கனமழை, ‘மிக்ஜாம்’ புயல்: தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 4, 2023

கனமழை, ‘மிக்ஜாம்’ புயல்: தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

அவசரகால செயல்பாட்டு மய்யத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (03.12.2023) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,  கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி. அ. ராமன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை, டிச.4- சென்னை சேப்பாக்கத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்தில் கனமழை, ‘மிக்ஜாம் புயல்’ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் “முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெறுகின்றன” என்றும் “பொது மக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தடுக்க வேண்டும்” என்றும் கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (03.12.2023) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மய்யத்தில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கடந்த 01.12.2023 மற்றும் 02.12.2023 அன்று அரசு உயர் அலுவலர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் ஏற்கனவே அவர் களை எல்லாம் அழைத்து அறிவுரை வழங்கியிருக்கிறேன்.

அந்த அடிப்படையில், 121 பல்நோக்கு பாதுகாப்பு மய்யங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 4 ஆயிரத்தி 967 இதர நிவாரண மையங்களில், பாதிப்பிற்குள்ளாகும் பகுதி களில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண மையங்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

குறுச் செய்திகள் மூலம் எச்சரிக்கை!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது.

கடலோர மாவட்டங்களில் உள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டு வரு கின்றன.

அதிலும், மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டது. இதனால் அனைத்து படகு களுக்கும் பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்கி யிருக்கிறோம்.

புயல் மற்றும் கனமழை குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து உங்களைப் போன்ற ஊடகங்கள் மூலமாகவும், செய்திகளை வெளியிட்டு தொடர்ந்து அந்தப் பணியை ஆற்றி வருகிறோம். புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் விளக்கமாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

முழுவீச்சில் நடவடிக்கைகள்!

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகி இருக்கக்கூடிய இடங் களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (03.12.2023) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மய்யத்திற்கு நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணை யர் எஸ்.கே. பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி. அ. ராமன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள்.

மாநில அவசரகால செயல்பாட்டு மய்யம், பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மய்யம், மின்சாரத் துறை உட்பட அனைத்து கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பொதுமக்களுக்கு நான் சொல்லிக் கொள்ள கடமைப்பட் டிருப்பது! புயலின் காரணமாக, பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் விழுவதற்கான வாய்ப்பு கள் இருக்கின்ற காரணமாக, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

தேவைப்பட்டால், மாவட்ட நிர்வாகம் / மாநகராட்சியின் அறிவுரையின் பேரில் நிவாரண முகாம்களில் தங்குமாறும் நான் கேட்டுக் கொள்கிறேன். அங்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

களத்தில் அமைச்சர்கள்!

மேலும், சென்னையைப் பொறுத்தவரைக்கும்,அமைச்சர் பெருமக்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந் திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியம், பி.கே. சேகர்பாபு ஆகியோர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசனும்  அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், அமைச்சர் மூர்த்தி அங்கே தன்னுடைய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமியும், இராணிப்பேட்டை மாவட்டத்தில் காந்தியும் தங்களுடைய நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதி கள், என்னென்ன பணிகள் செய்ய வேண்டுமோ, மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமோ அந்தப் பணிகள் எல்லாம் அவர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பணியாளர்களுக்கு நன்றி!

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பெய்த மழையின் போது, இரவு பகல் பாராமல் அனைத்து பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக முதலில் அவர்களுக்கு நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோன்று, அடுத்த இரண்டு நாட்களுக்கும் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை சீரமைக்கவும் அர்ப்பணிப்பு உணர் வோடு பணியாற்றுமாறு நான் அவர்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

ஊடகங்களும் அரசின் செயல்பாடுகளுக்கு துணை நிற்க வேண்டும் என்று உங்களையும் நான் இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறேன்.

அரசியல் பேச விரும்பவில்லை!

கேள்வி: எதிர்க் கட்சித் தலைவர் 4500 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கொடுத்திருந்தாரே? அது பற்றி....

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நான் அரசியல் பேச விரும்பவில்லை. முதலில் மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அந்த விஷயம்தான் பேச வந்திருக் கிறேனே தவிர, அவர்கள் சொல்கின்ற அரசியல் கேள்வி களுக்கு நான் விளக்கம் சொல்ல தயாராயில்லை.

கேள்வி: தூர்வாரும் பணிகள் எல்லாம் முடிவடைந்து விட்டதா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அதுவும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. புதிதாக அமைத்திருக்கிறோம். ஏற்கெனவே, பழையதும் இருக்கிறது, அதிலுள்ள அடைப்புகளை அகற்றும் பணிகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சென்னையில் தயார்நிலையில் மோட்டார் பம்புகள்!

கேள்வி: இன்று இரவிலிருந்து, நாளை இரவு வரை மிக கனமழை பெய்யப் போவதாக சொல்லப்பட்டிருக்கிறது. சென்னையில் தேங்கியிருக்கக்கூடிய மழை நீரை வெளி யேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டிருக்கிறதா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தேவைப்படக்கூடிய அனைத்து இடங்களிலும், தேவை ஏற்படும் இடங்களில் மட்டுமல்ல, எங்கே பாதுகாப்பு தேவைப்படுகிறதோ அங்கே யெல்லாம் நிச்சயமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை, மொத்தம் 1000 மோட்டார் பம்புகளை தயாராக வைத்திருக்கிறோம்.

தேவைப்பட்டால் ஒன்றிய அரசிடம் நிதி கேட்போம்!

கேள்வி:வெளிமாவட்டங்களிலிருந்து பணியாளர்கள், அலுவலர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : ஏற்கெனவே, பேரிடர் மீட்புக் குழுவினர் வந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு அனுப்பியிருக்கிறோம். எந்தெந்த மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்கிறதோ, எங்கே எல்லாம் இந்த பிரச்சனைகள் இருக்கிறதோ, அவர் களை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி : ஒன்றிய அரசின் உதவி கேட்கப்படுமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : தேவைப்பட்டால் நிச்சய மாக கேட்கப்படும்.

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment