எனக்குள்ள தகுதி எல்லாம்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 1, 2023

எனக்குள்ள தகுதி எல்லாம்...

நீங்கள் இவ்வளவு சிறப்பு செய்திருக்கிறீர்கள். இவ்வளவு ஊக்கத்தை அளித்துள்ளீர் கள். இவ்வளவு உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். தோழர்கள் எல்லாம் இது ஒரு பெருங் கூட் டம், கொள்கைக்கூட்டம் என்ற உணர்வோடு கட்சிமாச்சரியங்களை மறந்து மாவட்ட நகர மக்களெல்லாம் ஒன்றாக திரண்டுள்ளீர்கள்.

பத்து வயது சிறுவனாக

இதனையெல்லாம் எண்ணிப் பார்க்கும் போது எத்துணை ஆண்டுகளுக்கு முன் னால், நான் பத்து வயது சிறுவனாக இங்கு மேடையில் பேசியதையும், இடையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளையும், இடையில் கழக வரலாற்று நிகழ்ச்சிகளில் இங்கு பங்கு கொண்டதையும் எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் எனக்கு இவ்வளவு பெருமை சிறப்பு செய்திருக்கிறீர்கள். நான் இந்த பெருமைக்கு சிறப்புக்கு தகுதி உடையவனா என்றால் உண்மையில் இதற்கு தகுதி இல்லாதவன் என்றே நான் இதற்குப் பதில் சொல்வேன். தகுதியில்லமல் இந்தப் பணியை ஏன் செய் கிறீர்கள் என்று கேட்டால் "பெரியாரின் தொண்டர்க்கெல்லாம் தொண்டன்" என்ற ஒரே காரணத்துக்காகத்தான், அந்த தகுதி யின் அடிப்படையில் இந்தப் பணியை இடை யறாமல் செய்ய வேண்டுமென்பதற் காக, எனக்கு ஊக்கத்தை, சிறப்பை கொடுத் துள்ளீர்கள்.

கடன் பட்டவன்

அதற்கு மிகுந்த கடன்பட்டவனாக உங்கள் முன்னே நின்று கொணடிருக்கிறேன். நீங்கள் கொடுத்த தொகையெல்லாம், இரு மடங்கு எடைக்கு எடை கொடுத்த தொகை யெல்லாம், மாலைக்குப் பதில் அன்பாக கொடுத்த தொகையெல்லாம் வழக்கம் போல் கழக வளர்ச்சி நிதியில் சேர்க்கப்படும் என்று மிகுந்த அன்போடு, பேரன்போடும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே பொருளாளர் இருக்கிறார்கள். இந்தக் கரத்தில் வாங்கி அந்தக் கரத்தில் கொடுத்தவுடன் அவர் உரிய இடத்தில் சேர்ப்பார்கள்.

என்ன காரணம்?

நீங்கள் எனக்கு இவ்வாறு செய்வதற்கு என்ன காரணம்? தமிழ்ச் சமுதாயத்திற்கு இந்த இயக்கம் பயன்பட வேண்டும். அதற்கு ஒரு கருவியாக என்னை காண்கிறீர்கள் என்ற தகுதியைத் தவிர வேறெந்த தகுதி யையும் நான் சொல்ல மாட்டேன்.

இது எப்படி என்றால் "பிராமசரி நோட்" கொடுப்பவர் நோட்டு எழுதி வாங்கிக் கொண்டு பணத்தை கொடுத்துவிட்டு எண் ணிப் பார்த்துக் கொள் என்று சொல்வார்களே. அதுபோல மேலும், கொடுப்பவர்கள் நம்பிக் கையோடு கொடுப்பார்கள், வாங்குபவர்கள் பயத்தோடு வாங்குவார்கள். அதைப்போல் தான் நீங்கள் எடைக்கு இரு மடங்கு நாணயம் வழங்கும் நேரத்திலும் நீங்கள் ஒவ்வொரு ரூபாய் கொடுக்கும் பொழுதும், ஒவ்வொரு பைசா கொடுக்கும் பொழுதும், ஒவ்வொரு புது நாணயம் கொடுக்கும் பொழுதும் அந்த உணர்ச்சியோடுதான் பெற்றுக் கொள்கிறேன். இந்த சமுதாயத்திற்கு நான், நாம் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற பாடத்தை நான் பெற்றுக் கொள்கிறேன்.

இறுதி மூச்சு அடங்கும் வரை

நான் உங்கள் நம்பிக்கையின் அளவுக்கு ஏற்ப எனது ஆற்றலோடு பாடுபடமுடியுமா என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் ஒன்றைச் சொல்லிக் கொள்வேன், எனது இறுதி மூச்சு நிற்கும் வரையில் எந்தக் கொள்கை இந்த நாட்டில் நிலைபெற வேண்டும் என்று விரும்பினீர்களோ, எந்தப் பணியை செய்ய வேண்டும் என்று என்னை ஊக்கப்படுத்தினீர்களோ, அய்யாவின் பணி அகிலம் எல்லாம் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அதற்கு எள்ளளவும் துரோகம் செய்யாத நிலையில் என் இறுதி மூச்சு அடங்கும் வரையில் தமிழ் சமுதாய அடிமையாக சொல்லடிமையாக தமிழ்ச் சமுதாயம் எஜமானன் என்ற நிலையில் நான் உண்மையான பணியாளனாக தொண்டாற் றுவேன் என்று மட்டும் உறுதியாக கூறிக் கொள்கிறேன்.

- கடலூரில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையிலிருந்து (22.11.1981)


No comments:

Post a Comment