்காயத்துகள் அழுத்தம் திருத்தமாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது அதிர்ச்சியைத் தராமல் வேறு என்னதான் செய்யும்?
வேதம், ஆகமம் இல்லாத மதம் – பெண்கள் மாதவிலக்கு காலங்களில்கூட பூசை செய்யலாம் என்பதை வலியுறுத்தும் வழிபாடு முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

”லிங்காயத்திசம் – ஒரு தனி மதம்” என்ற புத்தகத்தை எழுதிய வரும், 29 ஆண்டுகள் தத்துவத்துறையின் பேராசிரியராக பணி புரிந்தவருமான முனைவர் என்.ஜி. மகாதேவப்பா, “மூடநம் பிக்கைகளைப் பெரிதும் எதிர்க்கும் மதமாக 12ஆம் நூற்றாண்டில் பசவண்ணா லிங்காயத்து மதத்தை உருவாக்கினார்” என்கிறார்.
”வேதங்கள், புராணங்கள், ஆகமங்களை நிராகரிக்கும் மதமாகவும், யாகங்கள் தேவையற்றவை என்றும் பசவண்ணா லிங்காயத்து மதத்தை ஏற்படுத்தினார். கடவுளுக்குப் பலி கொடுக்கும் வழக்கம் லிங்காயத்து வழிபாட்டில் இல்லை. 12-ஆம் நூற்றாண்டில் பசவண்ணா எழுதிய கருத்துகள், பின்னர் வந்த அக்கம்மா தேவி போன்றோர் வகுத்த நெறிகளைக் கொண்டதாக இந்த வழிபாடு உள்ளது என்பதால், தற்போது இந்து மதம் என்ற அறியப்படும் வழிபாட்டு முறையில் இருந்து லிங்காயத்து சமூகம் முற்றிலும் வேறுபடுகிறது” என்கிறார். லிங்காயத்து வழிபாடு தொடர்பாக 18 புத்தகங்களை எழுதியுள்ள மகாதேவப்பா, “தற்போது இந்து மதத்தின் கீழ் ஒரு ஜாதிப் பிரிவாக லிங்காயத்து வழிபாடு கருதப்படுகிறது. ஜாதிப் பாகுப்பாட்டை எதிர்த்தவர் பசவண்ணா. லிங்காயத்து மக்கள் அணிந்துள்ள லிங்கம், சைவ கோயில்களில் உள்ள லிங்க வடிவம் அல்ல. பீடம் இல்லாமல், ஆதிகால லிங்க வடிவத்தை கொண்ட அமைப்பு அது,”
”லிங்காயத்து மக்கள் அணியும் லிங்கத்தை சைவ மதத்தோடு இணைத்துப் பார்ப்பதால் வரும் குழப்பம் தான் இது; வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்து என்ற ஒரு மதமே கிடையாது. ஆறுவகையான மதங்களைத் தொகுத்து, தற்போது பழக்கத்தில் இருப்பது இந்துமதம். சிவன், திருமால், முருகன், கணபதி, சக்தி, சூரியன் என ஒவ்வொரு கடவுளும் தனித்தனி மதங்களாக வழிபடப்பட்ட தெய்வங்கள். அரசியல் காரணங்களுக்காகவும், கோயில்களை நிர்வாகம் செய்யவும், பூர்வ ஆச்சாரியர்கள் இந்த மதங்களை இணைத்தனர்,” என்று குறிப்பிடுகிறார்.

அவர் தொடர்ந்து, ”வேதம், தொல்காப்பியம், சங்கநூல்கள் போன்ற எதிலும் இந்து என்ற வார்த்தையே கிடையாது என்பது வெளிப்படை. ஆறு மதங்கள் இணைக்கப்பட்டு இந்துமதம் என்று கருதப்பட்டது போல, முன்னர் ஒரு பிரிவாக கருதப்பட்ட லிங்காயத்து வழிபாடு, அரசியல் காரணங்களுக்காக தனி மதம் என்ற வாதம் தற்போது வலுத்து நிற்கிறது,” என்று கூறுகின்றார்.
லிங்காயத்துத் தத்துவம் குறித்து விளக்கிய அவர்,’ ‘லிங்கத்தை அங்கத்தில் அணிந்து, அதை வழிபட்டு அய்க் கியம் அடை பவர்கள் லிங்காயத்து மக்கள். இறைவனுக்கும், பக்தனுக்கும் இடையில் யாரும் தேவையில்லை என்றும், குரு என்பவர் வழிகாட்டவே தவிர, யாரும் யாருக்கும் கீழ் நிலையில் இல்லை என்பதும் லிங்காயத்து வழிபாட்டில் அடிப்படையான கருத்து. ஜாதி படிநிலையை வலியுறுத்தும் வருணாசிரம தர்மத்தை விலக்கி வைப்பதோடு இல்லாமல் ஆண், பெண் பேதம் இன்றி இருவரும் கழுத்தில் லிங்கத்தை அணியவும், இறைவனை பூசை செய்ய அனுமதிக்கும் வழிபாடு கொண்டது லிங்காயத்து” என்கிறார்.
”பல கடவுள் வடிவங்களை இந்து மதத்தில் பின்பற்று கிறார்கள். லிங்காயத்து மக்களைப் பொறுத்தவரை சிவன் ஒருவரே கடவுள். அவரை வணங்க யாருக்கும் தடை இல்லை. ஹோமம் வளர்த்து பூசை செய்யும் முறை இங்கு இல்லை. ஜாதி, பேதம் என எந்த வேற்றுமைகளும் இருக்கக்கூடாது என்பதற்காக பசவண்ணர் தோற்றுவித்த இந்த மதம், இந்து மதத்தில் அடங்காது. லிங்காயத்துகள் இந்துக்கள் இல்லை.”
“கருநாடகா மட்டுமில்லாமல், தமிழ்நாட்டிலும் விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், சென்னை போன்ற ஊர்களில் லிங் காயத்து வழிபாட்டைப் பின்பற்றும் மக்கள் வசித்து வருகிறார்கள்.”

”பெண்கள் மாதவிலக்கு காலங்களில்கூட பூசை செய் யலாம் என்பதை வலியுறுத்தும் வழிபாடு இது. தீட்டு காலம் கிடையாது; எப்போதும் லிங்கத்தை ஒரு பெட்டியில் மூடி, சங்கிலியில் கோர்த்து கழுத்தில் அணிந்திருப்போம், தினமும் லிங்கத்திற்கு பூசை செய்வோம். தாலிக்கு எவ்வளவு முக்கியத் துவம் தருகிறார்களோ அதுபோலவே லிங்கத்தை அணிந் திருப்போம். தாலியைக் கழற்றினால் கூட, லிங்கத்தை கழற்ற மாட்டார்கள்” என லிங்காயத்துகள் குறித்து எம்.ஜி. மகா தேவப்பா விளக்கமாகக் கூறியுள்ளார்.
இதில் மூடநம்பிக்கைகள் உள்ளன என்றாலும், தாங்கள் இந்து மதம் இல்லை என்று கூறுவதில் உறுதியாக உள்ளார்கள். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. ஜாதி இல்லை – கிடையாது என்றாலே இந்து மதம் அந்தக் கணமே செத்து ஒழிந்தது என்றுதானே பொருள்? அந்த வகையில் வரவேற்கலாம்! பாவம் பா.ஜ.க.!

No comments:

Post a Comment