மனிதநேயச் சுடரே! மணம் வீசும் மலரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

மனிதநேயச் சுடரே! மணம் வீசும் மலரே!

வாழ்வியல் களத்தில் எதிர் நீச்சல் அடிக்கும்,

வைக்கம் வீரரின் வைப்பு நிதியே!

பார் உள்ளளவும் பணி தொடர,

படியேறும் பகுத்தறிவு நாளேடே!

நீங்கள் கடலூர் பழைய நகரின் குட்டிப்பையன்.

சுட்டிப் பையன் ஆனாலும் கெட்டிப்பையன்.

சாரங்கபாணியாய் சகல கழகப் பணியானாய்.

கி.வீரமணியாய் மூடநம்பிக்கை இருள்நீக்க,

கீழ்வானில் உதயமானாய்.

உன் இளமை ஆசானோ ஆ.திராவிடமணி.

அ சொல்லி ஊட்டியதோ பகுத்தறிவு சுவை.

பகுத்தறிவால் வென்றாய் நுண்ணறிவு மிசை.

அய்ந்திரண்டு வயதில் பகுத்தறிவு முழக்க பேச்சு.

பரம்பரை சந்ததியாய் உயர்ந்தோர் சிலர்.

பண பல, படை பலத்தால் பதவியேற்றோர் சிலர்.

படிப்பு, பண்பு பகுத்தறிவால் உயர்ந்தோர் மிகச் சிலர்.

நீங்களோ அந்த மிகச் சிலரில் நிகர் சீலர்.

பார்வையற்றோர்க்கு வழித்தட தடியானாய்.

காது கேளார்க்கு செவிப்பறை கருவியானாய்.

பேச இயலாதோர்க்கு செய்கை செய்தி வாசிப்பாளனாய்

கைம்பெண் மறுமண கலங்கரை விளக்கானாய்.

வரலாறு படிப்போராக இல்லாது

தி.க. வரலாறு படைப்போராக திகழ்ந்தாய்.

கழகம் கண்டது சில சோதனை.

நீ பகுத்தறிவு ஆசான் பக்கம் நின்ற பேராண்மை.

நீ படைத்தாய் அதில் நம்பிக்கை சாதனை.

நீ சரித்திரம் படைத்தாய்,

உலக சரித்திரம் படைத்திட.

சாதிக்க பிறந்தாய் நீ.

சாதிக்கே பிறக்கவில்லை.

கருஞ்சட்டை அணிந்த கரும்புலி நீ.

கரும் புள்ளி கறைபடியா பெரும்புள்ளி நீ.

கற்ற சட்டத்தால் சாதீயம் கண்டதே சம்மட்டியடி.

மனித நேயப்பிடிப்பில் நீயொரு பித்தன்.

புத்தனையும் மீறிய புதுமைப் புத்தன்.

கூட்டு வலிமையை பெருக்கிட நீதான் சித்தன்.

முனைவரெல்லாம் முனைகின்றார் பறக்கவிட,

சாதி பேத தொழுநோய் பட்டம்,

நாற்காலி பசிப்பற்று பெருக்கம்.

நாற்கால் நடையாளரே பெரும் கூட்டம்.

ஊரெல்லாம் உலாவரும் ஆணவக் கொலை வெறியாட்டம்.

கயவர்கள் கவுரவக் கொலையென பெயர் மாற்றம்.

மாற்று, உடலுறுப்பு, உதிரம், உயிரணு சேர்ப்பு,

குழந்தை தத்தெடுப்பு, வாடகைத்தாய் சேய் பிறப்பு,

கள்ளக் காம உறவு, அணைந்துபோனதே உன் சாதீய கவுரவத் தீ.

மகான்கள் வருவதும், போவதும் வாடிக்கையானது

சாதீய நஞ்சுக் கதிர் வீச்சு மட்டும் வேடிக்கையானது.

முதுமையிலும் பகுத்தறிவு பறைமுரசானாய் நீ.

உடன் பிறவா இனச் சகோதரர்களே!

நாம் உண்மை உணர வேண்டும்.

இனத்தால் நாம் ஓரியம்.

ஆரிய மத சூழ்ச்சியால் இழிவினமென வீழ்ச்சியுற்றோம்.

ஒடுக்கப்பட்டோரே யாசித்தது போதும்,

யோசித்துப் பாருங்கள் ஓரினமாய் ஒன்றுபட

ஒருமித்த தன்மானிகளே ஓரணியாகுங்கள்.

சாதீயக் கூட்டத்தை ஓரம் கட்டுங்கள்

பெருந்திரளாய் அணிவகுப்போம் ஒடுக்கப்பட்டோராய்

மனிதநேயம் மறுப்போரின் ஆணிவேரை தகர்ப்போம்

இத்தனை சாதனைக்கும் உனக்கே பெருந்தகை விருது

இதனால் 'தகைசால் விருது' பெற்றதே உன் விருது.

வாழ்க மனிதநேயம்.

மனிதநேய மனிதர்கள்.

- அறிவுக்கண்ணு சோமசுந்தரம், பெங்களூர்


No comments:

Post a Comment