மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி பகுதிகளில் குடும்ப அட்டைக்கு ரூபாய் 6000 நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 22, 2023

மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி பகுதிகளில் குடும்ப அட்டைக்கு ரூபாய் 6000 நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு

featured image

திருநெல்வேலி, டிச.22 திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை ,வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப் படும். இந்த 2 மாவட்டங்களின் இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 16ஆ-ம் தேதி இரவு முதல் 18-ஆம் தேதி மதியம் வரை இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதில் கடுமையாகபாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் வெள்ள சேதத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.12.2023) பார்வையிட்டார்.
தூத்துக்குடி குறிஞ்சிநகர் போல் பேட்டை பகுதியிலும், பின்னர் திருநெல்வேலி சந்திப்பிலும் வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்த முதல மைச்சர், மக்களுக்கு நிவாரண உதவி களை வழங்கினார்.

பின்னர், திருநெல்வேலியில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் கடந்த 17, 18-ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதுகுறித்து வானிலை ஆய்வு மய்யம் 17-ஆம் தேதிதான் தகவல் தெரிவித்தது. வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்த அளவைவிட பலமடங்கு அதிகமாக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்தது.

வானிலை ஆய்வு மய்யத்தின் தகவல் சற்றே தாமதமாக கிடைத்தாலும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்தது. தென் மாவட்டங்களுக்கு 10 அமைச்சர்கள், 10 அய்ஏஎஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். 375 மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், 275 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கூடுதலாக 230 பேரிடர் மீட்புப் படையினர், 168 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 12,653 பேர் மீட்கப்பட்டு, 141 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய பாது காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து, மீட்புப் பணியில் 8 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் நிவா ரணத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், முழுவதும் சேத மடைந்த நாட்டுப் படகுகளுக்கு ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும், விசைப் படகுகளுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாகவும் நிவாரணத் தொகை உயர்த்திவழங்கப்படும். பயிர், கால்நடைகள், கட்டுமரங்களுக்கான நிவாரணத் தொகையும் உயர்த்தி வழங்கப்படும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும்.
டில்லியில் பிரதமரை கடந்த 19-ஆம் தேதி சந்தித்து, சென்னை மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி மனு அளித்தேன். அதில் தென் மாவட் டங்களுக்கு மட்டும் ரூ.2,000 கோடி ஒதுக்க வலியுறுத்தி உள்ளேன். தமிழ் நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கும் பேரிடர் நிதி ரூ.1,200 கோடியாக உள்ளது. இதில் 75 சதவீதம்அதாவது ரூ.900 கோடி ஒன்றிய அரசு வழங்கும். எஞ்சிய 25 சதவீதம் மாநில அரசு வழங்கும். ஒன்றியஅரசின் பங்களிப்பு தொகை 2 தவணையாக வழங்கப்படும். தற்போது ஒன்றிய அரசு அளித்துள்ள ரூ.450 கோடி 2-வது தவணை ஆகும். தற்போது நிகழ்ந்துள்ளதை கடும் பேரிடர்களாக அறிவித்து ஒன்றிய அரசு கூடுதல் தொகை ஒதுக்க பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

சென்னை உள்ளிட்ட மாவட் டங்களில் நிவாரணநிதியாக ரூ.1,500 கோடியும், தென் மாவட்டங்களில் ரூ.500 கோடிக்கு அதிகமாகவும் செல வாகும். டில்லிக்கு அடிக்கடி செல்லும் ஆளுநர், ஒன்றியஅரசிடம் இருந்து போதிய நிதியை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment