வெள்ளம் - புயல்: திராவிடர் கழகத்தின் தொண்டறப் பணிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 9, 2023

வெள்ளம் - புயல்: திராவிடர் கழகத்தின் தொண்டறப் பணிகள்!

featured image

இரண்டு நாட்களில் 6,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பம்பரம் போலச் சுற்றிச் சுழன்று பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள் வழங்கினர்

சென்னை, டிச.9 நிவாரணப்பணிகள் தேவைப்பட்டும் யாரும் செல்லாத பகுதிகளுக்கு பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள் சென்று மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை கடந்த மூன்று நாட்களாக செய்து வருகின்றனர்.
சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான எம்.கே.பி.நகர், வேளச்சேரி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மற்றவர்கள் செல்லாத பகுதிகளுக்குச் சென்று, மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதற்காக பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள் “MKB Nagar flood relief 2023”, “Velachery flood relief 2023” என்று இரண்டு வாட்ஸ் ஆப் குழுக்களைத் தொடங்கி அதன் மூலம் பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் (7.12.2023) பள்ளிக் கரணை, காமகோடி நகர், அண்ணா நகர், எம்..ஜி.ஆர் ஆகிய பகுதிகளில் 1000 பேருக்கு இடுப்பளவில் தண்ணீரில் சென்று உணவு வழங்கப்பட்டது. பா. முத்தையன் தலைமையில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சு. மோகன்ராஜ்,
கோ. நாத்திகன், குணசேகரன், ச. அழகிரி (எ) நரேஷ், பல்லாவரம் தோழர் செல்வா, க. தமிழ்ச்செல்வன் , ஊடக வியலாளர் இந்திரகுமார் ஆகியோர், மசூதி, சர்ச், காமகோடி பள்ளிகள் என்று அனைவருக்கும் உணவு வழங்கினர். அங்கு வேறு யாரும் நிவாரணப் பணிகளை முன்னெடுக்காத
நிலையில் பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள் தேடிச்சென்று அப்பகுதிகளில் குடி தண்ணீர், பிஸ்கட், உணவு ஆகியவற்றை வழங்கினர். கறுப்புச் சட்டை அணிந்திருந்ததைப் பார்த்து, பெரியார் தொண்டறம் அணித் தோழர்களை விசாரித்துள்ளனர். சொன்னதும் மகிழ்ந்து, ”நான்கு நாட்களாக அண்ணா நகர், எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளுக்கு யாருமே வரவில்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டனர். இவ்விரண்டு பகுதிகளும் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் அமைந்துள்ள பகுதியாகும்.

அதேபோல் வடசென்னையில் வியாசர்பாடி, முத்தமிழ் நகர், முல்லைநகர், புளியந்தோப்பு, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் அதிகாலை 5 மணி வரையில் தேவைப்படும் மக்களைத் தேடித்தேடி சென்று உணவு வழங்கினர்.
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் வழக்குரைஞர்கள் தளபதி பாண்டியன், துரை அருண் மற்றும் முரளிகிருஷ்ணன் சின்னதுரை, பா.நதியா, மங்களபுரம் பாஸ்கர், த.மரகதமணி, நா.பார்த்திபன், வ.ம.வேலவன், கிசோர், மு.பவானி, பெரம்பூர் பா.பார்த்திபன் ஆகியோர் 1,100 பேருக்கு சூடான உணவு வழங்கினர்.

மூன்றாம் நாளாக நேற்று (8.12.2023) பெரியார் தொண்டறம் அணியின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. காரணம்,, “MKB Nagar flood relief 2023”, “Velachery flood relief 2023” என்ற இந்த இரண்டு குழுக்களின் செயல்பாடுகள் உடனுக்குடன் அதில் பதிவிடப்படுவதால் இதனை அணுகுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கேற்ப பெரியார் தொண்டறம் அணியின் தேவையும் அதிகரித்தது. ஆகவே இதற்கான களப்பணியா ளர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இன்னொரு பக்கம் பெரியார் தொண்டறம் அணி யின் செயல்பாடுகளைக் கண்டு சமூகவலை தளங்களில் கண்ணுற்று அதனால் ஈர்க்கப்பட்டு பல்வேறு இடங்களில் இருந்து தன்னார்வலர்கள் பெரியார் தொண்டறம் அணியுடன் இணைந்து தொண்டு செய்ய முன் வந்தனர். ஈரோடு திண்டல் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா முகநூலில் இது குறித்த பதிவுகளைக் கண்டு சென்னைக்கு புறப்பட்டு வந்தார். ‘தீக்கதிர்’ ஆசிரியர் குமரேசன் மகன் தாம்பரம் அருண்பகத், வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் ஆகியோரும் முன்வந்தனர். அதுமட்டுமல்ல, தன்னார்வலர்கள் ஒருபக்கம், இன்னொரு பக்கம் மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்குப் பலர் தாமாக முன்வந்து கொண்டிருந்தனர். அதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகு தியைச் சேர்ந்த, தி.மு.க. இளைஞரணி அமைப் பாளர் முகமது பைரோஸ்கான் தமிழன் பிரசன்னா முகநூலில் வந்த விண்ணப்பத்தை ஏற்று, பெரியார் தொண்டறம் அணியின் பணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, 5 கிலோ அரிசி பைகள் 100 அனுப்பினார். வில்லிவாக்கம் விஜய் 1500 பேருக்கான உணவுப்பொருட்களை வழங்கியதோடு, அதன் களப்பணிக்கும் அவரது மகன் ஆதவனை அனுப்பி வைத்தார். ஆதவன் கொளத்தூரைச் சேர்ந்த அவரின் நண்பர்கள் வினோத், சியாம் ஆகியோரை அழைத்துவந்து சூடான உணவை டப்பாவில் அடைக்கும் பணிகளில் ஈடுபட்டார். இதுபோல, இன்னும் பலர் மனிதநேயத்துடன் அவர்களால் முடிந்த பொருட்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். களப்பணிகளிலும் பெரியார் தொண்டறம் அணித் தோழர்களுக்கு தோள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

வழக்குரைஞர் தளபதிபாண்டியன் ஒருங்கிணைப்பில் வழக்குரைஞர்கள் துரை அருண், திவாகர், கருணாபாண்டியன், லோக அபிராமன், அமைந்தகரை மோகன், குமார், தி.மு.க. பிரபாகரன், பிரேம்குமார், சுரேஷ் குமார், நித்தியகுமார், உதய்பிரகாஷ், ராஜா, சாம்குமார், அரும்பாக்கம் சா.தமோதரன், ஆதில், பரத், கார்த்திக், 101 ஆம் வார்டு தி.மு.க. கவுன்சிலர் மெட்டில்டா கோவிந்தராஜ் ஆகியோர் இப்பணிகளில் பன்கேற்றனர். அமைந்தகரை 102 ஆம் வார்டில் 800 நபர்களுக்கு உணவு தயாரித்து, டப்பாக்களில் அடைத்து உரியவர் களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. வழக் குரைஞர் தமிழன் பிரசன்னா ஒருங்கிணைப் பிலும், கொடுங்கையூர் தே.செ.கோபால் உணவுத் தயாரிப்பு மேற்பார்வையிலும் வடசென்னை அம்பேத்கர் கலைக்கல்லூரி எதிரில் உள்ள பகுதியிலும், வ.உ.சி.நகர் பகுதியிலும் பசும்பொன் செந்தில்குமாரி, மு.பவானி, புரசை. அன்புச் செல்வன், க.கலைமணி, பூவை.தமிழ்ச்செல்வன், செல்வம், முருகன், தாம்பரம் அழகிரி, சத்தீஷ், அண்ணா மாதவன் ஆகியோர் களப்பணியிலும், அமைந்தகரை, தாம்பரம், பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளி ஆகிய பகுதி களில் உணவு தயாரிக்கப்பட்டு வாகனங்களில் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன.

தாமாக சென்று உதவி செய்வதோடு அல்லாமல் வேறு வகைகளிலும் இப்பணிகள் தொடர்ந்தன. அதாவது, பெரியார் தொண்டறம் அணியின் பணிகளை தெரிந்துகொண்ட மலேசியாவைச் சேர்ந்த சைனி, தனது நண்பர் வழக்குரைஞர் தளபதி பாண்டியனை தொடர்பு கொண்டு, ”அம்பத்தூர் அயனம்பாக்கம் பகுதியில் சைனியின் நண்பர்களின் பெற்றோர் விணீக்ஷீஹ் ஸிஷீsவீறீஹ், ஞிமீஸ்ணீssஹ் ஷிமீதீணீstவீணீஸீ, ஷிஷீயீவீணீ ஆகியோர் இருப்பதாகவும், அவர்களோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களது நிலையைத் தெரிந்துகொண்டு தெரிவிக்க முடியுமா? என்று லண்டனில் இருக்கும் அவர்களின் பிள்ளைகள் உருக்கத்துடன் கேட்டிருக்கின்றனர். உதவ முடியுமா?” என்று கேட்டுள்ளார். உடனடியாக பெரியார் தொண் டறம் அணித் தோழர்கள் அவர்களின் பெற்றோருடன் தொடர்பு கொண்டு பேசி, அதை ஒலிப்பதிவு செய்து மலேசியாவில் இருக்கும் சைனிக்கு அனுப்பியுள்ளனர். லண்டனில் இருப்பவர்களுக்கு மலேசியாவில் இருக்கும் சைனி, அதை அனுப்பி, அவர்கள் பெற்றோரின் குரலைக் கேட்டு கண்ணீர் மல்க பெரியார் தொண்டறம் அணித் தோழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதே போல், ஆர்.கே.நகரில் வயதானவர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு மருந்தும் மற்ற உதவிகளும் தேவைப்படுகின்றன. உதவி செய்யுங்கள் என்று பெரியார் தொண்டறம் அணி தொடங்கியுள்ள வாட்ஸ் ஆப் குழுவில் பதிவு செய்துள்ளனர். உடனடியாக முதியவ ருக்குத் தேவையான மருந்தும், உணவுப் பொருட்களும் வாங்கிச் சென்று கொடுத் துள்ளனர். முதியவர் தோழர்களுக்கு மனங் கனிந்த நன்றிகளை கூறியிருக்கிறார். அதேபோல் வாட்ஸ் ஆப் – பில் வந்த தகவலின் அடிப் படையில், கொடுங்கையூரில் முழங்கால் தண்ணீ ரில் இரவு 10:30 மணிக்கு மேல் 30 பேருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கியுள்ளனர். பெரம்பூர் பேரக்ஸ் சாலையிலுள்ள அப்துல் லத்தீப் தனது நண்பர்கள் 9 பேர் அயனாவரத்தில் உணவில்லாமல் இருப்பதாகவும் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்று பெரியார் தொண்டறம் அணியினரை அணுகியிருக்கிறார். உடனடியாக இரவு உணவு, ஒரு வாரத்திற்கான காய்கறிகள்,அரிசி ஆகியவற்றை அட்டைப் பெட்டியில் கட்டி கொடுத்தனுப்பட்டது. மனம் நெகிழ்ந்து போன அவர், “நான் பேரக்ஸ் சாலையில் இருக்கிறேன். தகவல் கொடுங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து பணிசெய்ய விரும்புகிறேன்” என்றார்.
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், கல்லூரி மாணவர்கள், அரசுப் பணியாளர்கள், அரசு சாராத பணியாளர்கள், மென் பொறி யாளர்கள் ஆகியவர்கள் அடங்கிய குழுதான், ”பெரியார் தொண்டறம் அணி” என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment